Friday 29 March 2013

திரௌபதி



----------------------------------------------------------------------------------------------------------------------------------
“ஆறாவது ஆணிடம் ஆசைப்பட்ட திரௌபதை
DROWPATHI LIKES THE 6TH MEN … MAHABHARAT

அந்த ஆறாவது ஆள் யார்? கர்ணன் தான்.

முதன் முதலில், சுயம்வரம் நடந்த சபையில் வில்லை வளைத்துக் குறியை அடிக்க எழுந்தவன் கர்ணன்தான். அவனைப் பார்த்ததுமே இவன்தான் எனது புருசன் என்று திரப்பதி மனசில் துர்மானமாகிவிட்டது. அவன் அரச குமாரனில்லை தேரோட்டி மகன் என்றிருந்ததால் அவனுக்கு வில்லைத்தொட அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கர்ணனே அவள் மனசில் இருந்தான் கடைசிவரையிலும், அர்ச்சுனன் எழுந்து பந்தயத்தில் வென்று பாஞ்சாலியைக் கைப்பிடித்து அழைத்து வந்தான் தாய் குந்தியிடம். அம்மா ஒரு கனி கொண்டு வந்திருக்கிறேன் என்றதும் அதை அய்வருமே சேர்ந்து உண்டு அனுபவியுங்கள் என்று சொல்லிவிட்டாள். மாதா சொன்னது மகேசன் சொன்னதாக ஏற்று அய்வருமே அவளை மணந்து கொண்டார்கள். இது திரவ்பதிக்கு இணக்கமில்லை. அதனால் அவள் ஒரு தந்திரம் செய்தாள்.

அரசு குமாரர்கள் அணியும் ஒரு ஜோடு செருப்புகளை யாருக்கும் தெரியாமல் கொண்டு வரச் செய்து வைத்துக் கொண்டாள். விளக்கு வைத்ததும் தனது அறை வாசல்படியருகே அந்தச் செருப்புகளை வைத்துவிடுவாள். அய்வரில் யார் வந்தாலும் மற்றவரில் யாரோ ஒருவர் உள்ளே இருக்கிறார்கள் என்று திரும்பி விடுவார்கள். விடிகாலைப் பொழுதுதில் அந்தச் செருப்புகளை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து விடுவாள். இப்படியே தினமும் செய்தாள் இது சரியாக வராது என்று அறிந்து கொஞ்ச நாளைக்கெல்லாம் பஞ்சபாண்டவர்கள் ஆளுக்கொரு பெண்னைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டார்கள். அந்தப் பெண்களிடம் பிறந்தவர்களே உப பாண்டவர்கள் என்று யுத்தம் முடியும் தறுவாயில் பேசப்படுகிறவர்கள்.

கர்ணனையே மனசில் கொண்ட திரப்பதி கடைசிவரை கன்னி கழியாதவளாக வாழ்ந்து தெய்வமானதாகக் கதை.”

----------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படி ஒரு கருத்தை இன்று ஃபேஸ்புக்கில் பார்த்தேன். நிறைய மறுக்கிறேன். அதன் எதிர்வினையே, இந்த பதிவு....

ஒரு சமயம் துரோணரின் சீடர்களால் தோற்கடிக்கப்பட்ட துருபதன், சிவனை நோக்கி வேண்டினான். துரோணரை அழிப்பது மட்டுமல்லாமல், குரு வம்சத்தையே அழிக்க வேண்டுகிறான். துரோணரை கொல்ல ஒரு மகனையும், பீஷ்மரை கொல்ல ஒரு மகனையும், குரு வம்சத்தில் பிளவு ஏற்படுத்த ஒரு மகளும் தனக்கு வேண்டும் என்று சிவபெருமானிடம் கேட்கிறான் துருபதன். சிவபெருமானும் துருபதனுக்கு “அப்படியே ஆகட்டும்” சொல்லி விடுகிறார்.

அப்படி குரு வம்சம் பிளவு பட வரமாய் கொடுத்த மகள் தான் திரௌபதி. குரு வம்சத்தில் பிளவை ஏற்படுத்த அர்ஜுனனுக்கு திரௌபதியை மணம் முடித்து, திரௌபதியை குரு வம்சத்தினுள் நுழைக்க துருபதன் முனைப்பாய் இருந்தான். ஆனால் அர்ஜூனன் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்து விட்டதாகவும், ஏற்கனவே குரு வம்சம் அழிந்து விட்டது எனவும் வந்த தகவலினால், துருபதன் திரௌபதியை வேறு ஒருவருக்கு கட்டி கொடுக்க சுயம்வரத்தினை ஏற்பாடு செய்கிறான். அரக்கு மாளிகை தீ விபத்தில் சுத்தமாக கருகி போனாலும், அர்ஜூனன் முதலியோர் தீ விபத்தில் இருந்து தப்பி வனத்திற்கு ஓடி தலைமறைவாய் இருப்பது துருபதனுக்கு தெரியாது.

முற்காலத்தில் எல்லாம் சுயம்வரம் என்பதை பிடித்த ஆண்மகனை பெண் தேர்ந்தெடுக்கும் ஒரு அமைப்பில் தான் இருந்தது. பின் அதில் பெண்களை அடக்குமுறை படுத்தும்விதமாக, வில் வித்தை வைத்து, அதில் யார் வெற்றி பெருகிறானோ, அவனைத் தான் மணம் முடிக்க வேண்டும் என்று ஆனது. மேலும், வில் என்பது அப்போதைய உச்சப்பட்சமான ஆயுதமாக இருந்ததால், வில் வித்தையில் தேர்ந்தவர்களை மிக உயர்ந்தவர்களாக பார்க்க பட்டனர். திரௌபதியின் சுயம்வரத்திலும் அது போல் ஒரு வில் வித்தை நடக்கிறது. அந்த சுயம்வரத்திற்கு பல நாடுகளில் இருந்தும் மன்னர்கள் வருகிறார்கள், அதில் துரியோதனனும், கர்ணனும் அடக்கம். அர்ஜுனன், பீமன், சகாதேவன், யுதிஷ்டரன், நகுலன் ஆகியோர்கள் இறந்து விட்டது போல் உலகில் நடிப்பதால், அவர்கள் அனைவரும் அந்தணர் வேடத்தில் சுயம்வரத்திற்கு வருகின்றனர்.

மேலே சுழலும் ஒரு மீனின் பிம்பம் ஒரு பாத்திரத்தில் உள்ள எண்ணையில் தெரிய, அதன் கண் நோக்கி அம்பை எய்ய வேண்டும். சத்ரியர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக முன் வந்து முயற்சிக்கின்றனர். ஒரு சிலரால் வில்லை தூக்கி பிடிக்கவே முடியவில்லை. சிலர் தூக்கி பிடித்து அம்பெய்தாலும், அது மீனின் கண்ணை தவிர எல்லா இடத்திலும் படுகிறது. அப்போது, கர்ணனை சென்று முயன்று பார்க்குமாறு துரியோதணன் சொல்ல, கர்ணன் இடத்தை விட்டு எழுகிறான்.

திரௌபதி அனைவர் முன்னிலையிலும் எழுந்து நின்று, :ஒரு தேரோட்டியின் மகன் என் கரத்தை பற்ற நான் அனுமதிக்க மாட்டேன்” என்று சொல்லி மறுத்துவிட்டாள். ஒரு ஆணை ஏற்காமல் ஒதுக்க சுயம்வர பெண்ணுக்கு உரிமை உண்டு. இப்படியாக சத்ரியர்கள் அனைவரும் வாய்ப்பை தவற விட்ட நிலையில் அந்தணர்களுக்கு வாய்ப்பு அளிக்க படுகிறது. அர்ஜூணன் எழுகிறான், அம்பை எய்கிறான், திரௌபதியை வெல்கிறான். இங்கு தான் விதியின் நுட்பம் இருக்கிறது. அர்ஜுனன் இறந்து விட்டான் என நினைத்து ஏற்படுத்தப்பட்ட சுயம்வரத்தில் அர்ஜுனனே வந்து திரௌபதியை வெல்கிறான்.

அர்ஜுனன் வீட்டிற்கு வருகிறான். குந்தியிடம், “அம்மா, நான் போட்டியில் வெற்றி பெற்று என்ன கொண்டு வந்திருக்கேன் பார்” என்கிறான்.

“எதுவாக இருந்தாலும் உன் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்“ என்று சொல்லி விடுகிறாள், திரும்பி கூட பார்க்காமல்...

“ஆனால், இது ஒரு பெண் அம்மா” என்கிறான் அர்ஜுனன்.

அப்போது தான் திரும்பி பார்க்கிறாள் குந்தி, தன் அனைத்து பிள்ளைகளும் திரௌபதியால் கவர்ந்து இழுக்க பட்டிருப்பதை கவனிக்கிறாள். திரௌபதியால் குடும்ப ஒற்றுமை உடைந்து விட கூடாது என்று, “தர்மம் அனுமதிக்குமானால், நான் என்ன சொன்னேனோ அதன் படி நடந்து கொள்ளுங்கள்” என்கிறாள்.

அப்போது யுதிஷ்டரன், இதை தர்மம் அனுமதிக்கிறது எனவும், முன்னொரு காலத்தில் வாழ்ந்த விதுலா கூட பத்து பிரதேச சகோதரர்களை மணந்து கொண்டு வாழ்ந்ததாக வரலாறு இருப்பதாக சொன்னார். இதனால் திரௌபதி, அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல் மீதி நான்கு சகோதரர்களுக்கும் கூட மனைவியாய் இருப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. அதனால் ஐவருக்குமே திரௌபதி மனைவியாய் வாழ்ந்தாள்.

இதற்கெல்லாம் ஒரு முன் கதை இருக்கிறது.
திரௌபதி, தன் கடந்த கால வாழ்க்கையில், சிவபெருமானிடம் தனக்கு அழகான, அறிவான, யோக்கியமான, பலசாலியான, திறமை வாய்ந்த கணவன் வேண்டும் என்று வேண்டினாளாம். அதற்கு சிவபெருமான், “உனக்கு இந்த ஐந்து குணங்களும் கொண்ட கணவர்கள் கிடைப்பார்கள். ஏனென்றால் கடவுளை தவிர வேறு எந்த நபருக்கும் இந்த ஐந்து குணங்களும் ஒன்றாக அமைந்திருக்காது” என்றாராம்.

இதற்கு முந்தைய பிறவியில், திரௌபதி நளாயினியாக, மௌத்கல்ய முனிவரின் பத்தினியாக இருந்தாள். அவருக்கு அப்போது ஏதோ ஒரு நோய் இருந்தது. இருமி கொண்டும், வதை பட்டு கொண்டும் இருந்தவரை நளாயினி தான் பராமரித்து கொண்டு வந்தாள். அவளுடைய சேவையை கண்ட மௌத்கல்ய முனிவர் அவளுக்கு ஒரு வரம் கேட்க வாய்ப்பளித்தார். தன் காம் இட்சையை தீர்த்து வைக்க வேண்டும் என்று வரம் கேட்டாள். மௌத்கல்ய முனிவர் அதன் படி பல மனித உருவங்களையும், தெய்வ உருவங்களையும் எடுத்து அவளை புணர்ந்தார். நளாயினிக்கு மகிழ்ச்சி என்றாலும் பூரண திருப்தி கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் மௌத்கல்ய முனிவர் இவ்வுலகை துறக்கும் நாள் வரவே, “நீங்கள் போன பின்பு என்னை யார் அனுபவிப்பார்கள்” என்கிறாள். அவளின் தீராத இச்சையை கண்டு வெறுப்புற்ற முனிவர், அடுத்த பிறவியில் பல ஆண்களுக்கு மனைவியாய் இருப்பாய் என்று சாபம் விடுகிறார்.

ஆக, திரௌபதி ஐவரையும் மணப்பது பற்றி அவளின் வாழ்க்கையிலே முன்பே எழுதப்பட்டுவிட்டது.

மேலும், பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை சமமாக விரும்பினர். இதை கிருஷ்ணன் விரும்பவில்லை. இது அழிவிற்கு வழி என்கிறார், திலோத்தமையின் கதையை பாண்டவர்களுக்கு சொல்கிறார்.

சுண்டன், உபசுண்டன் என்ற இரு அசுர சகோதரர்களை அழிக்க தேவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் இருவரும் பலம் வாய்ந்தவர்கள் என்பதால் சூழ்ச்சியால் தான் அழிக்க முடியும் என்று திலோத்தமை என்னும் அப்ஸ்ரஸை அனுப்புகின்றனர். அவளை பார்த்தவுடனே இருவரும் அவளை அடைய நினைக்கின்றனர். “இருவரில் யார் பலசாலியோ, அவரை தான் மணப்பேன்” என்கிறாள். இருவரும் அவளுக்காக அடித்து கொண்டு இறந்து விடுகின்றனர்.

இது போல் உங்கள் குடும்பத்திலும் நடக்க கூடாது, என்று கிருஷ்ணன் அறிவுரை கூறுகிறார். அவரின் அறிவுரைப்படி, திரௌபதியுடன் ஆளுக்கு ஒரு வருடம் இருக்க வேண்டும் எனவும், அந்த சமயத்தில் மீதி நால்வரும் ஒதுங்கி இருக்க வேண்டும் எனவும் முடிவாகிறது. ஒதுங்கி இருக்க கூடிய நாட்களில், பாண்டவர்கள் பிறரையும் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் அரண்மனைக்கு கூட்டி வர கூடாது என்று திரௌபதி சொல்கிறாள். முறை தவறி, திரௌபதியின் அறைக்குள் நுழைபவர்கள், ஓராண்டு காணாமல் போய் விட வேண்டும் என்றும் சொல்ல படுகிறது.

எல்லோரும் ஒப்பு கொண்டதற்கேற்ப திரௌபதி ஐவருடனும் ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு வருடம் என்ற முறையில் இல்லறம் பேணுகிறாள். ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை பெற்று கொடுத்தாள்.

யுதிஷ்டிரனின் மகன் பிரதிவிந்தியன்;
பீமனின் மகன் சத்சோமன்;
அர்ஜுனனின் மகன் கருதகீர்த்தி;
நகுலனின் மகன் ஷடானிகன்;
சகாதேவனின் மகன் சுருதசேனன்;

ஒரு நாள் அர்ஜுனன் தன் வில்லை வீடு முழுதும் தேடி கிடைக்காமல், திரௌபதியின் படுக்கை அறைக்குள் நுழைந்து விடுகிறான். அப்போது யுதிஷ்டிரனோடு திரௌபதி இருப்பதை பார்த்தான். இது முறை தவறிய செயல் என்பதால், அர்ஜுனன் ஓராண்டு வெளியே இருக்க வேண்டியதாய் இருந்தது.

ஒரு பஞ்சாபி கிராம கதையில் இது வேறு மாதிரி வருகிறது. அதுமட்டுமில்லாமல், ஏன் நாய்கள் வெட்டவெளியில் சம்போகம் செய்கிறது என்றும் வருகிறது. பாண்டவர்களில் ஒருவர், திரௌபதியின் அறைக்கு உள்ளே செல்லும் போது வாசலில் செருப்பை விட்டு செல்வார்கள். இதனால், ஒருவர் உள்ளே இருக்கிறார்கள் என்று மற்ற சகோதரர்கள் அறிய வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு. ஆனால் அப்படி ஒரு முறை யுதிஷ்டிரன் விட்டு சென்ற செருப்பை ஒரு நாய் எடுத்து கொண்டு போய் விடுகிறது. இதனால் அர்ஜுனன் தவறுதலாக உள்ளே நுழைந்து விடுகிறான். தனக்கு இப்படி ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதற்காக எல்லா நாய்களும் வெட்ட வெளியில் சம்போகம் செய்யட்டும் என்று திரௌபதி சாபமிட்டாள் என்று அந்த கதையில் வருகிறது. எப்படியோ, நிகழ்ச்சி இது தான், யுதிஷ்டிரன் சம்போகத்தில் இருக்கும் போது அர்ஜுனன் தவறுதலாக உள்ளே நுழைந்து விடுகிறான். இதனால் தான் அவன் புனித யாத்திரையே மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த யாத்திரையில் தான் உலுப்பி, சித்ராங்கதை போன்ற எண்ணற்ற பெண்களை அர்ஜுனன் மணக்கின்றான்.

“ஜம்புல் அக்யான்” என்ற மகாராஷ்டிர நாடகத்தில் திரௌபதி உண்மையில் யாரை நேசித்தாள் என்று ஒரு குறிப்பு வருகிறது.

அந்த நாடகத்தின் படி, திரௌபதியும், பாண்டவர்கள் ஐவரும் ஒரு காட்டில் நடந்து போய் கொண்டிருக்கும் போது, திரௌபதிக்கு பசி வந்து விடவே, அங்கிருக்கும் ஒரு நாவல் மரத்தில் கிடக்கும் ஒரே ஒரு நாவல் பழத்தை விஷயம் தெரியாமல் பறித்து விடுகிறாள். மரம் அவளிடம் பேசுகிறது. “அங்கே பார், அங்கு ஒரு முனிவர் தவத்தில் இருக்கிறார் அல்லவா, அவருக்காக இந்த பழத்தை நான் 12 வருடங்களாக பாதுகாத்து வருகிறேன், நீ வந்து பறித்து கெடுத்து விட்டாயே, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் தவம் கழித்து வந்து பசியாறவே இதை வைத்து இருந்தேன். இப்போது அவர் பட்டனி கிடப்பார். அந்த பாவம் உன்னை வந்தடையும்” என்று சொல்கிறது.

பயந்த திரௌபதி, அர்ஜுனனிடமும், பீமனிடமும் பழத்தை திரும்பவும் மரத்திலே ஒட்டி விட சொல்லி உதவி கேட்கிறாள். அவர்கள் தங்களால் இயலாது என்று கை விரித்து விடுகிறார்கள்.

அப்போது மரம் சொல்கிறது, “நீ உண்மையிலே பத்தினி பெண்ணாய் இருந்தால், நீ உன் கற்பின் திறத்தாலேயே இதை நீ ஒட்ட வைக்க முடியும்” என்கிறது.

“தான் ஐவருடன் இருந்தாலும், தான் பத்தினி தான்” என்கிறாள்.

“நீ பொய் சொல்கிறாய், நீ யாரோ ஒருவரை அதிகமாக நேசிக்கிறாய்!” என்கிறது.

அவள் மறுக்கிறாள். அது கிருஷ்ணன் தான் என்றும், தான் அவரை நண்பராக தான் நேசிக்கிறேன் எனவும், காதலராக அல்ல, என்று விளக்குகிறாள். மரம் ஏற்க மறுக்கிறது.

ஒரு கட்டத்தில் தான் கர்ணனை தான் உண்மையாக நேசிக்கிறேன் என்று ஒத்து கொண்டாள். ஜாதியை கருத்தில் கொள்ளாமல் கர்ணனையே மணந்திருந்தால், தான் சூதாட்டத்தில் பணய பொருள் ஆகியிருக்க மாட்டேன் எனவும், தான் துகிலுரிக்க பட்டிருக்க மாட்டேன் எனவும், தன்னை வேசி என்று பிறர் சொல்ல வேண்டியிருந்திருக்காது என கதறி அழுகிறாள். பழம் தானாக போய் கிளையில் ஒட்டி கொள்கிறது.

முனிவர் தவம் முடித்து வந்து பழம் தின்று பசி ஆறி, திரௌபதியையும், பாண்டவர்களையும் வாழ்த்துகிறார்.

பாண்டவர்கள் திரௌபதியின் ரகசியத்தின் அறிந்த பின் பெரும் அதிர்ச்சியுறுகின்றனர். அவர்களால் ஏற்று கொள்ளவே முடியாத ஒரு கணமான ஒன்றாய் உண்மை வலிக்கிறது.

அன்று இரவு காட்டில் ஒரு குகை பார்த்து தூங்கி கொண்டிருந்த போது, யுதிஷ்டிரன் எழுந்து சென்று தூங்கி கொண்டிருந்த திரௌபதி பாதங்களை வணங்குவதை அர்ஜுனனும், பீமனும் காண்கின்றனர். அவர்கள் விளக்கம் கேட்டனர். இன்று இரவு தூங்க வேண்டாம் என சொல்லி முழித்திருக்க சொன்னான்.

அன்று இரவு அவர்கள் குகைக்கு வெளியே சிந்தூர சிவப்பில் ஓர் ஆலமரம் எழுவதை கண்டனர். அதன் கீழ் 9 லட்சம் பக்தர்கள், தேவியை தொழுது நின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கிறார் போல் திரௌபதி அவர்கள் முன் தோன்றினாள். அவளை ஒரு தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து மலர்கள் தூவினர்.

அப்போது தான் திரௌபதி சாதாரண பெண் அல்ல என்பதை பாண்டவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

இது தான் கதை, கதை இப்படியிருக்க எவ்வளவு புளுகல்கள்....?

1 comment:

  1. மிகவும் சிறப்பாக உள்ளது

    ReplyDelete