Tuesday 30 October 2012

அட்டகத்தி, சுந்தர பாண்டியன் – ஒரு பார்வை


சுந்தர பாண்டியன்”, ”அட்டக்கத்திஆகிய படங்களை அடுத்தடுத்து இந்த வாரத்திலே காண நேரிட்டது. இரண்டு படங்களுமே எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு படங்களும் இன்றைய கால கட்டத்தில் ஒரு முக்கியமான படம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. இரண்டும் இரு வேறு படம், இரு வேறு கதை என்றாலும் இவை இரண்டும் பேசும் பொதுவான அம்சம், இங்கு பெரும் விவாதத்திற்கு உரிய எரிபொருளாகும். பேருந்துகளில் நடக்கும் காதல்கள், கலாட்டாக்கள் மற்றும் பிரச்சனைகள்.
                    
இன்றைய சூழ்நிலையில் கிராமங்களில் ஆகட்டும் நகரங்களில் ஆகட்டும், கல்வி வேண்டுமென்றால், அது நடந்து செல்லும் தூரத்தில் பெரும்பாலானவருக்கு இல்லை. ஒரு நல்ல கல்வி வேண்டுமென்றால் அதற்காக பஸ்ஸோ, ரயிலோ ஏறி கூட்ட நெரிசலில் சென்று, நசுங்கி, புழுங்கி, வியர்த்து ,விறுவிறுத்து தினம் போய் வந்தால் தான் உண்டு. பள்ளி கல்விக்கே இந்த பாடு. இன்னும் கல்லூரி கல்வி என்றால் கேட்கவே வேண்டாம். கல்லூரி விடுதியிலே தங்கி படித்தால் தான் ஆயிற்று. அமெரிக்கா போல், அந்தந்த பகுதியில் பள்ளி, கல்வி அரசாங்க சார்பில் வசதி செய்து கொடுக்க இங்கு இன்னும் 40 ஆண்டுகளாவது ஆகும் போல் தெரிகிறது. அமெரிக்காவில் ஒரு குழந்தையை ஸ்கூலில் சேர்க்க வேண்டுமென்றால் அவர்கள் இருக்கும் பகுதியிலே தான் சேர்க்க வேண்டும். வேறு பகுதியில் இருக்கும் ஸ்கூலில் எல்லாம் போய் ஸீட் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். அதற்கேற்றாற் போல் கல்வி சமதரமானதாகவே இருக்கும். ஒரு ஸ்கூலில் நன்றாக சொல்லி கொடுத்தும், இன்னொரு ஸ்கூலில் வாத்தியார் வகுப்பிற்கே வராமல் இருக்கும் அவலம் எல்லாம் அங்கே நடப்பதில்லை. அதனால் பகுதி விட்டு பகுதி சென்று கல்வி கற்பது என்பது நம்மூரை பொறுத்தவரை  ஒரு தவிர்க்க முடியாத செயல் ஆகிறது.

இன்னொரு புறம், பெண்களை எப்படி கையாள்வது என்று தெரியாத/தெரியப்படுத்த படாத மாணவர்கள் பெரும் அளவில் எங்கு திரும்பினாலும் காண கிடைக்கின்றனர். இம்மாணவர்களுக்கு கௌரவத்திற்காகவும், பாலியலுக்காகவும் ஒரு பெண் அவசியம் தேவைப்படுகிறாள். ஏன் ’கௌரவத்திற்காக’ என்று சொன்னேன் எனில், அவன் மனதில் ஆணித்தரமாக விதைக்கப்பட்ட விதை என்னவெனில் “லவ் பண்ணுபவனே ஹீரோ, லவ் பண்ணாதவன் உலகில் வாழவே தகுதி இல்லை”. இது போன்ற விதையை தான் அவன் பார்க்கும் சினிமாக்கள் அவனுக்கு சிறு வயது முதல் விதைத்து வருகிறது. அதனால் ஒரு பெண்னை துரத்தி துரத்தி பின்தொடர்வது, அவளை கட்டாயப்படுத்தி காதலிக்க சொல்லி நிர்பந்திப்பது, அவள் மறுக்கும் பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவது போன்ற மனித தன்மையற்ற செயல்கள் எல்லாம் அவனை பொறுத்தவரையில் ஹீரோயிச செயல்கள் ஆகிவிடுகின்றன. இது போன்ற ஹீரோயிச செயல்களை காட்டி பெண்களை வலம் வரும் மாணவர்களை நகரிலும், கிராமத்திலும் எங்கு வேண்டுமானாலும் காண கிடைக்கின்றனர்.

இது போன்ற மாணவர்களுக்கு பெண்களை அணுகுவதே பிரச்சனையாய் இருக்கிறது. மேலும் பெண் என்பவள் பெற்றோரின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதால் அவளை நினைத்த நேரத்தில் சந்திப்பது என்பது இயலாத காரியம். வீட்டில் இருக்கும் போதும் பார்க்க முடியாது, அவள் படிக்கும் பள்ளிக்கு சென்றும் பார்க்க முடியாது, ஏனென்றால் வாட்ச் மேன் அவனை கேட்டினுள்ளேயே விட மாட்டான். அவளை எங்கேயும் நெருங்க முடியாது. இந்த இடத்தில் பேருந்துகள் அவனுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கிறது. பேருந்து என்ற அந்த மூடிய அல்லது குறுகிய சமூகத்தில் அவன், அவளை கரம் பிடிக்க அவன் ஆவனவற்றை செய்கிறான். பருவம் அடைந்தது முதல் பொத்தி பொத்தி வளர்க்கபட்ட பெண்களும், அவர்களுக்கு உரிய இனக்கவர்ச்சியினால் ஆண்களின் பால் ஈர்க்க பட்டு விடுவதும் இங்கே மிக சாதாரணமான விஷயம்.

இங்கே நான் குறிப்பிட வருவது என்னவென்றால், எப்படி பேருந்துகள் காதல் மையங்களாக மாறி போனது என்று தான் சொல்ல வருகிறேன்.

அட்டக்கத்தி படத்திலும் சரி, சுந்தரபாண்டியன் படத்திலும் சரி கதையின் நாயகன், கதாநாயகியை பேருந்தில் சந்திப்பது போன்று தான் வருகிறது. ஆக, பேருந்துகள் காதல் மையங்களாக ஆகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இந்த இரு படமும் இருக்கிறது.

இந்த மாணவர்களுக்கு பெண்களை ஈர்க்க வேண்டும் என்ற தவிப்பு இருத்தல் இயல்பு. அதற்காக ஓடும் பேருந்தில் ஏறியும், ஓடும் பேருந்தில் இறங்கியும், அநாவசியமாக உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவில் கம்பிகளில் தொங்கி கொண்டு வருவதும் போன்ற ஆபத்தான செயல்களை சாகசங்களாக எண்ணி பெண்களை ஈர்க்க ஆன அளவில் முயற்சி செய்கின்றனர். இந்த இரு படங்களிலுமே இது போன்ற காட்சிகளை சித்தரிக்க பட்டுள்ளன. ஆனால் எந்த வடிவில் சித்தரிக்க பட்டுள்ளது என்றால், இது போன்ற சாகசங்களை ஊக்குவிக்கும் வகையில் தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இது போல் உயிருக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்தான விளையாட்டுகளை செய்வதெல்லாம் ஹீரோயிசம் என்ற ரீதியில் தான் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்த காட்சிகளை துகிலுரித்துக் காட்டும் காட்சியாய் கொள்ள முடியாமல் பொறுப்பில்லாத ஒரு படைப்பாகவே பிரதிபலிக்கிறது. சுந்தர பாண்டியன் படத்தில் பேருந்து நிற்கும் போது ஏறாதே, பேருந்து கிளம்பிய பிறகு ஏறு, அப்போது தான் பெண்களை கவர முடியும் படத்தின் நாயகன் அவனது நண்பனுக்கு அறிவுரை கூறுகிறான். அட்டக்கத்தி படத்திலும் அதே லட்சனம் தான். படத்தின் நாயகன் கொஞ்சமும் அறிவு இல்லாமல் வேகமாக ஓடி கொண்டிருக்கும் ஒரு பேருந்தில் படிகளில் கூட காலை வைக்காமல், வெறும் கைகளை கொண்டு பேருந்தின் பக்கவாட்டில் இருக்கும் ஜன்னல் கம்பிகளை பிடிக்கிறான், அப்போது அந்த ஜன்னலின் ஓரம் அமர்ந்திருக்கும் நாயகி அவன் இடறி விழுந்துவிடுவானோ என்ற பயத்தில் ’பார்த்து பார்த்து…’ என பதறி அவனுக்கு உதவி செய்ய முற்படுகிறாள், ஆனால் அவளின் உதவி இல்லாமலே நாயகன் படியில் கால் வைத்து எப்படியோ ஏறி, அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்து அவனின் காதல் லீலைகளை துவங்குகிறான். இப்போது இந்த இரு படங்களிலும் சேர்ந்து மக்களுக்கு செல்லும் கருத்து மிக தெளிவாகவே இருக்கிறது, ஒரு பெண் உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீயும் கண்ட படி பேருந்து படிகளில் தொங்கு…. அப்படி தானே! இந்த மாதிரி சில பொறுப்பற்ற ஹீரோயிச காட்சிகளாலே இந்த படம் எனக்கு பிடிக்காமல் போனதற்கு உப காரணம்.

நான் ஒரு முறை வேளச்சேரியில் இருந்து தி.நகர் செல்லும் 5A பேருந்தில் போய் கொண்டிருக்கையில் சில பள்ளி மாணவர்கள் பஸ்ஸை துருத்தி கொண்டு, திரட்சை கொத்து கூட்டம் போல் படிகளில் தொத்தி கொண்டு வந்தனர், சின்ன மலை அருகே வந்து கொண்டிருக்கும் போது நாங்கள் இருந்த பேருந்து எங்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தை கடந்து செல்ல வலதுபுறமாய் கடக்க முற்படுகையில், முன்னால் இருந்த பேருந்து இந்த துருத்தி கொண்டிருந்த கூட்டத்தை சற்று அசந்திருக்கும் பட்சத்தில் அடித்து விட்டிருக்கும். ஏனெனில் நாங்கள் சென்ற பேருந்து திரும்பிய வலது போதவில்லை, இன்னமும் கொஞ்சம் வலது திரும்பியிருக்க வேண்டும், ஓட்டுனர் துருத்தி இருக்கும் கூட்டத்தை கணக்கில் கொள்ளாமல் கடக்க முற்படுவதை பார்த்து, மாணவர்கள் அனைவரும் சத்தம் எழுப்பினர். கிட்டதட்ட அலறினர் என்று தான் சொல்ல வேண்டும். அவசராவசரமாக உள்ளே வர முடிந்தவர்கள் உள்ளே வந்தனர், இறங்க முடிந்தவர்கள் இறங்கி அவரவர்களை பாதுகாத்து கொண்டனர். இறங்கும் போது 3, 4 பேர் கால் இடறி விழுந்து விட்டனர். யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், பேருந்தில் இருந்த அனைவரையும் இந்த சம்பவம் உலுக்கி போட்டுவிட்டது. அந்த சமயத்தில் பேருந்தில் படியில் தொங்கும் அளவிற்கு கூட்டம் உள்ளே இருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த இரு படங்களிலுமே நிதர்சனத்தை துகிலுரித்து காட்டும் காட்சிகள் ஏராளமாக இருக்கிறது. உதரணமாக, பேருந்தில் பாலியல் ரீதியாக ஒருவர் எவ்வாறு துன்புறுத்தப் படுகிறார் மற்றும் வசிய படுத்தப்படுகிறார் என்று காட்ட படுகிறது. இது நாம் பேருந்தில் அவ்வப்போது பார்க்கும் அவலம் என்றாலும், இது போன்ற வரம்பு மீறல்கள் எல்லாம் பேருந்தில் எளிதில் சாத்திய பட்டு விடுகின்றன என்பதை நினைவு கொள்ள வேண்டும். அட்டக்கத்தி படத்தில் ஒரு பெண் தொடுதலின் மூலம் கதாநாயகனின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு கதாநாயகனின் மனதை அசுத்தப்படுத்தி விடுவாள். பின் உடன் இருக்கும் சகபயணி ஒருவர் இதை கண்டு வெளிப்படையாக புலம்பி தள்ளவே, கதாநாயகன் வெட்கங்கொண்டு பேருந்தில் இருந்து வெளியேறி விடுவான். வெளியேறிய பின் அவனை அவனே திட்டி மிகவும் வருத்தப்பட்டு கொள்வான் இது போல் பொறுப்பான காட்சிகள் படத்தில் ஆங்காங்கே இருப்பது தான் படத்தின் பலமாகும். மற்றப்படி படத்தில் சுவாரஸ்யம், ஹாஸ்யம், சண்டை காட்சி யாவும் மூன்றாம் தரத்தில் இருக்கின்றன. சுந்தர பாண்டியனிலும் வாலிப பசங்கள், வரிசையாக பெண்களின் பின் நின்று பாலியல் தொந்தரவு கொடுத்து கொண்டிருப்பார்கள். அதை ஹீரோ வந்து தடுப்பது போன்ற மொக்கையான க்ளீஷே காட்சிகள் தான் சுந்தர பாண்டியனுக்கு சறுக்கலாக போயிற்று. பேருந்துக்கு பேருந்து ஒரு சுந்தர பாண்டியனையா அனுப்ப முடியும்…! அந்த வகையில் நல்ல ஒரு கருத்துக்களத்தை எடுத்து கொண்டு ஹீரோயிஸம் சாயம் பூசி, சொல்ல வந்த கருத்தை கெடுத்து விட்டனர்.

அடுத்ததாய், சுந்தர பாண்டியன் படத்தில் மிக சிறந்த கதாப்பாத்திர வடிவாக்கம் என்றால் அது அப்புக்குட்டியின் கதாபாத்திரம் தான். உண்மையில் அந்த கதாபாத்திரத்தை அவர் மிக சிறப்பாகவும், மிக சரியாகவும் செய்துள்ளார். ஒரு பெண்ணிடம் எப்படி அணுகி, எப்படி காதலை சொல்லி, எப்படி அவளை கரம் பிடிப்பது என்று தெரியாத ஒரு கதாபாத்திரமாக அப்புக்குட்டி வருகிறார். அப்புக்குட்டி என்பது தனி ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம் அல்ல, ஊரெங்கும் நிறைய மனிதர்கள், அப்புக்குட்டி கதாப்பாத்திரத்தை உரித்து வைத்தாற் போல் இருக்கிறார்கள். என் நிஜ வாழ்விலும் சில அப்புக்குட்டிகளை, எனக்கு தனிப்பட்ட முறையிலேயே தெரியும். மேலும், அப்புக்குட்டியை ஒரு வில்லன் கதாபாத்திரமாக சித்தரிக்காமல் ஒரு கதாபாத்திரமாகவே, அப்புக்குட்டியை உலவ விட்டிருக்கின்றனர். என்ன தான் கதையின் நடுவே அப்புக்குட்டி கதாநாயகியை பார்த்து ஆபாசமாக திட்டினாலும், அப்புக்குட்டி ஒரு வகையில் அப்பாவி என்பதை ஒப்பு கொள்ள தான் வேண்டும். ஏனெனில் சசிக்குமாருக்கு இருக்கும் அழகும், திறமையும், சாதி பலமும், பணமும், குடும்ப பிண்ணனியும் அப்புக்குட்டிக்கு இல்லாமல் போயிற்று, அவ்வளவு தானே தவிர அப்புக்குட்டி வில்லனெல்லாம் கிடையாது, ஆனால் ஒரு அருவருப்பான கதாபாத்திரம், அப்படி அருவருப்பாய் இருப்பது கூட அவனின் தவறு கிடையாது என்பது தான் இங்கு பரிதாபம். இதே போல் அட்டகத்தி படத்திலும் ஒரு கதாபாத்திரம் வருகிறது, அவனும் கிட்டதட்ட அப்புகுட்டி போல் தான் என்றாலும், இவன் கொஞ்சம் அப்புகுட்டியை காட்டிலும் ஃபாஸிஸ்ட். அதாவது அந்த பெண், நம்மை தான் காதலிக்க வேண்டும். என்ன தான் நம்மிடம், அந்த பெண் எதிர்பார்க்கும் அளவுகடந்த அன்பு, வீரம், மேன்மையான குணம் இல்லாவிட்டாலும் அந்த பெண் நம்மை தான் காதலிக்க வேண்டும் என்ற ரீதியலான கதாபாத்திரம். மேலும் அந்த கதாபாத்திரம் கதாநாயகியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்வது மட்டுமில்லாமல், அதை தடுக்க வந்த ஒருவனையும் கன்னத்தில் அறைந்து அவனை அவமானப்படுத்துகிறான். இரண்டாமானவனின் கதாபாத்திரத்தில் வன்முறை சற்று தூக்கலாக இருந்தாலும், அடிப்படியில் இவ்விரு கதாபாத்திரங்களும் ஒன்றே.

இது போன்ற கதாபாத்திரங்கள் நிஜ வாழ்விலும் நிறைய இருப்பதால், சற்று இந்த கதாபாத்திரங்களை உற்று நோக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஏனெனில், நாளை பாதிக்கப்படும் பெண்ணோ, அல்லது தகராறு செய்யும் ஃபாஸிஸ்ட்டோ நம் வீட்டு நபர்களாக கூட இருக்கலாம் அல்லவா?

உண்மையில் இது போன்றவர்களுக்கு ஹீரோயிஸத்தை பற்றிய ஒரு தவறான மாயை தான் மனதில் பதிந்து விட்டிருக்கிறது. அதற்கு நம் தமிழ் சினிமா உலகமே தார்மீக பொறுப்பு. இவர்களுக்கு உண்மையில் உணர வேண்டிய உடனடி உண்மை என்னவென்றால், ஹீரோவாக இருப்பதை காட்டிலும், நல்ல மனிதனாக இருப்பது தான் மிக தேவையான ஒன்று, அது தான் பெண்களுக்கு பிடித்தமாய் இருப்பதற்கு சுலபமான வழி. பெண்களுக்கு வன்முறை எந்த அளவிலும் பிடிக்காது, பெண்களுக்கு பிடித்தது எல்லாம் வீரம் மட்டுமே. இவர்கள் வீரத்திற்கும், வன்முறைக்கும் வித்தியாசம் தெரியாமல், பெண்களுக்கு முன்னால் பிறரை அடித்து அநாயவசியமாக பெண்களை அச்சுறுத்துகின்றனர். அதனாலே அவர்கள் அருவருக்க படுகின்றனர். தங்களின் போலியான பிம்பத்தை வீணாக காட்டி, பெண்களை கவர பார்க்கின்றனர், அப்படி அவள் கவர படுகிறாள் என்று வைத்து கொண்டாலும், பின்நாளில் உண்மை பிம்பம் வெளியே தெரிய ரொம்ப நாள் ஆகாது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இயல்பாய் இருப்பதே பெண்கள் எப்போதும் விரும்புவர். மறுபுறம், இவர்கள் வளர்க்க படும் விதமும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, பெரும்பாலும், இவர்கள் பெற்றோர்களின் ஒட்டுதல், அரவணைப்பு இன்றி,ஒரே வீட்டில் இருந்தாலும் தன் போக்கில் வளர்பவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்குள் நிறைய நிறைய அந்தரங்கங்களை வைத்து கொள்கின்றனர். எதையும் வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொள்ள கூட வெட்கப் படுகின்றனர். இப்படி அளவிற்கு மீறிய அந்தரங்கங்களை வைத்து கொள்வதாலேயே பெண்களை பார்க்கும் போது, சக உயிராய் பார்க்காமல் வேற்றுகிரகவாசி போல் அணுகிறார்கள். அவர்கள் மறுக்கும் பட்சத்தில் வன்முறையை கையில் எடுத்து அவர்களில் ஆதிக்க முகங்களை காட்டுகின்றனர். இப்படி அக அவலட்சங்களை நிறைய இருக்கும் பட்சத்தில், ஒருவனின் முகம் எவ்வளவு லட்சனமாய் இருந்தாலும், அது பெண்ணிற்கு தேவையற்றது.


சுந்தர பாண்டியனிலும் சரி, அட்டகத்தியிலும் சரி எனக்கு ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது. அது என்னவென்றால் இரண்டு படங்களிலுமே கதாநாயகிகள் சுமாரான அழகு தான். அழகான பெண்கள் தான் கதாநாயகிகளாக நடிக்க வேண்டும் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? கதாநாயகிகள் ஒன்றும் பொம்மைகள் கிடையாது, கதாபாத்திரங்கள் என்று எடுத்து சொல்லும் வகையில் இவ்விரு படங்களும் அமைந்ததில், எனக்குள் ஒரு சந்தோஷம்.    





Wednesday 17 October 2012

ஸ்வாதி ராஜீவ் (5)


நெடுநாட்கள் கழித்து சந்தித்த சந்தோஷத்தில் எல்லோரும் கலகலப்பாக பேசி கொண்டிருக்கையில் அன்பு மட்டும் அழுத்தமாய் இருப்பதை கண்டு என்ன விஷயம் என்று கேட்டனர்.

அன்பு பேச ஆரம்பித்தான்...

“நான் சென்னை வந்து கரெக்டா இன்னையோட ஒன்றரை வருஷம் ஆகுது, ஆனா இன்னைய வரைக்கும் நான் என்ன சென்னையில எதிர்பார்த்தேனோ, அது எனக்கு கிடைக்கல. நான் எதிர்பார்த்ததும் ஒன்னே ஒன்னு தான், ஒரே ஒரு கௌரவமான வேலை. ஆனா எனக்கு அது கடைசி வரைக்கும் கிடைக்கல. நான் வேலை தேடி சென்னை வந்ததோட சரி, இன்னைய வரைக்கும் ஊர் பக்கம் போகல, ஒரு நல்ல வேலை கிடைச்சு ஊர் பக்கம் போகலாம்னு பாக்கறேன், ஆனா வேலை கிடைக்கவும் இல்லை, ஊர் பக்கம் போகவும் இல்லை.. முந்தாநாள், எங்க ஊர்ல அழகர் ஆத்துல இறங்கியிருக்காரு, அதை பார்க்க மதுரக்காரய்ங்க எந்த நாட்டுல இருந்தாலும் ரயிலை பிடிச்சு, ப்ளைட்ட பிடிச்சுலாம் வந்து சேர்வாங்க, ஆனா அன்னைக்கு நான் இந்த பாழாய் போன ஊர்ல interview அட்டெண்ட் பண்ணிட்டு இருந்தேன். எங்க அப்பாவும் அம்மாவும் என்னை வர சொல்லி எவ்வளவோ கேட்டாங்க, கடைசி வரைக்கும் முடியாதுனு சொல்லி இங்கே தான் கிடந்தேன். வேலை கிடைச்சா தான் ஊர் பக்கம் போகணும்னு இருக்கேன்.

முதல்முதல்ல Interview தேடி சென்னைக்கு வந்த போது எவ்வளவு உற்சாகமா இருந்தது தெரியுமா… Internet போய் Chetanasforum websitesல வர்ற interview எல்லாத்தையும் பார்த்து பார்த்து எதையுமே மிஸ் பண்ணிடாம எல்லா interviewஐயும் போய் attend பண்ணுவேன். அப்பவெல்லாம் நமக்கான வேலை எங்கேயோ இருக்குனு குருட்டு தனமாய் ஓடிகிட்டே இருந்தேன், ஒரு நாளைக்கு 3 interviewலாம் கூட attend பண்ணியிருக்கேன். அதுவும் எப்படி, ஒரு interview spot தாம்பரம் மெப்ஸ்ல இருக்கும், இன்னொன்னு ஈக்காட்டுத்தாங்கல்ல இருக்கும், ரெண்டத்தையும் attend பண்ணுவேன். ஏன் இப்படி ரொம்ப மெனக்கெட்டு ஓடிகிட்டு இருக்கனு friends கூட கேட்பாங்க, இன்னும் எவ்ளோ நாளைக்கு ஓட போறேன், கொஞ்ச நாள் தானேன்னு நினைச்சுக்குவேன். எனக்கான வாய்ப்பு எங்க வேணும்னாலும் இருக்கலாம்னு நினைச்சுப்பேன். ஆனா எப்ப இந்த சென்னையை புரிஞ்சிக்க ஆரம்பிச்சேனோ அப்பவே நான் இனி ஓடனுமானு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். நான் கடைசியா interview போய் 4 மாசத்துக்கு மேல ஆகுது. எதுவுமே பண்ணாம, எங்கேயுமே போகாம ஒரு நாள் பூரா ரூமுக்குள்ளயே இருக்கேன். என்ன பண்றதுண்ணும் தெரியல.

ஒரு interview போறதுக்கு முன்னாடி எவ்ளோ கனவோட போவேன் தெரியுமா… அந்த வேலை கிடைச்சிடுச்சுனா எப்படி தங்கறது, எங்க தங்கறது, எப்படி வந்து போகறதுனு, முதல் சம்பளத்துல என்ன வாங்கறதுனு பல கனவுகளோட தான் போவேன். ஆனா, நான் போன interviewல பல interview நடக்கவே நடக்காது, ஏன்னா கூட்டம். interviewனு சொன்னவுடனே, என்னை மாதிரியே பல ஆசாமிகள் என்னை மாதிரியே வந்து சேர்ந்திடுறாங்க. எதிர்பார்த்ததை விட அதிகமாய் கூட்டம் வந்திடுச்சு, அதனால வேற ஒரு நாள் வேற ஒரு இடத்துல interview நடக்கும், Sorry for the inconvenienceனு  ஸ்டைலா  சொல்லி அனுப்பிடுவாங்க,

என்னோட first interview லேயே என்னை அப்படி தான் அனுப்பினாங்க. அன்னைக்கு மட்டும் நான் 3 மணி நேரம் வெயில்ல நின்னேன். அவங்க கம்பெனியோட future employee பல பேர் வெளியே நிக்கறதை பத்தியோ, அவங்கல்லாம் ஏமாற்றமா திரும்ப போறத பத்தியோ அவனுக்கு கொஞ்சமும் கவலையில்லை, ஏன்னா அவனுக்கு எங்களை விட்டா வேற ஆள் இருக்கான். நாளைக்கே interview னு internet ல announce பண்ணான்னா, நாளைக்கும் 750 பேர் வந்து வரிசையில நிப்பான்னு அவனுக்கு தெரியும்.

சரி, interview தான் இப்படி இருக்கேன்னு எங்கங்கெல்லாம் industries இருக்குனு விசாரிச்சு 30 resume-களை எடுத்து வச்சுகிட்டு அம்பத்தூர், கிண்டி, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர்னு கிளம்பியிருக்கேன். ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்கியிருக்கேன். அதுலயும் என்னான்னா முக்கால்வாசி செக்யூரிட்டிங்க கேட்டுக்குள்ள ஆளை விட மாட்டானுங்க. வெளியேவே நிக்க வைச்சு vacancy இல்லைப்பானு அனுப்பிருவாங்க. சரி, atleast resume ஆவது உள்ளே கொடுத்துடறேன்னு சொன்னா, நானே கொடுத்துக்குறேன்னு வாங்கி வச்சுக்குவாங்க. ஒரு சில கம்பெனிங்கல்ல மட்டும் தான் உள்ளே விடுவாங்க, அங்கேயும் reception லயே நம்மளை உட்கார வைச்சு, resume-அ வாங்கி ஆளை திருப்பி அனுப்பிடுவாங்க. அந்த மாதிரி மட்டும் ஒரு 40-50 resumes கொடுத்து இருக்கேன். அதுல ஒண்ணுத்துல இருந்து கூட reply வராதது தான் எனக்கு ஆச்சர்யம், ஒரு கம்பெனில கூடவா வேலைக்கு ஆள் தேவைப்படாம போயிடும்.

இந்த ஒன்றரை வருஷத்துல வெறும் எட்டே எட்டு interviewகளை தான் உருப்புடியா attend பண்ணியிருக்கேன். மத்ததெல்லாம் வெத்து வேட்டு. என்னா தான் interview மேல interview ஆ attend பண்ணாலும், எப்படி தான் இந்த interviewகள்ல கடைத்தேறி உள்ளே போறதுங்கற வித்தை மட்டும் இன்னமும் எனக்கு தெரியவேயில்லை. இந்த எட்டு interviewகள்ல, எட்டுத்திலுயுமே நான் written examல select ஆகிட்டேன், ஏன்னா பிறந்ததுல இருந்து எனக்கு அதுக்கு தான் ஸ்கூல்ல training கொடுத்து வச்சுருக்கானுங்க, அதனால written exam ஒன்னும் எனக்கு பெரிய பிரச்சனையா இருந்திடல. ஆனா இந்த group discussionலயும், HR interviewலையும் தான் எனக்கு ஆப்படிச்சு அனுப்பிடறாங்க, ஏன்னாக்க எனக்கு communication skill பத்தலையாம். Define elasticity அப்படினு கேட்டாக்க எனக்கு கோர்வையா சொல்ல தெரியலையாம். நான் எங்க போய் முட்டிக்கிறது,

எங்க கிராமத்துலயே நான் எடுத்த English markஐ இதுக்கு முன்னாடி எவனும் எடுத்தது கிடையாது, அதே மாதிரி அவன் கேள்வி கேட்ட elasticity definitionஐ பரீட்சையில எழுதினதால தான் எனக்கு strength of materialsல எனக்கு 82 மார்க் போட்டு, பாஸ் பண்ணி, degree certificate கொடுத்து அனுப்பியிருக்கான். அங்கேயே என் அறிவை நான் prove பண்ணிட்டு வந்ததுக்கு அப்பறமும், இங்கேயும் வந்து நான் prove பண்ணனும்னு அவன் எதிர்பார்க்கறான்னா, இதுக்கு பின்னாடி என்னா logic இருக்குனு எனக்கு புரியலை.

என்னை interview எடுத்தான் பார்த்தியா, அவன் ஆபீஸ்ல தினமும் English பேசி, English பேசறது அவனுக்கு தண்ணி குடிக்கற மாதிரி ரொம்ப ஈஸியான விஷயமா இருக்கும், ஆனா என் நிலைமை எப்படி இருக்குன்னா, வேற மாநிலத்துக்காரனை யாரையாவது பார்த்தா மட்டும் தான் நான் இங்கிலீஷையே பேசுவேன், மத்தப்படி எனக்கு எல்லா இங்கிலீஷும் ஏட்டுல தான். நான் வந்தது கிராமத்துல இருந்து,  கிராமத்துலையோ, காலேஜ்லையோ நான் யார்கிட்ட இங்கிலீஸ் பேசி பழக… நான் அங்க போய் திக்கி திணறாம இங்கிலீஷ் பேச… அவன் கம்பெனி வேலைக்கு வர்றவங்க அத்தனை பேரும் இங்கிலீஸ் பேசறவங்களா இருக்கணும்னா அவன் londonல போய் interview எடுத்துட்டு வர வேண்டியது தானே… ஏன் இங்க வந்து தமிழ்நாட்டுல எடுத்துட்டு இருக்கான். அவன் சொல்ற படி interview எடுத்தா, எந்த பிள்ளைகள்ளாம் கான்வெண்ட் ஸ்கூல்ல படிச்சிருக்கோ அவங்க மட்டும் தான் செலக்ட் ஆக முடியும். அப்படினா interviewங்கறதே elite people க்கு தானா?

அதே மாதிரி HR roundல கேக்கற கேள்விங்கல்லாம் முக்கால்வாசி, நம்ம எந்த எடத்துல weak-ஆ இருக்கோம்னு தெரிஞ்சிகிட்டு அந்த இடம் பார்த்து அடிக்கறதுக்காகவே கேக்கற மாதிரி இருக்கும். அவன் என்னா எதிர்பார்க்கறான்னா நான் காலேஜ்ல படிச்ச 30 பாடங்களையும் விரல்நுனியில வச்சருக்கனுமாம். இப்ப நான் காலேஜ் முடிச்சே 500 நாளைக்கு மேல ஆகுது, ஆனா நாளைக்கே நான் ஒரு interview போனாலும், நான் second yearல படிச்ச thermodynamics-ல இருந்து questions கேட்பான், அதுக்கு நான் பதில் சொல்லனும், நான் அப்போ பாஸ் பண்ணதெல்லாம் பத்தாது, கேட்கும் போது சொல்லனும், எழுதி காட்ட கூட கூடாது, கடகடன்னும் ஒப்பிச்சுடவும் கூடாது, casual-லா சொல்லனும். அப்ப தான் எனக்கு வேலை கொடுப்பான். இப்ப அவன் கேக்கற கேள்விக்கு நான் அவன் எதிர்பார்க்கற மாதிரியே நான் casual-லாவே பதில் சொல்றேன்னு வை, அவன் அடுத்த கேள்வி எங்க இருந்து தெரியுமா கேட்பான், சம்பந்தமே இல்லாம fluid mechanicsல இருந்து கேட்பான். அதையும் சொல்லனும், இல்லைன்னா வேலை கிடையாது. ஒரு வேளை, அவன் thermodynamics ல இருந்து கேக்கற கேள்விக்கு நான் பதில் தெரியாமா முழிக்குறேன்னு வை, அவன் கேக்கற அடுத்த கேள்வி அதே thermodynamics-ல இருந்தே தான் கேட்பான், fluid mechanicsக்கு வரவே மாட்டான். thermodynamicsலேயே சந்து பொந்துலாம் பூந்து, என்னை மண்ணை கவ்வ வைச்சு, all the best for your next interview-னு சொல்லி அனுப்பிடுவான். நாம மனம் தளராம வரனுமாம். நாம்ம கஷ்டப்பட்டு written clear பண்ணது, group discussion பாஸ் பண்ணியதெல்லாம், காந்தி கணக்கு தான்.

நான் பிறந்ததுல இருந்து, எனக்கு எங்க வாத்தியாருங்க என்ன Training கொடுத்து வச்சுருக்காங்கன்னா, ஒரு விஷயத்தை எப்படி ஒரு இடத்துல மக்கப் பண்ணி, இன்னொரு இடத்துல போய் பேப்பர்ல கொட்டனும்னு தான் train பண்ணியிருக்காங்க. இந்த trainingலாம் எதுக்குனு பார்த்தா, நான் ஒரு நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கனும்னு தான். ஆனா, இங்க வந்து interviewக்கு நின்னா, ஒரு இடத்துல கூட மக்கப் அடிச்சு பேப்பர்ல கொட்டற டெஸ்ட்டே வைக்க காணோம். முதல் ரவுண்டு apps, இரண்டாவது ரவுண்டு group discussion, மூனாவது ரவுண்டு hr interview. இப்படி இருக்கும் போது, எனக்கு மக்கப் அடிக்க ட்ரைனிங் கொடுத்தது எதுக்குங்கற கேள்வி, யார் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி?  நான் கை நிறைய சம்பாதிக்க, நான் 19 வருஷமா எடுத்த training உதவி பண்ணலைனா, இனிமே அந்த trainingக்கு ஆன அவசியம் தான் என்ன? அத்தனையையும் கடாசிட்டு ஒரு interviewல select ஆக என்ன training கொடுக்கனமோ, அதை கொடுக்க ஆரம்பிக்க வேண்டியது தானே! இன்னமும் ஏன் எங்க ஊர் பிள்ளைங்கள பாபர் என்று பிறந்தார், என்று இறந்தார்னுலாம் ஞாபகம் வைச்சுக்க சொல்லிட்டுருக்கானுங்க… காமராஜர் காலத்துல எப்படி பாடத்தை சொல்லி கொடுத்தானோ, இப்பயும் அதே மாதிரி தான் சொல்லி கொடுக்காறான், அந்த காலத்துல தான் எல்லோரும் வாத்தியார் வேலைக்கு போறதுக்காக படிச்சாங்க, இப்பவும் வாத்தியார் வேலைக்கு போறதுக்கே சொல்லி கொடுத்தா அது என்ன அர்த்தம், வேற எந்த வேலைக்கும் யாரும் போக மாட்டாங்களா என்ன!

காலேஜ் முடிச்சு வெளியே வரும் போது, உண்மையா நான் என்னை ஒரு திறமைசாலியா உணர்ந்தேன், ஆனா நாளாக நாளாக இங்க நான் அலையறதை பார்த்தா எனக்கு என் மேலேயும், என் திறமை மேலயும் ஒரு சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சு. அந்த சந்தேகம் வலுக்க வலுக்க எதுக்கு டா இந்த இன்ட்ரிவ்யுக்குலாம் போய்க்கிட்டுன்னு விட்டு தள்ளிடறேன்.

FISனு ஒரு கம்பெனி, தேனாம்பேட்டைல இருக்கு, அங்க நடந்த interviewல நான் writtenல நல்லா எழுதி அடுத்த round செலக்ட் ஆகிட்டேன். அடுத்த ரவுண்டு group discussion, ரொம்ப நல்லா பேசினேன்னு சொல்ல முடியாது, ஏதோ பேசினேன். அவனும் நீ எங்களுக்கு லாயக்கு இல்லை வெளியே போடான்னு சொல்லிட்டான், நானும் வந்திட்டேன். ஆனா அந்த group discussion ரவுண்ட்ல எங்களோட ஒன்னுமே பேசாம சும்மா இருந்தவனை selected listல announce பண்ணாங்க… அது எப்படினு, எனக்கு அப்போதைக்கு புரியாம இருந்தது, பின்னாடி தான் அவன் consultancy மூலமா வந்து இருப்பான்னு புரிஞ்சது.

Syntel company interview group discussionல, is hero-inn essential for a movie? னு ஒரு டாபிக் கொடுத்தாங்க. சுத்தியிருக்கற 10 பேர்ல என் கெட்ட நேரத்துக்கு, நான் மட்டும் தேவையில்லைனு சொல்ல, மீதி 9 பேரும் கண்டிப்பா தேவைனு சொன்னாங்க. அந்த 9 பேரும் என் கிட்ட சண்டைக்கே வந்துட்டாங்க, நானும் நான் சொன்னதுல நியாயம் இருக்குனு மாறி மாறி எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியதாய் ஆயிடுச்சு, ஆனா அவங்க அத்தனை பேரும் டூமாங்கோழிங்க, அவங்க யாராலும் என் கிட்ட மல்லுகட்ட முடியலை, நான் சொல்ற பதில்ல அப்படியே off ஆகி தான் போனாங்க. நான் example சொன்ன ரொம்ப famous ஆன பல Hollywood படங்களை அவங்க யாரும் கேள்வி பட்டது கூட இல்லையாம், ஆனா நுனி நாக்குல இங்கிலீஷ் பேசுதுங்க. நானும் அவங்களுக்கு சளைக்காம இங்கிலீஷ் பேசி saw, bridge to the river kwai, departed, shutter island, kikijaro மாதிரியான படங்கள்ல கதை எப்படி ஆளுமை செலுத்துதுனு சொன்னேன். அவங்க அந்த படத்தையெல்லாம் பார்த்து இருக்காததால kikijaro படத்தோட கதையை மட்டும் சுருக்கமா இங்கிலீஷ்ல சொன்னேன். அதுக்கப்பறமா எவனாலும் பேச முடியல, ஒரே ஒரு north Indian பொண்ணு மட்டும், “இதெல்லாம் ஒரு கதையா? இத்தனை படத்தை பார்த்த நீங்க Kuch kuch hotha hai பார்த்து இருந்தீங்கனா, படத்துல hero-inn எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சியிருந்திருப்பீங்க” சொன்னா, அவ அப்படி சொன்ன உடனே சுத்தியிருந்த அத்தனை பேரும், yes, I agree with her…. Yes, I agree with her னு  சொல்லிட்டுனாங்க. நான் உடனே டென்ஷனாகி “ஆமா, நான் இன்னும் kuch kuch hotha hai பார்த்தது இல்லை தான், ஆனா டைட்டானிக் பார்த்து இருக்கேன், அதுலயும் hero-inn ரொம்ப முக்கியமானவங்க தான், ஆனா அந்த மொத்த படமும் இந்த உலகத்துக்கு சொல்ற விஷயம்னு பார்த்தா ஒண்ணுமேயில்லை, ஒரு கப்பல் மூழ்கிய வரலாறுனு வேணும்னா வெச்சுக்கலாம், ஆனா கிகிஜரோவை அப்படி சொல்ல முடியாது, பொறுப்பில்லாத ஒரு கலவி எப்படி ஒரு பிஞ்சு மனசை கசக்கி எறியுதுனு ரொம்ப முக்கியமான ஒரு subjectஐ சொல்றாங்க. அதுவுமில்லாம் இங்க வர்ற லவ் ஸ்டோரிஸ் தான் நம்மளோட கலாச்சார சீரழிவுக்கு காரணம்னு நான் சொல்வேன். லவ் ஸ்டோரிஸ்லாம் என்ன சொல்ல வருதுனு பார்த்தா, லவ் பண்ணாதவன்லாம் Heroவே இல்லை, அதனால எல்லோரும் லவ் பண்ணுங்கனு நம்ம கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு செய்தியை தான் லவ் ஸ்டோரிஸ் தொடர்ந்து மறைமுகமா சொல்லிகிட்டு இருக்கு…” அப்படினு சொன்னவுடனே, அந்த இந்திக்கார பொண்ணும் off ஆய்ட்டா. அப்பறம் கடைசியா யார்யார்லாம் next round செலக்ட் ஆகியிருக்காங்கனு பார்த்தா, என்னை தவிர என் கூட சண்டை போட்டவன்லாம் செலக்ட் ஆகிட்டான். நான் அந்த interviewerஐயே போய் நேர்ல பார்த்து, ஏன் என்னை செலக்ட் பண்ணலைனு கேட்டேன், அதுக்கு அவன் நீங்க teamworkல lag ஆகறீங்கனு சொல்லிட்டான். என்னால அதை ஜீரனிக்கவே முடியலை, அவ்வளவு திறமை காட்டியும் செலக்ட் ஆகாதது நினைச்சு நினைச்சு…. சரி அதை விடு….

சரி நம்மளுக்கு தான் இங்கிலீஷ் ஓரளவுக்கு வருதேன்னு நம்பி, HCL bpo கம்பெனிக்கு ஏறி இறங்கினேன், அங்க writtenலாம் ஒண்ணும் கிடையாது, straightஆ hr தான், அவன் எடுத்தவுடனே என் பேரை கூட கேட்காம ,Tell about your first day college experienceனு சொன்னான், நான் எண்ணி ஒரு 6 வார்த்தை தான் சொல்லியிருப்பேன். அவன் உடனே, See Mr.Anbu , as HCL is an international company, you need more fluency and flow in English, better luck next time னு சொல்லி அனுப்பிட்டான். அந்த பொன்னான வார்த்தைகளை அவன்கிட்ட இருந்து கேட்கறதுக்காக மட்டுமே ரிசப்ஷன்ல ரெண்டே கால் மணி நேரம் நின்னுகிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் நான் எந்த bpo interview ஐயும் attend பண்ணலை.

இதெல்லாம் கூட பொறுத்துக்கலாம், ஆனா இந்த சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, பக்கத்து வீட்டுக்காரங்க அக்கப்போர் தான் தாங்க முடியாதது. பார்க்கறவன்லாம் எனக்கு mail அனுப்பு, உன் resume 5 copy எனக்கு கொடு, எனக்கு தெரிஞ்சவங்க TVSல இருக்காங்க, caterpillarல இருக்காங்க, சவுதி அரேபியாவுல இருக்காங்கனு ஒரே ராவடி. நானும் கழுதைங்க இந்தாடானு கொடுத்து தொலைச்சுருவேன்னு வை, எப்ப போன் பண்ணி சார், வேலை என்ன ஆச்சுனு கேட்டாலும், இந்தா 10 நாள்ல interview தேதி announce பண்ணிடுவாங்கப்பா, நீ போக வேண்டியது தான், இன்ட்ரிவியு அட்டெண்ட் பண்ண வேண்டியது தான், அன்னைக்கே offer letter கொடுத்துருவாங்க, வாங்கிட்டு வந்துட்டே இருக்கலாம். 5 மாசம் கழிச்சு போன் பண்ணாலும், அந்தாளு அதையே தான் சொல்லுவான். சரி, இனி இவன் வேலைக்காக மாட்டான்னு போன் பண்றதை நிறுத்திட்டோம்னு வை, உடனே திடீர்னு ஒரு 20 நாள் கழிச்சு போன் அடிச்சு, ஏம்பா, 2 நாள் முன்னாடி தான் interview announce பண்ணி ஆள் எடுத்தாங்களாம், நீ போன் பண்ணிட்டு தானே இருந்த, நடுவுல ஏன் போன் பண்றதை நிறுத்திட்ட, நீ போன் பண்ணியிருந்தன்னா எனக்கு ஞாபகம் வந்து அதை உனக்கு வாங்கி கொடுத்து இருப்பேன், அப்படி இப்பிடினு அரை மணி நேரத்துக்கு அறுவையை போட்டு தாளிச்சு எடுத்து, உனக்கு வேலை வேணும்னா நீ தான் அக்கறையா follow பண்ணிட்டு இருக்கனும், நான் work busyல மறக்க தான் செய்வேன்னு தலையில கொட்டாத குறையா சொல்லி முடிப்பான். இந்த இடத்துல work busyனு சொல்றான் பார்த்தியா, அதை கொஞ்சம் கவனிச்சா, அவனுக்கு வேலை இருக்காம், நமக்கு வேலை இல்லையாம், அதை தான் துரை குத்தி காட்டுது.

உங்க எல்லாருக்கும் ஒண்ணு தெரியுமா, நான் இது வரைக்கும் 82 பேருக்கு என் resumeஐ forward பண்ணி இருக்கேன். ஆனா இது வரைக்கும் 4 வேலைக்கு தான் போயிருக்கேன். அதுவும் எல்லாமே நானே interview attend பண்ணி போனது. எனக்கு மட்டும் வேலை கிடைச்சுடுச்சுனா அந்த 82 பேர்க்கும் போன் பண்ணி, எனக்கு உங்க தயவு இல்லாமலே வேலை கிடைச்சிடுச்சுனு சொல்லனும்னு ஆசை, ஆனா எங்க? வேலை கிடைச்சா தானே…

இந்த வியாபாரிங்கல்லாம் அரிசியை பதுக்கி கொஞ்ச நாள் கழிச்சு அதிக விலைக்கு விற்பாங்க, தெரியுமா , அந்த மாதிரி பண்றவங்க தான் இந்த consultancy காரங்க… அவனுங்க கிட்டயும் நான் மாறடிச்சு இருக்கேன்.

நியாயமா இவங்க வேலை என்னான்னா, கம்பெனியில வேலை செய்ய ஆளே கிடைக்காதப்போ, இவங்க ஆள் பிடிச்சு கொடுக்கறது தான், இவங்க வேலை, ஆனா இந்த பொறுக்கி பசங்க என்ன பண்றாங்கன்னா, எங்க வேலைக்குன்டான vacancy அதிகமா இருக்கோ, அந்த vacancyகளை பிடிச்சு வைச்சு வெளியாளுங்களுக்கு 2 லட்சம், 3 லட்சம்னு வித்துர்றது. கிட்டதட்ட தியேட்டர்ல ப்ளாக் டிக்கெட் விற்கறவங்களுக்கும் இவங்களுக்கும் ஒன்னும் அதிக வித்தியாசமில்லை.

இதுல சில கன்சல்டன்சி எப்படின்னா அவனுங்க ஒரு இடத்துல ஆபீஸ் போட்டு உட்கார்ந்து இருப்பாங்க, நாம போய் நான் இன்னது படிச்சு இருக்கேன், எங்க வேலை இருக்கு அப்படினு கேட்கனும். கேட்டோம்னா, அவன் ஒரு இடத்தை சொல்வான், நாம அங்க போய் அவன் கிட்ட இண்ட்ரிவ்யூ அட்டெண்ட் பண்ணி செலக்ட் ஆனோம்னா, அவன்கிட்ட நம்மளோட ஒரு மாச சம்பளத்தை கொடுத்துட்டு வேலைக்கு சேர்ந்துட வேண்டியது தான். வெறும் கை காட்டி விடறதுக்கு நாம அவங்களுக்கு 10000 ரூபாயை தண்டமா கொடுக்கணும். இது எவ்ளோவோ பரவாயில்லைனு தான் சொல்வேன்.

என்னை ஒருத்தன் காஞ்சிபுரம் பக்கத்துல இருக்கிற செய்யாறு அப்படிங்கிற ஊர்ல LOTUS Industriesனு ஒரு ஷூ கம்பெனியில backdoorல வேலைக்கு சேர்த்தி விடறதாவும், அதுக்கு ஒரு லட்சம் ஆகும்னும் சொன்னான். நானும் தொலையுது சரின்னுட்டேன். அவன் ஆபீஸ் இருக்கறது க்ரோம்பேட்டைல, அங்க ஒரு நாள் 8.30 மணிக்கு வர சொன்னான். கொஞ்ச நேரம் receptionல உட்காருங்க நம்ம கார்லேயே போயிடலாம்னு சொன்னான். நானும் என்னோட வந்திருந்த இன்னோரு பையனும் காத்திருக்க ஆரம்பிச்சோம். மணி 10 ஆச்சு, 11 ஆச்சு, 12 ஆச்சு, 1 மணி ஆனதுக்கு அப்பறமும் எங்களை கூட்டிட்டு போகாம வெயிட்டிங்க்லேயே இருக்க வைச்சான். நடு நடுவுல என்ன சார் ஆச்சு, எப்ப சார் போவோம்னு கேட்கும் போதெல்லாம், இதோ போயிடலாம் பா, 5 நிமிஷம், ஒரு சின்ன வேலை இருக்குனு சொல்லி, அவன் computerயே உத்து உத்து பார்த்துகிட்டு இருந்தான். நடு நடுவுல யார்கிட்டயோ போன்ல பேசிகிட்டு இருந்தான். கடைசியா 1 மணிக்கு, அந்த கம்பெனி HR லைன்ல கிடைக்கல, அதான் வெயிட் பண்ண வைக்க வேண்டியதாய் போயிடுச்சு, நீங்க இந்த address போய், இவரை பாருங்கனு, ஒரு address ஐ கைல கொடுத்தான். சார், நீங்க வரலையானு கேட்டா, வேலை இருக்குனு சொல்லிட்டான். மணி அப்பவே ஒன்றரை, நானும் அந்த இன்னோரு பையனும் சாப்பிட்டு முடிச்சு, காஞ்சிபுரம் பஸ் புடிச்சு போய், அங்க இருந்து செய்யாறு போனா மணி 05.30 ஆயிடுச்சு. போனா அவன் சொன்ன HR கிளம்பியே போயிட்டானாம். அவனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னா, அப்ப நாளைக்கு வந்திடுங்கனு கூலா சொல்லிட்டான். வீட்டுக்கு திரும்ப வர்ற 11.45 ஆயிடுச்சு, இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, அவன் அலட்சியத்தால நாங்க அலையறது எவ்ளோன்னு அவன் தெரிஞ்சிக்க கூட விரும்பறது இல்லை.

சரினு அடுத்த நாள் கிளம்பினோம். இந்த முறை எங்களை பணத்தோட வர சொன்னான், அதனாலயோ என்னமோ, அவன் அவனோட கார்லேயே எங்களை கூட்டிட்டு போனான். என் கூட வந்தவன் அவனோட அப்பாவை துணைக்கு கூட்டிட்டு வந்திருந்தான். அந்த கன்சல்டன்சிக்காரன் கம்பெனிக்கு ½ கிலோ மீட்ட்ர் முன்னாடியே காரை நிறுத்திட்டு, ஒரு ஆளை போன் போட்டு வர சொன்னான். அவனும் வந்தான். அவன் நல்லா வாட்ட சாட்டமா, கன்னங் கரேல்னு இருந்தான், வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையெல்லாம் போட்டு ஏதோ ஏரியா கவுன்சிலர் மாதிரி இருந்தான். பார்த்தா, அவன் உண்மையிலே ஏரியா கவுன்சிலர் தானாம். அவன் எங்களோட உள்ளே வந்து கார்லேயே உட்கார்ந்து, ஒரு துண்டு சீட்டு கையில எடுத்து வைச்சுகிட்டு, எங்க ரெண்டு பேர் பேரையும் கேட்டு அதில எழுதி வைச்சுகிட்டான். எழுதி முடிச்சதும், சரி பணத்தை கொடுங்க, நான் உள்ளே போய் offer letter வாங்கிட்டு வர்றேன்னு சொல்றான். எனக்கும் , என் கூட வந்த பையனுக்கும் திக்னு ஆயிடுச்சு. என்ன தான் backdoor interviewஆ இருந்தாலும் , இப்படி interview கூட வைக்காம யாரோ ஒரு ஆள் கிட்ட பணம் கொடுக்க முடியாதுனு மறுத்துட்டோம். அந்த கன்சல்டன்சிகாரனும், கவுன்சிலரும் எங்களை ரொம்ப நேரம் கன்வீன்ஸ் பண்ணாங்க. சரின்னு நாங்களும் ஒரு கட்டத்துல ஒத்துகிட்டு, பணத்தை கொடுத்தோம், அப்போதைக்கு வேலை கிடைச்சா போதும்னு தான் இருந்தது. அவன் போய்ட்டு, ஒரு மணி நேரம் கழிச்சு ஒருத்தரை கூட்டிட்டு வந்தான். கூட வந்தது HR னு அறிமுகப்படுத்தி வைச்சாங்க, அவரும் நல்லா பேசினாரு. அவரே அவர் கையால offer letterஅ கொடுத்தாரு, trainee ஆ appoint பண்ணி 8000 ரூபாய் சம்பளம்னு போட்டு இருந்தது.

ஒரு வாரத்துலேயே வேலைக்கு சேர்ந்துட்டோம், போனோம், வந்தோம், எல்லாத்தையும் சுத்தி பார்த்தோம், ஒரு மாசம் ஆயிடுச்சு. சம்பளமே கொடுக்காம வெச்சுருந்தாங்க, நாங்களும் எங்களை recruit பண்ண HR கிட்ட போய் சொன்னோம். ஒரு வாரம் எதுவுமே சொல்லாம இருந்தார். ஒரு வாரம் கழிச்சு, manager கூப்பிட்டு, எங்க கிட்ட போதுமான employees இருக்காங்க, அதுவுமில்லாம நீங்க அவ்ளோ skilled ஆவும் இல்லை, அதனால உங்களை terminate பண்றோம்னு கழட்டி விட்டுட்டாங்க. அப்ப எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்ததுங்கறதுல்லாம் இங்க தேவை இல்லாதது. விஷயம் என்னான்னா, அந்த ஒரு லட்சம் பணத்தை இன்னமும் என்னால திரும்ப வாங்க முடியலை, 3 பேரும் ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்தி கை காட்றாங்களே தவிர, எங்களுக்கு யாருமே உதவி செய்ய முன்னால வரலை…. கன்சல்டன்சிக்காரனை கேட்டா, Hr கிட்ட இருக்குன்னு சொல்றான், HRஅ கேட்டா கவுன்சிலர் கிட்ட திரும்ப கொடுத்துட்டேன்னு சொல்றான், கவுன்சிலரை கேட்டா எனக்கு எதுவுமே தெரியாதுங்கறான். சிந்துபாத் கதை கணக்கா நானும் 3 மாசமா அந்த ஒரு லட்சம் பணத்தை வாங்க ஓடிட்டு தான் இருக்கேன், ஒரு லட்சம் பணம் நம்ம கையை விட்டு போனது கூட பரவாயில்லை, நம்மளை ஒருத்தன் நல்லா ஏமாத்திட்டானேங்கறது தான் மனசுல நெருப்பா கொதிச்சுகிட்டு இருக்கு.

இதெல்லாம் கூட பரவாயில்லைனு சொல்ற மாதிரி இன்னொருத்தன் எங்களை ஏமாத்தினான் பாரு, என்னால அதை தான் தாங்க முடியலை……”



                                                (தொடரும்….)




Sunday 2 September 2012

என் முக்கியமான பின்னூட்டம்

http://prawinvenkatesh.blogspot.in/2012/09/blog-post.html

மேற்கண்ட வலைப்பதிவில் உள்ள பதிவிற்கு என் பின்னூட்டம் :


இந்த “நான் ஒரு பைத்தியக்காரன்” என்ற வலைப்பதிவை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். இதை உன்னுடைய Statement ஆகவும் பார்க்க முடிகிறது, அதே சமயம் இது சிறுகதைக்கு உண்டான ஒரு பிரதான வடிவத்தில் பொருந்துவதால் ஒரு சிறுகதையாகவும் பார்க்க முடிகிறது.

எங்கள் வீட்டில், எனது பெரியப்பா குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் 9 பேர். நான், அப்பா, அம்மா, என் தம்பி, பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அண்ணா, பாட்டி. எனது குடும்பமும் பெரியப்பா குடும்பமும் எதிரெதிர் வீட்டில் தான் இருக்கிறோம்.

நான் +2 போகும் வரையே, வீட்டில் உள்ள சில்லரை வேலைகள் எல்லாம் என் மேல் தான் வந்து விழும். கடைக்கு சென்று வெங்காயம் வாங்கி வருவது, தண்ணீர் பிடிப்பது, ஆயுத பூஜைக்கு மாவிலை பறித்து வருவது என்பன போன்ற வேலைகள் தான், ஒன்று அத்தனை கடினமான வேலைகள் என்று எல்லாம் சொல்லி விட முடியாது, இருந்தாலும் எல்லாமும் என் மேல் தான் வந்து விழும், வேறு யாரிடமும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அண்ணன் வீட்டிற்கே பெரிய பையன் அவனுக்கு டிவி. பார்ப்பது, தூங்குவது போன்ற இன்ன பிற வேலைகள் இருக்கும் அதனால் அவனை அனுப்ப முடியாது, அக்கா வீட்டிற்கு ஒரே பெண் குழந்தை, அவளை அனுப்பவதும் இயலாத ஒன்று, அப்புறம் என் தம்பி, அவன் தான் வீட்டிற்கே செல்ல கடை குட்டி, அவனையும் அனுப்ப முடியாது, கடைசியாக யார் மிஞ்சி இருக்கிறார்கள் என்று பார்த்தால் நான் தான் என்னை தான் அனுப்புவார்கள். எனக்கு மிகவும் பிரச்சனையாய் இருந்தது எது என்றால் என் அம்மா, அப்பா, பெரியப்பா, பெரியம்மா, பாட்டி எல்லோரும் மற்ற மூன்று பேரையும் ஒரு பேச்சுக்கு கூட “கடைக்கு போறியா” என்று கேட்காமல் நேரடியாக என்னிடம் தான் வந்து சொல்வார்கள்.

யோசித்து பாருங்கள், ஒரு ஞாயிற்று கிழமை காலையில் நான், எனது தம்பி, அக்கா, அண்ணன் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சன் டிவி. Top 10 movies பார்த்து கொண்டு இருக்கும் போது, என்னிடம் மட்டும் வந்து “கடைக்கு போய் 4 முட்டை வாங்கிட்டு வா” என்று சொன்னால் எவ்வளவு எரிச்சல் வரும். நியாயமாக என்னிடம் அவர்கள் கேட்பது என்ன…. உதவி, ஆனால் அதை ஒரு உதவி கேட்பதாய் என்னை அணுகாமல், செய்வது என்னுடைய கடமை என்ற ரீதியில், ஒரு அதிகாரமாக என்னை அந்த வயதில் அழுத்தியதே எனக்கு பிரச்சனையாய் இருந்தது.
    
இப்போது பரவாயில்லை, என்னுடைய தம்பி சற்று வளர்ந்தவனாகி விட்டதால், அவனாகவே என் எடுபிடி வேலைகளில் பங்கு எடுத்து கொள்கிறான். வேலை கிடைத்து சென்னை வந்து விட்டதால் அந்த எடுபிடி வேலைகளில் இருந்து தப்பித்து கொண்டோம். நான் மட்டுமல்லாது என் அண்ணன், அக்கா, தம்பி எல்லோரும் அவரவர் பணி/படிப்பு நிமித்த காரணமாக வீட்டில் இல்லாமல் வெளியூரில் தங்கி இருக்கிறோம். அதனால் என் வீட்டு மக்கள், 4th standard படிக்கும் யோகா-வை  (என்னுடைய இன்னொரு அக்காவின் மகள், அவர்களும் எங்கள் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறார்கள்)  பிடித்து கொண்டார்கள். இந்த விஷயமே விடுமுறைக்கு வீட்டிற்கு போயிருந்த போது தான் தெரிந்தது, விளையாடி கொண்டிருந்த அவளை கூப்பிட்டு பால் வாங்கி வர அனுப்பினர், பார்த்த மாத்திரத்தில் எங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் டோஸ் விட்டு, இனி யோகாவிற்கு யாரும் வேலை வைக்க கூடாது என்று கட்டளையிட்டோம். ஆனால் அடுத்த முறை வீட்டிற்கு செல்லும் போதும் அவளை கூப்பிட்டு வேலை வைத்து கொண்டு தான் இருந்தனர். (கவனிக்க- என் அக்கா கல்யாணம் ஆகி அடுத்த வீட்டிற்கு செல்லும் வரை இது போல் பால் வாங்கி வர அனுப்ப படவில்லை)

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் தெரியுமா ப்ரவீன். உன்னை எப்படி பைத்தியக்காரனாய் பாவித்து உன்னை எடுபிடி வேலைகளுக்கு உபயோக படுத்தி கொண்டிருந்தார்களோ, அதே போல் தான் என்னையும், அடுத்த தலைமுறையான யோகாவையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் என் விஷயமோ, யோகா விஷயமோ வேறு, நாங்கள் உபயோக படுத்த பட்டிருந்தால், நாங்கள் எங்கள் குடும்பத்தால் உபயோகபடுத்த பட்டிருக்கிறோம். என்ன, எங்களை அதிகாரத்திற்கு உட்படுத்தாமல் உபயோக படுத்தியிருந்தால் சந்தோஷமடைந்திருப்போம். ஆனால் உன் விஷயம் வேறு, ஒரு பகுதி மக்களே உன்னை உபயோக படுத்தியிருக்கிறார்கள்.

உனக்கு எந்தெந்த மாதிரியான வேலைகள் வழங்கபட்டது என்பதனை சொல்லப்பட்டுருந்ததை பார்க்க முடிந்தது. அதில் சிலவற்றது என்னை மிகவும் உறைய வைத்தது. ஒரு தாயையும் கைக்குழந்தையையும் மருத்துவமனைக்கு கூட்டி சென்று வரும் வேலை, பள்ளி குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டி வரும் வேலை, கணவனுக்கு சாப்பாடு கொடுத்து விடுவது போன்ற வேலை. இது போன்ற வேலைகளை எல்லாம் என் வீட்டு மக்களே எங்களுக்கு சொன்னதில்லை. ஆனால், உன் வாழ்வில், எப்படி அடுத்த வீட்டு ஆட்கள் எல்லாம் உன்னை அந்த வேலைகளை எல்லாம் செய்ய வைத்துள்ளனர் என்பதை நினைக்கும் போதே தலை முதல் கால் வரை பற்றி கொண்டு வருகிறது.

கை குழந்தையையும், அதன் தாயையும் ஒரு ஆட்டோ வைத்து மருத்துவமனை கூட்டி செல்லாத அளவிற்கு அவளது கணவன் என்ன மயிரை பிடுங்கி கொண்டிருக்கிறான், அந்த ஒன்றுக்கும் உதவாத சொம்பை வேலைக்கு போனதாகவே இருக்கட்டும், அவனது அம்மாவும் அப்பாவும் என்ன எழவு முக்கியமான காரியம் செய்து கொண்டிருந்தார்கள், என்று உன்னை அனுப்பினார்களாம். வெட்டி போட வேண்டும் போல் ஆத்திரம் வருகிறது. அவனவன் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் குமுறி கொண்டிருக்கிறான், இவர்களுக்கு குழந்தை பிறந்தால் அத்தனை உதாசீனம், அத்தனை அலட்சியம். குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட கூட்டி வர முடியாத படி, அப்படி என்ன மதிய தூக்கமும், மெகா சீரியலும் கேட்கிறது நம் நாட்டு பெண்களுக்கு. இதெல்லாம் கடமை, கடமைக்கும் மேலான உன்னத உரிமை. இதை கூட செய்ய முடியாமல், அடுத்த ஆளை தேடுபவர்களை எதை கொண்டு அடிக்க? இவர்களெல்லாம்,  முதலிரவு அன்று மாப்பிள்ளை களைப்பாயிருப்பார் என்று அடுத்த ஆளை அனுப்புவார்களோ என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

எனக்கு ஆத்திரம் மேல் ஆத்திரமாய் வர வைப்பது எது தெரியுமா, ஒரு சிறுவனின் ஏழ்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிச்சைகாரனுக்கு விட்டெறிவது போல் சில்லறைகளை விட்டெறிந்து உன்னை வேலை வாங்கியிருக்கின்றனர். அவர்கள் விட்டெறியும் சில்லறைகளுக்கு ஆசைப்பட்டு நீ படிப்பை விட்டிருந்தால், அவர்கள் பொறுப்பேற்று கொள்வார்களா? Assholes அவர்களையெல்லாம் வரிசையில் நிற்க வைத்து முகத்தில் காறி உமிழ்ந்து, ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் கன்னம் பழுக்கும் வரை செருப்பால் அடிக்க வேண்டும். Bastards.

மனிதர்கள் இயல்பிலேயே அடுத்தவர்களை வீழ்த்த எந்த கணமும் தயாராகவே இருக்கின்றனர். சட்டம், நியதி, தூக்கு தண்டனை, சிறை, அடுக்குமுறை ஆகியவை இவர்களுக்கு தடையாய் இருப்பதாலே மனிதர்கள் கட்டுண்டு இருக்கின்றனர். இல்லையெனில் நாய்களின் எண்ணிக்கை இந்த உலகத்தில் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு தான் மனிதனின் எண்ணிக்கையும் இருந்திருக்கும். மனிதன், அவனின் தேவைகளுக்காகவே அடுத்தவனிடம் சமரசம் பாராட்டி கொண்டிருக்கிறான். உன் எதிரி, உன் எதிரி என்று முருகானந்தத்தை பற்றி நீ எழுதியிருந்ததை படித்த போது இதுவே எனக்கு ஞாபகம் வந்தது. அவனை போன்ற Culpritகளை எல்லாம் அட்டை பூச்சிகளோடு எளிதில் ஒப்பிடலாம், அவர்களை சுற்றியுள்ளவர்களை எங்கு சுரண்டலாம் என்பதில் மட்டும் தான் அவர்கள் புத்தி யோசிக்கும். இது ஒரு புறம் இருக்க அவன் யார், அவன் அப்பா யார் என்று பார்த்தால் பெரும் வசதி படைத்தவனாக இருப்பான்…. த்தூ.

கல்லூரி படிக்கும் போது, பகுதி நேரமாக நீ வேலை பார்த்தது எனக்கு தெரியும். இதை வினோத் தான் என்னிடம் மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டான். மிகவும் அதிர்ச்சியாகி விட்டேன். உன் வீட்டில் அவ்வளவு கஷ்டம் என்பதால் அல்ல, இவ்வளவு கஷ்டம் இருந்தும் நெருங்கிய நண்பனாக என்னிடம் கூட நீ பகிர்ந்து அனுதாபத்தை தேடாததே, என் அதிர்ச்சிக்கு காரணம். உண்மையில் இது போன்று ஒரு மன துணிவு உனக்கிருந்ததை நினைத்து நான் பெருமை தான் பட்டேன்.

நீ சென்னைக்கு வந்து என்னிடம் சில நாள் இருந்து சென்று, அதை பற்றி நீ எப்படி உணர்ந்தாய் என்பதை கடிதமாக எழுதுகிறாய் என்று சொன்ன போது ”ஏன்டா ரொம்ப எமொஷனல் ஆகற, அதெல்லாம் வேண்டாம்” என்று மறுதலித்ததை பற்றி உன் பதிவை படித்த பிறகு வருத்தம் கொள்கிறேன். நான் எல்லாம் ஒரு ஊருக்கு செல்வதே சுற்றி பார்க்கவும், ஜாலியாக ஆட்டம் போட்டு விட்டு வருவதற்காகவும் தான். இன்னமும் சொல்ல போனால் பணம் இருக்கிறதே என்ற கொழுப்பில் தான் சுற்றி பார்க்க போவேன். ஆனால் நீ சென்னை வந்து போனதை பற்றிய  காரணத்தை தெரிவித்த இடத்தில், உன் கஷ்டங்களில் இருந்து தப்பி வருவதற்க்காக சென்னை வந்து போவதாய் சொல்லி இருந்தாய். நான் என்னை போல் எல்லோரையும், முக்கியமாக உன்னையும் நினைத்ததே பிழையாய் போயிற்று. நீ நிச்சயம் அந்த கடிதத்தை எழுதி அனுப்பு, நான் அதற்காக காத்திருக்கிறேன்.

உனக்கு நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களை பற்றி மிகவும் புலம்பி எழுதியிருந்தாய். கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய, உன்னை சிறப்பாக எழுத வைக்க வேண்டுமே. நீயே பார், இவ்வளவு சிறப்பான பதிவினை வெளியிட்டு இருக்கிறாய். இந்த பதிவு அத்தனை அழகாக சமகால மனிதர்களின் குறுக்கு வெட்டு தோற்றங்களை படம் பிடித்து காட்டியிருக்கிறது. அந்த வகையில் இதை ஒரு வெற்றி அடைந்த ஒரு பதிவு என்றே சொல்வேன்.

இந்த வெற்றிக்கு நானும், பால கணேசன், ராஜ ராஜேந்திரன், ப்ரவீன் வின் போன்றோரே காரணம் என்பதனை நீ ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும்.

உன்னுடைய பதிவில் நிறைய எழுத்து பிழைகள் வந்து விடுகிறது. தாய்மொழியை தமிழாக கொண்ட நானே கூட சில எழுத்து பிழைகளை செய்து விடுகிறேன். ஆனால் கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட நீ தமிழில் எழுதும் போது நிறைய எழுத்து பிழைகள் வர தான் செய்யும். அது தவிர்க்க முடியாது. ஆனால் அதனை நீ திருத்தி கொள்ள தயராக இருத்தல் அவசியம். உன் பதிவினை படிப்பவர்கள் உன்னை மேன்மையான இடத்தில் வைத்திருப்பதாலே உன்னிடம் அப்படி ஒரு Perfection எதிர்பார்க்கிறார்கள் என்று நீ புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழை முழுதாக கற்காமல் இனி நீ எழுத போவதில்லை என்ற அறிவிப்பு என்னை குற்ற உணர்ச்சி கொள்ள செய்கிறது. தமிழை நீ முழுதாக கற்பது குறித்த உன் முயற்சி பாராட்டதக்கது தான் என்றாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் எழுதுவதை நீ நிறுத்த வேண்டாம். என் அம்மா சொல்வது போல் எழுதுவது என்பது ஆண்டவனின் கொடை. அது எல்லோராலும் முடியாது. உனக்குள் இருக்கும் Creativity நீ எழுத எழுத தான் மெருகு ஏறும். இதை நீ விடும் பட்சத்தில் உன் creativityக்கு பங்கம் வந்து விடுமோ என்று அச்சம் கொள்கிறேன். தயவு செய்து, நீ தமிழில் ஆழமாக வேர் ஊன்றும் வரை, உன்னுடைய பதிவுகளை, நன்கு தமிழ் அறிந்த ஒருவரை வைத்து Proof reading பார்த்து, தொடர்ந்து பதிவிடு.

பால கணேசன் உன்னை பற்றி என்னிடம் பேசும் போது “ஒருத்தனை என்ன தான் திட்டினாலும் அவன் நல்ல கவிதையை எழுதி காட்டுவேன்னு முனைப்போடு எழுதறான் பாத்தீங்களா, அவனால தான் பாஸ் சாதிக்க முடியும், உண்மையிலே ப்ரவீனை அந்த விஷயத்தில பாராட்டணும்” என்றார். நீ எழுத நிறுத்தும் முன் பால கணேசன் உன்னிடம் கண்டு புகழ்ந்த விடாமுயற்சியை இழக்க விரும்புகிறாயா என்பதை ஒரு கணம் யோசித்து பார், சகோதரனே….





Saturday 1 September 2012

ஸ்வாதி ராஜீவ் (4)


எனக்கு பசிக்கல என்று பெற்றோரிடத்து என எறிந்து விழுவது, வண்டியில் செல்லும் போது கூட்ட நெரிசலில் அதீத வேகத்தில் செல்வது, கைப்பேசியின் இணைப்பில் ஏதாவது கோளாறென்றால் உடனடியாக வாடிக்கையாளர் சேவை அதிகாரியை தொடர்பு கொண்டு காய்ச்சி எடுப்பது, ஸ்வாதியிடம் சமாதானமாக போகும் படி பேச நண்பர்கள் போனில் அழைத்தால் எடுக்காமல் இருப்பது, நட்ட நடு ராத்திரியில் வண்டி எடுத்து கொண்டு ஆளில்லாத ரோட்டில் மென்மையான வேகத்தில் நகரை ஒரு உலா வருவது, பிச்சைகாரர்களோ சேல்ஸ்மேன்களோ அணுகினால் எதுவும் பேசாமல் அவர்களை முறைத்து பார்ப்பது, டி.வி ரிமோட் வேலை செய்யாத பட்சத்தில் ஓங்கி தரையில் எறியும் வரை போய் மனசு கேட்காமல் அருகில் இருக்கும் சோபாவை முஷ்டியால் ஓங்கி குத்துவது, வீட்டு நாய் எப்போதும் போல் பாசமாக வந்து வாலாட்டி முன் நின்றால் அதை உதாசீனப்படுத்துவது என விரக்தியின் உந்துதலில் ராஜீவ் இயங்கி கொண்டிருந்தான். அவனுள் எங்கிருந்தோ வந்து குடியமர்ந்த வேதனையை விரட்ட வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்தான்.

என்னன்னவோ செய்தும் ராஜீவ்வின் ஆள்மன வெறுப்பு தகித்தப்படியே தான் இருந்தது. எத்தனையோ குறுஞ்செய்திகளை ஸ்வாதி தட்டி விட்ட போதும் ராஜீவ் அதனை மதிக்கவில்லை. அதில் பெரும்பாலானவை “call me” என்றும் “why you doing this to me?” என்றுமே இருந்தன. ஒரு கட்டத்தில் அவள் “Atleast speak me upto the end of our college, afterwards I’ll not force you to talk me, you can go away” என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டாள். ராஜீவ்விற்கு பரிதாபமாக இருந்தது ஒரு புறம் இருந்தாலும், அந்த செய்தியை பார்த்த மாத்திரத்திலே அவன் திகைத்து போனான். இன்னும் 3 மாதங்களில் கல்லூரி முடிவடைந்து விடும், அதற்கு மேல் ஸ்வாதியை பார்க்கவே முடியாதா, ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாள், பிரிவு பொறுக்க முடியாமல் அவளுள் இருக்கும் காதலை வெளிபடுத்துவாள் என்று பார்த்தால் இப்படி அனுப்பி விட்டாளே, பெரிய தவறு செய்து விட்டோம், மிக பெரிய தவறு செய்து விட்டோம், காதலை வற்புறுத்தியிருக்க கூடாது என மிகவும் வருந்தினான். இனி பேசுவதில்லை என்ற முடிவில் ராஜீவ் தான் ஆரம்பம் முதலே ஆர்வமாய் இருந்தான் எனினும், ஸ்வாதியும் அந்த முடிவில் ஆர்வத்தை திருப்புவது ராஜீவால் ஏற்று கொள்ள முடியவில்லை. கண்களில் கண்ணீரை முட்ட செய்தது. அவனது நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய் பதற்றம் கொள்ள ஆரம்பித்தது. You can go away என்று எதற்காக அவள் சொல்ல வேண்டும், நான் அவளை அவ்வளவு வருத்தி விட்டேனா என்ற கேள்வி மலையை போல் தோற்றம் கொண்டு அவனை திகில் அடைய செய்தது. ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் அவளுக்கு கால் செய்தான்.

“ஹலோ”

“ம்…. சொல்லு”

“எப்படி இருக்க”

“நல்லா இருக்கேன், இப்ப தான் என் ஞாபகம் வந்துச்சா….”

“ப்ளீஸ் அதை பத்தி இப்ப பேச வேண்டாமே”

“சரி சொல்லு, நீ எப்படி இருக்க…”

”நீ என்னை மிஸ் பண்லையா”

“பண்ணேன்”

“அது ஏன் லவ்னு உனக்கு புரிய மாட்டேங்குது”

“உன் மேல எனக்கு பாசம் மட்டும் தான் இருக்கு, நான் லவ்வை பத்தியே இது வரைக்கும் யோசிக்கலை, கல்யாணம் மாதிரியான ஒரு ஜெயில் எதுவுமேயில்லை, என்னோட Cousin sisters கல்யாணம் பண்ணிகிட்டு கஷ்டப்படறத பார்த்துகிட்டே தான் இருக்கேன்…. நானும் ஒரு மெஷின் ஆகறத பத்தி இப்பவே கனவு காண சொல்றியா, எனக்கு அதுல கொஞ்சமும் விருப்பமில்லை ” – இவ்வளவு தெளிவான பதிலை சொன்ன பிறகு ராஜீவ்வால் மேற்கொண்டு அது தொடர்பாக பேச முடியவில்லை. நாமும் ஏன் லவ், கல்யாணம், குழந்தை என்று குறுகிய வட்டத்துக்குள்ளே சிந்தித்து கொண்டிருக்கிறோம், இதில் இருந்து வெளி வருவதை பத்தி யோசித்தாக வேண்டும், கண்டிப்பாக யோசித்தாக வேண்டும். யாருக்கு தெரியும் தான் காதலின் மேல் ஈடுபாடாற்றவனாக காட்டி கொள்வது கூட சமயத்தில் அவளை ஈர்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என மாற்று வழியில் சிந்தித்து அந்த பிரச்சனைக்கு அத்தோடு ஒரு முற்று புள்ளி வைத்தான் ராஜீவ்.

”அப்புறம், என்ன முடிவு பண்ணியிருக்க…. இனிமேல் என்கிட்டலாம் பேசுவீங்களா மாட்டீங்களா…. அன்பு, நிர்மலாலாம் போன் பண்ணியும் கூட எடுக்கலையாமே”

“ஹேய், பேச மாட்டேன்னு சொல்றதுக்கு போய் யாராவது call பண்ணுவாங்களா… ”

”அப்ப பேசுவேன்னு வாயை திறந்து தான் சொல்லேன்…”

“பேசுவேன், போதுமா”

………..
……….
………..
…………
………..
………

என அன்றைய உரையாடல் ஆரம்பித்து பல புன்னகை பரிமாற்றங்களுடன் நெடு நேரம் நீள ஆரம்பித்தது. மாலை ஆரம்பித்த செல்போன் பேச்சு ராஜீவ் கட்டிலிலே தூங்கி போகும் வரை நீண்டது.

ராஜீவ்வின் அடுத்தடுத்த நாட்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியது. கல்லூரி முடியப்போகும் தருணம் என்பதாலோ என்னவோ ராஜீவ்விற்கு நாட்கள் வெகு வேகமாக நகர்வதாக தெரிந்தது. காதலை தான் சொல்லி விட்டோமே என்ற தையரியத்தில் முன்பை விட ராஜீவ் ஸ்வாதியை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை, அடிக்கடி செய்பவனாய் இருந்தான். இது ஸ்வாதிக்கு தெரிந்திருந்தாலும் அவள் அமைதியாய் அனுமதித்து கொண்டிருந்தாள். Slam books, Group photographs, outing என் ராஜீவ் நண்பர்களுடன் சந்தோஷமாக வலம் வந்தாலும், அவனுள் ஸ்வாதி தன் காதலை நிராகரித்து விட்டாளே என்ற எண்ணம் அவனை நெருடி கொண்டு இருந்தது. இது விஷயமாக நிர்மலாவிடம் தனித்து இருக்கும் போது பேசி விடலாம் என்று முடிவு செய்தான். நிர்மலா ஸ்வாதியின் அறையிலே தங்கி இருப்பதால் அவளிடம் பேசுவது குறித்த அவசியம் அவனுக்கு அதிகமாக பட்டது. ஸ்வாதி தன்னை காதலிப்பதை நிர்மலாவிடம் மட்டும் ரகசியமாக சொல்லியிருக்க வாய்ப்பு இருப்பதாய் ராஜீவ் உணர்ந்தான்.

ஒரு மதிய வேளையில் நிர்மலாவை கேண்ட்டினுக்கு வரவழைத்து ஸ்வாதி அப்படி ஏதாவது சொல்லியிருக்கிறாளா என்று கேட்டு பார்த்தான், அப்படி ஏதும் சொல்லவில்லை என தெளிவாக சொல்லி விட்டாள். அவளது பதில் அவனை சுருங்க செய்து விட்டது. நிர்மலா அவனுக்கு தைரியம் கூறுவதற்காகவும், அவனை தேற்றவும் 45 நிமிடங்களுக்கும் மேலாக அவள் பல ஆறுதல் வார்த்தைகளை அவள் சொல்லி கொண்டிருந்தாள். அவன் எதையும் காது கொடுத்து கேட்டு கொள்ளவில்லை, அவள் சொல்வதற்கெல்லாம் சரி சரியென்று தலையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தான். அவள் அவ்வளவு நேரம் பேசியதில் ராஜீவ்விற்கு எதுவுமே சுவாரஸ்யமாய் இருந்து விடவில்லை. ஆனால் அவள் சொன்ன ஒரே ஒரு விஷயம் ராஜீவ்விற்கு மிகவும் புதிதாக பட்டது.

“ஒரு பையன் எதையும் எதிர்பார்க்காம தன்னை லவ் பண்றான்னு அந்த பொண்ணுக்கு தோணிடுச்சுனா, அந்த பொண்ணால அவனை திரும்பி லவ் பண்ணாம இருக்கவே முடியாது”   

அவள் இதை சொன்னதிலிருந்து ராஜீவ்விற்கு இதுவே மனதில் ஓடி கொண்டிருந்தது, எங்கோ வாயில் நுழையாத பெயரை கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து இவள் வந்ததே இதை சொல்ல தானோ என்று ஆச்சர்யமடைந்தான். இது நாள் வரை கல்யாணத்தை எதிர்பார்த்து அவளை காதலித்தது கூட அவனது காதலுக்கு முட்டுகட்டையாக இருந்திருக்கலாம் என்று சந்தேகித்தான். அதனாலேயே பின்வரும் நாட்களில் ஸ்வாதியிடம் கல்யாணத்தை பற்றி பேச்செடுப்பதை தவிர்த்தான்.

நிர்மலாவிடம் அற்புதமாக ஓவியம் வரைவாள், கேட்டால் அவனது அண்ணன் சொல்லி கொடுத்தது என்பாள், அவள் தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள் கண்ணிற்கு அத்தனை இனியனவாக இருக்கும். எப்போதும் போன்ற ஒரு நாளில் நிர்மலா ராஜீவ் முன்னால் வந்து நின்று அவனை கண்ணை மூட சொல்லி சொன்னாள். அவள் ஒரு ஓவியத்தை எடுத்து அவன் மூடிய கண் முன் விரித்து வைத்ததற்கு பிறகு அவனை கண் திறக்க சொன்னாள்.

அம்மாவுடன் ஸ்கூலுக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு குட்டி பெண், பிளாட்பார்த்தில் சட்டையில்லாமல் அமர்ந்திருக்கும் சிறுவனுக்கு ஒரு Lolly pop ஐ நீட்டுவது போல் வரையபட்டு, கீழே Giving is Loving என்று எழுதபட்டிருந்தது.

ராஜீவ்விற்கு அந்த ஓவியத்தை பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருந்தது, கண்களில் ஒத்தி கொள்ளலாம் என்பது போன்ற ஓர் அழகு. அந்த மிட்டாயை வாங்கும் அந்த சிறுவனின் கண்களில் இருக்கும் பரவசம் ராஜீவ்வை மிகவும் சிலிர்ப்படைய வைத்தது. அதை பார்த்து கொண்டிருக்கும் போதே “இது உனக்கு தான், வெச்சுக்கோ” என்றாள். அந்த நிமிடம் ஓவியத்தில் இருந்த சிறுவனின் பரவசம் ராஜீவ்வின் கண்களில் மிளிர்ந்தது. நிர்மலா எதற்காக இந்த ஓவியத்தை நமக்கு அளித்திருக்கிறாள் என்பதை உள்ளூர புரிந்தவனாய் நன்றியுடன் அந்த பரிசை ஏற்று கொண்டான்.

அடுத்த நாள் காலேஜ் கேண்டினுக்கு ஸ்வாதியை ராஜீவ் தனியாக வர சொல்லியிருந்தான். ஸ்வாதியும் மாலை 5 மணிக்கு மேல் வருவதாக சொல்லி நீல வண்ண கலரில் ஒரு சுடிதாரை அணிந்து சென்றிருந்தாள். அங்கே இவள் வருவதற்கு முன்னரே ராஜீவ் காத்து அமர்ந்திருந்தான். ராஜீவ் கறுப்பு கலரில் ஒரு டீ சர்ட் போட்டு, ஒரு Coolers போட்டு வந்திருந்தான். அவனுக்கு பக்கத்தில் இருந்த helmetஐ பார்த்து அவன் வண்டியில் வந்திருக்கிறான், என்பதை அவளால் எளிதில் யூகிக்க முடிந்தது. போய் ஹாய் சொல்லி அவன் எதிரில் அமர்ந்தாள். அவனும் பதிலுக்கு ஹாய் சொல்லி புன்னகைத்தான். என்ன விஷயமாக வர சொன்னாய் என்று கேட்டதற்கு, “சும்மா தான், உன்னோட சேர்ந்து பானி பூரி சாப்பிடனும் போல தோணிச்சு அதான் வர சொன்னேன்” என்றான். அவள் “இதுக்கு தான் வர சொன்னியா, சரி போய் வாங்கிட்டு வா” என்றாள். அவன் பதிலுக்கு நீ போய் வாங்கிட்டு வாயேன் என்று சொல்லி கண்களால் கெஞ்சினான். அவள் அவளது Hand bagல் உள்ள purse ஐ மட்டும் எடுத்து கொண்டு, hand bagஐ அவனிடமே கொடுத்து சென்றாள். இதற்கு முன் 10 ரூபாய் இருந்த பானி பூரி, 12 ரூபாய் ஆகி விட்டதற்காக கேண்ட்டினை சபித்து கொண்டே டோக்கனை வாங்கினாள். டோக்கனை வாங்கி கவுண்ட்டருக்கு சென்றால் இவளுக்கு முன்னரே 4 பேர் வரிசையில் பானி பூரி டோக்கனை கையில் வைத்து கொண்டு வரிசையில் வைத்து காத்து கொண்டிருந்தனர். காத்திருந்து அந்த பானி பூரிகளை வாங்கி வர வேண்டியதாய் போயிற்று. 2 பானி பூரி தட்டுகளையும் அத்தனை லாவகமாக எடுத்து வந்தும், தட்டு லேசாக சாய்ந்ததில், பானி பூரியின் புளி தண்ணீர் (பானி) 2 துளி அவளது நீல சுடிதாரின் மேல் பட்டு விட்டது. அவள் வந்து அமர்ந்ததும் “ஹேய் தண்டம் நீயே போய் வாங்கிட்டு வர வேண்டியது தானே, பாரு என் சுடிதார்ல கறை பட்டுருச்சு” என்று பொய்யாய் கோவித்து கொண்டாள். இவனும் “ஐயையோ, என் கறுப்பு ட்ரஸ்ல அழுக்கு பட்டுருச்சுனா எங்க அம்மா என்னை திட்டுவாங்கல்ல, அதனால தான் உன்னை அனுப்பினேன்” என்று சொல்லி சிரித்தான். ”பன்னி, கறுப்பு டிரஸ்ல அழுக்கு பட்டா என்ன டா ஆய்ட போது” என்று கையில் இருந்த purseஐ தூக்கி அவன் மேல் எறிந்தாள். சாப்பிட்டு விட்டு ஆரம்பித்த பேச்சு, கொஞ்ச நேரத்திலேயே முடிவிற்கு வந்தது. ராஜீவ்வே ஸ்வாதியை நேரம் ஆகி விட்டதால் கிளம்ப சொன்னான்.

அவள் கிளம்புவதற்கு எழுந்து நின்று, அவள் purse ஐயும் hand bagஐயும் கொடுக்க சொன்னாள். அவன் அவளது purseஐ கொடுத்து விட்டு, ஒரு புதிய அழகான hand bagனை அவள் முன் நீட்டினாள்.

”டேய், இது என்னுடைய hand bag இல்லை டா” என்று கிட்ட தட்ட  பதறினாள்.

“இது என்னோட gift, வாங்கிக்கோ”    

“gift ஆ, எதுக்கு…”

“உன்னுடைய பழைய bag ல தான் முன்னாடி இருக்குற குட்டி ஜிப் ஜாம் ஆய்டுச்சே அதுக்கு தான்” என்று சொல்லி அவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த அவளது பழைய bagஐ எடுத்து காட்டினான்.

“உனக்கு எப்படி தெரியும்”

“உங்க ஏரியா கவுன்சிலர் போன் பண்ணி சொன்னாங்க…”

அவள் முகத்தில் வெட்கம் மிளர சிரித்து கொண்டே அடை வாங்கி “நல்லா இருக்கு, யார் செலக்ட் பண்ணது” என்று கேட்டாள்.

“உங்க கவுன்சிலரே தான்”

“டேய், எங்க ஏரியா கவுன்சிலர் 2 நாள் முன்னாடி இறந்து போய்ட்டாரு, அதனால எங்க ஏரியாக்கு கவுன்சிலரே இல்லை, ஓவரா கதை விடாத… re-election வெச்சா தான் உண்டு”

வைத்த கண் வாங்காமல் அதை பார்த்து, பின் உள்ளே எத்தனை ஜிப் இருக்கிறது என்பதை பார்க்க bagஐ திறந்தால் அவளின் அத்தனை பொருட்களும் புதிய bagல் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ராஜீவ்வை பார்த்து நன்றி சொல்லி, பழைய hand bag ஐயும் கொடுக்க சொல்லி கையை நீட்டினாள், அதற்கு அவன் இது என்னிடமே இருக்கட்டுமே என்று சொல்ல, அவள் சிரிப்புடன் சம்மதித்து அறைக்கு கிளம்பினாள். ஸ்வாதி அறைக்கு போனவுடன் அவளது டைரியில் ”இன்றைய நாள் என் வாழ்வின் அழகான நாள்” என்று அன்றைய நாளில் எழுதி வைத்து கொண்டாள்.

கல்லூரி நாட்கள் வெகு சீக்கரம் முடிந்ததாய் போல் தான் எல்லோருக்கும் பட்டது. கல்லூரி முடியவிருக்கும் கடைசி 2 மாதங்களில் மட்டும் ராஜீவ் ஸ்வாதியை 7 முறை “இன்றைய நாள் என் வாழ்வின் அழகான நாள்” என்று அவளது டைரியில் அவளை எழுத வைத்திருந்தான். புடவை ; பார்பி பொம்மை ; குட்டியான ஒரு  pink coloured pillow ; sonata ladies watch ; coffee mug ; eva women’s body spray ; dairy milk silk.

கல்லூரி முடிந்ததும், அன்பு அவனது சொந்த ஊரான மதுரைக்கு சென்று கொஞ்ச நாள் இருந்து விட்டு, மீண்டும் சென்னைக்கே வேலை தேட வந்துவிட்டான்.

ரோஹித் அவனது சொந்த ஊரான கோயம்பத்தூரில் இருந்த படியே வேலை தேடி கொள்வதாக சொல்லிவிட்டான்.

ராஜீவ்வின் சொந்த ஊரே சென்னை என்பதால், அவன் வீட்டில் வேலை தேடுவதில் அவனுக்கு சிக்கல் இருந்து விடவில்லை.

நிர்மலா கடலூரிலே இருந்து கொள்வதாகவும் ஏதாவது நேர்காணல் இருக்கும் பட்சத்தில் மட்டும் சென்னை வந்து விட்டு போவதாகவும் சொன்னாள்.

ஸ்வாதி அவளது சொந்த ஊரான சேலத்தில் கொஞ்ச நாள் இருந்து கொள்வதாகவும், வீட்டில் கல்யாணம் செய்து கொள்ள நிர்பந்தித்து கொண்டிருப்பதால், அவர்களை கல்யாணம் வேண்டாம் என்று சமாதான படுத்தி விட்டு அதன் பின் தான் வேலை தேடுவதை பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறினாள். ஸ்வாதி இதை ராஜீவ்விடம் சொன்ன போது, ராஜீவ்விற்குள் எங்கிருந்தோ வந்த மிக கனமான கல் நெஞ்சில் அறைந்து, அது நெஞ்சிலே தங்கி விட்டாற் போல் கனத்தது.

ஆனால் யார் செய்த புண்ணியமோ ஸ்வாதி வீட்டில் அவளது வேண்டுகோளிற்கு அத்தனை முரண்டு பிடிக்கவில்லை, கல்யாணத்தை 2 வருடம் ஒத்தி போட சம்மதம் வாங்கி இருந்தாள். ஸ்வாதி சென்னைக்கு வந்து அவளது சித்தி வீட்டில் இருந்த படியே வேலை தேட ஆரம்பித்தாள். வேலை தேடிய ஒரே மாதத்தில் வேலை கிடைத்தது ஸ்வாதிக்கு மட்டும் தான். அவளுக்கு HCL technologies கம்பெனியில் வேலை கிடைத்தது.

ராஜீவ்வும் 2 மாதம் வேலை தேடி பார்த்தான், எந்த பெரிய நிறுவனமும் அவனை தேர்ந்தெடுத்து கொள்ளவில்லை. அதனால் அவன் அவனது அப்பாவின் கம்பெனியையே பார்க்க போய் விட்டான்.

அன்புவிற்கும் கூட ஒரு சின்ன கம்பெனியில் ஒரு சொல்லி கொள்ளும் படியான ஒரு வேலை கிடைத்தது. ஆனால், அவனால் அந்த வேலையிலும் ரொம்ப நாள் தங்க முடியவில்லை. அதன் பின்னும் அவனுக்கு அடுத்தடுத்து 3 கம்பெனியில் வேலை கிடைத்தது, ஆனால் எதிலும் அவன் பிடிமானமாக வேலை செய்யவில்லை.

”முதலாளிக்கு கும்பிடு போட்டுகிட்டுலாம் என்னால வேலை பார்க்க முடியாது, அவன் யார் ரா என்னை டைம்க்கு வர சொல்றதுக்கு, ராஸ்கல், அதான் நீயும் வேணா உன் வேலையும் வேணாம்னு வந்துட்டேன்” என்ற காரணத்தையே ஒவ்வொரு கம்பெனியில் இருந்தும் அவனை dismiss பண்ணும் போதும் அன்பு  சொன்னான். ராஜீவ்வும் அன்பை தன்னுடன் வந்து இருந்து கொள்ளும் படி கூப்பிட்டான், அவன் நமது நட்பு கெட்டு விட கூடாது என்று பார்க்கிறேன் என்று மறுத்து விட்டான்.  

ரோஹித்தும், நிர்மலாவும் ஒன்றரை வருடங்களுக்கு மேல் வேலை தேடியும், எந்த வேலையும் கிடைக்காமல் கஷ்டபட்டனர். இத்தனைக்கும் அவர்கள் இருவரும் Distinctionல் pass செய்தவர்கள்.

ஒரு நாள் திடீரென்று, அன்பு எல்லோரையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது, எல்லோரும் வரும் ஞாயிறு சந்திக்கலாம் என்று அனைவருக்கும் போன் செய்து சொன்னான். முழுதாக ஒன்றரை வருடங்களுக்கு பிறகு சந்திக்க இருப்பதால் எல்லோரும் சம்மதித்து வந்தனர். அந்த சந்திப்பு எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் ஒரு சம்பிரதாய சந்திப்பு என்று நினைத்தே எல்லோரும் வந்திருந்தனர். ஆனால் அன்பு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்கே அவர்கள் எல்லோரையும் அழைத்திருந்தான்.


                                           (தொடரும்….)





Thursday 30 August 2012

ஸ்வாதி ராஜீவ் (3)


அவனுக்கு வந்த கனவு போலவே அவளுக்கும் ஒரு கனவு வந்தது குறித்து ராஜீவ்க்கு ஆச்சர்யம் பீறிட்டது. இதை பற்றி அப்போதே கேட்டு விடலாமா என்று யோசித்து, ஹாஸ்பிட்டலில் வைத்து வேண்டாம் என்று விட்டுவிட்டான். சற்று நேரத்திலே நிர்மலாவும், ஸ்வாதியும் விடைபெற்று ஹாஸ்டல் கிளம்பினர். அன்பு தான் ஹாஸ்பிட்டல் வாசல் வரை சென்று ஆட்டோ ஏற்றி அனுப்பினான். ரோஹித் அவர்களுடன் போவதை தவிர்த்து என்னுடனே இருந்து கொண்டான். சற்றும் எதிர் பார்க்காத போது, “நீங்க அவங்களை லவ் பண்றீங்களா ராஜீவ்” என்று கேட்டு விட்டான், ராஜீவிற்கு என்ன சொல்வது என்று ஒரு கணம் குழப்பம் வந்து விட்டது, உண்மையை சொன்னால் எப்படி எடுத்து கொள்வானோ என்று சற்று தயக்கத்துடனே ஆமாம் என்று ஒத்து கொண்டான். அவன் முகம் மலர்ந்து சந்தோஷத்துடன் ”அப்பிடினா சீக்கீரம் சொல்லிடுங்க ராஜீ, அவங்க உங்களுக்கு ஏத்த Pair தான், அதில சந்தேகமே இல்லை” என்று சொன்ன போது தான் ராஜீவ்க்கு அப்பாடா என்றது. உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே என்று சொல்ல வாயெடுத்து கேட்காமல் விட்டு விட்டான், அதை எப்படி கேட்பது என்று வெட்கத்தில் தலை குனிந்து கொண்டான், அவன் மலர்ந்த முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது வேறு திசை பார்த்தான். அவனின் முக மாற்றத்தை கவனித்த ரோஹித் என்ன ஆச்சு என பதற்றமாய் விசாரித்தான், ஒன்னுமில்லை என்று ராஜீவ் மழுப்ப பார்த்தான். பிறகு அவனாக புரிந்து கொண்டு “ பாஸ், நான் 1st yearல ஸ்வாதியை பண்ணதெல்லாம் லவ்வே இல்லை பாஸ், 7 வருஷம் boyses schoolல படிச்சிட்டு இங்க வந்து பார்த்தா, பொண்ணுங்களா இருக்கவே, ஆவேசப்பட்டுட்டேன், இப்ப அதையெல்லாம் நினைச்சா எனக்கே சிரிப்பா இருக்கு, அதையெல்லாம் இன்னுமா நினைச்சுட்டிருக்கீங்க , விடுங்க பாஸ், ரொம்ப பீல் பண்றவங்களா பார்த்தா எனக்கு சிரிப்பு வந்துரும்” என்று சொல்லி முடிக்க ராஜீவ் சிரித்து விட்டான். ராஜீவ் சிரிக்க , ரோஹித்தும் சிரித்து விட்டான். அந்நேரம் பார்த்து அன்பு உள்ளே நுழைய, அவன் எதுக்கு டா சிரிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்க அவர்கள் அவனுக்கு கதையை முதலில் சொல்ல வேண்டியதாய் போயிற்று. முழுதும் கேட்டு விட்டு ”இதுக்கு தான் புரண்டு புரண்டு சிரிச்சீங்களா, எனக்கு சிரிப்பே வரலையே” என்று சொல்லி அவர்களை வெறுப்பேற்றி ஹாஸ்பிட்டலை விட்டு எல்லோருமாக ராஜீவ் வீட்டிற்கு கிளம்பினர். ராஜீவ்வை தானே போய் கொள்வதாக சொல்லியும் அவர்கள் வலுகட்டயமாக அவனை வீட்டில் விடுவதற்காக கிளம்பினர்.

வீட்டிற்குள் ராஜீவ்வும் அவன் சகாக்களும் சரியாக உள்ளே நுழையும் போது, ராஜீவ்வின் அம்மா கமலாவும், அப்பா பாலசுந்தரமும் இவனை பார்ப்பதற்காக ஹாஸ்பிட்டல் கிளம்பி கொண்டிருந்தனர். கொஞ்சம் இல்லையேல் காரில் கிளம்பி இருந்திருப்பார்கள். இவர்களை பார்த்ததும், ராஜீவ்வின் அம்மா கண்களில் நீரை வைத்து கொண்டு ராஜீவ்வை கட்டி அணைத்து உள்ளே கூட்டி சென்றார்கள். நிர்மலா தான் இவர்களுக்கு விஷயத்தை சொல்லி விட்டு இருந்தாள், ராஜீவ்வின் அம்மா அரை நாள் லீவ் விடுத்து வந்திருந்தார்கள். ராஜீவ்வின் அம்மா ஹாஸ்பிட்டலில் என்ன மருத்துவம் செய்தார்கள் என்று அன்புவிடமும் ரோஹித்திடமும் விசாரித்து தெரிந்து கொண்டார்கள். மனது கேட்காமல் ராஜீவ்வின் அம்மா அவர்களது குடும்ப மருத்துவரை தொடர்பு கொண்டு வந்து பார்த்து விட்டு செல்லுமாறு கேட்டு கொண்டார். ராஜீவ்வும், அவரது அப்பாவும் அதெல்லாம் தேவையில்லை என்று எவ்வளவோ தடுத்தும் கூட ராஜீவ்வின் அம்மா கேட்பதாய் இல்லை. ராஜீவ், அவர்கள் நண்பர்கள் இருவரையும் வீட்டிற்கு போக சொல்லி அவனது அறையில் வந்து படுத்து கொண்டான். அவனுடைய கைகள் அவனது செல்போனை எடுத்து ஸ்வாதியிடம் பேசலாம் என்று பரபரத்து கொண்டிருந்தது. ஒரு மணி நேர தனிமை அவனுக்கு அப்போது மிக தேவையாக இருந்தது. ஆனால், அவனது அப்பாவும், அம்மாவும் இவனை கவனித்து கொள்வதற்காக இவனை கொஞ்சமும் விலகாது இருந்தார்கள். ராஜீவ்வின் அம்மா சட்டு சட்டென்று அழ தொடங்குபவராய் இருந்தார். “நான் வேணும்னா வேலையை விட்டு உன்னை பத்திரமாய் பாத்துகிட்டுமா கண்ணு” என்று கேட்டு ராஜீவ்வை கலவரபடுத்தினார்கள். ராஜீவ் அதெல்லாம் வேண்டாம் என்று தான் சின்ன குழந்தை இல்லை என்றும் தான் எருமை மாடு கணக்காக வளர்ந்தாயிற்று என்றும் சொல்லி சமாதான படுத்த வேண்டியதாயிற்று. இவன் தன்னை எருமை மாடு என்று பேச்சு வழக்கில் சொல்லி கொண்டிருக்கும் போது, பாலந்தரத்திடம் ஒரு நகைப்பு ஏற்பட்டதை யாரும் பார்த்திருக்கவில்லை. சற்று நேரத்திலே ராஜீவ்வின் குடும்ப மருத்துவர் வந்து இவனை சரிபார்த்து, ஒன்றும் பயப்படுவதிற்கில்லை என்று ஆறுதலை மட்டும் சொல்லி, Consulting fees ஆக 2000 ரூபாயை பாலசுந்தரத்திடம் வாங்கி சென்றார்.

அவர் சென்ற பிறகு தான் ராஜீவ்வை அவனது அறையில் படுக்க சொல்லி கதவை சாத்தி சென்றார்கள். அவனது அம்மா சென்ற சற்று நேரத்திலே சித்ரா உள்ளே நுழைந்து ராஜீவ்வை நலம் விசாரித்து, அனுமார் கோவிலில் பெற்ற செந்தூரத்தை ராஜீவ் நெற்றியில் பூசி, ஒரு அனுமார் அட்டை படத்தை தலையணை அடியில் வைத்து சென்றாள். அப்பாடா என்று நிம்மதியாக அவள் சென்ற பிறகு கதவை தாளிட்டு கொண்டான்.

ராஜீவ் ஸ்வாதிக்கு போன் செய்யலாம் என்று போனை கையில் எடுத்த போதே அவளிடம் இருந்து “hw u feel nw?”  என்று sms வந்தது. அதை பார்த்து ரொம்பவும் உற்சாகமாகி அவளுக்கு போன் செய்தான். இவ்வளவும் நாளும் பேசிய பெண் தான் என்றாலும், இன்று அவளிடம் பேசுவது வித்தியாசமான ஒன்றாய் இருந்தது, அவன் காதலை சொல்லியதற்கு வேண்டாம் என்று சொல்லி விட்டாலும், இப்போது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவன் கைவெட்டு வலியினை எல்லாம் மறக்க செய்திருந்தது. ராஜீவ் காலேஜ் போகவில்லை என்பதற்காக அவளும் ஏன் போகாமல் விட வேண்டும், ராஜீவ்விற்கு வந்த கனவு அவளுக்கும் ஏன் வர வேண்டும் என்பன போன்ற இயல்பான கேள்விகளுக்கு பின்னே காதலே இருக்க கூடும் என்று நினைக்கும் போதே ராஜீவ்விற்கு மனதிற்குள் குளிர்ச்சியான உணர்ச்சி ஏற்பட்டது.

”ஹலோ”

“சொல்லு ராஜீ… எங்க இருக்க “

“நீங்க கிளம்பன கொஞ்ச நேரத்திலே நாங்களும் கிளம்பிட்டோம், இப்ப வீட்ல இருக்கேன்… என்ன பண்ற…”

“சும்மா ரூம்ல பேசிகிட்டு இருக்கோம்… நீ என்ன பண்ற..”

”ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்,  நேத்து சொன்னது பத்தி யோசிச்சியா?”

“எது?”

“உன்னை பிடிச்சிருக்குனு சொன்னேனே…. ஏன், மறந்துட்டியா?”

“அது தான், அப்பவே சொல்லிட்டேனே, என்னால இது பத்தி யோசிக்க முடியாதுனு”

“So…”

” So னா என்னா சொல்றது….”

“என்ன காரணம்…”

”கண்டிப்பா தெரிஞ்சாகனுமா”

“நாங்க பணக்காரங்க, அது தானே… பணக்காரங்கனா என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, ஒருத்தன் ஏழையா பொறக்கறது தப்பில்லை, ஏழையா சாகறது தான் தப்பு, ஒருத்தன் பணம் சம்பாரிக்கிறது, அவ்ளோ பெரிய தப்பா… ஒண்ணு புரிஞ்சிக்கோ…”

“ஹேய் நிறுத்து நிறுத்து… நீ சொல்றதெல்லாம் யாரு கேக்கறது, அதெல்லாம் ஒன்னும் இல்லை… எனக்கு ஒரு தங்கச்சி இருக்கு, அதை நான் என் பணத்துல படிக்க வைக்கனும்னு ஆசை படறேன், அடுத்த வருஷம் அவ +2 முடிச்சு வெளிய வர்றா… அதுக்குள்ள நான் வேலை தேடி செட்டில் ஆகனும்.. அதுவுமில்லாம எங்க அப்பா அம்மா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க, அழுது கெஞ்சி கூட சம்மதம் வாங்க எனக்கு விருப்பமில்ல..  என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது சிக்கலாகிடும், அதுவுமில்லாம எங்க கிராமத்துல எங்க வீட்டை பத்தி எப்படி ஊருக்குள்ள பேசிப்பாங்கனு சொன்னா, நீயே உன் லவ்வை தூக்கி எறிஞ்சிறிவ… அவ்வளவு மட்டமா பேசிப்பாங்க… ”

“இத்தனை negatives யோசிக்கிற நீ ஏன் ஒரே ஒரு positive கூட யோசிக்க மாட்டிங்கிற”

“ஏன்னா அப்படி ஒண்ணு இல்லை…”

“நிஜமாலுமே நீ என்னை லவ் பண்லையா…”

“என்னை மாதிரி ஒரு பொண்ணால அதை பத்தி நினைச்சு கூட பார்க்க முடியாது ராஜீவ்… உனக்கோ எனக்கோ அதுக்கு கொடுத்து வைக்கல ”

”கொடுத்து வைக்கலன்னுலாம் சொல்லாத, அப்பறம் ஏன் உனக்கும் எனக்கும் ஒரே கனவு வரணும்”

”என்ன கனவு…”
”இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல சொன்னேனே…”

“ஹய்யோ ராஜீவ், உனக்கு வந்த அதே கனவு எனக்கு வரல, என் கனவுல நீ நான் ரோஹித் அன்பு நிர்மலா எல்லோரும் ஒரு ஜீப்ல ஒரு forest area போற மாதிரி தான் வந்தது… “

“இதை ஏன் அப்பவே சொல்லல”

“அப்பறமா சொல்லிக்கலாம்னு தான் விட்டுட்டேன், ஆனா அதுக்குள்ள நீ இப்பிடி எடுத்துருக்க …. “

”நீ பொய் சொல்ற…”

“நான் ஏன் பொய் சொல்னும்…”

“தெரியல… ஆனா நீ பொய் சொல்ற… அதை விடு, நான் காலேஜ் போலங்கறதுக்காக நீயும் ஏன் போகாம விட்ட…”

“ஹய்யோ… இதையும் நீ..”

“சரி விடு ஸ்வாதி, இதுக்கும் ஏதாவது சொல்ல தான் போற… சரி இனிமேல் என்ன..”

“இனிமேல் இது பத்தி பேச்சு எடுக்க வேண்டாமே ராஜீ… நாமே நண்பர்களாகவே இருந்திடலாமே..”

”சரி, நானும் கூட இனிமேல் இதை பத்தி பேச பிரிய படல, ஆனா இனி நண்பர்களாக இருக்கிறதெல்லாம் சாத்தியமில்ல.. அதனால உங்கிட்ட இனிமேல் பேச வேண்டாம்னு பார்க்கிறேன்….”

“என்ன இது, இத்தனை நாள் பிரண்டா இருந்த உன்னால இனிமே இருக்க முடியாதா என்ன…”

”நான் பர்ஸ்ட் இயர்லயே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டனு உனக்கு தெரியாது, அதனால இனிமே பிரண்டா பழகுறதுலாம் சான்ஸே இல்லை…”

”பொய் சொல்லாத…”

“நான் ஏன் பொய் சொல்னும்”

”எனக்கு எவ்ளோ guilty ஆ இருக்கு தெரியுமா…”

”அதுக்கு என்னால என்ன பண்ண முடியும், ஒரு ஸாரி தான் கேக்க முடியும் ”

“இப்படி பேசாத ராஜீ, ரொம்ப வலிக்குது…”

“ ஹேய், எனக்கு எவ்ளோ வலிக்குது தெரியுமா… உனக்கு தான் என்னை பார்த்தா விளையாட்டா இருக்கு ”

” உனக்கு வலிக்குதுங்கறதுக்காக என்னை எங்க வீட்டை மறந்து உன்னோட வர சொல்றியா ராஜீ “

” நான் அப்படிலாம் சொல்லல ஸ்வாதி, சரி அதெல்லாம் விடு, நீ என்னை லவ் பண்ணலைன்னா மட்டும் மேற்கொண்டு நாம பேசிக்கலாம், இல்லைன்னா வேண்டாம்…”

“பிளாக்மெய்லா ராஜீவ்?”

”என்னை கோவப்படுத்துறதுக்காகனே கேள்வி கேக்காத, 3 வருஷத்துக்கும் மேல உன்னை மனசுக்குள்ளேயே லவ் பண்ணியிருக்கேன், நீ எனக்கில்லைனு தெரிஞ்சதுக்குப்பறமும் உன் கூட நான் எப்படி பேசி பழக முடியும்… எனக்கு கஷ்டமா இருக்காதா…”

”ஏன் அதே மாதிரி என்னை யோசிச்சு பார்க்க மாட்டிங்கற… 3 வருஷத்துக்கும் மேல உன் கூட நான் பிரண்டா இருந்திருக்கேன், உன் கூட என்னால எப்படி பேசாம இருக்க முடியும்…”

”ஏன், அன்பு, ரோஹித்லாம் இருக்காங்கல்ல…”

”செருப்பால அடிப்பேன். என்னை என்னான்னு நினைச்சிட்டு இருக்க… உன்னை பார்க்கற மாதிரி தான் அவங்களையும் பார்க்கிறனா… அவங்களையெல்லாம் எனக்கு உன் மூலமா தான் தெரியும்… ரோஹித்தை பத்தி எப்படி உன்னல பேச முடியுது, அவன் இது வரைக்கும் என் கிட்ட பேசி நீ பார்த்து இருக்கியா…. .“

“என்னை விட்டுருனு தான் சொல்றேன், நான் வேற எதையும் mean பண்ணல…”

“அது எப்படி டா முடியும்…”

“அதை பத்தி வருத்தப்படற நிலைமைல நான் இல்லை”

என்று சொல்லி இணைப்பை எதிர்பார்க்காத போது துண்டித்து விட்டான். துண்டித்த பிறகு தான், தான் எவ்வளவு ஆணாதிக்கமாகவும், கீழ்த்தனமாகவும் நடந்து இருக்கிறோம் என்றே அவனுக்கு புரிந்தது. எது நடந்ததோ அது நடந்ததாகவே இருக்கட்டும், இது ஒரு முடிவிற்கு வருவது எவ்வளவோ பரவாயில்லை, எதற்காக மனதினுள் வீண் ஆசையை வளர்க்க வேண்டும் என்று மனதை சமாதான படுத்த முயன்றான். அடுத்த 2 விநாடிகளிலே ஸ்வாதியிடமிருந்து அழைப்பு வந்தது. ராஜீவ் எடுக்கவில்லை. அதனை தொடர்ந்து ஸ்வாதி பல முறை தொடர்ந்து கால் செய்தும் ராஜீவ் ஏற்க மறுத்தான்.

அழைப்பை ஏற்காததால், போனை எடுக்க சொல்லி sms அனுப்பினாள். எதற்கும் பதலளிக்காமல் வெறுப்பின் உச்சத்தில் இருந்தான். அவன் அடைந்திருக்கும் வெறுப்பு எதன் மேல், யார் மேல் என்பதை கூட தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஒரு குருட்டு தனமான ஒரு வெறுப்பில் இருந்தான். அவன் செயல்கள் எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒன்று என்று தெரிந்தாலும், அவனுக்கு என்ன மாதிரியான ஆற்றுவது என்று தெரியவில்லை. ஆனால் அவள் வரிசையாக அனுப்பி கொண்டிருந்த குறுஞ்செய்திகளை மட்டும் திரையில் பார்த்து கொண்டிருந்தான்.


                                           (தொடரும்…..)



 

Monday 27 August 2012

ஸ்வாதி ராஜீவ் (2)


அன்று காலை 08.45 மணி ஆகியும் ராஜீவ் எழாததால் அவள் வீட்டில் வேலை செய்யும் சித்ராவே அவனை எழுப்பி விட வேண்டியதாய் போயிற்று, ’அண்ணா, அண்ணா’ என்று இரண்டு முறை கூப்பிட்டு பார்த்தாள். அப்படியும் எழாததால், கவிழ்ந்த படி படுத்திருந்த அவனது  தோள்களை மெலிதாக குலுக்கினாள், இவளது கை பட்ட உடனே, என்ன கெட்ட கனவோ ராஜீவ் இழுத்து இழுத்து மூச்சு விட்டான், இதை பார்த்து, சித்ரா, அண்ணா அண்ணா என்று பெரிதாக கத்த ஆரம்பித்தாள், ராஜீவ் ரொம்ப நேரமாக எதையோ சொல்ல  வாயெடுத்தான், ஆனால் வார்த்தை வரவில்லை, 4-5 முயற்சிகளுக்கு பின், ரொம்பவும் முனகிய குரலில், தண்ணீ என்றான். இதை கேட்டதும், அவசரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வீடு துடைத்து கொண்டிருந்த தண்ணீரை கொஞ்சம் கையில் எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள், அப்போதும் அவனிடம் எந்த முன்னேற்றமும் இல்லை, அவனை எழுப்ப ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற பதற்றத்தில் அவனை புரட்டினாள், புரட்டியதில் அவனாக மற்றொரு முறை புரண்டு முதுகு கீழே படும் படி விழுந்தான். விழும் போது தண்ணீர் துடைத்து கொண்டிருந்த வாளி மீது விழுந்ததில் வாளியில் இருக்கும் மொத்த தண்ணீரும் இவனது முகத்திலும் உடம்பிலும் கவிழ விழித்து கொண்டான். விழித்து பார்த்தால், அந்த ப்ளாஸ்டிக் வாளி உடைந்து போயும், உடைந்த ஒரு கூரான பகுதியின் வாளி ராஜீவ்வின் இடது முழங்கையில் கிழித்து ரத்தம் வர ஆரம்பித்தது. ராஜீவ்விற்கு சற்று நேரம் தாம் எங்கு இருக்கிறோம் என்று நினைப்பே வரவில்லை, சுற்றி முற்றி திரும்பி பார்த்தான். அவனுடைய அறையில் சித்ரா நின்று கொண்டிருந்ததை பார்த்தான், இவன் பார்த்ததும் சித்ரா ஓவென்று அழத் தொடங்கினாள். ராஜீவ் எழுந்து நின்று அவளை சமாதான படுத்துவதற்குள் அவள் அறையை விட்டு ஓடி விட்டாள். உடம்பெல்லாமும் ஒரே துர்நாற்றமாக இருந்தது. மணியை பார்த்தான் 08.47, இனி காலேஜ்ஜிற்கு போக முடியாது என்று முடிவெடுத்தவனாய் அன்புவிற்கு போனில் தொடர்பு கொண்டு, தான் வர முடியாது என்பதை ப்ரொபசரிடம் சொல்லி விடுமாறு சொல்லி வைத்தான். சித்ரா பயந்து போய், ட்ரைவர் குமாரை கூப்பிட்டு வந்திருந்தாள். குமார் வந்ததும் ராஜீவ்வின் கையை பார்த்தார், ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. எங்கோ ஓடியவர், சற்று நேரத்தில் நிறைய மருந்தகளுடனும், ப்ளாஸ்த்திரிகளுடனும் வந்தார். சித்ரா அழுந்து கொண்டே, இப்போது கட்ட முடியாது எனவும், ராஜீவ் உடல் முழுவதும் அழுக்கு தண்ணீரால் நனைந்து இருக்கிறது, செப்டிக் ஆகி விடும் என்று அழுது கொண்டே தெளிவாக சொன்னாள். பிறகு குமாரும், சித்ராவும் ராஜீவ் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல கேட்காமல் அவனை குளிக்க வைத்து, கையில் ப்ளாஸ்த்திரி போட்டு விட்டார்கள். சித்ரா அவ்வளவு கண்ணீரை எங்கு தான் வைத்திருந்தாளோ, கட்டு போடும் வரை அழுந்து கொண்டே இருந்தாள். கட்டு போட்ட பிறகு தான் அவள் அழுவதை நிறுத்தி அவள் வேலையை பார்க்க சமயலறைக்குள் நுழைந்தாள்.

அம்மாவும், அப்பாவும் எங்கே போனார்கள் என்று ராஜீவ் கேட்ட போது, ’அம்மா ஆபீஸ் போய்ட்டாங்க… அப்பா கம்பெனியில இருந்தே இன்னைக்கு விடியக்காலைல தான் வந்தாரு, தூங்கிட்டு இருக்காரு’ என்று சமையல் அறையில் இருந்து வெறும் சத்தம் மட்டுமே பதிலாக வந்தது.  

டி.வி. பார்க்கலாம் என்று ஸ்விட்சை போட்டு, சோபாவில் உட்கார்ந்த வேகத்தில் கரண்ட் போனது. எதுவும் கேட்காமலே ‘சனிக்கிழமை ஷட் டௌன்’ என்று சமையலறையில் இருந்து பதில் வந்தது. ராஜீவ் திரும்பி மணியை பார்த்தால் மணி 09.30, இனி 04.30 மணிக்கு தான் கரண்ட் வரும் என்பதால் ராஜீவ், காலேஜ் செல்லலாம் என யோசித்து, மறுபடியும் அன்புவிற்கு போன் அடித்து, லீவ் சொல்ல வேண்டாம் என்றான். அதற்கு மறுமுனையில் அன்பு சொன்னது கேட்டு தலையே சுற்றி விட்டது. ‘டேய், அயோக்ய பயலே, நீ லீவ் போட்டுட்டனு சொல்லி நானும் போக வேண்டாம்னு முடிவு பண்ணி, ரோஹித்தையும் போக விடாம பண்ணி இப்ப அவனோட மார்னிங் ஷோ கிளம்பிட்டு இருக்கேன், நீ வரலன்னு சொன்னதுக்கு அப்பறம் ஸ்வாதியும், அவளுக்கு உடம்புக்கு ஏதோ பண்ணுதுனு சொல்லி அவளும் கிளம்பறன்னு சொல்லி கிளம்பிட்டா, அவ கிளம்பிட்டான்னு நிர்மலாவும் கிளம்பிட்டா. இப்படி எல்லாத்தையும் கிளப்பி விட்டுட்டு நீ மட்டும் கிளாஸ்க்கு போக போறீயா, செருப்பால அடிப்பேன், ஒழுங்கா தியேட்டர்க்கு 10.30 மணிக்குள்ள வந்து சேரு டா’ என்றான். ராஜீவ்க்கு சிரிப்பு தான் வந்தது. நேற்று ராத்திரி தான், சினிமாவை அந்த திட்டு திட்டியிருந்தான், இப்படி திட்டி அடுத்த நாளேவா சினிமாவிற்கு செல்ல வேண்டும் என்று அவனது டூ வீலரை எடுத்து கொண்டு தியேட்டருக்கு கிளம்பினான்.

ராஜீவ் இப்போது சென்று கொண்டிருக்கும் தியேட்டர் அவனுக்கு  ரொம்ப பிடித்தமான தியேட்டர், அதனால் தான் என்ன படம் பார்க்க போகிறோம் என்று கூட கேட்காமல் கிளம்பி விட்டான். அவன் நண்பர்களுடனான பல சந்தோஷ தருணங்கள் இந்த தியேட்டரில் அவனுக்கு கிடைத்திருக்கிறது. அந்த தியேட்ட்ரின் பெயர் R.K.தியேட்டர், ரொம்பவும் பிரமாதமான தியேட்டர் என்று சொல்லி விட முடியாது, நடுத்தரமான தியேட்டர் தான், கல்லூரிக்கு வெகு அருகில் இருப்பதாலும், நண்பர்கள் எளிதில் கூட வசதியான இடமாகவும் இருப்பதால், இது அவனுக்கு ஒரு பிடித்தமான இடமாக மாறி போனது.

கல்லூரி சேர்ந்து 4 வருடங்கள் ஆனதே கூட்டி பார்த்தால் தான் தெரிகிறது, என்று அடிக்கடி அன்பு ராஜீவ்விடம் சொல்லி கொண்டிருப்பான். அன்புவை பற்றி யோசிக்கும் போது, ராஜீவ்விற்கு நிச்சயம் இந்த தியேட்டர் ஞாபகத்தில் வராமல் இருக்கவே முடியாது. கல்லூரி சேர்ந்த முதல் வாரம் வரைக்குமே ராஜீவ்வால் யாரிடமும் நெருங்கி பழக முடியாமல் இருந்தது. எல்லோரும் சடங்குக்காக பேசுவது போலவே இருந்தது. கல்லூரி பாடங்களும் அநியாயத்திற்கு அறுத்து தள்ளியது. அந்த மாதிரியான ஒரு சாதாரண நாள் காலையில், அன்பு ராஜீவ் தோள் மேல் கையை போட்டு, ’பாஸ் க்ளாஸ் ரொம்ப போர் அடிக்குது படத்துக்கு போலாமா?’ என்று கேட்ட நிமிடம் முதலே ராஜீவ் தன்னை அன்புவிற்கு நண்பனாக்கி கொண்டான். அப்போதிருந்து ராஜீவ்வை கல்லூரியில் எங்குமே அன்பு இல்லாமல் பார்க்க முடியாது, அந்தளவு இணை பிரியாமல் ஒன்றாகவே வலம் வந்தனர்.

நிர்மலா கிராமத்து பள்ளியில், தமிழ் மீடியம் படித்ததால் கல்லூரி துவங்கிய நாட்களில் ரொம்பவும் தடுமாறினாள், அந்த ஆரம்ப கட்டத்தில் அவளுக்கு நட்பு வட்டமும் பெரிதாய் அமையாமல் கஷ்டப்பட்டு இருப்பதை அறிந்து ராஜீவ் அவளுக்கு உதவியாய் இருந்தான். அவள் எந்த மாதிரியான ஜடை போட வேண்டும், என்ன மாதிரியான ஆடை அணிய வேண்டும், ஆங்கில உச்சரிப்புகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது அவளை கவனித்து வந்தான். ஆரம்பத்தில் அவன் அதையொரு உதவியாய் தான் நினைத்து செய்து கொண்டு வந்தான். ஆனால் ரொம்ப சீக்கரத்திலே அவள் ராஜீவ்க்கு தோழியாய் மாறியது இந்த தியேட்டரில் வைத்து தான். ஒரு நாள் ராஜீவ்வும், அன்புவும் மார்னிங் ஷோ முடித்து கல்லூரியில் வந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, நிர்மலா வந்து காலையில் எங்கு காணாமல் போனீர்கள் என்று கேட்க, அவர்கள் தியேட்டரிற்கு சென்று படம் பார்த்தோம் என்று சொல்ல அவள், ‘தியேட்டருக்கா…’ என்று ஆச்சர்யத்தில் விரிந்தது இன்னமும் ராஜீவ்விற்கு ஞாபகம் இருக்கிறது. எதற்காக அவ்வளவு ஆச்சர்யம் காட்டுகிறாய் என்று கேட்டதற்கு, தான் இன்னமும் தியேட்டருக்கே போனதில்லை எனவும், தன்னுடைய கிராமத்தில் அந்த வசதியில்லை எனவும், பக்கத்து வீட்டு டி.வி.யில் தான் சில படங்கள் பார்த்திருப்பதாய் சொல்லி, தன்னையும் ஒரே ஒரு முறை தியேட்டருக்கு அழைத்து செல்லுமாறு கேட்டாள். ராஜீவ் இந்தளவு வெள்ளிந்தியை தன் வாழ்நாளிலே பார்த்திராததால், அந்த நிமிடமே அவளை படத்திற்கு கூட்டி செல்ல முடிவு எடுத்தான். அந்த நாள் மேட்னி ஷோவிற்கு 10 நிமிடம் இருந்தது. உடனே ராஜீவ் அன்புவிடம் சாப்பிட்டது போதும் கை கழுவி விட்டு வா, என்று சொல்லி நிர்மலாவையும் கூட்டி கொண்டு தியேட்டருக்கு சென்றான். அவளது முதல் நாள் தியேட்டர் அனுபவங்களை பல மாதங்களாக பார்ப்பவரிடத்திலெல்லாம் அலுக்காமல் சொல்லி திரிந்து கொண்டிருந்தாள்.

நிர்மலா தங்கியிருக்கும் ஹாஸ்டல் ரூமில் ஸ்வாதி தங்கி இருப்பதால் தான், ராஜீவ்விற்கு ஸ்வாதியின் அறிமுகம் கிடைத்தது. கல்லூரி துவங்கிய 3வது மாதத்திலே ஸ்வாதி ராஜீவ்விற்கு அறிமுகம் ஆகி விட்டாள். அது ஒரு 3 மாதம் வரை பார்த்தால் புன்னகைக்கும் ஒரு நட்பாகவே இருந்தது. அப்போதே ராஜீவ்விற்கு அவளை பிடித்து விட்டிருந்தது. ஒரு நாள் ஸ்வாதி ராஜீவ்விடம் வந்து, ரோஹித்னு ஒருத்தன் என்னை லவ் பண்றேன்னு சொல்லி டார்ச்சர் பண்றான், கொஞ்சம் என்னன்னு கேக்கறீங்களா என்று தூரத்தில் இருந்தே ராஜீவ்க்கு ஆளை காட்டினாள். ராஜீவ்க்கு இந்த மாதிரி மிரட்டி வைப்பதில் எல்லாம் முன்பின் பரிச்சயம் இல்லை, ஆனாலும் முடியாது என்று சொல்ல முடியாததால் துணிந்து இறங்கினான். அந்த நாளை நினைத்தால் இப்போதும் ராஜீவ்விற்கு பிரமிப்பே மேலிடுகிறது. அவள் காட்டிய ஆள் நல்ல வாட்ட சாட்டமான ஆளாகவும், ஸ்மார்ட்டான ஆளாகவும் இருந்தான். அவன் ஸ்வாதியின் க்ளாஸ் மேட்டாக இருந்தான். அவனை மிரட்டுவதும், பணிய வைப்பதும் அந்த நிமிடத்தில் முடியாது என்று தெரிந்து இருந்தாலும் ராஜீவ் அவனை நோக்கி சென்று, அவன் முன் நின்றான். அவன் கேண்டினின் முன் நின்று கொண்டு போகும் வருபவர்களிடத்திலெல்லாம் எதையோ கேட்டு கொண்டிருந்தான். ராஜீவ் போய் நின்றதும் ரோஹித், ‘பாஸ், 100 ரூபாய்க்கு சில்லரை இருக்கா?’ என்று கேட்டான். ராஜீவ்வால் அப்போது தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியவில்லை, எதுவும் சொல்லாமல், ‘இந்தாங்க பாஸ்” என்று இரண்டு 50 ரூபாய் தாள்களை நீட்டினான். ’தேங்க் யூ’ என்று புன் சிரிப்போடு வாங்கி, கேண்ட்டின் கவுண்ட்டரில் கொடுத்து சாப்பாடு வாங்கி, ஒரு காலியான மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். ராஜீவ் அவன் அருகே உட்கார்ந்து, ‘பாஸ், நான் ஸ்வாதியோட friend, நீங்க லவ் சொன்னதால ஸ்வாதி ரொம்ப அப்ஸெட் ஆகி காலேஜ் மாத்தறது பத்தி யோசிக்கிறாங்க, எங்க friend எங்களை விட்டு பிரியறது ரொம்ப கஷ்டமா இருக்கு, உங்களால அவங்களை லவ் பண்ணாம இருக்க முடியுமா பாஸ்?’ என்று கேட்டான். அதை கேட்டு ரோஹித் ரொம்பவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்திருக்க கூடும், இல்லாமல் போனால் ராஜீவ் அப்படி சொன்னவுடனே ரோஹித் மன்னிப்பு கேட்டு, இனிமேல் இது போல் நடக்காது என்று சொல்லி அனுப்பியிருக்க மாட்டான். அதன் பிறகு ரோஹித் ஸ்வாதி இருக்கும் புறமே திரும்பாதவனாய் இருந்தான். பின்னாளில் ராஜீவ் அன்பு கூட ஒரு முறை ஐஸ் க்ரீம் கடையில் இருக்கும் போது, உள்ளே நுழைந்த  ரோஹித் ராஜீவ்வை பார்த்த பின் வெளியே போய் விட்டான். இது போல் 2-3 முறைக்கு மேல் ராஜீவ்வை கண்டவுடன் ரோஹித் ஒதுங்கி விடவே, ராஜீவ் ஒரு நாள் ரோஹித்திடம் சென்று ‘பாஸ், ஏதாவது படத்துக்கு போலாமா’ என்று கேட்டு அவனை நண்பனாக்கி தியேட்டருக்கு சென்றான். அதன் பின் தியேட்டர் போகும் போதெல்லாம் ரோஹித்தை கூட்டி செல்வது வாடிக்கை ஆகி விட்டது.

ஒவ்வொரு முறை யாருடனாவது தியேட்டருக்கு செல்லும் போதும், ராஜீவ் தவறாமல் ஸ்வாதியை வர சொல்லி கேட்பான். ஆனால் இன்று வரை பசங்களுடன் படத்திற்கு செல்ல கூடாது என்ற கொள்கையில் பிடிவாதமாக இருப்பதால் அவள் ஒவ்வொரு முறையும் மறுத்து விடுவாள். அவளை தியேட்டருக்கு கூட்டி சென்று அவளுடன் படம் பார்ப்பதற்காகவாவது அவளை மணக்க வேண்டும் என்று ராஜீவ் ஒரு செல்ல ஆசையை யாருக்கும் தெரியாமல் மனதினுள் வளர்த்து வந்தான்.

தியேட்டர் வாசலிலே ரோஹித்தும், அன்புவும் நின்று கொண்டிருந்தார்கள். வண்டியை பார்க் செய்து விட்டு டிக்கெட் கவுண்ட்டரில் நிற்கும் போது, அன்பு தான் ராஜீவ் கையில் இருக்கும் கட்டை முதலில் பார்த்தான். என்ன ஏது என்று ராஜீவ் சொல்லி கொண்டிருக்கும் போதே ரோஹித், ‘பாஸ் ரத்தம் நிக்காம வந்துட்டு இருக்குது, வாங்க ஹாஸ்ப்பிட்டல் போகலாம் என்று ராஜீவ்வை இழுத்து சென்று வண்டியில் உட்கார வைத்து விரைந்தான். இதற்குள் அன்பு ஸ்வாதிக்கும், நிர்மலாவிற்கும் சொல்லி விட்டிருக்க வேண்டும். அவர்களும் ராஜீவ் சென்ற 30 நிமிடத்திற்குள்ளாகவே ஹாஸ்ப்பிட்டலிற்கு வந்து சேர்ந்தனர்.

ரத்தம் உறைய வைப்பதற்காக ராஜீவ்விற்கு ஒரு ஊசி போட்டு அவனை 1 மணி நேரம் ஓய்வு எடுத்து செல்லுமாறு சொன்னார்கள்.

ஸ்வாதி அவனுக்கு என்ன ஆனது என்று அவன் சொல்ல ஒரு முறை கேட்டு விட்டு, அவன் அருகே நெருங்கி அப்படி என்ன கனவு அவன் கண்டான் என்று கேட்டாள். மற்றவர்கள் அனைவரும் ஹாஸ்பிட்டல் பில்லை செட்டில் செய்வதற்காக அலைந்து கொண்டிருப்பதை உறுதி படுத்தி கொண்டு, அவன் கனவை சொல்ல ஆரம்பித்தான்.

‘நானும் நீயும் யாருமில்லாத ஒரு ரோட்ல கார்ல போய்க்கிட்டு இருக்கோம், நான் வண்டி ஓட்ட நீ எனக்கு பக்கத்துல உட்காந்துட்டு இருக்க , உடனே நீ என்னை அண்ணா அண்ணானு ரெண்டு முறை கூப்பிடற, நான் ஷாக்காகி உன்னை திரும்பி பார்க்கறான், நீ என்னை பார்த்து சிரிச்சிட்டு இருக்க, அப்புறம் என்னை பின்னாடி யாரோ தட்டற மாதிரி இருக்கேன்னு திரும்பி பார்த்தா, நமக்கு 4 குழந்தைங்க பிறந்திருக்கு, நான் அப்பிடியே ஷாக்காகி வண்டிய பாலத்து மேல இருந்து கீழ தள்ளி கடல்ல விழுந்தடறேன், அப்பறம் எழுந்து பார்த்தா நான் கட்டில் மேல இருந்து கீழ விழுந்திருக்கேன், என்னை அண்ணானு கூப்பிட்டது  யார்னு திரும்பி பார்த்தா வீட்டு வேலைக்காரி’ என்று ராஜீவ்.சொல்லி முடித்தவுடன் ஸ்வாதி குலுங்கி குலுங்கி சிரித்தாள். சிரித்து விட்டு ’எனக்கும் இதே போல ஒரு கனவு வந்துச்சு, ஆனா நான் ஒண்ணும் உன்னை மாதிரி காரை போய் கடல்ல தள்ளல’ என்று ராஜீவ்வை பார்த்து மறுபடியும் சிரித்தாள்.

                                                                                                            (தொடரும்...)