Tuesday 30 October 2012

அட்டகத்தி, சுந்தர பாண்டியன் – ஒரு பார்வை


சுந்தர பாண்டியன்”, ”அட்டக்கத்திஆகிய படங்களை அடுத்தடுத்து இந்த வாரத்திலே காண நேரிட்டது. இரண்டு படங்களுமே எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு படங்களும் இன்றைய கால கட்டத்தில் ஒரு முக்கியமான படம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. இரண்டும் இரு வேறு படம், இரு வேறு கதை என்றாலும் இவை இரண்டும் பேசும் பொதுவான அம்சம், இங்கு பெரும் விவாதத்திற்கு உரிய எரிபொருளாகும். பேருந்துகளில் நடக்கும் காதல்கள், கலாட்டாக்கள் மற்றும் பிரச்சனைகள்.
                    
இன்றைய சூழ்நிலையில் கிராமங்களில் ஆகட்டும் நகரங்களில் ஆகட்டும், கல்வி வேண்டுமென்றால், அது நடந்து செல்லும் தூரத்தில் பெரும்பாலானவருக்கு இல்லை. ஒரு நல்ல கல்வி வேண்டுமென்றால் அதற்காக பஸ்ஸோ, ரயிலோ ஏறி கூட்ட நெரிசலில் சென்று, நசுங்கி, புழுங்கி, வியர்த்து ,விறுவிறுத்து தினம் போய் வந்தால் தான் உண்டு. பள்ளி கல்விக்கே இந்த பாடு. இன்னும் கல்லூரி கல்வி என்றால் கேட்கவே வேண்டாம். கல்லூரி விடுதியிலே தங்கி படித்தால் தான் ஆயிற்று. அமெரிக்கா போல், அந்தந்த பகுதியில் பள்ளி, கல்வி அரசாங்க சார்பில் வசதி செய்து கொடுக்க இங்கு இன்னும் 40 ஆண்டுகளாவது ஆகும் போல் தெரிகிறது. அமெரிக்காவில் ஒரு குழந்தையை ஸ்கூலில் சேர்க்க வேண்டுமென்றால் அவர்கள் இருக்கும் பகுதியிலே தான் சேர்க்க வேண்டும். வேறு பகுதியில் இருக்கும் ஸ்கூலில் எல்லாம் போய் ஸீட் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். அதற்கேற்றாற் போல் கல்வி சமதரமானதாகவே இருக்கும். ஒரு ஸ்கூலில் நன்றாக சொல்லி கொடுத்தும், இன்னொரு ஸ்கூலில் வாத்தியார் வகுப்பிற்கே வராமல் இருக்கும் அவலம் எல்லாம் அங்கே நடப்பதில்லை. அதனால் பகுதி விட்டு பகுதி சென்று கல்வி கற்பது என்பது நம்மூரை பொறுத்தவரை  ஒரு தவிர்க்க முடியாத செயல் ஆகிறது.

இன்னொரு புறம், பெண்களை எப்படி கையாள்வது என்று தெரியாத/தெரியப்படுத்த படாத மாணவர்கள் பெரும் அளவில் எங்கு திரும்பினாலும் காண கிடைக்கின்றனர். இம்மாணவர்களுக்கு கௌரவத்திற்காகவும், பாலியலுக்காகவும் ஒரு பெண் அவசியம் தேவைப்படுகிறாள். ஏன் ’கௌரவத்திற்காக’ என்று சொன்னேன் எனில், அவன் மனதில் ஆணித்தரமாக விதைக்கப்பட்ட விதை என்னவெனில் “லவ் பண்ணுபவனே ஹீரோ, லவ் பண்ணாதவன் உலகில் வாழவே தகுதி இல்லை”. இது போன்ற விதையை தான் அவன் பார்க்கும் சினிமாக்கள் அவனுக்கு சிறு வயது முதல் விதைத்து வருகிறது. அதனால் ஒரு பெண்னை துரத்தி துரத்தி பின்தொடர்வது, அவளை கட்டாயப்படுத்தி காதலிக்க சொல்லி நிர்பந்திப்பது, அவள் மறுக்கும் பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவது போன்ற மனித தன்மையற்ற செயல்கள் எல்லாம் அவனை பொறுத்தவரையில் ஹீரோயிச செயல்கள் ஆகிவிடுகின்றன. இது போன்ற ஹீரோயிச செயல்களை காட்டி பெண்களை வலம் வரும் மாணவர்களை நகரிலும், கிராமத்திலும் எங்கு வேண்டுமானாலும் காண கிடைக்கின்றனர்.

இது போன்ற மாணவர்களுக்கு பெண்களை அணுகுவதே பிரச்சனையாய் இருக்கிறது. மேலும் பெண் என்பவள் பெற்றோரின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதால் அவளை நினைத்த நேரத்தில் சந்திப்பது என்பது இயலாத காரியம். வீட்டில் இருக்கும் போதும் பார்க்க முடியாது, அவள் படிக்கும் பள்ளிக்கு சென்றும் பார்க்க முடியாது, ஏனென்றால் வாட்ச் மேன் அவனை கேட்டினுள்ளேயே விட மாட்டான். அவளை எங்கேயும் நெருங்க முடியாது. இந்த இடத்தில் பேருந்துகள் அவனுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கிறது. பேருந்து என்ற அந்த மூடிய அல்லது குறுகிய சமூகத்தில் அவன், அவளை கரம் பிடிக்க அவன் ஆவனவற்றை செய்கிறான். பருவம் அடைந்தது முதல் பொத்தி பொத்தி வளர்க்கபட்ட பெண்களும், அவர்களுக்கு உரிய இனக்கவர்ச்சியினால் ஆண்களின் பால் ஈர்க்க பட்டு விடுவதும் இங்கே மிக சாதாரணமான விஷயம்.

இங்கே நான் குறிப்பிட வருவது என்னவென்றால், எப்படி பேருந்துகள் காதல் மையங்களாக மாறி போனது என்று தான் சொல்ல வருகிறேன்.

அட்டக்கத்தி படத்திலும் சரி, சுந்தரபாண்டியன் படத்திலும் சரி கதையின் நாயகன், கதாநாயகியை பேருந்தில் சந்திப்பது போன்று தான் வருகிறது. ஆக, பேருந்துகள் காதல் மையங்களாக ஆகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இந்த இரு படமும் இருக்கிறது.

இந்த மாணவர்களுக்கு பெண்களை ஈர்க்க வேண்டும் என்ற தவிப்பு இருத்தல் இயல்பு. அதற்காக ஓடும் பேருந்தில் ஏறியும், ஓடும் பேருந்தில் இறங்கியும், அநாவசியமாக உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவில் கம்பிகளில் தொங்கி கொண்டு வருவதும் போன்ற ஆபத்தான செயல்களை சாகசங்களாக எண்ணி பெண்களை ஈர்க்க ஆன அளவில் முயற்சி செய்கின்றனர். இந்த இரு படங்களிலுமே இது போன்ற காட்சிகளை சித்தரிக்க பட்டுள்ளன. ஆனால் எந்த வடிவில் சித்தரிக்க பட்டுள்ளது என்றால், இது போன்ற சாகசங்களை ஊக்குவிக்கும் வகையில் தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இது போல் உயிருக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்தான விளையாட்டுகளை செய்வதெல்லாம் ஹீரோயிசம் என்ற ரீதியில் தான் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்த காட்சிகளை துகிலுரித்துக் காட்டும் காட்சியாய் கொள்ள முடியாமல் பொறுப்பில்லாத ஒரு படைப்பாகவே பிரதிபலிக்கிறது. சுந்தர பாண்டியன் படத்தில் பேருந்து நிற்கும் போது ஏறாதே, பேருந்து கிளம்பிய பிறகு ஏறு, அப்போது தான் பெண்களை கவர முடியும் படத்தின் நாயகன் அவனது நண்பனுக்கு அறிவுரை கூறுகிறான். அட்டக்கத்தி படத்திலும் அதே லட்சனம் தான். படத்தின் நாயகன் கொஞ்சமும் அறிவு இல்லாமல் வேகமாக ஓடி கொண்டிருக்கும் ஒரு பேருந்தில் படிகளில் கூட காலை வைக்காமல், வெறும் கைகளை கொண்டு பேருந்தின் பக்கவாட்டில் இருக்கும் ஜன்னல் கம்பிகளை பிடிக்கிறான், அப்போது அந்த ஜன்னலின் ஓரம் அமர்ந்திருக்கும் நாயகி அவன் இடறி விழுந்துவிடுவானோ என்ற பயத்தில் ’பார்த்து பார்த்து…’ என பதறி அவனுக்கு உதவி செய்ய முற்படுகிறாள், ஆனால் அவளின் உதவி இல்லாமலே நாயகன் படியில் கால் வைத்து எப்படியோ ஏறி, அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்து அவனின் காதல் லீலைகளை துவங்குகிறான். இப்போது இந்த இரு படங்களிலும் சேர்ந்து மக்களுக்கு செல்லும் கருத்து மிக தெளிவாகவே இருக்கிறது, ஒரு பெண் உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீயும் கண்ட படி பேருந்து படிகளில் தொங்கு…. அப்படி தானே! இந்த மாதிரி சில பொறுப்பற்ற ஹீரோயிச காட்சிகளாலே இந்த படம் எனக்கு பிடிக்காமல் போனதற்கு உப காரணம்.

நான் ஒரு முறை வேளச்சேரியில் இருந்து தி.நகர் செல்லும் 5A பேருந்தில் போய் கொண்டிருக்கையில் சில பள்ளி மாணவர்கள் பஸ்ஸை துருத்தி கொண்டு, திரட்சை கொத்து கூட்டம் போல் படிகளில் தொத்தி கொண்டு வந்தனர், சின்ன மலை அருகே வந்து கொண்டிருக்கும் போது நாங்கள் இருந்த பேருந்து எங்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தை கடந்து செல்ல வலதுபுறமாய் கடக்க முற்படுகையில், முன்னால் இருந்த பேருந்து இந்த துருத்தி கொண்டிருந்த கூட்டத்தை சற்று அசந்திருக்கும் பட்சத்தில் அடித்து விட்டிருக்கும். ஏனெனில் நாங்கள் சென்ற பேருந்து திரும்பிய வலது போதவில்லை, இன்னமும் கொஞ்சம் வலது திரும்பியிருக்க வேண்டும், ஓட்டுனர் துருத்தி இருக்கும் கூட்டத்தை கணக்கில் கொள்ளாமல் கடக்க முற்படுவதை பார்த்து, மாணவர்கள் அனைவரும் சத்தம் எழுப்பினர். கிட்டதட்ட அலறினர் என்று தான் சொல்ல வேண்டும். அவசராவசரமாக உள்ளே வர முடிந்தவர்கள் உள்ளே வந்தனர், இறங்க முடிந்தவர்கள் இறங்கி அவரவர்களை பாதுகாத்து கொண்டனர். இறங்கும் போது 3, 4 பேர் கால் இடறி விழுந்து விட்டனர். யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், பேருந்தில் இருந்த அனைவரையும் இந்த சம்பவம் உலுக்கி போட்டுவிட்டது. அந்த சமயத்தில் பேருந்தில் படியில் தொங்கும் அளவிற்கு கூட்டம் உள்ளே இருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த இரு படங்களிலுமே நிதர்சனத்தை துகிலுரித்து காட்டும் காட்சிகள் ஏராளமாக இருக்கிறது. உதரணமாக, பேருந்தில் பாலியல் ரீதியாக ஒருவர் எவ்வாறு துன்புறுத்தப் படுகிறார் மற்றும் வசிய படுத்தப்படுகிறார் என்று காட்ட படுகிறது. இது நாம் பேருந்தில் அவ்வப்போது பார்க்கும் அவலம் என்றாலும், இது போன்ற வரம்பு மீறல்கள் எல்லாம் பேருந்தில் எளிதில் சாத்திய பட்டு விடுகின்றன என்பதை நினைவு கொள்ள வேண்டும். அட்டக்கத்தி படத்தில் ஒரு பெண் தொடுதலின் மூலம் கதாநாயகனின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு கதாநாயகனின் மனதை அசுத்தப்படுத்தி விடுவாள். பின் உடன் இருக்கும் சகபயணி ஒருவர் இதை கண்டு வெளிப்படையாக புலம்பி தள்ளவே, கதாநாயகன் வெட்கங்கொண்டு பேருந்தில் இருந்து வெளியேறி விடுவான். வெளியேறிய பின் அவனை அவனே திட்டி மிகவும் வருத்தப்பட்டு கொள்வான் இது போல் பொறுப்பான காட்சிகள் படத்தில் ஆங்காங்கே இருப்பது தான் படத்தின் பலமாகும். மற்றப்படி படத்தில் சுவாரஸ்யம், ஹாஸ்யம், சண்டை காட்சி யாவும் மூன்றாம் தரத்தில் இருக்கின்றன. சுந்தர பாண்டியனிலும் வாலிப பசங்கள், வரிசையாக பெண்களின் பின் நின்று பாலியல் தொந்தரவு கொடுத்து கொண்டிருப்பார்கள். அதை ஹீரோ வந்து தடுப்பது போன்ற மொக்கையான க்ளீஷே காட்சிகள் தான் சுந்தர பாண்டியனுக்கு சறுக்கலாக போயிற்று. பேருந்துக்கு பேருந்து ஒரு சுந்தர பாண்டியனையா அனுப்ப முடியும்…! அந்த வகையில் நல்ல ஒரு கருத்துக்களத்தை எடுத்து கொண்டு ஹீரோயிஸம் சாயம் பூசி, சொல்ல வந்த கருத்தை கெடுத்து விட்டனர்.

அடுத்ததாய், சுந்தர பாண்டியன் படத்தில் மிக சிறந்த கதாப்பாத்திர வடிவாக்கம் என்றால் அது அப்புக்குட்டியின் கதாபாத்திரம் தான். உண்மையில் அந்த கதாபாத்திரத்தை அவர் மிக சிறப்பாகவும், மிக சரியாகவும் செய்துள்ளார். ஒரு பெண்ணிடம் எப்படி அணுகி, எப்படி காதலை சொல்லி, எப்படி அவளை கரம் பிடிப்பது என்று தெரியாத ஒரு கதாபாத்திரமாக அப்புக்குட்டி வருகிறார். அப்புக்குட்டி என்பது தனி ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம் அல்ல, ஊரெங்கும் நிறைய மனிதர்கள், அப்புக்குட்டி கதாப்பாத்திரத்தை உரித்து வைத்தாற் போல் இருக்கிறார்கள். என் நிஜ வாழ்விலும் சில அப்புக்குட்டிகளை, எனக்கு தனிப்பட்ட முறையிலேயே தெரியும். மேலும், அப்புக்குட்டியை ஒரு வில்லன் கதாபாத்திரமாக சித்தரிக்காமல் ஒரு கதாபாத்திரமாகவே, அப்புக்குட்டியை உலவ விட்டிருக்கின்றனர். என்ன தான் கதையின் நடுவே அப்புக்குட்டி கதாநாயகியை பார்த்து ஆபாசமாக திட்டினாலும், அப்புக்குட்டி ஒரு வகையில் அப்பாவி என்பதை ஒப்பு கொள்ள தான் வேண்டும். ஏனெனில் சசிக்குமாருக்கு இருக்கும் அழகும், திறமையும், சாதி பலமும், பணமும், குடும்ப பிண்ணனியும் அப்புக்குட்டிக்கு இல்லாமல் போயிற்று, அவ்வளவு தானே தவிர அப்புக்குட்டி வில்லனெல்லாம் கிடையாது, ஆனால் ஒரு அருவருப்பான கதாபாத்திரம், அப்படி அருவருப்பாய் இருப்பது கூட அவனின் தவறு கிடையாது என்பது தான் இங்கு பரிதாபம். இதே போல் அட்டகத்தி படத்திலும் ஒரு கதாபாத்திரம் வருகிறது, அவனும் கிட்டதட்ட அப்புகுட்டி போல் தான் என்றாலும், இவன் கொஞ்சம் அப்புகுட்டியை காட்டிலும் ஃபாஸிஸ்ட். அதாவது அந்த பெண், நம்மை தான் காதலிக்க வேண்டும். என்ன தான் நம்மிடம், அந்த பெண் எதிர்பார்க்கும் அளவுகடந்த அன்பு, வீரம், மேன்மையான குணம் இல்லாவிட்டாலும் அந்த பெண் நம்மை தான் காதலிக்க வேண்டும் என்ற ரீதியலான கதாபாத்திரம். மேலும் அந்த கதாபாத்திரம் கதாநாயகியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்வது மட்டுமில்லாமல், அதை தடுக்க வந்த ஒருவனையும் கன்னத்தில் அறைந்து அவனை அவமானப்படுத்துகிறான். இரண்டாமானவனின் கதாபாத்திரத்தில் வன்முறை சற்று தூக்கலாக இருந்தாலும், அடிப்படியில் இவ்விரு கதாபாத்திரங்களும் ஒன்றே.

இது போன்ற கதாபாத்திரங்கள் நிஜ வாழ்விலும் நிறைய இருப்பதால், சற்று இந்த கதாபாத்திரங்களை உற்று நோக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஏனெனில், நாளை பாதிக்கப்படும் பெண்ணோ, அல்லது தகராறு செய்யும் ஃபாஸிஸ்ட்டோ நம் வீட்டு நபர்களாக கூட இருக்கலாம் அல்லவா?

உண்மையில் இது போன்றவர்களுக்கு ஹீரோயிஸத்தை பற்றிய ஒரு தவறான மாயை தான் மனதில் பதிந்து விட்டிருக்கிறது. அதற்கு நம் தமிழ் சினிமா உலகமே தார்மீக பொறுப்பு. இவர்களுக்கு உண்மையில் உணர வேண்டிய உடனடி உண்மை என்னவென்றால், ஹீரோவாக இருப்பதை காட்டிலும், நல்ல மனிதனாக இருப்பது தான் மிக தேவையான ஒன்று, அது தான் பெண்களுக்கு பிடித்தமாய் இருப்பதற்கு சுலபமான வழி. பெண்களுக்கு வன்முறை எந்த அளவிலும் பிடிக்காது, பெண்களுக்கு பிடித்தது எல்லாம் வீரம் மட்டுமே. இவர்கள் வீரத்திற்கும், வன்முறைக்கும் வித்தியாசம் தெரியாமல், பெண்களுக்கு முன்னால் பிறரை அடித்து அநாயவசியமாக பெண்களை அச்சுறுத்துகின்றனர். அதனாலே அவர்கள் அருவருக்க படுகின்றனர். தங்களின் போலியான பிம்பத்தை வீணாக காட்டி, பெண்களை கவர பார்க்கின்றனர், அப்படி அவள் கவர படுகிறாள் என்று வைத்து கொண்டாலும், பின்நாளில் உண்மை பிம்பம் வெளியே தெரிய ரொம்ப நாள் ஆகாது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இயல்பாய் இருப்பதே பெண்கள் எப்போதும் விரும்புவர். மறுபுறம், இவர்கள் வளர்க்க படும் விதமும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, பெரும்பாலும், இவர்கள் பெற்றோர்களின் ஒட்டுதல், அரவணைப்பு இன்றி,ஒரே வீட்டில் இருந்தாலும் தன் போக்கில் வளர்பவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்குள் நிறைய நிறைய அந்தரங்கங்களை வைத்து கொள்கின்றனர். எதையும் வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொள்ள கூட வெட்கப் படுகின்றனர். இப்படி அளவிற்கு மீறிய அந்தரங்கங்களை வைத்து கொள்வதாலேயே பெண்களை பார்க்கும் போது, சக உயிராய் பார்க்காமல் வேற்றுகிரகவாசி போல் அணுகிறார்கள். அவர்கள் மறுக்கும் பட்சத்தில் வன்முறையை கையில் எடுத்து அவர்களில் ஆதிக்க முகங்களை காட்டுகின்றனர். இப்படி அக அவலட்சங்களை நிறைய இருக்கும் பட்சத்தில், ஒருவனின் முகம் எவ்வளவு லட்சனமாய் இருந்தாலும், அது பெண்ணிற்கு தேவையற்றது.


சுந்தர பாண்டியனிலும் சரி, அட்டகத்தியிலும் சரி எனக்கு ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது. அது என்னவென்றால் இரண்டு படங்களிலுமே கதாநாயகிகள் சுமாரான அழகு தான். அழகான பெண்கள் தான் கதாநாயகிகளாக நடிக்க வேண்டும் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? கதாநாயகிகள் ஒன்றும் பொம்மைகள் கிடையாது, கதாபாத்திரங்கள் என்று எடுத்து சொல்லும் வகையில் இவ்விரு படங்களும் அமைந்ததில், எனக்குள் ஒரு சந்தோஷம்.    





Wednesday 17 October 2012

ஸ்வாதி ராஜீவ் (5)


நெடுநாட்கள் கழித்து சந்தித்த சந்தோஷத்தில் எல்லோரும் கலகலப்பாக பேசி கொண்டிருக்கையில் அன்பு மட்டும் அழுத்தமாய் இருப்பதை கண்டு என்ன விஷயம் என்று கேட்டனர்.

அன்பு பேச ஆரம்பித்தான்...

“நான் சென்னை வந்து கரெக்டா இன்னையோட ஒன்றரை வருஷம் ஆகுது, ஆனா இன்னைய வரைக்கும் நான் என்ன சென்னையில எதிர்பார்த்தேனோ, அது எனக்கு கிடைக்கல. நான் எதிர்பார்த்ததும் ஒன்னே ஒன்னு தான், ஒரே ஒரு கௌரவமான வேலை. ஆனா எனக்கு அது கடைசி வரைக்கும் கிடைக்கல. நான் வேலை தேடி சென்னை வந்ததோட சரி, இன்னைய வரைக்கும் ஊர் பக்கம் போகல, ஒரு நல்ல வேலை கிடைச்சு ஊர் பக்கம் போகலாம்னு பாக்கறேன், ஆனா வேலை கிடைக்கவும் இல்லை, ஊர் பக்கம் போகவும் இல்லை.. முந்தாநாள், எங்க ஊர்ல அழகர் ஆத்துல இறங்கியிருக்காரு, அதை பார்க்க மதுரக்காரய்ங்க எந்த நாட்டுல இருந்தாலும் ரயிலை பிடிச்சு, ப்ளைட்ட பிடிச்சுலாம் வந்து சேர்வாங்க, ஆனா அன்னைக்கு நான் இந்த பாழாய் போன ஊர்ல interview அட்டெண்ட் பண்ணிட்டு இருந்தேன். எங்க அப்பாவும் அம்மாவும் என்னை வர சொல்லி எவ்வளவோ கேட்டாங்க, கடைசி வரைக்கும் முடியாதுனு சொல்லி இங்கே தான் கிடந்தேன். வேலை கிடைச்சா தான் ஊர் பக்கம் போகணும்னு இருக்கேன்.

முதல்முதல்ல Interview தேடி சென்னைக்கு வந்த போது எவ்வளவு உற்சாகமா இருந்தது தெரியுமா… Internet போய் Chetanasforum websitesல வர்ற interview எல்லாத்தையும் பார்த்து பார்த்து எதையுமே மிஸ் பண்ணிடாம எல்லா interviewஐயும் போய் attend பண்ணுவேன். அப்பவெல்லாம் நமக்கான வேலை எங்கேயோ இருக்குனு குருட்டு தனமாய் ஓடிகிட்டே இருந்தேன், ஒரு நாளைக்கு 3 interviewலாம் கூட attend பண்ணியிருக்கேன். அதுவும் எப்படி, ஒரு interview spot தாம்பரம் மெப்ஸ்ல இருக்கும், இன்னொன்னு ஈக்காட்டுத்தாங்கல்ல இருக்கும், ரெண்டத்தையும் attend பண்ணுவேன். ஏன் இப்படி ரொம்ப மெனக்கெட்டு ஓடிகிட்டு இருக்கனு friends கூட கேட்பாங்க, இன்னும் எவ்ளோ நாளைக்கு ஓட போறேன், கொஞ்ச நாள் தானேன்னு நினைச்சுக்குவேன். எனக்கான வாய்ப்பு எங்க வேணும்னாலும் இருக்கலாம்னு நினைச்சுப்பேன். ஆனா எப்ப இந்த சென்னையை புரிஞ்சிக்க ஆரம்பிச்சேனோ அப்பவே நான் இனி ஓடனுமானு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். நான் கடைசியா interview போய் 4 மாசத்துக்கு மேல ஆகுது. எதுவுமே பண்ணாம, எங்கேயுமே போகாம ஒரு நாள் பூரா ரூமுக்குள்ளயே இருக்கேன். என்ன பண்றதுண்ணும் தெரியல.

ஒரு interview போறதுக்கு முன்னாடி எவ்ளோ கனவோட போவேன் தெரியுமா… அந்த வேலை கிடைச்சிடுச்சுனா எப்படி தங்கறது, எங்க தங்கறது, எப்படி வந்து போகறதுனு, முதல் சம்பளத்துல என்ன வாங்கறதுனு பல கனவுகளோட தான் போவேன். ஆனா, நான் போன interviewல பல interview நடக்கவே நடக்காது, ஏன்னா கூட்டம். interviewனு சொன்னவுடனே, என்னை மாதிரியே பல ஆசாமிகள் என்னை மாதிரியே வந்து சேர்ந்திடுறாங்க. எதிர்பார்த்ததை விட அதிகமாய் கூட்டம் வந்திடுச்சு, அதனால வேற ஒரு நாள் வேற ஒரு இடத்துல interview நடக்கும், Sorry for the inconvenienceனு  ஸ்டைலா  சொல்லி அனுப்பிடுவாங்க,

என்னோட first interview லேயே என்னை அப்படி தான் அனுப்பினாங்க. அன்னைக்கு மட்டும் நான் 3 மணி நேரம் வெயில்ல நின்னேன். அவங்க கம்பெனியோட future employee பல பேர் வெளியே நிக்கறதை பத்தியோ, அவங்கல்லாம் ஏமாற்றமா திரும்ப போறத பத்தியோ அவனுக்கு கொஞ்சமும் கவலையில்லை, ஏன்னா அவனுக்கு எங்களை விட்டா வேற ஆள் இருக்கான். நாளைக்கே interview னு internet ல announce பண்ணான்னா, நாளைக்கும் 750 பேர் வந்து வரிசையில நிப்பான்னு அவனுக்கு தெரியும்.

சரி, interview தான் இப்படி இருக்கேன்னு எங்கங்கெல்லாம் industries இருக்குனு விசாரிச்சு 30 resume-களை எடுத்து வச்சுகிட்டு அம்பத்தூர், கிண்டி, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர்னு கிளம்பியிருக்கேன். ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்கியிருக்கேன். அதுலயும் என்னான்னா முக்கால்வாசி செக்யூரிட்டிங்க கேட்டுக்குள்ள ஆளை விட மாட்டானுங்க. வெளியேவே நிக்க வைச்சு vacancy இல்லைப்பானு அனுப்பிருவாங்க. சரி, atleast resume ஆவது உள்ளே கொடுத்துடறேன்னு சொன்னா, நானே கொடுத்துக்குறேன்னு வாங்கி வச்சுக்குவாங்க. ஒரு சில கம்பெனிங்கல்ல மட்டும் தான் உள்ளே விடுவாங்க, அங்கேயும் reception லயே நம்மளை உட்கார வைச்சு, resume-அ வாங்கி ஆளை திருப்பி அனுப்பிடுவாங்க. அந்த மாதிரி மட்டும் ஒரு 40-50 resumes கொடுத்து இருக்கேன். அதுல ஒண்ணுத்துல இருந்து கூட reply வராதது தான் எனக்கு ஆச்சர்யம், ஒரு கம்பெனில கூடவா வேலைக்கு ஆள் தேவைப்படாம போயிடும்.

இந்த ஒன்றரை வருஷத்துல வெறும் எட்டே எட்டு interviewகளை தான் உருப்புடியா attend பண்ணியிருக்கேன். மத்ததெல்லாம் வெத்து வேட்டு. என்னா தான் interview மேல interview ஆ attend பண்ணாலும், எப்படி தான் இந்த interviewகள்ல கடைத்தேறி உள்ளே போறதுங்கற வித்தை மட்டும் இன்னமும் எனக்கு தெரியவேயில்லை. இந்த எட்டு interviewகள்ல, எட்டுத்திலுயுமே நான் written examல select ஆகிட்டேன், ஏன்னா பிறந்ததுல இருந்து எனக்கு அதுக்கு தான் ஸ்கூல்ல training கொடுத்து வச்சுருக்கானுங்க, அதனால written exam ஒன்னும் எனக்கு பெரிய பிரச்சனையா இருந்திடல. ஆனா இந்த group discussionலயும், HR interviewலையும் தான் எனக்கு ஆப்படிச்சு அனுப்பிடறாங்க, ஏன்னாக்க எனக்கு communication skill பத்தலையாம். Define elasticity அப்படினு கேட்டாக்க எனக்கு கோர்வையா சொல்ல தெரியலையாம். நான் எங்க போய் முட்டிக்கிறது,

எங்க கிராமத்துலயே நான் எடுத்த English markஐ இதுக்கு முன்னாடி எவனும் எடுத்தது கிடையாது, அதே மாதிரி அவன் கேள்வி கேட்ட elasticity definitionஐ பரீட்சையில எழுதினதால தான் எனக்கு strength of materialsல எனக்கு 82 மார்க் போட்டு, பாஸ் பண்ணி, degree certificate கொடுத்து அனுப்பியிருக்கான். அங்கேயே என் அறிவை நான் prove பண்ணிட்டு வந்ததுக்கு அப்பறமும், இங்கேயும் வந்து நான் prove பண்ணனும்னு அவன் எதிர்பார்க்கறான்னா, இதுக்கு பின்னாடி என்னா logic இருக்குனு எனக்கு புரியலை.

என்னை interview எடுத்தான் பார்த்தியா, அவன் ஆபீஸ்ல தினமும் English பேசி, English பேசறது அவனுக்கு தண்ணி குடிக்கற மாதிரி ரொம்ப ஈஸியான விஷயமா இருக்கும், ஆனா என் நிலைமை எப்படி இருக்குன்னா, வேற மாநிலத்துக்காரனை யாரையாவது பார்த்தா மட்டும் தான் நான் இங்கிலீஷையே பேசுவேன், மத்தப்படி எனக்கு எல்லா இங்கிலீஷும் ஏட்டுல தான். நான் வந்தது கிராமத்துல இருந்து,  கிராமத்துலையோ, காலேஜ்லையோ நான் யார்கிட்ட இங்கிலீஸ் பேசி பழக… நான் அங்க போய் திக்கி திணறாம இங்கிலீஷ் பேச… அவன் கம்பெனி வேலைக்கு வர்றவங்க அத்தனை பேரும் இங்கிலீஸ் பேசறவங்களா இருக்கணும்னா அவன் londonல போய் interview எடுத்துட்டு வர வேண்டியது தானே… ஏன் இங்க வந்து தமிழ்நாட்டுல எடுத்துட்டு இருக்கான். அவன் சொல்ற படி interview எடுத்தா, எந்த பிள்ளைகள்ளாம் கான்வெண்ட் ஸ்கூல்ல படிச்சிருக்கோ அவங்க மட்டும் தான் செலக்ட் ஆக முடியும். அப்படினா interviewங்கறதே elite people க்கு தானா?

அதே மாதிரி HR roundல கேக்கற கேள்விங்கல்லாம் முக்கால்வாசி, நம்ம எந்த எடத்துல weak-ஆ இருக்கோம்னு தெரிஞ்சிகிட்டு அந்த இடம் பார்த்து அடிக்கறதுக்காகவே கேக்கற மாதிரி இருக்கும். அவன் என்னா எதிர்பார்க்கறான்னா நான் காலேஜ்ல படிச்ச 30 பாடங்களையும் விரல்நுனியில வச்சருக்கனுமாம். இப்ப நான் காலேஜ் முடிச்சே 500 நாளைக்கு மேல ஆகுது, ஆனா நாளைக்கே நான் ஒரு interview போனாலும், நான் second yearல படிச்ச thermodynamics-ல இருந்து questions கேட்பான், அதுக்கு நான் பதில் சொல்லனும், நான் அப்போ பாஸ் பண்ணதெல்லாம் பத்தாது, கேட்கும் போது சொல்லனும், எழுதி காட்ட கூட கூடாது, கடகடன்னும் ஒப்பிச்சுடவும் கூடாது, casual-லா சொல்லனும். அப்ப தான் எனக்கு வேலை கொடுப்பான். இப்ப அவன் கேக்கற கேள்விக்கு நான் அவன் எதிர்பார்க்கற மாதிரியே நான் casual-லாவே பதில் சொல்றேன்னு வை, அவன் அடுத்த கேள்வி எங்க இருந்து தெரியுமா கேட்பான், சம்பந்தமே இல்லாம fluid mechanicsல இருந்து கேட்பான். அதையும் சொல்லனும், இல்லைன்னா வேலை கிடையாது. ஒரு வேளை, அவன் thermodynamics ல இருந்து கேக்கற கேள்விக்கு நான் பதில் தெரியாமா முழிக்குறேன்னு வை, அவன் கேக்கற அடுத்த கேள்வி அதே thermodynamics-ல இருந்தே தான் கேட்பான், fluid mechanicsக்கு வரவே மாட்டான். thermodynamicsலேயே சந்து பொந்துலாம் பூந்து, என்னை மண்ணை கவ்வ வைச்சு, all the best for your next interview-னு சொல்லி அனுப்பிடுவான். நாம மனம் தளராம வரனுமாம். நாம்ம கஷ்டப்பட்டு written clear பண்ணது, group discussion பாஸ் பண்ணியதெல்லாம், காந்தி கணக்கு தான்.

நான் பிறந்ததுல இருந்து, எனக்கு எங்க வாத்தியாருங்க என்ன Training கொடுத்து வச்சுருக்காங்கன்னா, ஒரு விஷயத்தை எப்படி ஒரு இடத்துல மக்கப் பண்ணி, இன்னொரு இடத்துல போய் பேப்பர்ல கொட்டனும்னு தான் train பண்ணியிருக்காங்க. இந்த trainingலாம் எதுக்குனு பார்த்தா, நான் ஒரு நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கனும்னு தான். ஆனா, இங்க வந்து interviewக்கு நின்னா, ஒரு இடத்துல கூட மக்கப் அடிச்சு பேப்பர்ல கொட்டற டெஸ்ட்டே வைக்க காணோம். முதல் ரவுண்டு apps, இரண்டாவது ரவுண்டு group discussion, மூனாவது ரவுண்டு hr interview. இப்படி இருக்கும் போது, எனக்கு மக்கப் அடிக்க ட்ரைனிங் கொடுத்தது எதுக்குங்கற கேள்வி, யார் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி?  நான் கை நிறைய சம்பாதிக்க, நான் 19 வருஷமா எடுத்த training உதவி பண்ணலைனா, இனிமே அந்த trainingக்கு ஆன அவசியம் தான் என்ன? அத்தனையையும் கடாசிட்டு ஒரு interviewல select ஆக என்ன training கொடுக்கனமோ, அதை கொடுக்க ஆரம்பிக்க வேண்டியது தானே! இன்னமும் ஏன் எங்க ஊர் பிள்ளைங்கள பாபர் என்று பிறந்தார், என்று இறந்தார்னுலாம் ஞாபகம் வைச்சுக்க சொல்லிட்டுருக்கானுங்க… காமராஜர் காலத்துல எப்படி பாடத்தை சொல்லி கொடுத்தானோ, இப்பயும் அதே மாதிரி தான் சொல்லி கொடுக்காறான், அந்த காலத்துல தான் எல்லோரும் வாத்தியார் வேலைக்கு போறதுக்காக படிச்சாங்க, இப்பவும் வாத்தியார் வேலைக்கு போறதுக்கே சொல்லி கொடுத்தா அது என்ன அர்த்தம், வேற எந்த வேலைக்கும் யாரும் போக மாட்டாங்களா என்ன!

காலேஜ் முடிச்சு வெளியே வரும் போது, உண்மையா நான் என்னை ஒரு திறமைசாலியா உணர்ந்தேன், ஆனா நாளாக நாளாக இங்க நான் அலையறதை பார்த்தா எனக்கு என் மேலேயும், என் திறமை மேலயும் ஒரு சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சு. அந்த சந்தேகம் வலுக்க வலுக்க எதுக்கு டா இந்த இன்ட்ரிவ்யுக்குலாம் போய்க்கிட்டுன்னு விட்டு தள்ளிடறேன்.

FISனு ஒரு கம்பெனி, தேனாம்பேட்டைல இருக்கு, அங்க நடந்த interviewல நான் writtenல நல்லா எழுதி அடுத்த round செலக்ட் ஆகிட்டேன். அடுத்த ரவுண்டு group discussion, ரொம்ப நல்லா பேசினேன்னு சொல்ல முடியாது, ஏதோ பேசினேன். அவனும் நீ எங்களுக்கு லாயக்கு இல்லை வெளியே போடான்னு சொல்லிட்டான், நானும் வந்திட்டேன். ஆனா அந்த group discussion ரவுண்ட்ல எங்களோட ஒன்னுமே பேசாம சும்மா இருந்தவனை selected listல announce பண்ணாங்க… அது எப்படினு, எனக்கு அப்போதைக்கு புரியாம இருந்தது, பின்னாடி தான் அவன் consultancy மூலமா வந்து இருப்பான்னு புரிஞ்சது.

Syntel company interview group discussionல, is hero-inn essential for a movie? னு ஒரு டாபிக் கொடுத்தாங்க. சுத்தியிருக்கற 10 பேர்ல என் கெட்ட நேரத்துக்கு, நான் மட்டும் தேவையில்லைனு சொல்ல, மீதி 9 பேரும் கண்டிப்பா தேவைனு சொன்னாங்க. அந்த 9 பேரும் என் கிட்ட சண்டைக்கே வந்துட்டாங்க, நானும் நான் சொன்னதுல நியாயம் இருக்குனு மாறி மாறி எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியதாய் ஆயிடுச்சு, ஆனா அவங்க அத்தனை பேரும் டூமாங்கோழிங்க, அவங்க யாராலும் என் கிட்ட மல்லுகட்ட முடியலை, நான் சொல்ற பதில்ல அப்படியே off ஆகி தான் போனாங்க. நான் example சொன்ன ரொம்ப famous ஆன பல Hollywood படங்களை அவங்க யாரும் கேள்வி பட்டது கூட இல்லையாம், ஆனா நுனி நாக்குல இங்கிலீஷ் பேசுதுங்க. நானும் அவங்களுக்கு சளைக்காம இங்கிலீஷ் பேசி saw, bridge to the river kwai, departed, shutter island, kikijaro மாதிரியான படங்கள்ல கதை எப்படி ஆளுமை செலுத்துதுனு சொன்னேன். அவங்க அந்த படத்தையெல்லாம் பார்த்து இருக்காததால kikijaro படத்தோட கதையை மட்டும் சுருக்கமா இங்கிலீஷ்ல சொன்னேன். அதுக்கப்பறமா எவனாலும் பேச முடியல, ஒரே ஒரு north Indian பொண்ணு மட்டும், “இதெல்லாம் ஒரு கதையா? இத்தனை படத்தை பார்த்த நீங்க Kuch kuch hotha hai பார்த்து இருந்தீங்கனா, படத்துல hero-inn எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சியிருந்திருப்பீங்க” சொன்னா, அவ அப்படி சொன்ன உடனே சுத்தியிருந்த அத்தனை பேரும், yes, I agree with her…. Yes, I agree with her னு  சொல்லிட்டுனாங்க. நான் உடனே டென்ஷனாகி “ஆமா, நான் இன்னும் kuch kuch hotha hai பார்த்தது இல்லை தான், ஆனா டைட்டானிக் பார்த்து இருக்கேன், அதுலயும் hero-inn ரொம்ப முக்கியமானவங்க தான், ஆனா அந்த மொத்த படமும் இந்த உலகத்துக்கு சொல்ற விஷயம்னு பார்த்தா ஒண்ணுமேயில்லை, ஒரு கப்பல் மூழ்கிய வரலாறுனு வேணும்னா வெச்சுக்கலாம், ஆனா கிகிஜரோவை அப்படி சொல்ல முடியாது, பொறுப்பில்லாத ஒரு கலவி எப்படி ஒரு பிஞ்சு மனசை கசக்கி எறியுதுனு ரொம்ப முக்கியமான ஒரு subjectஐ சொல்றாங்க. அதுவுமில்லாம் இங்க வர்ற லவ் ஸ்டோரிஸ் தான் நம்மளோட கலாச்சார சீரழிவுக்கு காரணம்னு நான் சொல்வேன். லவ் ஸ்டோரிஸ்லாம் என்ன சொல்ல வருதுனு பார்த்தா, லவ் பண்ணாதவன்லாம் Heroவே இல்லை, அதனால எல்லோரும் லவ் பண்ணுங்கனு நம்ம கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு செய்தியை தான் லவ் ஸ்டோரிஸ் தொடர்ந்து மறைமுகமா சொல்லிகிட்டு இருக்கு…” அப்படினு சொன்னவுடனே, அந்த இந்திக்கார பொண்ணும் off ஆய்ட்டா. அப்பறம் கடைசியா யார்யார்லாம் next round செலக்ட் ஆகியிருக்காங்கனு பார்த்தா, என்னை தவிர என் கூட சண்டை போட்டவன்லாம் செலக்ட் ஆகிட்டான். நான் அந்த interviewerஐயே போய் நேர்ல பார்த்து, ஏன் என்னை செலக்ட் பண்ணலைனு கேட்டேன், அதுக்கு அவன் நீங்க teamworkல lag ஆகறீங்கனு சொல்லிட்டான். என்னால அதை ஜீரனிக்கவே முடியலை, அவ்வளவு திறமை காட்டியும் செலக்ட் ஆகாதது நினைச்சு நினைச்சு…. சரி அதை விடு….

சரி நம்மளுக்கு தான் இங்கிலீஷ் ஓரளவுக்கு வருதேன்னு நம்பி, HCL bpo கம்பெனிக்கு ஏறி இறங்கினேன், அங்க writtenலாம் ஒண்ணும் கிடையாது, straightஆ hr தான், அவன் எடுத்தவுடனே என் பேரை கூட கேட்காம ,Tell about your first day college experienceனு சொன்னான், நான் எண்ணி ஒரு 6 வார்த்தை தான் சொல்லியிருப்பேன். அவன் உடனே, See Mr.Anbu , as HCL is an international company, you need more fluency and flow in English, better luck next time னு சொல்லி அனுப்பிட்டான். அந்த பொன்னான வார்த்தைகளை அவன்கிட்ட இருந்து கேட்கறதுக்காக மட்டுமே ரிசப்ஷன்ல ரெண்டே கால் மணி நேரம் நின்னுகிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் நான் எந்த bpo interview ஐயும் attend பண்ணலை.

இதெல்லாம் கூட பொறுத்துக்கலாம், ஆனா இந்த சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, பக்கத்து வீட்டுக்காரங்க அக்கப்போர் தான் தாங்க முடியாதது. பார்க்கறவன்லாம் எனக்கு mail அனுப்பு, உன் resume 5 copy எனக்கு கொடு, எனக்கு தெரிஞ்சவங்க TVSல இருக்காங்க, caterpillarல இருக்காங்க, சவுதி அரேபியாவுல இருக்காங்கனு ஒரே ராவடி. நானும் கழுதைங்க இந்தாடானு கொடுத்து தொலைச்சுருவேன்னு வை, எப்ப போன் பண்ணி சார், வேலை என்ன ஆச்சுனு கேட்டாலும், இந்தா 10 நாள்ல interview தேதி announce பண்ணிடுவாங்கப்பா, நீ போக வேண்டியது தான், இன்ட்ரிவியு அட்டெண்ட் பண்ண வேண்டியது தான், அன்னைக்கே offer letter கொடுத்துருவாங்க, வாங்கிட்டு வந்துட்டே இருக்கலாம். 5 மாசம் கழிச்சு போன் பண்ணாலும், அந்தாளு அதையே தான் சொல்லுவான். சரி, இனி இவன் வேலைக்காக மாட்டான்னு போன் பண்றதை நிறுத்திட்டோம்னு வை, உடனே திடீர்னு ஒரு 20 நாள் கழிச்சு போன் அடிச்சு, ஏம்பா, 2 நாள் முன்னாடி தான் interview announce பண்ணி ஆள் எடுத்தாங்களாம், நீ போன் பண்ணிட்டு தானே இருந்த, நடுவுல ஏன் போன் பண்றதை நிறுத்திட்ட, நீ போன் பண்ணியிருந்தன்னா எனக்கு ஞாபகம் வந்து அதை உனக்கு வாங்கி கொடுத்து இருப்பேன், அப்படி இப்பிடினு அரை மணி நேரத்துக்கு அறுவையை போட்டு தாளிச்சு எடுத்து, உனக்கு வேலை வேணும்னா நீ தான் அக்கறையா follow பண்ணிட்டு இருக்கனும், நான் work busyல மறக்க தான் செய்வேன்னு தலையில கொட்டாத குறையா சொல்லி முடிப்பான். இந்த இடத்துல work busyனு சொல்றான் பார்த்தியா, அதை கொஞ்சம் கவனிச்சா, அவனுக்கு வேலை இருக்காம், நமக்கு வேலை இல்லையாம், அதை தான் துரை குத்தி காட்டுது.

உங்க எல்லாருக்கும் ஒண்ணு தெரியுமா, நான் இது வரைக்கும் 82 பேருக்கு என் resumeஐ forward பண்ணி இருக்கேன். ஆனா இது வரைக்கும் 4 வேலைக்கு தான் போயிருக்கேன். அதுவும் எல்லாமே நானே interview attend பண்ணி போனது. எனக்கு மட்டும் வேலை கிடைச்சுடுச்சுனா அந்த 82 பேர்க்கும் போன் பண்ணி, எனக்கு உங்க தயவு இல்லாமலே வேலை கிடைச்சிடுச்சுனு சொல்லனும்னு ஆசை, ஆனா எங்க? வேலை கிடைச்சா தானே…

இந்த வியாபாரிங்கல்லாம் அரிசியை பதுக்கி கொஞ்ச நாள் கழிச்சு அதிக விலைக்கு விற்பாங்க, தெரியுமா , அந்த மாதிரி பண்றவங்க தான் இந்த consultancy காரங்க… அவனுங்க கிட்டயும் நான் மாறடிச்சு இருக்கேன்.

நியாயமா இவங்க வேலை என்னான்னா, கம்பெனியில வேலை செய்ய ஆளே கிடைக்காதப்போ, இவங்க ஆள் பிடிச்சு கொடுக்கறது தான், இவங்க வேலை, ஆனா இந்த பொறுக்கி பசங்க என்ன பண்றாங்கன்னா, எங்க வேலைக்குன்டான vacancy அதிகமா இருக்கோ, அந்த vacancyகளை பிடிச்சு வைச்சு வெளியாளுங்களுக்கு 2 லட்சம், 3 லட்சம்னு வித்துர்றது. கிட்டதட்ட தியேட்டர்ல ப்ளாக் டிக்கெட் விற்கறவங்களுக்கும் இவங்களுக்கும் ஒன்னும் அதிக வித்தியாசமில்லை.

இதுல சில கன்சல்டன்சி எப்படின்னா அவனுங்க ஒரு இடத்துல ஆபீஸ் போட்டு உட்கார்ந்து இருப்பாங்க, நாம போய் நான் இன்னது படிச்சு இருக்கேன், எங்க வேலை இருக்கு அப்படினு கேட்கனும். கேட்டோம்னா, அவன் ஒரு இடத்தை சொல்வான், நாம அங்க போய் அவன் கிட்ட இண்ட்ரிவ்யூ அட்டெண்ட் பண்ணி செலக்ட் ஆனோம்னா, அவன்கிட்ட நம்மளோட ஒரு மாச சம்பளத்தை கொடுத்துட்டு வேலைக்கு சேர்ந்துட வேண்டியது தான். வெறும் கை காட்டி விடறதுக்கு நாம அவங்களுக்கு 10000 ரூபாயை தண்டமா கொடுக்கணும். இது எவ்ளோவோ பரவாயில்லைனு தான் சொல்வேன்.

என்னை ஒருத்தன் காஞ்சிபுரம் பக்கத்துல இருக்கிற செய்யாறு அப்படிங்கிற ஊர்ல LOTUS Industriesனு ஒரு ஷூ கம்பெனியில backdoorல வேலைக்கு சேர்த்தி விடறதாவும், அதுக்கு ஒரு லட்சம் ஆகும்னும் சொன்னான். நானும் தொலையுது சரின்னுட்டேன். அவன் ஆபீஸ் இருக்கறது க்ரோம்பேட்டைல, அங்க ஒரு நாள் 8.30 மணிக்கு வர சொன்னான். கொஞ்ச நேரம் receptionல உட்காருங்க நம்ம கார்லேயே போயிடலாம்னு சொன்னான். நானும் என்னோட வந்திருந்த இன்னோரு பையனும் காத்திருக்க ஆரம்பிச்சோம். மணி 10 ஆச்சு, 11 ஆச்சு, 12 ஆச்சு, 1 மணி ஆனதுக்கு அப்பறமும் எங்களை கூட்டிட்டு போகாம வெயிட்டிங்க்லேயே இருக்க வைச்சான். நடு நடுவுல என்ன சார் ஆச்சு, எப்ப சார் போவோம்னு கேட்கும் போதெல்லாம், இதோ போயிடலாம் பா, 5 நிமிஷம், ஒரு சின்ன வேலை இருக்குனு சொல்லி, அவன் computerயே உத்து உத்து பார்த்துகிட்டு இருந்தான். நடு நடுவுல யார்கிட்டயோ போன்ல பேசிகிட்டு இருந்தான். கடைசியா 1 மணிக்கு, அந்த கம்பெனி HR லைன்ல கிடைக்கல, அதான் வெயிட் பண்ண வைக்க வேண்டியதாய் போயிடுச்சு, நீங்க இந்த address போய், இவரை பாருங்கனு, ஒரு address ஐ கைல கொடுத்தான். சார், நீங்க வரலையானு கேட்டா, வேலை இருக்குனு சொல்லிட்டான். மணி அப்பவே ஒன்றரை, நானும் அந்த இன்னோரு பையனும் சாப்பிட்டு முடிச்சு, காஞ்சிபுரம் பஸ் புடிச்சு போய், அங்க இருந்து செய்யாறு போனா மணி 05.30 ஆயிடுச்சு. போனா அவன் சொன்ன HR கிளம்பியே போயிட்டானாம். அவனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னா, அப்ப நாளைக்கு வந்திடுங்கனு கூலா சொல்லிட்டான். வீட்டுக்கு திரும்ப வர்ற 11.45 ஆயிடுச்சு, இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, அவன் அலட்சியத்தால நாங்க அலையறது எவ்ளோன்னு அவன் தெரிஞ்சிக்க கூட விரும்பறது இல்லை.

சரினு அடுத்த நாள் கிளம்பினோம். இந்த முறை எங்களை பணத்தோட வர சொன்னான், அதனாலயோ என்னமோ, அவன் அவனோட கார்லேயே எங்களை கூட்டிட்டு போனான். என் கூட வந்தவன் அவனோட அப்பாவை துணைக்கு கூட்டிட்டு வந்திருந்தான். அந்த கன்சல்டன்சிக்காரன் கம்பெனிக்கு ½ கிலோ மீட்ட்ர் முன்னாடியே காரை நிறுத்திட்டு, ஒரு ஆளை போன் போட்டு வர சொன்னான். அவனும் வந்தான். அவன் நல்லா வாட்ட சாட்டமா, கன்னங் கரேல்னு இருந்தான், வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையெல்லாம் போட்டு ஏதோ ஏரியா கவுன்சிலர் மாதிரி இருந்தான். பார்த்தா, அவன் உண்மையிலே ஏரியா கவுன்சிலர் தானாம். அவன் எங்களோட உள்ளே வந்து கார்லேயே உட்கார்ந்து, ஒரு துண்டு சீட்டு கையில எடுத்து வைச்சுகிட்டு, எங்க ரெண்டு பேர் பேரையும் கேட்டு அதில எழுதி வைச்சுகிட்டான். எழுதி முடிச்சதும், சரி பணத்தை கொடுங்க, நான் உள்ளே போய் offer letter வாங்கிட்டு வர்றேன்னு சொல்றான். எனக்கும் , என் கூட வந்த பையனுக்கும் திக்னு ஆயிடுச்சு. என்ன தான் backdoor interviewஆ இருந்தாலும் , இப்படி interview கூட வைக்காம யாரோ ஒரு ஆள் கிட்ட பணம் கொடுக்க முடியாதுனு மறுத்துட்டோம். அந்த கன்சல்டன்சிகாரனும், கவுன்சிலரும் எங்களை ரொம்ப நேரம் கன்வீன்ஸ் பண்ணாங்க. சரின்னு நாங்களும் ஒரு கட்டத்துல ஒத்துகிட்டு, பணத்தை கொடுத்தோம், அப்போதைக்கு வேலை கிடைச்சா போதும்னு தான் இருந்தது. அவன் போய்ட்டு, ஒரு மணி நேரம் கழிச்சு ஒருத்தரை கூட்டிட்டு வந்தான். கூட வந்தது HR னு அறிமுகப்படுத்தி வைச்சாங்க, அவரும் நல்லா பேசினாரு. அவரே அவர் கையால offer letterஅ கொடுத்தாரு, trainee ஆ appoint பண்ணி 8000 ரூபாய் சம்பளம்னு போட்டு இருந்தது.

ஒரு வாரத்துலேயே வேலைக்கு சேர்ந்துட்டோம், போனோம், வந்தோம், எல்லாத்தையும் சுத்தி பார்த்தோம், ஒரு மாசம் ஆயிடுச்சு. சம்பளமே கொடுக்காம வெச்சுருந்தாங்க, நாங்களும் எங்களை recruit பண்ண HR கிட்ட போய் சொன்னோம். ஒரு வாரம் எதுவுமே சொல்லாம இருந்தார். ஒரு வாரம் கழிச்சு, manager கூப்பிட்டு, எங்க கிட்ட போதுமான employees இருக்காங்க, அதுவுமில்லாம நீங்க அவ்ளோ skilled ஆவும் இல்லை, அதனால உங்களை terminate பண்றோம்னு கழட்டி விட்டுட்டாங்க. அப்ப எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்ததுங்கறதுல்லாம் இங்க தேவை இல்லாதது. விஷயம் என்னான்னா, அந்த ஒரு லட்சம் பணத்தை இன்னமும் என்னால திரும்ப வாங்க முடியலை, 3 பேரும் ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்தி கை காட்றாங்களே தவிர, எங்களுக்கு யாருமே உதவி செய்ய முன்னால வரலை…. கன்சல்டன்சிக்காரனை கேட்டா, Hr கிட்ட இருக்குன்னு சொல்றான், HRஅ கேட்டா கவுன்சிலர் கிட்ட திரும்ப கொடுத்துட்டேன்னு சொல்றான், கவுன்சிலரை கேட்டா எனக்கு எதுவுமே தெரியாதுங்கறான். சிந்துபாத் கதை கணக்கா நானும் 3 மாசமா அந்த ஒரு லட்சம் பணத்தை வாங்க ஓடிட்டு தான் இருக்கேன், ஒரு லட்சம் பணம் நம்ம கையை விட்டு போனது கூட பரவாயில்லை, நம்மளை ஒருத்தன் நல்லா ஏமாத்திட்டானேங்கறது தான் மனசுல நெருப்பா கொதிச்சுகிட்டு இருக்கு.

இதெல்லாம் கூட பரவாயில்லைனு சொல்ற மாதிரி இன்னொருத்தன் எங்களை ஏமாத்தினான் பாரு, என்னால அதை தான் தாங்க முடியலை……”



                                                (தொடரும்….)