Monday 28 April 2014

Nimirndhu nil

நிமிர்ந்து நில் ஓர் சிறப்பான படமாக வந்திருக்க கூடிய ஒன்று. சிவாஜி படத்திற்கும், நிமிர்ந்து நில்  படத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை என்று தான் நினைக்கிறேன். சிவாஜி படம் ஏன் மக்களை முகம் சுளிக்க வைத்தது என்று மேலோட்டமாக ஆராய்ந்து இருந்தாலே, நிமிர்ந்து நில் படம் உண்மையாகவே நிமிர்ந்து நின்றிருக்கும்.

இரண்டு படத்திலும் நாயகன் ஆனவன், ஒரு சராசரி குடிமகனை பிரதிபலிப்பவனாக இருக்கிறான். இன்றைய காலக்கட்டத்தில் சராசரி மக்கள் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளும் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டு, ஒரு க்ளாஸிக் சினிமாவிற்கான எதிர்பார்ப்பை தன்னிச்சையாகவே வரவழைக்கிறது. மிக முக்கியமாக படம் பார்க்கும் மக்கள், தம்மை மிக எளிதாக நாயகனுடன் பொருத்தி பார்க்கிறார்கள்.

முதல் பாதியின் முடிவில், நாயகன் சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாம் சிறப்பாக தொகுத்து வழங்கி விட்டு, பிற்பாதியில் அத்தனை பிரச்சனைகளையும் நாயகன் ஜஸ்ட் லைக் தட் தனது ஹீரோயிச சாயம் கொண்டு சமாளிப்பது மக்களால் ஏற்று கொள்ள முடியாமல் போகிறது. அங்கேயே இந்த படம் தனது தனித்துவத்தை இழந்து, இது ஒரு ஃபேக் மூவி என்று மக்களுக்கு புரிந்து விடுகிறது.

அது வரை, தம்மை நாயகனுடன் பொருத்தி பார்த்து, பிரச்ச்னைகளுக்கு என்ன தான் தீர்வு என்று மக்கள் ஆவலுடன் திரையை நோக்குகையில், ஒரு சராசரி மனிதனால் சாத்தியமே இல்லாத ஒன்றை சொல்லி காதில் பூ சுத்துகையில் தான் கடுப்பாகி போகிறார்கள்.  ஒன்னுத்துக்கும் உதவாத கமர்ஷியல் படத்தை ஏதோ புரட்சி படம் போல் பில்ட் அப் கொடுத்தது தான் படத்திற்கு எதிராக வேலை செய்து ஓரமாக உட்கார வைத்துவிட்டது.

ஏதோ சமுதாய விழிப்புணர்விற்காகவும்,மக்கள் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட படம் போல் ஆங்காங்கே பாசாங்கு செய்து விட்டு, கடைசியில் எல்லாமே வியாபார யுக்தி என்று தெரிய வரும் போது, நமக்கே நம் மீது கடுப்பாக வந்து தொலைக்கிறது. விஷயம் என்னவென்றால், நம் நிகழ்கால பிரச்சனைகளை நல்லபடியாக பதிவு செய்த இவர்கள், திரைக்கதையை ஓட்ட தெரியாமல் எங்கோ புளிய மரத்தில் விட்டு விட்டார்கள். பதிவு செய்ததோடு நிறுத்தி தொலைத்திருக்கலாம், ஆர்ட் மூவி அந்தஸ்தாவது கிடைத்திருக்கும். ஆனால் சில்லறை புரளாது, அதற்காக டபுள் ரோல், குத்து பாட்டு, ஆக்‌ஷன் சீக்குவன்ஸ், அது இது என்று அலைக்கழித்து விட்டனர்.

எல்லாம் முடித்து, உங்களை நீங்களே செதுக்கி கொள்ள வேண்டும் என்று மெஸேஜ் வேறு... வடிவேலு ஒரு படத்தில் கடவுளை காட்டுகிறேன் என்று நூறு நூறு ரூபாயை மக்களிடம் வசூலித்து, கடைசியில் எவன் எவன் பொண்டாட்டி பத்தினியோ அவனுக்கு மட்டும்தான் கடவுள் தெரியும் என்று சொல்ல, எல்லோரும் இல்லாத கடவுளை தரிசித்து வருவார்கள்.

அதுபோல், இந்த மெஸேஜ் ஒரு சிறப்பான மெஸேஜாக இருந்தாலும், பிரச்சனைக்கான தீர்வை சொல்லவில்லை. இருந்தாலும் மெஸேஜ் சிறப்பாக இருக்கிறதே என்று கேள்வி ஏதும் கேட்காமல் வர வேண்டிய நிலைக்கு ஆளாகின்றோம்.

நான் கேட்கிறேன் , ஜெயம் ரவி இந்த படத்தில் அப்பழுக்கில்லாத, கள்ளம் அறியா புனித ஆத்மா... அவர் ஏன் தன்னை தானே திருத்தி கொள்ள வேண்டி, தன்னை தானே சுத்தியால் அடித்து கொள்கிறார். ஒன்றும் புரியவில்லை.

தற்போது வந்து கொண்டிருக்கும் குப்பை தமிழ் சினிமாக்களில், இது ஓரளவுக்கு தேறுகிறது. அட்லீஸ்ட் எழுந்து ஓடும் அளவிற்காவது இல்லாமல் இருக்கிறது. அதுவரை நிம்மதி.



No comments:

Post a Comment