Thursday 3 October 2013

ராஜா ராணி - பேஷ் பேஷ் காப்பி பிரமாதம்




சமீபகாலமாகவே மேட்டூரில் எந்த நல்ல திரைப்படங்களையும் திரையிடாத காரணத்தாலும், அப்படியே திரையிட்டாலும் கூட்டம் வராத காரணத்தை காட்டி, அதை அதற்கடுத்த நாளே தூக்கும் அநியாயங்கள் நடந்து கொண்டிருப்பதாலும்…. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முதல் நாளே திரையரங்குகளை முற்றுகை இடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனாலே ராஜா ராணியையும், ஓநாயும் ஆட்டுக்குட்டியையும் முதல் நாளே பார்த்து விட வேண்டி காத்திருந்தேன். என்ன ஓர் ஏமாற்றம்ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம் மேட்டூரில் வெளியாகவே இல்லை. மேட்டூரில் இருக்கும் இரண்டு திரையரங்குகளிலுமே ராஜா ராணி மட்டுமே திரைக்கு வந்துள்ளது. சரி இதையாவது மாலை போய் பார்த்து கொள்ளலாமே என்று தான் இருந்தேன், ஆனால் காலைக்காட்சி பார்த்து விட்டு என்குல சிங்கங்கள் எல்லாம் ராஜா ராணி சூர மொக்கை என ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பெருமினர். அய்யகோ, இந்த படத்தையும் பார்க்க முடியாதோ என்று, ஆபிஸில் இரண்டு நிமஷத்துல வந்துடறேன் சார்னு, நானும் நண்பனும் திரையரங்கிற்கு விரைந்தோம். நல்ல வேளை மதிய காட்சிக்கு ராஜா ராணி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஒருவேளை இப்போது வராமல் போயிருந்தால், இந்த படத்தை மாலையே எடுத்து விட்டுபுல்லுக்கட்டு முத்தம்மாபோட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என எண்ணி ஆசுவாசப்படுத்தி கொண்டோம்.

உள்ளே போனால் மூன்று பேர் மட்டுமே இருந்தனர். எங்கே ஷோவை கேன்சல் செய்து, திருப்பி அனுப்பி விடுவார்களோ என்று உயிரை கையில் பிடித்து கொண்டு காத்து கொண்டிருந்தோம். நல்ல வேளையாக மெல்ல மெல்ல கூட்டம் சேர்ந்து 20 பேர் தேறினர். படம் ஆரம்பித்து கோச்சடையான், முகேஷ் என எல்லா கண்டத்தையும் தாண்டி, ராஜா ராணி டைட்டிலை பார்க்கும் வரைக்கும் நிம்மதியே இல்லை. அதன் பின் தான் முன் சீட்டில் காலை போட்டு, ஹாயாக சரிந்து படுத்து படம் பார்க்க ஆரம்பித்தோம்.

படத்தின் டைட்டில் கார்டை வேடிக்கை பார்த்து கொண்டே வந்ததில், ஜீ.வி.பிரகாஷ்குமார் பெய்ரை பார்த்ததும் தான் எங்கள் இருவருக்குமே உரைத்தது. பஞ்சு எடுத்து வர மறந்து விட்டோம். ஏற்கனவே பரதேசி, தலைவா படம் பிண்ணனி இசை எல்லாம் கேட்டு, காதில் இரத்தம் வந்து அவதிப்பட்ட போதே, அடுத்த படத்துக்கு பஞ்சு எடுத்து வைத்து செல்வதாய் திட்டம் வைத்திருந்தோம். ஆனால் வரும் அவசரத்தில் மறந்து விட்டோம்.

படம் ஆரம்பத்திதில் இருந்து ஜி.வி.பிரகாஷின் பிண்ணனி இசை, அது பாட்டுக்கு ஒரு ஓரமாக சத்தமாக ஒலித்து கொண்டு இருந்த்து. படம் ஆரம்பித்ததில் இருந்து யாருமே விசிலோ, கைத்தட்டலோ, சத்தமோ எதுவுமே போடவில்லை. ஆர்யாவை காட்டினார்கள், யாரும் விசிலடிக்கவில்லை, நயன்தாராவை காட்டினார்கள் அதற்கும் யாரும் விசிலடிக்கவில்லை, நஸ்ரியா, சத்யராஜ், முருகதாஸ், அட்லி என எத்தனையோ பேரை டைட்டில் கார்டில் காட்டிய போதும் எல்லோரும் மயான அமைதி காத்தனர். ஜி.வி.பிரகாஷின் இசை மட்டுமே திரையரங்கு முழுக்க வியாபித்திருந்தது. என்ன விஷயமென்று, பார்வையாளர்களை திரும்பி பார்த்தால் எல்லாரும் இரண்டு கைகளாலும் காதை பொத்தினப்படி இருந்தார்கள். ஐயோ பாவம் என்று நினைத்து கொண்டேன். இரண்டு கைகளையும் வைத்து காதை பொத்தி கொண்டிருந்தால், எப்படி விசிலடிப்பது, எப்படி கை தட்டுவது

இந்த அழகில் பாடல்களையும் அதகளம் பண்ணியிருக்கிறார் ஜி.வி. வழக்கமாக க்ளைமாக்ஸிற்கு சற்று முன்னால் வந்து, “கவலைப்படாதே சகோதராஎங்கமா கருமாரி காத்து இருப்பாகாதலை தான் சேர்த்து வைப்பா…” என பாடும் கானா பாலா, படத்தின் ஆரம்பத்திலே வந்து தன் சீரிய வேலையை செவ்வனே செய்து விட்டு, கிளம்பி விட்டார். இத்தோடு கானா பாலா சகாப்தம் முடிந்தது என்றே நினைக்கிறேன். முன்பு கானா உலகநாதன், இப்போது கானா பாலா…. காலம் யாரையும் விட்டு வைப்பதில்லை.

நயன்தாராவிற்கும் ஆர்யாவிற்கும் விருப்பமே இல்லாமல் திருமணம் நடக்கிறது. நயன்தாராவின் அப்பா சத்யராஜ் சொல்லி விட்டாரே என்று நயன்தாராவும், ஆர்யாவின் நண்பன் சந்தானம் சொல்லி விட்டாரே என்று ஆர்யாவும் இழு இழு என இழுத்து ஒரு திருமணத்தை செய்து கொள்கின்றனர். கல்யாணம் ஆனதில் இருந்து சண்டையும் சச்சரவுமாகவே இருக்கின்றனர். ஒரு நாள் திடீரென நயன்தாராவிற்கு வலிப்பு வர, அவரை ஆர்யா ஆம்புலன்ஸை கூப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறார். அங்கே வைத்து ஆர்யா நயன்தாராவின் கதையை விசாரிக்கிறார். அம்மணியும் ஒரு ஸ்டோரியை ஓப்பன் செய்கிறார்

Airvoice கம்பெனியில் (கம்பெனி பேரை எங்கயோ கேட்ட மாதிரி இருக்குல்ல, அதாங்க சஞ்சய் ராமசாமியோட கம்பெனி…. முருகதாஸ் சார் தான் ப்ரோட்யூசர் தான் ப்ரொட்யூஸர், அவருக்காக இதை கூட பண்ணலைன்னா எப்படிங்க….) கஸ்டமெர் கேர் அதிகாரியாக வேலை பார்க்கும் ஜெய்க்கு, கம்பெனி நிமித்தமாக நயன்தாராவிடம் புகார் வருகிறது. நயன்தாரா கம்பெனி மீது உள்ள கோபத்தில் ஜெய்யை கன்னாபின்னாவென திட்ட, ஜெய்யும் நயன்தாரா நம்பரை கம்பெனி database—ல் இருந்து எடுத்து, அவரும் கன்னாபின்னாவென திட்டுகிறார். மோதலில் இருந்து காதல் ஆகிவிடுகிறது. என்ன டா இப்படி, ஒரே வார்த்தையில் மோதலில் இருந்து காதல் ஆகி விடுகிறது என்று சொல்கிறேனே, என்று தப்பாக எண்ண வேண்டாம். அங்கனயும் அந்த கருமாந்திரத்தை ஒரே நிமிஷத்தில் தான் காட்டினார்கள். அதனால் தவறு என் மீது அல்லஅதன் பின் இருவரும் தேவாலயத்தில் வைத்து மோதிரத்தை மாற்றி கொள்கின்றனர். கல்யாணம் பேச முயற்சிக்கின்றனர். ஆனால் ஜெய்யின் அப்பா, ஓர் கலாச்சார காவலாளி என்பதால் மாப்பிளை கொடுக்க மறுத்து விடுகிறார். அதன்பின் ரெஜிஸ்டர் ஆபிஸில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கிறார்கள். ஆனால் அடுத்த நாள் காலையில் நயன்தாரா மட்டுமே ஆபிஸில் ஆஜராகிறார், ஜெய்கட்அடித்து விட்டு அமெரிக்கா கிளம்பி விடுகிறார். எதற்கு போகிறார் என கேட்கிறீர்களாபடம் பார்த்து வந்து விட்ட எங்களுக்கே அது தெரியவில்லை. ஸோ, வெரி ஸாரிஅமெரிக்கா போன ஜெய், தற்கொலை செய்து கொள்கிறார் என செய்தி வர, நயன்தாரா மயங்கி விழ, முதல் கட்ட ஃப்ளாஸ் பேக் முடிவிற்கு வருகிறது. மனசு வந்து இடைவேளை விடுகிறார்கள். நண்பன் பக்கம் திரும்பினால், “படம் சூப்பர்ல…?” என கண்கள் மின்ன கேட்டான்.

எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது, நான் மேலே ஒரே பத்தியில் சொன்ன விஷயத்தை தான் ஒன்றரை மணி நேரம் இழுத்து அடித்து கொண்டிருந்தார்கள். இதை எப்படி தான் சூப்பர் என்று சொல்கிறானோ என்ற சந்தேகத்தில், டேய் இதெல்லாம் ஒரு படமா டா, இது மாதிரி தான் ஏகப்பட்ட படம் வந்துடுச்சே டா, நீ வேணா பாரு, ஜெய் செத்திருக்க மாட்டான், அவன் அவனோட அப்பனுக்கு பயந்து ஓடியிருப்பான், செகன்ட் ஆஃப்ல ஆர்யா நஸ்ரியாவை லவ் பண்ணுவான், அந்த பொண்னை யாருக்காச்சும் கட்டி வெச்சிருவாங்க, இல்லைனா செத்துரும்நீ வேணா பாருஎன்றேன். உனக்கெல்லாம் சினிமாவை பத்தி என்னா டா தெரியும் என திட்டி திர்த்தான்.

அவன் கெட்ட நேரம், நான் என்ன சொன்னேனோ அதே எழவு தான் நடந்தது. அவனை பார்க்கவே பாவமாக இருந்தது. அவனும் அவன் பங்கிற்கு இட்லியைசாரி அட்லியை திட்டி தீர்த்தான்.

நானும் பல வருடங்களாக ஹாலிவுட் சினிமாக்களை கவனித்து வருகிறேன். படத்தில் ஒருவருடைய நடிப்பு கூட எதார்த்தத்தை மீறி இருக்காது. அது மட்டுமில்லாமல், ஒருவரது நடிப்பு இன்னொருவரின் நடிப்புடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கெல்லாம் இல்லாமல் கச்சிதமாக இருக்கும். ஹீரோ முதல் டாக்ஸி ட்ரைவர் வரை அவரவர் அவரது பங்கை, சம அளவில் அளித்திருப்பார்கள். ஆனால் 100 ஆண்டுகளை கடந்த இந்திய சினிமாக்கள், இன்னமும் கடைநிலை ரசிகன் கூட நடிகர்களின் நடிப்பை நொட்டை சொல்லும் அளவிற்கே இருக்கிறது.

தம்பி இட்லி…. ச்சீ.. தம்பி அட்லிஎங்கேயும் எப்போதும்படத்தையும், ‘சர்வம்படத்தையும் பார்த்து உருகோ உருகு என உருகியிருக்கிறார் என புரிகிறது. ஆனால், எதற்காக கதாநாயகிகளை மட்டும் மாற்றி, முதல் பாதியில்எங்கேயும் எப்போதும்படத்தையும், இரண்டாம் பாதியில்சர்வம்படத்தையும் மறுபடியும் ஷூட் செய்து வைத்திருக்கிறார் என புரியவில்லை. ஆனாலும் கதாநாயகர்களை கூட மாற்றாமல் அப்படியே வாந்தி எடுத்து வைத்திருக்கிறார் என்றால், உண்மையிலே அட்லி துணிச்சல்காரர் தான். இன்னொரு பக்கம் அட்லி போன்றோர்களுக்கு தான் கோலிவுட்டில் பெரும் மவுசு என்பதால், அட்லி மார்க்கெட் அள்ள போகிறது. நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், பல முண்ணனி ப்ரொட்யூசர்களும், முண்ணனி நட்சத்திரங்களும் அட்லியை, நான், நீ என போட்டி போட்டு புக் செய்ய போகின்றார்கள். இதற்கிடையில், இயக்குனர் விஜய்யை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது, பாவம், இத்தனை நாளாய் போட்டியே இல்லாமல் வண்டியை ஓட்டி கொண்டிருந்தார்இனி அவர் நைஜீரியா, ஐரோப்பா, ஜப்பானிய, திபெத்திய படங்களையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கும்….

படத்தில் எல்லா காட்சிகளும், கதாப்பாத்திர உருவாக்கங்களும், காதலும் மிக செயற்கையாக இருக்கின்றன. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் Touching ஆக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் கூரிய முனைப்போடு செயல்பட்டு இருக்கிறார்கள். படத்தின் பெரும்பகுதியில் யாராவது ஒருவர் அழுந்து கொண்டே இருக்கிறார்கள். படம் வேறு ஒரே இழுவையாக போய் கொண்டிருக்க, சீரியல் தான் பார்த்து கொண்டிருக்கிறோமா என்று கூட பல சமயத்தில் சந்தேகங்கள் எழுகின்றன.

படத்தின் கதையை இப்படி அநியாயமாக சொல்லி விட்டேனே என்று யாரும் எண்ணி வருந்த வேண்டாம். இதே கதையை ஏற்கனவேமௌன ராகம்என்ற தலைப்பில், மணிரத்னம் எடுத்து இந்த உலகிற்கு சொல்லி விட்டார். அதன் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் இந்தராஜா ராணி’. அதில் ரேவதி இரயில்வே ஸ்டேஷனுக்கு போவார் இல்லையா, இதில் நயன்தாரா ஏர்போர்ட்டிற்கு போவார்அவ்வளவு தான்லேட்டஸ்ட் வெட்ஷன் ரெடி

மற்ற ஊர்களில் ஒரு படம் நிறைய நாட்கள் ஓடினால் நல்ல படம் என்றும், சீக்கரத்தில் எடுத்து விட்டால் அது மொக்கை படம் என்றும், படம் ஓடும் நாட்களை வைத்து குடும்பத்துடன் சென்று கண்டு களிக்கலாம். அப்படி இல்லையென்றால் விமர்சங்களை வைத்தாவது படம் பார்ப்பதை குறித்து யோசிக்கலாம். ஆனால் மேட்டூரிலோ, அதற்கெல்ல்லாம் அவகாசமே தராமல், ஆபிஸில் பெர்மிஷன் சொல்லி விட்டு வந்து படம் பார்க்கும் நிலைக்கு ஆளாக்குகிறார்கள். இல்லையென்றால் அடுத்த நாளே ஏதேனும் பிட்டு படத்தை போட்டு விடுகிறார்கள். இதற்காகவே ஒவ்வொரு படத்தையும் பார்த்து தொலைக்க வேண்டியதாய் உள்ளது.

ரெண்டு நிமிஷத்துல வந்துர்றேன் சார்னு சொல்லிட்டு அப்படியே ஓடியாந்துட்டேன்….. நாளைக்கு ஆபிஸில் என்ன நடக்க போதோ…?

No comments:

Post a Comment