Sunday, 10 November 2013

ஸ்பீடான கதையின் ஸ்லோ வெர்ஷன்

ஸ்பீடான கதை என்று கொஞ்ச நாள் முன் ஒரு சிறுகதை எழுதினேன், அது பலருக்கு புரியவில்லை என்பதால், அந்த கதையின் ஸ்லோ வெர்ஷனை இங்கு வெளியிடுகிறேன்...



அடிப்படையில் இது ஓர் Puzzle போல இருக்க வேண்டும் என்ற அமைப்பில் எழுதப்பட்டது, கதைக்குள்ளாகவே பல விஷயங்களும், நம் நடைமுறை வாழ்க்கையின் பதிவுகளும் எழுதப்பட்டிருக்கிறது.

மொத்த கதையுமே Puzzle தான் என்றாலும், Puzzle க்குள்ளான Puzzle களும் கூட ஆங்காங்கே இருக்கிறது. உதாரணமாக கதையில் வரும் கதாபாத்திரம் தன் கள்ள காதலியோடு பேருந்து ஏறுகிறான். கோயம்புத்தூரிற்கு டிக்கெட் எடுக்கிறான். ஆனால் கதைப்படி, பேருந்து கோயம்புத்தூர் நகரை விட்டு வெளியே வருவதாற்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த Puzzle ஐ வைத்து பல தர்க்க ரீதியான தத்துவங்களை சொல்ல முடியும். நம்மை சுற்றியிருக்கும் சந்தோஷங்களை விட்டுவிட்டு, சந்தோஷத்தை தேடி தேடி நம் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருப்பதே இதன் தத்துவ பிண்ணனி. இதை தத்துவங்களாக சொல்வதை விட, இதை மறை பொருளாக வைத்து, வாசகனை கண்டுபிடிக்க வைப்பது தான், இவ்வகை எழுத்தின் மேஜிக்

ஒருவேளை கண்டுபிடிக்காமல் போய்விட்டால்….? இது ஒரு நல்ல கேள்வி தான். ஆனால் அதற்காக ஒன்றும் செய்வதற்கில்லை, யாராவது 2 பேர் கண்டுபிடிப்பார்கள், அவர்களுக்காகவது இது போல் கட்டமைத்து தான் ஆக வேண்டும்.

இன்னொன்று, துரை தனது மொபைலில் மணி பார்க்கும் போது 10.23 என காட்டுகிறது. அதன் பின் கதையின் இறுதியிலும் ஒரு முறை மணி பார்க்கிறான், 10.24 என காட்டுகிறதுஇதன் தத்துவ பிண்ணனி என்னவாக இருக்க முடியும் என நினைக்கிறீர்கள்கடைசியில் சொல்கிறேன்    

முடிந்த வரை இந்த விளக்கத்தை சுருங்க சொல்ல நினைக்கிறேன். பொதுவாக எந்த ஒரு பின்நவீனத்துவக் கதைக்கும், யாரும் விளக்கம் கொடுப்பதில்லை. நம் எதிராளிக்கு கண்ணை கட்டாமலே கண்ணாமூச்சி ஆடவைப்பதை போன்றது இது. ஆனாலும், மிகவும் நெருங்கியவர்களுக்காக இதை எழுத விளைகிறேன்

இந்த இடத்தில் நான்-லீனியர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்என ஆரம்பித்து கடைசியில ராஜாவும் ராணியும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்தாங்களாம் என கோர்வையாக ஒரு கதையை முடிப்பது என்பது லீனியர் (Linear) வகை எழுத்தாகும். இந்த முறையை உடைத்தெறியும் எல்லா வகை எழுத்துமே, நான்லீனியர் வகை எழுத்துக்களேஎவ்வளவு நாட்கள் தான் சின்ன பிள்ளை தனமாகவே கதைகள் கேட்டு கொண்டிருப்பது, என்று போரடித்து போனவர்களுக்கு, நான் லீனியர் எழுத்துவகை பரிசாக வந்த ரோலர் கோஸ்ட்டர்.

இதன் பின்னர் வருவது ஸ்பீடான கதையின் ஸ்லோ வெர்ஷன்

நம் ஊர் சாலைகளும், பேருந்துகளும் கள்ள காதலர்களுக்கானதே அல்லஒரு முறை துரையும் அவனது கள்ள காதலியும் எங்காவது வெளியூர் போய் குஜலாக இருக்கலாம் என ஏற்பாடு செய்து கிளம்பினர். முன்னதாகவே பேருந்து நிலையம் சென்று, அரசு பேருந்து பிடித்து, நல்ல சீட்டுகள் பிடித்து உட்கார்ந்தனர். பஸ் 50 கிமீ கூட போயிருக்காது. நடு வழியில் நின்று  விட்டது. நின்ற இடம் துரையின் காதலிக்கு தெரிந்தவர்கள் இருக்கும் ஊர். பஸ் இறங்கி, பஸ் மாறும் போது பார்த்து விட்டு அவளது கணவனிடம் போட்டு கொடுத்து விட்டனர்.

ஆம்னி பஸ்கள், நான்கு வழிச்சாலை எல்லாமும் சிறந்த கண்டுபிடிப்பு என்றாலும் கள்ள காதலர்களுக்கு உகந்ததா என தெரியாமல் விழித்தான் துரை. 120 கிமீ வேகத்தில் பறக்கும் பேருந்து, எங்கேயாவது கவுந்து, அடிப்பட்டாலோ, செத்து விட்டாலோ, அடுத்த நாள் காலை செய்தித்தாளில் வந்து விடுமே என்ற கவலை ஒரு பக்கம் பீடித்தாலும், நடு வழியில் நின்று தொலைக்கும் அரசு பேருந்துக்கு, செய்தித்தாள் அச்சிடுபவன் எவ்வளவோ பரவாயில்லை என ஆம்னி பேருந்தையே புக் செய்தான். என்ன தான் ஃபாரின் காரன், சொகுசான பஸ்ஸை கண்டுபிடித்தாலும், ரோட்டை நாம் தானே போட்டு கொள்ள வேண்டும், அதையுமா வாங்கி வர முடியும். சாலை அமைக்கும் பணி காரணமாக, பேருந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து……

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்லபுழுங்கி தள்ளியது.

ஊட்டியில் பேருந்தை விட்டு இறங்கிய பின், அந்த கவிதையான காலையை இருவரும் இரசிக்கும் நிலையில் இல்லை. அவள் முகத்தை துப்பட்டாவில் மூடி கொண்டாள். துரைக்கு அந்த அதிகாலையில் ஆட்டோ பிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆனது. ஆட்டோவை லாட்ஜிற்கு போக சொன்னான்.

லாட்ஜ் ரிசப்ஷினில், துரை ரூம் புக் செய்து கொண்டிருக்கும் போது அவளுக்கு அவள் கணவரிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது. போனை எடுத்து கொண்டு தனித்து சென்று விட்டாள். ஆனாலும் அவள் வார்த்தைக்கு வார்த்தைசொல்லுங்க’ ‘சொல்லுங்கஎன்பதையும், ‘மதுரைக்கு வந்து சேர்ந்துட்டேன்என்பதையும் தூரத்தில் இருந்த படியே ரிசப்ஷனிஸ்ட்  கவனித்து விட்டான். அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் தாலி, துரையின் பர்ஸை காப்பாற்றும் என நினைத்திருந்தான். ஆனால், ரிசப்ஷனிஸ்ட் நீர்யானை கணக்காக பர்ஸை கவ்வி விட்டார். ரூமிற்கு சென்று 1 மணி நேரம் கூட ஆகியிருக்க வில்லை. போலிஸ்காரர் ஒருவர் வந்து கதவை தட்டி, ரேஷன் கார்டு காட்ட சொன்னார். பணத்தை காட்டினான்.

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்லபயங்கர காஸ்ட்லி.

அன்று இரவு துரை தன் மனைவிக்காக எழுதிய கவிதைகளை எல்லாம் லூஸு போல் அவளிடம் ஒப்பித்தான். அவள் தன் கணவனுக்கு கவிதைகள் பிடிக்குமே என்று துரையை வைத்து கவிதைகள் யோசித்து கொண்டிருந்தாள்.

காதல், கள்ள காதல், தாய்மைபெண்களின் சின்ஸியாரிட்டியை அடித்து கொள்ள ஆளே கிடையாது.

துரை தனக்கென ஓர் கள்ள காதலி வேண்டும் என்று முடிவெடுத்து தேடிய போது, ஓர் டாக்டர் தான் தனக்கென கள்ள காதலியாக அமைய வேண்டும் என்று ஓர் குறிக்கோளோடு இருந்தான். க்ளினிக் க்ளினிக்காக ஏறி இறங்கி பார்த்தான். ஒன்று கல்யாணம் ஆகாத டாக்டர்கள் இருந்தார்கள், இல்லையென்றால் கல்யாணம் ஆன கிழவிகள் இருந்தார்கள். இதை பற்றி ஆராய்ச்சியில் இறங்கிய போது, சில டாக்டர்கள் கல்யாணம் செய்து கொள்வதே 30 வயதுக்கு மேல் தான் என்ற அதிர்ச்சிகர தகவல்கள் அவனுக்கு தெரிய வந்தது. கல்வி முறையையெல்லாம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், MBBS படிப்பே 5 வருஷம் எனவும், அது கிடைக்கவே இம்ப்ரூவ்மென்ட் பரிட்சை எல்லாம் எழுதி வருடத்தை வீணடிக்கிறார்கள் எனவும், வெறும் MBBS ஐ யாரும் மதிப்பதில்லை எனவும், அதனால் மேற் படிப்புக்கு ஓடுகிறார்கள் எனவும், அதற்கு ஓர் என்ட்ரான்ஸ் எக்ஸாம், அதில் 30000 சீட்களுக்கு 10 லட்சம் பேர் அடித்து கொள்கிறார்கள் எனவும், படித்து, படித்து ஒரு நாள் டாக்டர் ஆன பின் கல்யாணத்திற்கு பணம் சம்பாதித்து, வட்டிக்கு பணமெல்லாம் வாங்கி கல்யாணம் ஏற்பாடு செய்வதற்குள் 30 வயதுக்கு மேல் ஆகி விடுகிறது என்றும் அறிந்தான். இதையெல்லாம் அறிந்து அறச்சீற்றம் அடைந்த போராளியாக உருவெடுத்தான். நெதர்லாந்து கலாச்சாரத்தை ஒப்பிட்டு கட்டுரை எழுதி எழுதி கிழி கிழியென கிழித்தான். ஒரு நாய் சீண்டவில்லை…. பழைய படி சினிமா விமர்சனம் எழுதலானான்.

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்லஇது ஓர் சினிமா நிறைந்த தேசம்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கேற்ப, துரை தன் மனைவி இன்னொருவனுக்கு கள்ள காதலி ஆகி விட கூடாது என்பதில் அனைத்து வகையிலும் உஷாராக இருந்தான். இதனால் பலர் மத்தியில் நல்ல அந்தஸ்து இருந்தது. தம்பி…. வாழ்க்கையில ஒழுக்கங்கறது…. என பலருக்கும் அட்வைஸ் கொடுப்பதில் துரையே முன்னிலை வகித்தான். ஒரு வழியாக தனக்கு டாக்டர் கள்ள காதலி கிடைக்காது, வேறு தான் தேட வேண்டும் என முடிவிற்கு வந்தான். இந்த இந்திய திருதேசத்தில் பல குடிகார, ஃபாஸிஸ, ஆணாதிக்க, மென்ட்டல் கணவன்மார்கள் ஒயின் ஷாப்பே கதி என்று கிடப்பதால் துரைக்கு சீக்கரத்திலே ஓர் அழகிய கள்ள காதலி கிடைத்தது என்பது ஒன்றும் ஆச்சர்யத்திற்குரிய விஷயம் அல்ல

துரைக்கு தன் மனைவியை பிடிக்கவே பிடிக்காது. தன் மனைவியை காட்டிலும் துரைக்கு பிடிக்காத ஓர் விஷயம் டிவி தான். சொல்ல போனால் தன் மனைவியை பிடிக்காமல் போனதற்கான காரணமே டிவி தான். வாயை திறந்து எதை பேசினாலும் டிவி சம்பந்தமாகவே பேசினாள். விளம்பரங்களை கூட கண் கொட்டாமல் பார்த்தாள். தானும் ஆணாதிக்கவாதியாக மாறி, கள்ள காதலர்களுக்கு அழைப்பு விடுக்க கூடாது என்பதற்காக பல்லை கடித்து கொண்டான். அப்போது பார்த்து வரமாய் அமைந்தது தான் தொடர் மின்சார துண்டிப்பு. ஒரு மணி நேரம் இருக்கும், ஒரு மணி நேரம் இருக்காது என மின்சாரம் உள்ளே வெளியே விளையாட்டு விளையாட ஆரம்பித்தது. அப்படி ஓர் கற்காலம், அவனுக்கு பொற்காலமாய் வாய்த்தது. அந்த பொற்க்காலத்தில் தான் அவனுக்கு முதல் குழந்தை பிறந்தது. இனிப்பு எடுத்து கொண்டு மின்சார வாரியத்தினுள் நுழைந்தாள் இருக்கைகள் காலியாக இருந்தன….

இன்னும் இதே போல் தொடர்ச்சியாக குழந்தைகள் பெற்று கொண்டிருக்கலாம் என்று எந்த ராகு காலத்தில் கனவு கண்டானோ, காற்றாலைகள் செயலாற்ற ஆரம்பித்து துரையின் வாழ்க்கையில் பழைய படி சூறாவளியை கிளப்பி விட்டு வேடிக்கை பார்த்தது. இதற்கு தீர்வே இல்லையா என்று நெதர்லாந்து ஆசாமியிடம் ஃபேஸ்புக்கில் ஓசியாக குமுறி எழுந்தான். உங்க ஊரில் டிவிக்களும், தியேட்டர்களும் இருக்கும் வரை சாத்தியமே இல்லை என ஒரே போடாக போட்டான். துரையின் தேசப்பற்று கண்கள் துடிக்க வைத்தன. ‘என் நாட்டையா டா கேவலாமா பேசின, எங்க நாடு எப்பேற்ப்பட்ட நாடு தெரியுமா….’ என்று வேகமாக டைப் அடித்து விட்டு, அடுத்து என்ன எழுதுவது என தெரியாமல் விழித்து கொண்டிருந்தான். எல்லாத்தையும் Backspace துணை கொண்டு அழித்து, விக்கிப்பீடியாவில் நெதர்லாந்து பற்றி ஆராய்ந்து, அந்நாட்டை பற்றி கஷ்டப்பட்டு ஒரு குறையை மேய்ந்து கண்டெடுத்து சொல்லி காட்டி, துரை தன் தேசப்பற்றை காட்டினான்.

கப்பல் ஏறி ரஷ்யா போனால், அங்கு போலி டாக்டர்களே இல்லை. ஏனென்றால் அப்படி ஒரு தேசமே இல்லை.

கம்யூனி…..

ஐயையோமன்னித்து விடுங்கள்கம்யூனிசம் பற்றி ஏதும் சொல்ல வரவில்லை. கம்யூனிட்டி பற்றி தான் சொல்ல வந்தேன்அடிவாங்க தெம்பு இல்லை.

தினத்தந்தி மட்டும் எப்படி அதிகம் விற்கிறது என்று எப்போதுமே துரைக்கு ஓர் சந்தேகம் உண்டு. எப்போதுமே அதை பற்றி யோசித்த வண்ணம் இருப்பான். ஒரு நாள் அதற்கான தீர்வு கிடைத்தது...

தினகரன்ஐபில்லில் சூதாட்டம், கிரிக்கெட் வீர்ர்கள் கைது.
தினமலர்கிரிக்கெட் வீர்ர்கள் புக்கிகள் தொடர்பு அம்பலம்.
தினத்தந்திகிரிக்கெட் வீரர்கள் கைது; அழகிகளுடன் தொடர்பு;

இதை தெரிந்து கொண்ட நாளில் இருந்து துரை இன்னொன்றையும் தெரிந்து கொண்டான். அவனது கல்லறைக்கும், தினத்தந்திக்கும் மறைமுகமாக ஓர் போட்டி ஓடிக்கொண்டிருக்கிறது என.. ஒரு நாள் நம்முடைய போட்டோ தினத்தந்தியில் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என லேசாக ஒரு பயம் அவனது வயிற்றில் நெளிந்தது. நல்லவேளையாக, அந்த போட்டியில் இறுதியாக துரையின் கல்லறையே ஜெயித்தது.

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்ல, என்ற வாசகத்தை யாருமற்ற ஓர் ICU ward-ல் உதிர்த்து விட்டு கண் மூடினான்.

தேவர்களுக்கான ஒரு நிமிஷம் முடிந்திருந்தது.

Saturday, 9 November 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்



ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு இது நாள் வரை ஃபேஸ்புக்கிலும், மீடியாவிலும் போதும் போதும் என்னும் அளவிற்கு விமர்சனங்கள் கொடுத்து மாய்ந்து விட்டனர். ஆனால் வந்த விமர்சனங்கள் அனைத்தும் இரண்டு எக்ஸ்ட்ரீம்களில் இருக்கிறது. ஒன்று, தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடுகின்றனர், இல்லையேல் சகிக்கவே முடியாத அளவிற்கு வக்கிரமாய் கரித்து கொட்டுகின்றனர்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சுத்தமான அக்மார்க் கமர்ஷியல் திரைப்படம். ஓர் அவெரெஜ் தமிழ் சினிமாவில் என்னென்ன ஓட்டைகள் இருக்குமோ இதிலும் எல்லாம் இருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை லாஜிக் பற்றி எந்த கவலையும் இல்லாமல், ஓர் கலை திரைப்படம் சாயலில் ஓர் கமர்ஷியல் திரைப்படத்தை மிஷ்கின் கொடுத்திருக்கிறார். கலை திரைப்படத்தை பாராட்டும் ரசிகர்களை, சமுதாயம் இன்ட்டிலிஜென்ட் என நினைத்து கொள்வதால், இது பல ரசிக சிகாக்களுக்கு தோதாக போய்விட்டது. பார்த்தது கமர்ஷியல் படம், ஆனால் வெளியில் வந்து கலை திரைப்படம் பார்த்த லெவலுக்கு பீத்தி கொள்ளலாம் என்பதால், பல கலா பூர்வ ரசிகர்கள் உதயமாகி விட்டார்கள். அந்த சந்தோஷம் அவர்களுக்கு….இப்படி கமர்ஷியல் திரைப்படங்களுக்கு ஓர் புது சாயல் கொடுத்ததற்கு மிஷ்கினை பாராட்டியே ஆக வேண்டும் என்றாலும், பாலாஜி சக்திவேல், ராம், ராஜு முருகன் போன்றோர் இருக்கும் எதிர்கால தமிழ்சினிமாவை நினைத்தால் கொஞ்சம் பீதியாவதை தவிர்க்க முடியவில்லை.

ஓர் குடும்பத்தில் 3 பேருமே கண் தெரியாதவர்களாக இருக்கின்றனர், லட்சத்தில் ஓர் குடும்பம் தான் இப்படி இருக்கும் என்றாலும், இந்த அமைப்பில் உள்ள குடும்பத்தை கதைக்களனில் உள்ளே இழுத்ததிற்கான காரணம், ஆடியன்ஸ் மத்தியில் அனுதாபத்தை உருவாக்குவதுகதையின் ஓர் கட்டத்தில் குண்டு அடிப்பட்டு வீழும் மிஷ்கினை காப்பாற்றும் ஶ்ரீ , படம் நெடுக தேவையே இல்லாமல் தொத்தி கொண்டு வருகிறார் போல் இருக்கிறது.

மிஷ்கினை காப்பாற்றியதற்காக போலிஸால் சிக்கலுக்குள்ளாகும் ஶ்ரீ, அவராகவே வெளியே வந்திருப்பார். கமிஷ்னர் முதல் அவரது கல்லூரி HOD வரை அவருக்கு செல்வாக்கு இருந்தது. ஶ்ரீயை போலிஸடம் இருந்து காப்பாற்றுகிறேன் என்ற பேர்வழியில், எதற்காக மிஷ்கின் ஶ்ரீயை கடத்தி, உயிருக்கு ஆபத்தான பல இடங்களுக்கு அழைத்து சென்று சிக்கலக்குள்ளாக்கி, கடைசியில் ஓர் குழந்தையை கையில் கொடுத்து அவரை guardian ஆக்குகிறார் என புரியவில்லை. கிட்டத்தட்ட ஶ்ரீ, மிஷ்கினின் கூட்டாளி போல் செயல்பட்டதாக கதை முடிகிறது. எப்படி ஶ்ரீயை போலிஸ் கைது செய்யாமல் விட்டது என தெரியாமல் நாம் குழப்பத்தில் ஆழ்ந்து இருக்க, படம் முடிகிறது.

மிஷ்கினை காப்பாற்றிய மறுகணமே ஶ்ரீக்கும், மிஷ்கினுக்குமான பிணைப்பு முடிந்திருக்க வேண்டும். ஏனென்றால் மிஷ்கின் ஶ்ரீக்கு நன்றி சொல்வதை காட்டிலும், ஶ்ரீக்கு தன் முன் கதை, பின் கதை, சைட் கதைலாம் சொல்வதை காட்டிலும் மிஷ்கினுக்கு பல வேலைகளும், அபாயங்களும் இருந்தனசரி, ஶ்ரீயை படம் முழுக்க கூட்டி கொண்டு திரிவது தான் கதைக்களம் என்று எடுத்து கொண்டாலும், இருவரும் சேர்ந்து அன்று இரவு எதற்காக பாடுபடுகிறார்கள் என்றால், இறந்த போன ஒருவனுக்கு அஞ்சலி செலுத்த அவனது குடும்பத்தை கல்லறைக்கு கூட்டி செல்வதற்காக தான் இத்தனை பாடுஇதையெல்லாம் என்னவென்று சொல்லசென்ட்டிமென்ட் சமாச்சாரத்தை உள்ளே இழுத்து விட்டால், பார்ப்பவர்கள் வாயை பொத்தி கொண்டு பார்ப்பார்கள் என்பது தான் மிஷ்கின், ராம் போன்றோர்களின் கண்டுபிடிப்பு. அப்படி ஓர் அச்சுறுத்தலான சூழ்நிலையில் இப்படி பட்ட ஓர் அஞ்சலி இரங்கல் தேவை தானா? அதுவும் ஓர் குழந்தையை கூட்டி கொண்டு….? இந்த கேள்வியை யாரும் கேட்க துணிய மாட்டார்கள் என்ற தைரியத்தில் கண்ட படி காட்சிகளை வைத்து, இளையராஜாவின் பிண்ணனி இசைக்கு செம்ம ஸ்கோப் கொடுத்து இருக்கிறார். அப்படி கஷ்டப்பட்டு போய் அஞ்சலி செலுத்தியதில், மேலும் 3 உயிர்கள் பலியானது தான் மிச்சம்.

கதையை அமைக்கும் முன்னரே திரைக்கதையை அமைத்து விடுவது தான், இது போல் ஸ்கிரிப்ட்டுகளில் உள்ள பிரச்சனை. ஶ்ரீயும், மிஷ்கினும் படம் முழுக்க ஓட வேண்டும். ஒரு பக்கம் போலிஸ் துரத்த வேண்டும், இன்னொரு பக்கம் ரௌடிக்கள் துரத்த வேண்டும். ஒரு இரவு முழுக்க சென்னையை சுத்தி சுத்தி காட்ட வேண்டும். இதை முதலில் தீர்மானித்து விட்டார்கள், கதை எழுதுவது தான் பாக்கி என்று கதை வேட்டை நடத்தியிருக்கிறார்கள். வில்லனை பழிவாங்குதல், வில்லனுக்கு பயந்து ஓடுதல், பணத்தை கொள்ளையடித்து ஓடுதல் என்பன பல யுக்திகளை தமிழ் சினிமா பார்த்து விட்ட படியால், ஓர் குடும்பத்தை கல்லறைக்கு அழைத்து சென்று அஞ்சலி செய்ய வைத்தல் என்ற கதையை ஸ்க்ரிப்ட்டாக்கி இருக்கிறார்கள். சென்ட்டிமென்ட் சமாச்சாரத்தை உள்ளிழுத்து போட்டப்படியால், ஒரு பயல் வாயை திறந்து பேச முடியாதபடி செய்தது தான், மிஷ்கினின் மேஜிக்

கதையில் வரும் கண் தெரியாத குடும்பத்தை காப்பாற்றுவது என்பது அவ்வளவு ஒன்றும் கடினமான காரியமாக எனக்கு தெரியவில்லை. வில்லன் கூட்டம் அந்த கண் தெரியாத குடும்பத்தை சீர்குலைக்க நினைப்பதற்கு, ஒரே காரணம் மிஷ்கின் வேலைக்கு வராமல், அவர்களுடனே இருப்பதுஆக அந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்கு மிஷ்கினிற்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கிறது. உதாரணமாக
1) குடும்பத்திற்கு தகுந்த பண ஏற்பாடுகளை செய்து விட்டு, மொத்த வில்லன் கும்பலையும் கொன்று விட்டு, போலிஸில் சரண்டர் ஆகியிருக்கலாம்.
2) வில்லனை கொலை செய்ய முடியாதபட்சத்தில், அவனுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கலாம்.
3) தற்கொலை செய்து கொள்ளலாம், இல்லையென்றால் தற்கொலை செய்யப்பட்டதாகவோ, கொலை செய்யப்பட்டதாகவோ செட் அப் செய்து, தூர தேசத்திற்கு தப்பி ஓடி, தொலைவில் இருந்து குடும்பத்திற்கு ஆதரவும், பாதுகாப்பும் கொடுத்து இருக்கலாம்.
4) மொத்தமாக குடும்பத்துடன் தூர தேசம் தப்பி ஓடியிருக்கலாம்.
ஆனால், சினிமா என்பதற்காக நாமும் சில சமரசங்களை செய்தாக வேண்டிய கட்டாயங்கள் நம்மை அழுத்துகிறது.

இப்போது இருப்பது Fast food உலகம் என்பதை மிஷ்கின் தெரிந்து வைத்திருக்கிறார். யாருக்கும் இங்கு நேரமில்லை. சாவு வீடுகளிலே கூட, எடுத்து கொண்டு போய் புதைத்து விட்டு ஆகிற வேலையை பார்க்கலாம் என்ற மனப்பான்மைக்கு வந்து விட்டனர். இதையெல்லாம் சரியாக புரிந்து வைத்திருந்ததால் தான் 30 நிமிடத்திற்கு ப்ளாஷ்பேக்காக இழுக்க வேண்டிய கதையை, 5 நிமிட கதை சொல்லலில் முடித்து விட்டார். அதிலும் ஓர் சிறப்பு என்னவென்றால் ஓநாய் ஆட்டுக்குட்டி கதையாக சொல்லி முடித்து விட்டார். அது ஓர் Poetic ஆன தன்மையை வேறு கொடுத்து விட்டது. அவருக்கு காசு மிச்சம், நமக்கு நேரம் மிச்சம்நானும் கூட திரையரங்கில் யாராவதுஇதெல்லாம் யாருக்கு புரியாதோ இல்லையோ திவ்யா உனக்குமா புரியலைஎன்று தலைநகரம் வடிவேலு டயலாக்கை கமென்ட்டாக அடிப்பார்கள் என்று நினைத்தேன்ம்ஹூம்இன்னும் 10 வருடங்களாவது தேவைப்படும்

படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருக்கின்றன, லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன, கதாப்பாத்திரங்களில் வெரைட்டி இல்லாமல் ஒன்றை போலவே இருக்கின்றன, சில கதாபாத்திரங்கள் சாகும் போது கூட தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் தேமே என்று நின்று கொண்டிருக்கின்றன, சில கதாபாத்திரங்கள் வலிந்து திணிக்கப்பட்டு இருக்கின்றன, சில கதாபாத்திரங்கள் தன் பாத்திரத்திற்கான ஜஸ்டிஃபிகேஷனை கொடுக்காமல் இருக்கின்றன…. எல்லாமும் இருந்தும் கூட, இந்த திரைப்படம் எல்லா வயது ரசிகர்களையும் கவர்ந்து இருக்கின்றன. காரணம் படத்தின் திரைக்கதை.

படத்தின் திரைக்கதை முற்றிலும் புதுமையானது, அதே சமயம் புத்திசாலித்தனமானது. அது எங்கேயுமே சுவாரஸ்யத்தை சமரசம் செய்து கொள்ளாமல் படைக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் மொத்த குறைகளையும் அது Dominate செய்யும் அளவிற்கு, அது வசீகரமாக இருப்பது தான் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

படத்தில் உட்கார்ந்திருப்பதே ஓர் பரவசமான அனுபவமாக இருந்தது. காரணம் இளையராஜாவின் பிண்ணனி இசைஇளையராஜாவின் இசையில் பாடல்கள் ஏதும் இல்லை என்பது கூடுதல் நிம்மதி.

மொத்தமாகவே படம் வெற்றி தான்ஆனாலும் மிஷ்கினை பிடித்தவர்கள் மகிழ்ச்சியாக போற்றி கொண்டும், பிடிக்காதவர்கள் மகிழ்ச்சியாக தூற்றி கொண்டும் இருக்கின்றனர். இரண்டு தரப்பினருக்குமே ஓர் திருப்தி இல்லாமல் அதனை செய்து கொண்டிருப்பது தான் இங்கு வேடிக்கை. பிடித்தவர்களுக்கு என்ன பிரச்சனையென்றால், ஒண்ணு ரெண்டு இடங்களில் மட்டும் கதை இடிக்கிறது, பிடிக்காதவர்களுக்கு என்ன பிரச்சனையென்றால் எதிர்ப்பார்த்ததை விட படம் பிரமாதமாக வந்து விட்டப்படியால், என்ன தூற்றியும் பருப்பு வேகாமல் போகிறது.







Thursday, 3 October 2013

மேன்ஷன் வாழ்க்கை



ஜான் என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதவன். நான் தங்கியிருக்கும் மேன்ஷனில் என்னுடைய ஒரே ஆதரவு, ஒரே அரவணைப்பு, ஒரே பிடித்தம் யாரென்றால் அது ஜான் மட்டுமே. நான் இருக்கும் மேன்ஷன் பளிங்கு தரைகள் ஜொலிக்க, புதிதாக ரோஸ் வர்ணம் பூசிய சுவர்கள் இருக்கும் மேன்ஷன் என்றாலும், எலி பொந்து போல் சிறிதாக இருக்கும். ஆபிஸ் பக்கமாக இருக்கிறதே என்று இந்த மேன்ஷனிற்கு வர வேண்டியதாய் போயிற்று. அதுவுமில்லாமல் இந்த மேன்ஷன் கிடைக்கவே, உன் பாடு என் பாடு என்றாகி போனது. இதையே ப்ரோக்கர் வைத்து தான் தேடினேன். தண்ணீர் மஞ்சளாக வரும், சாப்பாடு வெளியில் தான் சாப்பிட்டு கொள்ள வேண்டும், எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், காதலியிடம் போன் பேச இடம் இருக்காது, மொட்டைமாடி, படிகள், வராண்டா என எல்லா இடத்தையும் ஏற்கனவே பிடித்து வைத்திருப்பார்கள், சிகரெட் தண்ணி என எந்த பழக்கத்திற்கும் தடை இல்லை, வண்டி வைத்து கொள்ளலாம் ஆனால் பார்க்கிங் இல்லை, கேட் வெளியே தெருவில் தான் நிறுத்து கொள்ள வேண்டும், வண்டி திருடு போனால் மேன்ஷன் நிர்வாகம் பொறுப்பேற்காது, இது தவிர அறைகளிலும் பர்ஸ் செல்போன் போன்றவைகள் திருடு போகும், ஒரே சிறிய அறையில் குறுக்க நெடுக்க 5 கட்டில்கள் போடப்பட்டிருக்கும், பொருட்களை வைத்து கொள்ள அலமாரியும் கிடையாது, சுவற்றில் ஆணியும் அடிக்க கூடாது, ஆனாலும் எங்களுக்கு முன்பிருந்தவர்கள் ஆணி அடித்து ஹேங்கர் வைத்திருந்தனர், எல்லார் ஹேங்கரிலும் கிட்டத்தட்ட 40 கிலோ எடைக்கு சர்ட் பேன்ட்கள் தொங்கி கொண்டிருக்கும்இது தவிர அவ்வப்போது கரண்ட் கட் வேறு, யூதர்கள் 5 அடுக்கு அலமாரி போன்றிருக்கும் இடங்களில் எப்படி அடைந்து கிடந்து தங்கியிருப்பார்கள் என்றும், எப்படி வெக்கையில் வெந்திருப்பார்கள் என்பது கைகளில் அகப்படாமல் கொசுக்கள் ரீங்கரித்து சொல்லி கொண்டே இருக்கும்

என்னுடைய ஆபிஸ் மாற்றலாகியும் கூட இதே மேன்ஷனில் இருந்தே போய் வந்து கொண்டிருக்கிறேன். தினமும் போக முக்கால் மணி நேரம், வர முக்கால் மணி நேரம் ஆனாலும் கூட எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. அது போக பெட்ரோல் செலவு வேறுஆனாலும் இங்கேயே குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன்ஒரே காரணம் ஜான்

எனக்கும் பலரை போல, சிலரை பார்த்த மாத்திரத்திலே பிடித்து விடும். அது போல பிடித்து போனவன் தான் ஜான், காரணமே இல்லாமல் பிடித்து போனாலும், இப்போது அவனுக்காகவே இந்த குப்பை மேன்ஷனில் இருக்குமளவிற்கு பிடித்து போனதற்கு ஓர் தீர்க்கமான காரணம் இருக்கிறது.

இப்போது நான் உயிருடன் இருக்கிறான் என்றால் அதற்கு ஜான் தான் காரணம். அப்போது திவ்யா என்னை வேண்டாம் என்று உதறி விட்டு சென்றிருந்த காலம் அது. அப்போது எனக்கு வேலையிலும் சிலபல சிக்கல்கள் இருந்தன. ரொம்பவும் மன அழுத்தத்தில் ஒரு நாள் விஷம் குடிக்க முடிவு செய்து விட்டேன். கடைக்கு போய் வாங்கி வந்து என் பையில் தான் வைத்திருந்தேன். ஆனாலும் ஜான் அதை கண்டு பிடித்துவிட்டான். அதை எப்படி கண்டுபிடித்தான் எனக்கு இன்று வரை தெரியவில்லை, ஆனாலும் எப்படியோ கண்டுபிடித்து விட்டான். அதை எல்லாரும் தூங்கியதற்கு பிறகு இரவு குடிக்கலாம் என்று தான் வைத்திருந்தேன், ஆனாலும் அதில் எதிர்பாராத தடை ஏற்பட்டு விட்டப்படியால் அது ரத்தாகி போனது. இப்போது அதை பற்றி நினைத்தாலும் எனக்கு சிரிப்பு தான் வரும்.

அந்த நாள் உண்மையிலே எனக்கு மறக்க முடியாத நாள். ஜான் அன்று இரவு இரண்டு மணி நேரம் என்னிடம் பேசினான். நிறைய தைரியம் சொன்னான், நிறைய கதைகள் சொன்னான், நிறைய நம்பிக்கை வார்த்தைகள் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் இப்போது எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை, ஆனாலும் அவன் என்னிடம் பேசிய போது, நான் என்னை எவ்வளவு கம்பீரமாக உணர்ந்தேன் என்பது மட்டும் எனக்கு மறக்கவேயில்லை. அந்த நாள் உண்மையிலே என் வாழ்வில் ஓர் திருப்புமுனை, அதன்பின் ஒரே வாரத்தில் என் வேலை சம்பந்தமான சிக்கல் மறைந்து போனது. திவ்யா இல்லாத சோகமும் ஓரளவு பழக்கத்திற்கு வந்தது. ஒரு மாதம் கழித்து, திவ்யா போனது எல்லாம் எனக்கு ஒரு விஷயமாகவே தெரியவில்லை. கொஞ்ச நாட்களிலே அபர்ணா என் வாழ்வில் வந்து விட்டாள். வாழ்க்கை திரும்பவும் அழகாகிவிட்டது.

ஜான் வேலை செய்வது ஓர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில், டைல்ஸ், க்ரானைட் சம்பந்தமான பொருட்களையெல்லாம் மார்க்கெட்டிங் செய்வான். அறையில் இருக்கும் முக்கால்வாசி நேரம் யாரிடமாவது போனில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருப்பான். அவன் போனில் தான் ஆங்கிலத்தில் பிச்சு உதறவானே தவிர, எங்களிடம் பேசுவது அக்மார்க சென்னை தமிழில். எப்போது வேலைக்கு போவான், வருவான் என்றே தெரியாது. சில நேரம் ஜாமத்திற்கு வருவான், விடியற்காலையே கிளம்புவான். சில நேரம் மூன்று நாட்கள் வரையிலும் கூட எங்கயும் போகாமல் அறையிலே இருப்பான்.

இதற்கிடையில் மேன்ஷனில் திருட்டு பிரச்சனை அதிகமாகி கொண்டு வந்தது. சமயத்தில் என் பர்ஸில் இருந்து கூட பைசாக்கள் நழுவின. அன்றிலிருந்து பர்ஸில் அதிகமாக பணம் வைத்து கொள்வதில்லை. அப்படியே வைத்து கொண்டாலும், ரூபாய் நோட்டுகளில் கவர்னர் கையெழுத்திற்கு சற்று கீழே, கண்ணிற்கே தெரியாத வகையில் பென்சிலில் மூன்று ஸ்டார்கள் வரைந்து கொள்வேன். அது அவ்வளவு எளிதில் யார் கண்ணிற்கும் தெரியாது, நானே உற்று பார்த்து தேடினால் தான் கிடைக்கும்.

மேன்ஷனில் திருட்டு பிரச்சனை அதிகமானதில் எனக்கு ஓர் தனிப்பட்ட உபாயம் ஏற்பட்டது. பொதுவாக நான் அறை நண்பர்களுக்கு மட்டும் என் போனை கொடுப்பேன், ஏதேனும் அவசர கால் பேச வேண்டுமென்றாலோ, மொபைலில்கேம்ஸ்விளையாட கேட்டாலோ கொடுத்து விடுவேன். நான் மட்டுமில்லாமல் மற்ற அறை நண்பர்களும் கூட அப்படி தான் இருப்பார்கள். அப்படி ஒரு நாள் கொடுத்ததில், தான் சிக்கலாகி போயிற்று. ஒரு குறிப்பிட்ட நாளில் இருந்து அபர்ணாவிற்கு, ஓர் தெரியாத நம்பரில் இருந்து தேவையில்லாத கால்களும், மெஸெஜ்களும் வந்து கொண்டே இருந்தன. வரும் மெஸெஜ்களில் முக்கால்வாசி ஆபாச மெஸெஜ்கள், மீதி ஐ லவ் யூ மெஸெஜ்கள். இதை யாரோ வெளியாள் தான் செய்து கொண்டிருப்பதாய் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாள் என் அறை நண்பன் தினேஷின் மொபைல் திருடு போயிற்று, அன்று இரவு யதேச்சையாக அபர்ணாவிடம் விசாரித்தேன், இன்று ஏதேனும் அந்த நம்பரில் கால் வந்ததா என்று கேட்டேன், இல்லை என்று சொன்னாள். அப்போது தான் எனக்கு தினேஷ் மீது மெலிதாக சந்தேகம் வந்தது. ஒருவேளை இவன் தான் நம் மொபைலில் இருந்து அபர்ணா நம்பர் எடுத்து தொந்தரவு கொடுக்கிறானே என்று சந்தேகித்தேன். ஆனால் அவனிடம் அது பற்றி கேட்கவில்லை. ஆதாரம் இல்லாமல் என்னவென்று கேட்பது, ஒருவேளை அவனாக இல்லாமல் போனால் பெரும் சங்கடம் ஆகி போகும் என விட்டுவிட்டேன்.

இரண்டு நாட்கள் மொபைல் இல்லாமல் தான் இருந்தான். அந்த இரண்டு நாளும் அபர்ணாவிற்கு கால் ஏதும் வரவில்லை. மூன்றாம் நாள் புது மொபைல் வாங்கி வந்தான். அன்று இரவே வழக்கம் போல, அபர்ணாவிற்கு கால் வந்தது. ஆனால் அதே நம்பரில் இருந்து தான் வந்தது என்றாள். அப்படியென்றால் அவன் தொந்தரவு கொடுப்பதற்கென்றே தனியாக ஓர் சிம் வைத்திருக்கிறான் என்று ஊர்ஜிதமானேன். இது நாள் வரையிலும் அபர்ணாவிற்கு கால் வந்த நேரங்களில், தினேஷ் எப்போதும் அறையில் இருந்தது இல்லை. மொட்டை மாடியில் தான் இருப்பான். ஜானிடம் விஷயத்தை சொன்னேன். அவன் ஒரு மூன்று பேரை கூட்டி வந்தான், நேராக மொட்டை மாடிக்கு போனோம், யாரிடமோ பேசி கொண்டிருந்தான். தூரத்தில் நின்று கொண்டே அவன் நம்பருக்கு கால் செய்தோம், தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் என வந்தது, அப்ர்ணாவிற்கு வரும் ராங் கால் நம்பருக்கு போன் அடித்தோம், வெய்ட்டிங் வந்தது. அன்று இரவு அவனை காட்டு அடி அடித்து விட்டு, அடுத்த நாள் காலை போலிஸில் கம்ப்ளைன்ட் செய்தோம்.

எனக்கும் அபர்ணாவிற்கும் அப்படி ஒரு நிம்மதி, அபர்ணா ஜானை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னாள். ஜானிடம் விஷயத்தை சொன்னதற்கு, கூட வந்து அடிச்சதுக்கெல்லாம் நன்றியா என்று கேலி செய்தான். வரும் ஞாயிற்றுகிழமை ஜானிற்கு பிறந்த நாள் வருவதாகவும், அன்று மாலை Pelita-வில் சந்திக்கலாம் என்று சொன்னான்.

ஜானிற்கு ஏதேனும் வாங்கி கொடுக்க வேண்டும் போல் இருந்தது. என்ன வாங்குவதென்றே தெரியாமல் தலையை பிய்த்து கொண்டிருந்தோம். ஜான் ஓர் பழைய ஓட்டை போன் வைத்திருப்பதால், அவனுக்கு ஒரு புதிய போன் வாங்கி கொடுக்கவே முடிவு செய்தோம். அன்று ஏதேனும் சினிமாவிற்கு போகலாம் என்று அபர்ணா சொன்னாள், அவளே மூன்று பேருக்கும் சேர்த்து இணையத்தில் டிக்கெட்களை பதிவு செய்தாள். சினிமாவிற்கு போவதற்கு முன்பே, ஒரு மொபைல் ஷாப் போய் வாங்கி கொடுக்கலாம் என முடிவானது.

ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலான ஏடிம்களில் பணம் இருப்பதில்லை என்பதால் சனிக்கிழமை இரவே 10000 பணத்தை எடுத்து வைத்து கொண்டேன். அதில் ஸ்டார்களை போடவும் மறக்கவில்லை. முந்தைய நாள் இரவு ஜான் எல்லார்க்கும் பார்ட்டி கொடுத்ததால், மட்டையாகி காலை 10 மணிக்கு தான் எழுந்தேன். எல்லோருமே தூங்கி கொண்டு தான் இருந்தார்கள். பணம் இருக்கிறதா என்று எதேச்சையாக பர்ஸை எடுத்து பார்த்தேன், இருந்தது.

அபர்ணாவை நேரடியாக மொபைல் ஷாப் வர சொல்லி விட்டு, நானும் ஜானும் குளித்து முடித்து கிளம்பினோம். ஜானிடம் தியேட்டரிற்கு போவதற்கு முன்னர் ஒரு சிறிய வேலை இருக்கிறது, ஒரு மொபைல் ஒன்று வாங்க வேண்டும் என்றேன். யாருக்கு என்று கேட்டான், அபர்ணாவின் தங்கைக்கு என்று சொல்லி சமாளித்து விட்டேன்.

மொபைல் ஷாப்பில் மூவரும் சேர்ந்து 9000 ரூபாய்க்கு ஒரு மொபைலை தேர்வு செய்தோம். ஜானிற்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டோம், மிகவும் பிடித்திருப்பிதற்காக சொன்னான். அவனுக்கு சந்தேகம் வர கூடாது என்று அபர்ணாவும் தன் தங்கையிடம் அடிக்கடி போன் குறித்து பேசுவதாய் பாவனை செய்தாள். இன்று அனைவரும் விடைபெறும் போது கொடுப்பதாய் தான் ஏற்பாடு.

அபர்ணாவும், ஜானும் பேசி கொண்டிருக்க நான் மட்டும் Billing Section சென்றேன். பில்லை வாங்கி, பணம் கொடுக்க எண்ணினால், எத்தனை முறை எண்ணினாலும் 8000 தான் வந்தது. ஒருவேளை பணம் திருடு போயிருக்குமோ என்று சந்தேகம் வந்தது. எது எப்படி இருந்தாலும் மேன்ஷன் போய் பேசி கொள்ளலாம், இப்போது இங்கிருந்து கிளம்பும் வழியை பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். மீதி 1000 மட்டுமே இடிக்கிறது. அபர்ணாவிற்கு இந்த விஷயம் தெரிய வேண்டாமென்று, ஜானை கூப்பிட்டு 1000 ரூபாயை கடன் கேட்டேன்.

பர்ஸில் இருந்து எடுத்து, இரண்டு 500 ரூபாய்களை நீட்டினான். இரண்டிலுமே கவர்னர் கையெழுத்திற்கு கீழே மூன்று ஸ்டார்கள் இருந்தன.