Thursday, 16 August 2012

ஸ்வாதி ராஜீவ் (1)


ராஜீவ் எப்படியும் இந்த முறை ஸ்வாதியிடம் தன் காதலை சொல்லி விடலாம் என்று புறப்பட்ட போது, அவன் இரு விஷயங்களில் உறுதியாக இருக்க வேண்டும் என்றே புறப்பட்டான். அவள் நிராகரிக்கும் பட்சத்தில் ஒன்று அவளை வற்புறுத்த கூடாது, இரண்டாவது தான் அழக்கூடாது. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்றே பேசி விட வேண்டும். ஆனால் அவளை பார்த்து பேசி முடித்திருக்கையில், ராஜீவ் அவன் எதை செய்ய கூடாது என்ற உறுதியுடன் சென்றிருந்தானோ, அந்த இரண்டையுமே செய்திருந்தான், ஏனெனில் அவனது காதலை அவன் பயந்தது போலவே ஸ்வாதி நிராகரித்திருந்தாள்.     

இரவு வீட்டிற்கு வந்த பின்பும் கூட அவளுடைய நிராகரிப்பின் தகிப்பு மனதினுள் அடங்காமலே இருந்தது. அவளுக்கு என்ன காரணம் இருந்து விட முடியும் இவனை நிராகரிப்பதற்கு என்று இரவு முழுதும் தகித்து கொண்டிருந்தான். அவனுக்கு அதற்கென உடனடியாக ஒரு காரணம் தேவைப்பட்டது. அழகு, நிச்சயம் கிடையாது, சரீர அழகு பார்க்கும் பெண்ணே இல்லை அவள். பாசமின்மையும் நிச்சயம் கிடையாது, அப்படி அவளுக்கு பாசம்  இல்லாமல் போனால் எதற்காக 6 வருடங்களுக்கு மேலாகவும் நட்பு பாராட்ட வேண்டும்… என்று அதுவா, இதுவா என்று அவனை அவனே கேட்டு கொண்டு, அவனுக்கே அவன் பதில் அளித்து கொண்டிருந்தான். இறுதியில் தான் ஒரு பணக்காரனே இருப்பதே அவளுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்க கூடும் என்று அவனே ஒரு முடிவிற்கு வந்தான். ஏனெனில் பேச்சின் ஊடே அவள் பலமுறை அவள் பணக்காரர்கள் மேல் உள்ள அவநம்பிக்கையை பகிர்ந்திருக்கிறாள். அதுமட்டுமில்லாமல் ராஜீவ் பணக்காரனாய் இருப்பதாலும், அவனது வீடு பங்களாவிற்கு நிகரான வீடு என்பதாலும், இதுநாள் வரை இவனது வீட்டிற்கு அவள் வருகை தருவிக்கவில்லை. அவள் அவனை நிராகரித்ததற்கு என்ன காரணம் இருக்க கூடும் என்று படுக்கையில் கிடந்து யோசித்து கொண்டே இருந்தான், அவனுக்கு அதை விட்டால் வேறு வழியும் தெரியவில்லை.

’ஏன் இந்த சமூகம் பணக்காரர்களை வெறுக்கிறது. ஏன் பணக்காரர்களை அறிவு கம்மியானவர்களாகவும், அதிர்ஷ்டமிக்கவர்களாகவும், சோம்பேறிகளாகவும், திமிர் பிடித்தவர்களாகவுமே பார்க்கிறது. பணக்காரர்களை கணவான்களாகவும், வள்ளல்களாகவும் பார்த்த காலமெல்லாம் போய் விட்டது. பணக்காரர்களை அட்டை பூச்சிகளை போல் சமூகம் ஆரம்பித்துவிட்டது. இது ஒன்றும் திடீரென்று சமூகத்திடையே ஏற்பட்ட அபிப்ராயம் அல்ல. காலம் காலமாக மக்களின் மீது விதைக்க பட்ட நச்சு விதை. அந்த விதையை விதைக்க சினமா பெரும் சிரத்தை ஏதும் எடுக்காமல், ரொம்பவும் சாதரணமாக பெரும் பங்கு ஆற்றி விட்டது. அதன் விளைவே இன்றளவும், பணக்காரர்களுக்கு பெண் கொடுக்க இன்றளவும் பெண் வீட்டார் யோசிக்கின்றனர். ரோட்டில் குறுக்கே வந்தவன் மேல் கார் ஏற்றி விட்டால், விசாரணை ஏதும் இன்றி கார் உள்ளே இருந்தவனை மக்கள் அடிக்க கிளம்புகின்றனர். என்ன சமூகமோ இது?

படிக்காத மேதை, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் பணக்காரர்களை காட்டிய விதத்தையும் அங்காடி தெரு, வழக்கு எண் 18/9 போன்ற படங்களில் பணக்காரர்களை காட்டிய விதத்தையும் எளிதில் ஒப்பிட்டு பார்த்து, சினிமாவின் விஷத்தன்மையை தெரிந்து கொள்ளலாம்.

படங்களில் பணக்காரர்களே பிரதான வில்லன்கள். அவனே அவன் பெண்ணின் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பான், கள்ள கடத்தல் செய்வான், தொழிலாளிகளுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பவனாய் இருப்பான், இன்ன பிற… பெற்றெடுத்த பெண்ணை ஒருவன் காதலிப்பதற்காக துரத்தினால் எவனாக இருந்தாலும் கண்டிக்க தான் செய்வார்கள், இது எல்லார் வீட்டிலும் சமயம் வந்தால் செய்யும் தவறாத ஒன்று, ஆனால் இதையே பணக்காரர்களும் கையாளும் போது அவனுக்கு மக்கள் வைக்கும் பெயர், பணத்திமிர் பிடித்தவன். காதலிக்கும் நாயகன் மட்டும் நல்லவனாம், அவன் அவ்வளவு நல்லவனாக இருந்தால் அவன் ஏன் அடுத்த வீட்டு பெண்ணை காதலிக்கிறான், நல்லத்தனமாய் வீட்டில் சொல்லி வீட்டில் பார்க்கும் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தானே, அதை இந்த மக்கள் உணர மாட்டார்கள், பணக்காரர்களையே குற்றம் சொல்வார்கள். இப்படி படம் எடுப்பதால், பொட்டு பொடுசுகள் எல்லாம் காதலிப்பதே ஹீரோயிசம் என்று வீதியில் போகும் பெண்களையெல்லாம் துரத்தி கொண்டிருப்பதை இவர்கள் அறிவார்களா?

கள்ளக்கடத்தல் செய்பவர்களே பணம் சம்பாதித்து பணக்காரர்கள் ஆகிறார்கள். ஆனால் இந்த சினமாக்கள் எப்படி காட்டுகின்றது என்றால் பணக்காரர்கள் ஏதோ கள்ளக்கடத்தல் செய்வது போல் காட்டுகின்றனர். கள்ள கடத்தல்காரர்களும், போலி அரசியல்வாதிகளும் எங்களின் பணக்கார வாழ்க்கை பிடித்திருக்கிறது. பணக்கார வாழ்க்கையை விரும்பி அவர்கள்  பணக்காரர்கள் ஆனால் அதற்கு நாங்கள் என்ன செய்வது, நாங்கள் ஏன் புறக்கணிக்க படுகிறோம், நாங்கள் ஏன் அந்நியமாக பார்க்க படுகிறோம்?

தொழிலாளிகளை நாங்கள் சுரண்டுகிறோமா? இதோ என் அப்பாவின் தொழிற்சாலையையே எடுத்து கொள்வோம்.. அசோக் லேலாண்ட் மற்றும் கேட்டர்பில்லர் வாகனங்களுக்கு என் அப்பா தான் பல்சக்கரங்கள் (Gear manufacturing) செய்து தருகிறார். தொழிற்சாலைக்கு என் பெயர் தான் வைத்துள்ளார். எந்த தொழிலாளிக்கும் 12000த்திற்கும் குறைவான சம்பளம் என் அப்பா கொடுப்பதில்லை. எல்லோருக்கும் 12000 அல்லது அதற்கு அதிகமான சம்பளம் தான். வருடா வருடம் 750 ரூ ஊதியத்தை உயர்த்தி கொடுக்கிறார். ஆனாலும் எங்கள் ஆலை தொழிலாளர்கள் வருடம் ஒரு முறையாவது செங்கொடிகளை பிடித்து கொண்டு போரட்டம் செய்து என் அப்பாவிற்கு தலைவலியை கொடுக்கின்றனர். இதனால் வருடத்திற்கு குறைந்தது 2 நாட்களாவது எங்கள் கம்பெனியின் Production பாதிக்கப்படும். இத்தனைக்கும் தீபாவளி அன்று எல்லோருக்கும் இரட்டை சம்பளம் அளிக்கப்படுகிறது. ஆனாலும் அவர்களுக்கு திருப்தியில்லை.

என் அப்பா ஒன்றும் எனது தாத்தாவின் பணத்தில் இந்த Industryனை ஆரம்பித்துவிடவில்லை. என் அப்பா அவர் வங்கி வேலைக்கு சென்றிருந்த போது, காசு சேமித்து, கடன் வாங்கி, லோன் போட்டு என பெரும் பணத்தை திரட்டி இதில் முதலீடு செய்திருக்கிறார். ஆரம்பித்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போதெல்லாம் நான் ட்ரவுசர் போட்ட சிறுவனாய் தொழிற்சாலையை சுற்றி வந்தது ஞாபகம் இருக்கிறது. ஒவ்வொரு தொழிலாளியை சேர்க்கும் போதும் இவ்வளவு தொகையை தான் எங்களால் சம்பளமாய் தர முடியும், வேலைக்கு சேர சம்மதமா என்று கேட்டுவிட்டு தான் ஆட்களை வேலைக்காக எடுக்கிறோம். சம்மதமில்லை என்றால் போக வேண்டியது தானே, சம்மதம் என்று சொல்லி 6 மாதம் வேலைக்கு வந்து தொழிலை கற்று கொண்ட பின்னர் ஏன் செங்கொடியை பிடிக்க வேண்டும்? அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இருக்கிறதே, அவர்களது உழைப்பால் தான் லாபம் வருகிறதாம், எங்கள் கம்பெனியில் அவர்களது உழைப்பே பெரும் பங்கு வகிக்கிறதாம். அது உண்மையாகவே இருந்து விட்டு போகட்டும், எந்த முதலீடும் இல்லாமல் வெறும் உழைப்பு மட்டுமே லாபத்தை கொண்டு வந்து விடுமா, அந்த முதலீட்டை என் அப்பா தானே போட்டுள்ளார், அதனால் என் அப்பா இல்லாமல் அவர்கள் ஏது, அவர்களின் உழைப்பிற்கு பலன் ஏது. இது அவர்களுக்கு புரியவில்லை, இதை சொல்லவும் ஆளில்லை, சொன்னால் அவன் திமிர் பிடித்தவன். சரி, முதலீடு லாபத்தில் ஓடி கொண்டு இருக்கும் போதும் அவ்வப்போது நஷ்டம் அடையும் போதும், மாதம் மாதம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் எப்போதும் கை வைத்ததில்லையே, இது ஏன் அவர்களுக்கு புரியவில்லை, என்று தெரியவில்லை. முழுதாக தொழிற்சாலையை கட்டி 12 வருடம் ஆன பின்பும் என் அப்பா கடன்களுக்கான வட்டியை கட்டிய படியே தான் இருக்கிறார். ஒரு வேளை எங்களின் முதலீடு மொத்தமாக நஷ்டம் அடைந்திருந்தால், எங்கள் குடும்பமே ஒன்று தற்கொலை செய்து கொண்டிருக்கும் அல்லது ஊர் ஊராய் கடன்காரர்களுக்கு பயந்து ஓடி கொண்டு இருந்திருக்கும். இதை பற்றியெல்லாம் எந்த சினிமாக்காரர்களுக்கும், செங்கொடிகாரர்களுக்கும் கவலையில்லை. அவர்களுக்கு தேவை அதிக சம்பளம், மிக அதிக சம்பளம்.

சினிமாக்காரர்களுக்கு நிஜத்தில் கதைகள் கிடைப்பதில்லை. கதை வேண்டுமென்றால் செய்தித்தாள்களை புரட்ட ஆரம்பித்து விடுகின்றனர். எங்கோ ஒருவன் தொழிலாளிக்கு 1500 ரூபாய் சம்பளம் கொடுத்து சுரண்டி வாழ்ந்தால், அதுவே பிரதானமாய் இருப்பதாய் சினிமாக்களில் காட்டுகின்றனர். அதை பார்த்து இன்னொரு முதலாளி நாமும் ஏன் தொழிலாளிகளுக்கு 1500 ரூபாய் சம்பளம் தரக்கூடாது என்று முடிவு செய்து விட்டால் என்ன ஆவது, இதையெல்லாம் யோசிக்காத அளவிற்கு இந்த சினிமாக்காரர்கள் மடையன்களாக இருக்கின்றனர். ஏதோ ஒரு இந்தி படத்தை பார்த்து வந்து பாரிஸ் கார்னரில் ஒரு சிறுவன் அவனது ஆசிரியையை கத்தியால் குத்தியிருக்கிறான், இதற்கு என்ன சொல்கிறார்கள், இப்படி தான் மக்கள் மனதில் நஞ்சை கலக்கிறார்கள் இந்த சினிமாக்காரர்கள். இப்படி தான் பணக்காரர்களை மக்களிடம் இருந்து அந்நியப் படுத்தியிருக்கிறார்கள்.

பணக்காரர்கள் என்றாலே ஓடி விடுங்கள் என்று மனதளவில் இங்கு எல்லருக்கும் பதிவாகி விட்டது போலும். இதனால் தான் என் காதலும் நாசமாய் போய் இருக்கிறது, பேசாமல் திரையரங்குகளே இல்லாத நேபாளத்திலே பிறந்திருக்கலாம்….’

      என்று என்னவெல்லாமோ யோசித்து யோசித்து குழம்பி கடைசியில் தூங்கி போனான் ராஜீவ். ஆனால் உண்மையில் இவன் பணக்காரன் என்பதால் ஸ்வாதி இவனை நிராகரிக்கவில்லை, அதற்கு காரணம் இருக்கிறது என்பதை ராஜீவ் அப்போதைக்கு அறிந்திருக்கவில்லை….


                                                (தொடரும்…..)





Saturday, 11 August 2012

எலி


ஒரு நாள் அலுவலகம் கிளம்பும் போது நான் தங்கியிருக்கும் அறையை பூட்டி விட்டு 10 அடி நகர்ந்திருப்பேன், செல்போனை உள்ளேயே வைத்து பூட்டி வந்து விட்டதை உணர்ந்து, திரும்பி அறையை நோக்கி நடக்கலானேன். அறையை திறந்து பார்த்தால் ஒரு எலி குட்டி என்னுடைய நட்ட நடு கட்டிலில் சொகுசாக அமர்ந்திருந்தது. நான் உள்ளே வந்த நின்ற போது கூட அந்த எலி என்னை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. ஹூய் என்று ஒரு விரட்டு விரட்டியதும் தான் அது அங்கிருந்து விறுவிறுவென கட்டிலில் இருந்து கீழே இறங்கி, ஷெல்ப் மேலே வரை ஏறி, மேற்கூரைக்கு சென்று, அங்கிருந்து Fan-ற்க்கு போட பட்டிருந்த Beamல் ஏறி, Cement sheetல் இருக்கும் சந்தில் புகுந்து ஓடிற்று. நான் செல் போனை எடுத்து கொண்டு கிளம்பி வந்து விட்டேன்.

அடுத்த நாள் இரவு, கடையில் சாப்பிட்டு திரும்புகையில் 1 வாழைப்பழம் சாப்பிடுவதற்கும், 2 வாழைப்பழம் அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் என 3 வாழைப்பழமாக வாங்கி கொண்டேன். அறைக்கு வந்து மீதமிருந்த 2 வாழைப்பழத்தை Shelfன் மீது வைத்தேன். இதற்க்கிடையில் என் அறையில் ஒரு எலி குட்டி இருப்பதையே மறந்து போனேன். அடுத்த நாள் தூங்கி எழுந்து பார்த்தால் அந்த 2 பழங்களிலும் எலி கைவரிசையை காட்டி இருந்தது. பழத்தை முழுவதுமாக சாப்பிட்டு இருந்தாலும் பரவாயில்லை, இரண்டிலுமே அங்கங்கே கொறித்து விட்டு சென்றிருந்தது. இனி இந்த பழங்களை சாப்பிட முடியாது என்று குப்பை கூடையில் போட்டு விட்டேன். போட்ட பிறகு மனசு கேட்கவில்லை, சரி, அதுவும் சாப்பாட்டிற்கு என்று, அந்த பழங்களை குப்பை கூடையில் இருந்து எடுத்து அறையின் ஒரு மூலையில் வைத்து விட்டேன். அன்று மாலை வேலைக்கு  சென்று திரும்பி வந்து பார்க்கையில் இரு பழங்களிலுமெ முக்கால்வாசி அளவு காலி ஆகி இருந்தது. அடுத்த நாள் காலை எழுந்து பார்த்ததில் வாழைப்பழ தோல் கூட மிஞ்சாமல் மொத்தமாக காலி ஆகி இருந்தது.

பின்னொரு நாளில், அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் அப்துல் பேக்கினை, எங்கள் அலுவலகத்தில் எங்கோ ஒளிந்திருக்கும் எலி துவம்சம் பண்ணி இருந்தது. அதனால் அவன் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானான். புதிதாக வாங்கியிருந்த விலை உயர்ந்த பேக் என்பதால் விடாமல் புலம்பி தீர்த்தான். எனக்கும் கொஞ்சம் திக்கென்று இருந்தது, எனது அறையில் இருக்கும் எலியும் இது போல் ஒரு துவம்சத்தை கையாண்டால் என்ன செய்வது என்று கலக்கமுற்றேன். அதற்கு உணவு கிடைக்காததன் காரணமாகவே இப்படி கண்டதையும் கொறித்து வைக்கிறது, மாறாக அதற்கு நாமே கொஞ்சம் உணவளித்து விடலாம் என்று தீர்மானித்துக் கொண்டேன். அதை எந்த நேரத்தில் தீர்மானித்தேனோ, அதை அப்பவே மறந்து விட்டிருந்தேன். அன்று மாலையும் நினைவு வரவில்லை. அடுத்த நாள் காலையும் நினைவு வரவில்லை. அடுத்த நாள் அப்துல் புது பேக்கோடு வந்து போது தான் நினைவு வந்தது. சரி இன்றிலிருந்து ஆரம்பித்து விடலாம் என்று அறைக்குள் நுழையும் போதே நான் கண்ட காட்சி என்னை முகம் சுளிக்க வைத்தது.

நான் கதவை திறந்தவுடனே எலி குட்டி இந்த முறை மேஜை மேல் இருந்து முன்பு ஓடியது போல் ஓடி கூரைக்கு நடுவில் புகுந்து ஓடிற்று. மேஜை மீது பார்வையை சுழற்றி பார்த்தால் water bottle, shoe polish, shaving set என எல்லாமும் கலைந்திருந்தும், விழுந்திருந்தும் கிடந்தது. எதேச்சையாய் தான் சோப்பை பார்த்தேன். இன்னும் ஐந்து, ஆறு தினங்களில் தீர்ந்து விடக்கூடிய Lux Soap அது, சன்னமாக இருந்தது. அதை உணவு என்று நினைத்தோ, என்னவென்று நினைத்தோ, 3 இடத்தில் கொறித்து இருந்தது. இதை கடித்து விட்டதால் ஒன்று பெரிய நஷ்டமல்ல, இதை இப்படியே விட்டு விட்டால் நாளை என்ன விபரீதம் வருமோ என்று என் மனது யூகத்திற்கு கை கால முளைக்கவிட்டது. இதை சமாளிக்க சோற்று பருக்கைகளையோ, பிஸ்க்கட் துண்டினையோ கொஞ்சம் கொஞ்சமாக ரூமை விட்டு தள்ளி வைத்து கொண்டே வந்தால், ஒரு நாள் எலி என் ரூமை மறந்து விட்டு வேறு இடம் குடிபெயரக்கூடும் என்று ப்ரவீனிடம் ஆலோசித்து பார்த்தேன். அவன் அதெல்லாம் சரிப்பட்டு வராது, பேசாமல் ஒரு Gum pad ஒன்றை வாங்கி எலி அடிக்கடி நடக்கும் இடத்தில் வைக்க சொன்னான். அதில் இருக்கும் வாசனையை முகர்ந்து எலி அதன் மேல் நடக்கும் போது, எலியின் கால்கள் அதோடு ஒட்டி கொள்ளும், அதன் பின் அதை அப்படியே அடித்து கொள்ள வேண்டியது தான், இல்லையேல், தண்ணீரில் முக்கி கொள்ள வேண்டியது தான் என்று யோசனை சொன்னான். நான் பதறி போய், அது துடிக்குமே என்ன செய்ய என்று கேட்டேன். அது துடித்தால் துடித்து கொண்டு போகிறது, உனக்கென்ன என்றான். பொதுவாகவே எலி, பூச்சி, பூரான், பாம்பு இது போன்ற வஸ்துக்களுக்கு நான் பெரிதும் பயப்படுபவன். புலி, சிங்கம் என்றால் அது வேறு மாதிரியான பயம். ஆனால் இது தரும் அருவருப்பு கொஞ்சமும் சகித்து கொள்ள முடியாதது. அதனால் இந்த Gum pad சமாச்சாரமெல்லாம் வேண்டாம் என்று முடிவிற்கு வந்து விட்டேன்.

பேசாமல் எலி மருந்து ஒன்றை வாங்கி, உணவில் கலந்து வைத்து கொடுத்து அதை கொல்வது தான் வழி என்று கடைக்கு போய் எலி மருந்து கேட்டேன். அவன் Mortein Cake தான் இருக்கிறது, இதை முயற்சி செய்து பாருங்கள், எலி வீட்டினுள்ளே சாகாமல் வெளியே போய் சாகும் என்று விளம்பரத்தில் வருவது போலவே சொன்னான். சரி, இது போல் ஒன்று தான் நமக்கேத்தது என்று வாங்கி வந்தேன். ஒரு பேப்பர் வெய்ட்டை விட சற்று பெரியதாக இருந்தது.

என் அறையில் இருக்கும் எலியை தவிர என் அலுவலகத்திலும் ஒரு எலி இருக்கிறதே, அதுவும் என்றாவது ஒரு நாள் என் Bagற்கு வேட்டு வைக்கும் என்று, வாங்கி வந்த Cakeனை இரண்டாக வெட்டி, ஒரு துண்டினை ஷெல்ப் மேல் பத்திரமாக காகிதம் சுற்றி வைத்தேன், இன்னொரு துண்டினை எலி அடிக்கடி நடக்கும் இடமான மேஜைக்கு கீழே ஒரு பேப்பர் வைத்து அதன் மேல் துண்டினை வைத்தேன். அது பெயருக்கு தான் Cake என்று இருந்ததே தவிர அது Biscuit மாதிரி இருந்தது. வைத்துவிட்டு, அடுத்த நாள் தூங்கி எழுந்து பார்த்தால் பேப்பரையும் காணோம் அதன் மேல் வைத்திருந்த துண்டினையும் காணோம். அது கூட பரவாயில்லை ஷெல்ப்பின் மேல் என் அலுவலக எலிக்கென்று வைத்திருந்த மற்றொரு துண்டினையும் காணோம். எப்படியோ அதையும் மோப்பம் பிடித்து அதையும் முடித்து விட்டிருக்கிறது. அப்பாடா, எப்படியோ எலி சாப்பிட்டு விட்டது இனி இறந்து விடும் என்று நிம்மதியாக அலுவலம் கிளம்பினேன். போகும் போது அது வெளியே சென்று சாவதற்கு வசதியாக ஜன்னல்கள் எல்லாம் திறந்து விட்டு சென்றேன். அந்த நாள் இரவு எலி இருக்கும் தடயம் ஒன்று பெரிதாய் இருந்திட வில்லை, சோப்பு கட்டியினை பார்த்தேன், கொறிக்க படாமல் இருந்தது, நாளை வேறு ஒரு சோப்பு வாங்கி தான் ஆக வேண்டும், ரொம்பவும் சன்னமாகி விட்டது. அந்த நாள் கொஞ்சம் நிம்மதியாகவே தூங்கி எழுந்து பார்த்தால் அந்த சோப்பை மொத்தமாகவே காணோம். சோப்பு போனது பற்றி ஒன்றும் பிரச்சனையில்லை, ஒரு முழு கேக்கையும் சாப்பிட்டு விட்டும் கூட அது சாகாமல் இருப்பது தான் என்னை திகைக்க வைத்து விட்டது. இதை பற்றி நண்பர்களிடம் விசாரித்த போது பக்கத்தில் நீர் நிலைகளோ, குட்டையோ, சேற்று தண்ணீரோ இருந்தால் எலி சாகாது என்று சொன்னார்கள்.

அப்போது பார்த்து ஆகஸ்ட் மாதம் வேறு, சென்னையில் எப்போது மழை பொழியும், எப்போது வெயில் அடிக்கும் என்றே கணிக்க முடியாத மாதம் இது. மழை பொழிந்தால், எப்படியும் ஒரு பொழுதிற்கு நான் தங்கியிருக்கும் இருக்கும் இடத்தை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கவே செய்யும். இனி Gum pad வாங்குவது தான் உத்தேசம் என்று முடிவிற்கு வந்தேன். சென்னையில் யாருக்கும் அது பற்றி தெரிந்திருக்கவில்லை, நான் கடை கடையாய் ஏறி பார்த்தும் அது எனக்கு கிடைக்கவில்லை. சில கடைகளில் அது என்னவென்று நான் விலாவரியாக விளக்க வேண்டியதாய் போயிற்று. சலிப்புற்றவனாய் இந்த Cakeனையே மறு முறை முயற்சி செய்து விடலாம் என்று முடிவிற்கு வந்தேன், வெறும் 11ரூபாய் தானே என்பதினால் கூட நான் அந்த முடிவினை எடுத்திருக்கலாம்.

இந்த முறை வைக்கும் போது முழு கேக்கினையும் அப்படியே வைத்தேன். தண்ணீர் தேடி வெளியே போய் விட கூடாது என்று  கதவு ஜன்னல்களை எல்லாம் மூடி வைத்தேன். அடுத்த நாள் காலை பார்த்த போது, முன்பு போலவே கேக்கையும் காணோம், பேப்பரையும் காணோம். இந்த முறை எலியை எப்படியும் விடக்கூடாது என்று முழு வெறியில் இருந்தேன். எதற்கோ Cake cover-ல் கண்களை சுழல விட்ட போது, அந்த கேக்கினை எலி சாப்பிடுவதால் ரத்த நாளங்கள் வெடித்து சாக கூடும் எனவும், மெதுவாய் தான் வேலை செய்யும் எனவும், 90% எலி வெளியே போய் சாகும் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. ரத்த நாளங்கள் எல்லாம் வெடித்து என்ற வார்த்தையை படிக்கும் போது ஒரு சின்ன பூரிப்பு ஏற்படவே, அதையே இன்னொரு முறை படித்து கொண்டேன்.

முந்தைய சோப் தீர்ந்து விட்ட படியால் கடைக்கு சென்று ஒரு புது சோப்பினை வாங்கி வந்தேன். இந்த முறை சற்று விலை கூடுதலான Park Avenue Soap வாங்கி வந்தேன். அதன் வாசனையே கும்மென்று இருந்தது. இந்த சோப்பும் அடுத்த நாள் எலியின் பற்களால் கொறிக்க படவே, கடும் மன உளைச்சலிற்கு ஆளானேன். சோப்பினை மூடி போட்டு மூடி வைக்க முடியாது, அடுத்த நாள் சோப் கொழகொழவென்று ஆகிவிடும். சோப்பினை குளியலறையிலும் வைக்க முடியாது, ஏனெனில் அது ஒரு Common bathroom. முடிவாய், குளித்து முடித்து வந்தவுடன் சோப்பை கவரில் போட்டு ஆணியில் மாட்ட ஆரம்பித்தேன். இந்த திட்டம் ஓரளவிற்கு கை கொடுத்தது. சோப் பாதுகாக்கப்பட்டது.

இப்போது பிரச்சனை என்னவென்றால், இவ்வளவு நாளும் எலி இருக்கிறதா இல்லையா என்று சோப் கொறிக்கப்படுவதை வைத்து அறிந்து கொள்ளலாம், இனி அது கஷ்டம், நாமே கண்ணால் பார்த்தால் தான் உண்டு என்று நினைத்து கொண்டே, Shelf-ல் மடித்து வைத்திருந்த என் வெள்ளை சட்டையை வெளியே கிளம்புவதற்காக எடுத்தேன். எடுத்தால், துணிகளுக்கு இடையே ஒண்டி கொண்டிருந்தது எலி. இம்முறையும், அந்த எலி என்னை பார்த்து ஓடவில்லை. இந்த முறை ஹூய் என்று ஒரு விரட்டு விரட்டியும் ஓடவில்லை. கையில் வைத்திருக்கும் சட்டையை ஏதாவது கொறித்து வைத்திருக்கிறதா என்று அவசரமாக பார்த்தேன், நல்ல வேளையாக அப்படி ஒன்றும் இல்லை, அது நடந்து போன குட்டி குட்டி கால்தடங்கள் மட்டுமே இருந்தது. அதை தட்டி விட்டவுடன் போயிற்று. அந்த எலியை இந்தமுறை தான் ரொம்ப நேரம் சேர்ந்தாப்போல் பார்க்க முடிந்தது, எலி மந்தமாக காணப்பட்டது, இல்லாமல் போனால், இந்நேரம் அது ஓடியிருக்க கூடும். அப்போது ரூமில் ஒரு காலி Boost பாட்டில் இருந்தது, அதற்குள் எலியை அடைத்து தூக்கி போட்டு விடலாம் என நினைத்து, பாட்டிலை எடுத்து பக்கம் நெருங்கினேன். என் திட்டம் தெரிந்தால் அது என்ன மாதிரியான் ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை யூகிக்க முடியாத வண்ணம் இருந்தது. அதனால் பக்கத்து ரூமில் இருந்த பையனை அழைத்து வந்து உதவி கேட்டேன். அவன் எலி கடித்து விட்டால் என்ன செய்வது என்று ஒதுங்கி கொண்டான். இவனை கூப்பிட்ட பாவத்திற்கு எலி கடிக்கும் என்று வேறு ஒரு உப தகவலை சொல்லி பீதியை கிளப்பி விட்டு சென்று விட்டான். பிறகு, நானே என் மனதில் துணிவை வரவழைத்து கொண்டு, பாட்டிலை எலியின் முகத்திற்கு நேராக கொண்டு வந்து, பாட்டிலின் மூடியை எலிக்கு பின் பக்கமாக மெல்ல மெல்ல எடுத்து வந்தேன். அப்படியே, மூடியோடு தள்ளி அடித்து விடலாம் என்று செயல் பட்டு கொண்டிருந்தேன், அது என் திட்டத்தை புரிந்து கொண்டது போலும், அது கீழே இறங்கி விடுவிடுவென ஓடி விட்டது. ஆனால் வழக்கத்தை விட வேகம் கம்மியாக தான் ஓடியது.

நான் பார்த்த மற்ற எலிகளை விடவும் இது அழகானதாகவே தோன்றிற்று. சிறுசிறு குறும்புகளை செய்தாலும் பொறுத்து கொள்ளலாம், தினம் கொஞ்சம் சோறு வைத்து நாமே பார்த்து கொள்ளலாம் என்று மனதில் ஒரு சிறு யோசனை வந்தது. அதன்பின் அவசர வேலை காரணமாக வெளியே கிளம்பி விட்டேன்.

அறைக்கு திரும்பி, கதவை திறந்ததுமே கெட்ட வாடை அடித்தது. எலி செத்து விட்டதால் தான் இப்படி நாறுகிறது என்று எளிதில் யூகித்து விட்டேன். இவ்வளவு நாளாய் இல்லாமல் இன்று தான் அதற்காக கரிசனப்பட்டேன், இன்றா அது சாக வேண்டும். சரி எங்கு செத்து விழுந்திருக்கிறது என்று ஒவ்வொரு இடமாக தேடினேன். மேஜை அடியிலும், கட்டில் அடியிலும் கீழே குனிந்து பார்த்தேன். கிடைக்கவில்லை. ஷெல்ப்பை நகர்த்தி பார்த்தேன், கிடைக்கவில்லை. Computer table அடியிலும் பார்த்தேன், கிடைக்கவில்லை. எங்கேயும் கிடைக்கவில்லை. அதற்கு மேல் தேட எனக்கு பொறுமையும் இல்லை, தெம்பும் இல்லை, ரொம்பவும் அலுப்பாக இருந்தது, அன்று ஒரு நாள் பக்கத்து பையன் அறையில் போய் படுத்து கொண்டேன். அடுத்த நாள் எழுந்ததே தாமதமாக எழுந்தேன். எழுந்து அலுவலகம் கிளம்புவதற்கே சரியாக இருந்தது. அன்றும் முந்தைய இரவு அடித்தது போலவே கெட்ட வாடை அடித்தது. சம்பிரதாயத்திற்காக ஒரு தேடு தேடினேன், அகப்படவில்லை. வந்து தேடி கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அலுவலகம் முடித்து நேரே அறைக்கு வராமல் தி.நகர் சென்று ஒரு ஷாப்பிங் பண்ணி வந்ததில் அன்றும் உடல் சோர்வு, சம்பிரதாய் தேடல், ஒத்திப் போடல். ஆனால் காலையை விட, இரவு ரொம்பவும் வாடை அடித்தது போல் இருந்தது. இதே போல் நாளையும் ஒத்தி போட முடியாது, ஏனெனில் நாளை அலுவலகம் போய் வந்து சொந்த ஊரிற்கு கிளம்ப வேண்டும். போனால் 2 நாட்கள் கழித்து தான் வர முடியும், அத்தனை நாள் அறையை நாற்றத்தில் விட முடியாது.

அதனால் அடுத்த நாள் அலுவலகம் முடித்து வந்து எலியை தேடுவதற்கு ஆயுத்தமானேன். அறைக்குள்ளே நுழைய முடியாத அளவிற்கு கெட்ட நாற்றம். அறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் வெளியே எடுத்து வந்து ஆராய்ந்து வெளியே ஓரமாக வைத்தேன். அறையில் பல்வேறு இடங்களில் எலி புழுக்கைகளாக இருந்தது. அறையையே மொத்தமாக காலி செய்து வெளியே வைத்தும் கூட எலி கிடைக்கவில்லை. இவ்வளவு நேரம் தேடியும் கிடைக்காததால் மனம் சலிப்பும், வெறுப்பும் ஒரு சேர அடைந்தது. சரி, ஊரிற்கு போகிற வழியை பார்ப்போம் என்று தேவையான 2-3 துணிகளை எடுத்து வைத்து கொண்டு, Mobile charger, படிக்க தேவையான 2 புத்தகங்களையும் எடுத்து ஒரு Travel bag-ல் போட்டு கொண்டு Pack செய்தேன். அறையை பெறுக்கி, தண்ணீர் போட்டு துடைத்து விட்டு, எல்லா பொருட்களையும் பழைய படி இருந்த இடத்தில் வைத்து விட்டு கிளம்பினேன். 2 நாள் கழித்து இதே போல் இன்னொரு முறை எலியை தேட வேண்டும் என்று நினைத்த போதே ரொம்பவும் சோர்வாக இருந்தது.

வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு போய் நிற்பதற்கும், ஒரு கோயம்பேடு பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. ஏறினால் பஸ்ஸே காலியாக தான் இருந்தது. ஒரு ஸீட்டில் உட்கார்ந்து கொண்டேன். சில்லரை இல்லாத்தால் 15 ரூபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாயை நீட்ட வேண்டியதாய் போயிற்று, கண்டெக்டர் முறைத்தவாறு 5 ரூபாயாவது இருக்கானு பாருங்க என்றார், அவர் சொல்கிறாரே, என்று இல்லாத 5 ரூபாயை பொய்யாக தேடி, இல்லை என்றேன். மீதி 85 ரூபாயை கொடுத்து விட்டு, அடுத்த ஸீட் நகர்ந்தார். அவரும் 100 ரூபாயை நீட்ட அவர் புலம்ப ஆரம்பித்து விட்டார். CMBT போக எப்படியும் 1 மணி நேரம் ஆகும் என்பதால் ஹெட் போனை எடுத்து கொண்டிருந்தேன். அப்போது என்னருகில் இருப்பவர்கள் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் எங்கேயோ கெட்ட நாற்றம்  அடிக்கிறது என்று பேசி கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் அதுவே பெரிய சலசலப்பு ஆகி விட்டது. ஆனால் எனக்கு இந்த நாற்றம் பற்றி ஒரு உணர்வும் வராமல் இருந்தது. இவ்வளவு நேரமும் செத்த எலியின் நாற்றத்தில் இருந்ததால் என் வாசனை உணர்வே மறுத்து போய்  விட்டதா என்று எனக்கே சந்தேகம் வந்து விட்டது. அதே சமயம், இந்த நாற்றம் ஏன் நமது செத்த எலியின் நாற்றமாய் இருக்க கூடாது என்ற சந்தேகம் வர, குதூகலமாய் Travel Bag-ல் இருக்கும் ஒவ்வொரு ஜிப்பையும் சோதனையிட்டேன். பையின் முன்னாடி சின்னதாய் திறந்து இருந்த குட்டி ஜிப்பில் எலி செத்து கிடந்ததை பஸ்ஸின் மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. இதற்குள் எப்படி தான் போனதோ தெரியவில்லை. எலி Bag-ன்னுள்ளே கிடந்ததை கண்ட பின்பு சந்தோஷம் கொந்தளித்தது. ஆனால் அதை வெளிகாட்டி கொள்ளாமல், அடுத்து வந்த பஸ் ஸ்டாப்பிலே இறங்கி கொண்டேன். நான் இறங்கியதை கண்டெக்டர் விநோதமாய் பார்த்ததை கவனிக்க முடிந்தது, ஆனால் அதை கண்டு கொள்ளாமல் நான் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு காலி இடம் தேடி நடந்து கொண்டிருந்தேன். ஒரு மூடிய டீ கடையின் பெஞ்சின் மேல் Bag-ஐ வைத்து, ஒரு பேப்பரின் உதவி கொண்டு செத்த எலியை தூக்கி குப்பை தொட்டியில் போட்டேன். ஒரு தெரு நாய், நான் ஏதோ உணவை தான் தூக்கி போடுகிறனோ என்று ஆவலாய் வந்து முகர்ந்து பார்த்து விட்டு திரும்ப அதன் இடத்திலே சென்று படுத்த கொண்டது.

நான் திரும்பவும் இறங்கிய பேருந்து நிலையத்திற்கே வந்து அடுத்த CMBT பஸ்ஸிற்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.




Friday, 29 June 2012

A Review about Zero degree


நான் ஆரம்பத்தில் சாரு நிவேதிதாவை பற்றியும், ஜீரோ டிகிரி நாவலை பற்றியும் ஒன்றையும் அறிந்திருக்கவில்லை. எனது நண்பன் ப்ரவீன் தான், விகடனில் வெளி வந்த “மனம் கொத்தி பறவை” தொடரை பார்த்து சாரு நிவேதிதாவால் ஈர்க்கப்பட்டான். ஈர்ப்பின் விளைவாய், சாருவின் நாவல்களின் ஏதேனும் ஒன்றினை வாங்கி முயற்சி செய்து பார்க்க ஆர்வமானான். நான் சென்னையில் இருப்பதால் என்னிடம் சொல்லி ஜீரோ டிகிரி நாவலை கூரியர் செய்து விடுமாறு கேட்டான். கடை கடையாய் ஏறி இறங்கி பார்த்தேன், எதிலும் கிடைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக தி.நகரில் உள்ள ஓர் புத்தக கடையில் பெரிய தேடலக்கு பின் கிடைத்தது. நாவலின் 5 பக்கம் கூட புரட்டி இருக்கவில்லை, எழுத்தாளரை பற்றியும் எழுத்தை பற்றியும் மொத்தமாக அருவருப்பான அபிப்ராயம் வந்து விட்டது. அதன் பின் அந்த புத்தகத்தை அவனிடமே கூரியர் செய்து அவனையே  படிக்க சொன்னேன், படித்து விட்டு அவனது கருத்தையும் முன்மொழியுமாறு கேட்டு கொண்டேன். படிக்கும் போது நான் எப்படி உணர்ந்தேனோ, அவனும் அதே போல் தான் உணர்ந்தான், ஆனால் அவன் என்னை போல் வாசிப்பதை நிறுத்தவில்லை, தொடர்ந்து படித்தான். காசு கொடுத்து வாங்கியாயிற்று இனி என்ன செய்ய முடியுமென்று படிக்கிறானோ என்று நினைத்து கொண்டேன். ஆனால், நாவல் முழுதையும் படித்து விட்டு, ஒன்றுமே புரியவில்லை, ஆனால் நாவல் பிடித்திருந்தது, நீயும் படித்து பார் என எனக்கு பரிந்துரைத்தான். அவன் எந்த புத்தகம் படித்தாலும் அந்த புத்தகத்திலே அதற்கான விமர்சனத்தையும் எழுதி விடும் பழக்கமுடையவன் . அவன் ஜீரோ டிகிரி நாவலுக்கு என்ன விமர்சனம் அளித்திருக்கிறான், என பக்கங்களை திருப்பி பார்த்தால், அதில் இருந்தது, பெரியதாய் ஒரு கேள்விக்குறி.

அந்த கேள்விக்குறியே ஒரு தூண்டிலாய் வினையாற்றி என்னை மீனை போல் கொத்தி இழுத்து, ஜீரோ டிகிரி நாவலை படிக்க தூண்டியது. அவன் கேள்விக்குறிய இடத்தில் நானும் கேள்விக்குறி இட கூடாது, என்று தீர்மானித்து படிக்க முடிவு செய்தேன். ஆனால் எடுத்த எடுப்பிலே ஜீரோ டிகிரியை தொட வேண்டாம் எனவும் சாருவின் இன்ன பிற புத்தகங்களை படித்து விட்டு அதன்பின் ஜீரோ டிகிரியை முயற்சித்து பாருங்கள் என வாசிப்பு அனுபவமிக்க சில நண்பர்கள் எனக்கு அறிவுரை வழங்கினார்கள். அதன்படி கடவுளும் நானும், எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும், எக்ஸைல், மனம் கொத்தி பறவை புத்தகங்களை முடித்து விட்டே ஜீரோ டிகிரியை அணுகினேன்.

என்ன ஆச்சர்யம்… இப்போது அந்த முதல் 5 பக்கங்கள் என்னை உறுத்தவே இல்லை, மாறாக வெகு சுவாரஸ்யமான ஒன்றாய் இருந்தது. ஒரு தந்தை ஒரு மகளுக்கு எழுதும் கடிதத்துடன் நாவல் ஆரம்பிக்கும், அதில், மகளே இப்போது நீ கனவு கண்டு கொண்டிருக்கலாம், பீடி சுற்றி கொண்டிருக்கலாம், நாடக ஒத்திகை பார்த்து கொண்டிருக்கலாம் என 62 ‘லாம்’கள் தொடர்ந்து வருகிறது. சற்று நிதானித்து பார்த்தேன், இத்தனை வகையான பெண்களை எப்படி இவர் ஒரே கடிதத்தின் மூலம் கொண்டு வர எத்தனித்தார் என ஆச்சர்யமாய் இருந்தது. அதற்கு அடுத்தாற்பிலே “கோட்டிக்குப்பனின் மொழிபெயர்ப்புகள்”… அதை படித்து முடித்தவுடன் தான் எனக்கு அந்த நாவலின் மேல் ஓர் நம்பிக்கையே வந்தது. அதன் பின் இறக்கை கட்டி கொண்டு 247 பக்க நாவலை 4 தினங்களிலே பரபரவென படித்து முடித்தேன். (பொதுவாக, ஒரு 300 பக்க புத்தகத்தை முடிக்க எனக்கு குறைந்தப்பட்சம் 80 நாட்களாவது தேவை).

இனி நாவலுக்கான விமர்சனம்….

நாவல் மொத்தமும் எந்த இடத்திலும் எழுத்தாளர் எங்கேயும் கருத்து சொல்லவோ, கதை சொல்லவோ முற்படவில்லை. நாவல் மொத்தமும் நிகழ் காலத்தில் நிகழும் அநீதிகளையும், ஒரு பெண்ணின் தற்கால நடைமுறை அசாத்தியங்களையும், மனித மனங்களின் உணர்வுகளையும், சில மனிதர்களின் அபத்தங்களையும், நெகிழ்ச்சியான சம்பவங்களையும், அட்டகாசமான பகடிகளையும், சொந்த அனுபவங்களையும், இனவெறிக் கொலைகள் பற்றிய தகிப்பையும், பத்திரிக்கைகளின் பொறுப்பின்மையையும், மனிதர்களின் அழிக்கும் மனப்பாங்கினையும், மனிதர்களின் காம வேட்கையையும் அதை தணித்து கொள்ள அவர்களின் கையாளும் முறைகளையும், அன்பின் மொத்த வெளிபாட்டினையும் பதிவிட்டிருக்கிறார். இவையனைத்தும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நாவல் எழுதப்படவில்லை என்றாலும் என் பார்வையில் ஜீரோ டிகிரி இதையே ஆணித்தரமாக செய்கிறது. 

ஒரு துப்பறியும் நாவலை படிப்பதற்கு வாசகனாகிய நம்மிடத்தே இருந்து எந்த ஓர் முயற்சியும் தேவையில்லை, வெறுமனே படித்தால் மட்டும் போதும், கதை புரிந்து விடும், புத்தகத்தை தூக்கி போட்டு போய் கொண்டே இருக்கலாம். ஆனால் இந்த ஜீரோ டிகிரி வாசகனாகிய என்னை பெண்டு நிமிர்த்தி வேலை வாங்கி விட்டது, சொல்ல போனால் இன்னும் வேலை வாங்கி கொண்டு இருக்கிறது…. ஏனெனில் இவருடைய எழுத்துக்கள் ஒரு  சில இடங்களில் Puzzle போல் இருக்கிறது, மிகவும் விழிப்போடு படித்தால் மட்டுமே ஓரளவேனுமாவது புரிந்து கொள்ள முடிகிறது. அந்த புதிரை அவிழ்த்து அதனின் அர்த்தங்களை கண்டு கொள்ளும் போது ஏற்படும் சிலிர்ப்புக்காகவே பக்கங்களை புரட்டி கொண்டே இருக்கலாம்.

நாவல் படிக்கும் போது இடையே வரும் வன்மம், வலி, பரபரப்பு ஆகிய அனைத்தும் புத்தகத்தை அழுந்த பிடிக்க வைக்கும் ரகம். ஆனால் இவ்வளவு ஸீரியஸான நாவலில் ஆங்காங்கே தலை தூக்கும் பகடிகளை யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது. ஒரு இடத்தில் “ஆர்ய அல்குல் ஆர்ய அல்குல்” என 108 முறை கொடுக்கப்பட்டிருக்கும். ஏதோ ஒரு உள்ளுணர்வு அதை 108 முறை சரியாக கொடுக்க பட்டிருக்கிறதா என எண்ணி பார்க்க சொல்லிற்று, நானும் எண்ணிணேன், அதிலும் கூட ஏதாவது புதிரோ, பகடியோ ஒளிந்து கொண்டிருக்குமென ஒரு நப்பாசை தான்… எண்ணினால் சரியாக 108 இருந்தது. எண்ணி விட்டு அடுத்த வரி படித்தால், “சரியாக 108 முறை எழுதப்பட்டிருக்கிறதா என்று  எண்ணி சரிபார்க்கிற வாசகிகள் இந்த நாவலை தொடர்ந்து வாசிப்பதை நிறுத்திவிட்டு வேறு ஏதேனும் உருப்படியான காரியம் பார்க்கப் போகலாம்” என்று எழுதியிருந்தது… வாய் விட்டே சிரித்து விட்டேன், அதுவும் ஜன நெரிசலான ரயிலில்...

முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்நாவலின் பல்வேறு இடத்தில் கையாளப்பட்டிருக்கும் யுக்திகள், சமயங்களில் சொல்ல வரும் விஷயத்தினை ஆழ்ந்து பதிவித்து விடுகிறது.

இந்நாவலை படித்த / படிக்கவிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் “இனி நானும் என் மகளுக்கான கவிதைகளும்” என்னும் பகுதி தான் மனதிற்கு நெருக்கமான பகுதியாய் இருக்க கூடும் என்பது என் யூகம். கவிதைகளை வாசிக்க வாசிக்க கண்களில் நீரும், இதயத்தில் அன்பும் பொங்கி வழிகிறது. அந்த மொத்த பகுதியினையும் முடித்து விட்டதும், எனக்கு குழந்தை பிறந்தால் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும், அதற்கு ஜெனீ என்றே பெயரிட வேண்டும் என்று தீர்மனிக்க மனம் ஏங்கியது.

என்னால் ஒரு சில அத்தியாயங்களும், பகுதிகளையும் புரிந்து கொள்ள முடியவில்லை, வெகு எளிமையான வார்த்தைகளையே எளிமையான வடிவத்தில் தான் கொடுத்திருக்கிறார், இருந்தும் அதை புரிந்து கொள்ள முடியாதவாறு கொடுத்திருப்பது  ஆசிரியரின் சாதூர்யம் என்றே நினைக்கிறேன்.

எப்படி சொல்கிறேன் என்றால்,

நாவலின் ஒரு பகுதியில், ”ஆதி மனிதன் குறி வருகை ஸ்டைல் ஸ்ட்ரக்சுரலிஸம் ஸ்டைல் குறி குறியில் அடக்கம் மொழியில் இல்லை மொழி மொழியில் அடக்கம் குறியில் இல்லை குறியில் இல்லை மொழி வேறு குறி வேறு. எல்லோரும் வந்து குறியென்றால் எதுவெனக் கேட்டார்கள். நான் குறியை குறிக்குள் தேடென்றேன்.” என வருகிறது… இதை என்னால் சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இதை தெரிந்து கொள்ளாமல் விடக் கூடாது என்று மட்டும் என் மனதில் ஒரு உறுதியை வர வைத்து கொண்டேன். அதன் விளைவாய் ”சாரு நிவேதிதா வாசகர் வட்டம்” என்னும் வட்டத்தில் இதன் தொடர்பாக ஒரு பதிவு ஒன்றினை பதிவிட்டேன். அதற்கு நிர்மல் ம்ரின்ஜோ என்னும் அன்பர், “Semiotics for beginners: signs” என்னும் ஒரு வலைப்பூவின் லிங்க்கையும், MG Suresh என்பவரின் லிங்க்கையும் கொடுத்து உதவினார். அதை படித்தும் புரியாததை நிர்மல் ம்ரின்ஜோவிடம் விவாதித்து தெரிந்து கொண்டேன். ஒரு சின்ன தேடலின் விளைவாக நான் Signs, Signifier, Signified, Classism, Mannerism, romantism, modernism, impressionism, expressionism, cubism, purism, futurism, realism, naturalism, symbolism, imagism, constructuvism, kinetic art, tataism, suprematism, the style, pop art, minimalism, conceptual art, existentialism, structuralism, post structuralism, பின் நவீனத்துவம், பின் பின் நவீனத்துவம், post modern irony, pseudo modernism, critical realism,  indirect realism, போலி நவீனத்துவத்துக்கும் பின் நவீனத்துவத்துக்கும் உள்ள வித்தியாசம் என எதையெதையோ தெரிந்து கொண்டேன். அது எனக்கு தேவைப்படுமா, தேவைப்படாதா, புரிந்ததா, புரியவில்லையா என்பன போன்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும், இந்த ஜீரோ டிகிரியை வாசித்திராவிட்டால் இதை பற்றிய அறிமுகமெல்லாம் எனக்கு கிடைத்திராமலே போயிருக்கக்கூடும். இப்படி ஒரு பெரிய தேடலுக்கு பின்பு தான் ஒன்று புரிந்தது, இந்த நாவல் திட்டமிட்டு பல சூத்திரங்களை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்று. அதுவுமில்லாமல் ஒரு விஷயத்தை புரியாதது போல் கொடுத்து, என்னையே அது குறித்து தேட வைத்திருக்கிறார், இதுவும் அநேகமாக அவர் திட்டமிட்ட ஒன்றாகவே இருக்கக் கூடும். இதனால் தான் ஆசிரியரை சாதூர்யசாலி என்றேன்….

நாவலில் இன்னும் பல புரியாத பகுதிகளை விரட்டி சென்று வேட்டை ஆடலாம் என்று என்னை நானே தயார் படுத்தி கொண்டு இருக்கிறேன்.

இதுவரை சாரு நிவேதிதாவின் 5 புத்தகங்களை வாசித்து முடித்திருக்கிறேன். ஒரு மனிதன் எப்படி ஜெண்ட்டிலாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கண்ணியமாக இருக்க வேண்டும், நல்ல ரசிகனாக இருக்க வேண்டும் என நேரடி போதனைகளாய் இவரின் புத்தகங்கள் நமக்கு அளிக்காமல், ஒரு தாக்கமாக மனதில் விதைக்கிறது. அதுவே என்னை திரும்ப திரும்ப சாரு நிவேதிதாவின் புத்தகங்களை வாசிக்க தூண்டுகிறது. கையில் இப்போது …. நேநோ..