Sunday, 22 April 2012

Autofiction

ன்னவோ தெரியவில்லை, திடீரென்று சுகுமாருக்கு “கலாசலா கலசலா” பாட்டு மிகவும் பிடித்து விட்டது. அதிலும் L.R.ஈஸ்வரி வடக்க கேட்டு பாரு என்னை பத்தி சொல்லுவான், ஜர்தா பீடா போல என் பேரைத்தான் மெல்லுவான் என்று ஆரம்பிக்கும் பாணியே சுகுமாருக்கு தனி போதையாய் இருக்கிறது. இந்த பாட்டு ஒன்றும் புதிதாய் வந்த பாடல் அல்ல, 6 மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டது, அப்போதே ராஜேந்திரன் இந்த பாடல் நல்லா இருப்பதாகவும், இதை கேட்டு பார்க்க சொல்லி அவனுக்கு பரிந்துரைத்தான். என்னமோ இப்போது புதிதாக வரும் குத்து பாட்டில் அவனுக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லாததால் அப்போதைக்கு அந்த பாட்டு அவனை ஈர்க்கவில்லை, ஆனால் சாரு நிவேதிதாவின் ஓர் வாசகர் வட்ட சந்திப்பில் Camp fire போது இந்த பாடல் ஒலிக்கப்பட, திடீரென்று இந்த பாட்டு அவனுக்கு பிடித்த போனது. அன்றிலிருந்து அந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டான், சமயங்களில் ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் கேட்கும் அளவிற்கு ஆனான். ராஜியிடம் சுகுமார் இதை பகிர்ந்த போது அவன் இவனை மேலும் கீழும் பார்த்தான், “இதை தான்டா நான் 6 மாசத்துக்கு முன்னாடியே சொன்னேன்” என்று டெரர் ஆனான் ராஜி.
எப்போதும் இதே கதை தான், முன்பு ஒரு முறை கைலாஷ் கேரின் “Teri deewani” பாடலை ராஜி சுகுமாருக்கு பரிந்துரைத்தான். அப்போதைக்கு ரசிக்காமல், அதையும் 6 மாதம் கழித்து தான் நன்றாக இருக்கிறது எனவும், அந்த பாடலில் இருக்கும்  அற்புதமான உயிர், உணர்ச்சிபூர்வமாய் இருக்கிறது என்று கொண்டாடினான். அப்பவும் அதே டெரர் லுக் தான். இந்த டெரர் லுக்குகள் ஓர் தொடர்கதையாகவே தொடர்கிறது சுகுமாருக்கு…

எந்த காலக்கட்டத்திலும் சுகுமாருக்கு நட்பு பற்றி ஓர் உயர்ந்த அபிப்ராயம் இருப்பதில்லை. அதனாலோ என்னமோ சுகுமாருக்கு அதிக நண்பர்கள் இருப்பதில்லை. நண்பர்கள் தினத்தையும் அவன் பெரிதாய் மதிப்பதில்லை. அந்த தினத்தன்று அவனுக்கு யார்யாரோ நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சொல்வதை அவனால் பொறுத்து கொள்ளவே முடிவதில்லை. எதையாவது எடுத்து அடிக்கலாம் போல் மனதுக்குள் புழுங்கி கொள்வான். நட்பு என்பதே தனிமையை விரட்டவும், உதவிகளை எதிர்பார்த்தும் மலர்வது என்று புரிந்து வைத்துள்ளவன் சுகுமார். அதிலும் தனிமை விரும்பியான சுகுமாருக்கு நட்பு ஒன்றும் பெரிதாய் தேவைப் படுவதில்லை. ஆனாலும், சுகுமாரை சுற்றி ஓர் பெரிய வட்டமே இருப்பது சுகுமாருக்கே சில சமயம் ஆச்சர்யமாய் தான் இருக்கும். இதில் 4 நபர்கள் சுகுமாருக்கு 7 வருடங்களாகவே தொடர்ந்து நெருக்கமாகவே இருக்கின்றனர், இதற்காக சுகுமார் பெரிதாய் என்றும் மெனக்கெட்டதில்லை, சமயங்களில் சண்டை வரும் போது செமத்தியாக மற்றவர்களை கடுப்பேற்றியிருக்கிறான். இருந்தும் இவ்வளவு பிணைப்பான நண்பர்கள் நமக்கு எப்படி சாத்தியம் என்று சுகுமார் சில சமயம் யோசிப்பது உண்டு, அப்படி யோசிக்கையில் அவன் எல்லா மனிதர்களிடமும் அன்பு பாராட்டுவதும், ஓர் சிறிய பைத்தியக்காரன் போல் நடந்து கொள்வதும், அற்புத ரசனை திறன் கொண்டவனாக இருப்பதும், சண்டை வந்தால் இத்தனை நாள் காட்டி வந்த அன்பை திடீரென நிறுத்தி அவர்களை நிலைகுலைய செய்வதும், வெளிப்படையாய் இருப்பதும் தான் இத்தனை நாளாக இவர்களை பிணைத்து வைத்துள்ளது என்று நினைத்துக் கொள்வான். நானும் கூட நல்லவன் தான் போல என்று சுகுமார் பல முறை சந்தோஷ பட்டு கொள்வான்.
சுகுமாரை சுயநலவாதி என்று சொன்னவர்களும் உண்டு. சுகுமார் அப்போது அவன் ஓசூரில் என்ஜினியரிங் படித்து கொண்டிருந்த காலம் அது, அப்போது அவனின் ரூம் மேட் ஜோஸப், ஆர்குட்டில் ’பாவனா’ என்ற போலியான ஓர் பெண் பெயர் கொண்ட ID  ஒன்று வைத்து அவனுக்கு தெரிந்த நண்பர்களை எல்லாம் வளைத்து போட்டு, அவர்களின் பெண் சகவாசம் எப்பேற்பட்டது என்று CID வேலை பார்த்து கொண்டு பொழுது போக்கி கொண்டிருந்தான். சில சமயம் சுகுமாரும் இதில் ஐக்கியமாவது உண்டு. எதிர் முனையில் எவனாவது சிக்கி விட்டால் அவன் முடிந்தான், அவனிடம் இருந்து I love you வரும் வரை விடமாட்டான். இந்த விளையாட்டில் பல சுவாரஸ்யங்கள் இருந்தாலும் சில சிக்கல்களும் இருக்கிறது. When shall we meet, I want to meet you, shall I come to your hometown, give treat to your birthday  என்று சந்திப்புகளுக்குகாக ஏற்பாடு செய்து தாலி அறுப்பவர்கள் தான் பெரிய பிரச்சனை, Hey, are you joking, I’m in thirussur என்று சொன்னாலும், I’m ready to come, wherever u r என்று  சுகுமாரை கதறடிப்பார்கள், இவனுங்களை எப்படி டா சமாளிக்கறது என்று  யோசிக்கும் கனத்திற்குள்ளேயே பின்னாடியே சில பல பஞ்ச் டயலாக்குகளை வேறு அனுப்பி சாகடிப்பார்கள் , if I decide onething, I don’t even to listen to my  words…. ’போக்கிரி’ பஞ்ச் டயலாக்காம்… திரிச்சூர் பெண் போக்கிரி படத்தை பார்த்திருக்கவா போகிறது? என்று நினைப்பில் அடிக்கும் ரொமன்ஸ்களுக்கெல்லாம் சுகுமாரும் அவன் நண்பர்களும் நடுஇரவில் கூட விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

இது போல் போலி பெண் ID வைப்பதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் அவனுங்களும் தூங்க போக மாட்டார்கள், இவர்களையும் தூங்க விட மாட்டார்கள், ஒவ்வொருத்தனையும் தூங்க வைப்பதுற்குள் விடிந்து விடும். இன்னொரு சுகுமாரின் சொந்த பிரச்சனை என்னவென்றால் அடுத்த முறை சுகுமார் ஓர் புதிய பெண்ணிடம் சாட் செய்யும் போது “இது உண்மையில் பெண் தானா?” என்று அவனுக்கு நெருடிக் கொண்டே இருக்கும்.

இப்படி இருக்கையில், ஒரு முறை சுகுமாரின் சக வகுப்பு மாணவன் ஷ்யாம் சிக்கினான், அவனிடமும் சுகுமாரின் நண்பர்கள் வட்டம் அவர்களின் கை வரிசையை காட்டியது, அவனும் விழுந்து விட்டான். ஷ்யாமுக்கு பாவனா என்பவள் தெரியாத பெண் என்பதால், ஷ்யாம் கடலை போடுகிறேன் என்று சுகுமார் வட்டத்தை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான், ஷ்யாமுக்கு தெரிந்த நபர்கள் யார் பெயரையாவது சொல்லி விட்டால் ஷ்யாம் அடங்கிவிடுவான் என்று Hey I’m already in love with ur classmate Sugumaar, pls don’t disturb me further, if u disturb further I’m gonna complain him என்று சொல்லவே அவன் நச்சரிப்பு அடங்கி விட்டது ஒரு பக்கம் ஆறுதல் அளித்தாலும், இன்னொரு பக்கம் சுகுமாரை வேறு மாதிரி மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டான். சுகுமாரை பற்றி சுகுமாரிடமே தப்பாக சொல்ல ஆரம்பித்துவிட்டான், அதாவது பாவனாவை சுகுமாரிடம் இருந்து காப்பாற்ற ஏதேதோ சொன்னான்.

Sugumaar is a good guy only, but selfish guy, be aware with him, reconsider your decision about him, you’ll be unlucky என்று அவன் சொன்னது 3 வருடங்களுக்கு முன்பு, ஆனால் இன்று வரை சுகுமாருக்கு என்ன புரியவில்லை என்றால், அதை சொன்ன ஷ்யாம் என்ன பெரிதாக சமூக சேவை செய்தானோ,. இது வரை சுகுமாருக்கு வாய்த்த 4 காதலிகளும் “I’m lucky to have you” என்று வெவ்வேறு தருனத்தில் வெவ்வேறு பாணியில் கூறியுள்ளனர், ஷ்யாம் சொன்னதும், இவனின் 4 காதலிகள் சொன்னதும் முற்றிலும் முரணாக உள்ளது, இதில் எது உண்மையோ? இது நடந்த அடுத்த நாளும் ஷ்யாமிடம் இருந்து பாவனாவிற்கு வந்த ஓர் “hi” சுகுமாரை ஆச்சர்யபட வைத்தது , சுகுமார் தேர்ந்தெடுத்த ஃப்ரொபைல் பிக்சரின் மாயம் அது, ஓர் அழகான ஹோம்லி பெண்ணின் ப்ரொபைல் பிக்சர் அது. பதிலுக்கு சுகுமாரும் ஓர் “hi” சொன்னோம், அதற்கு அவன் “wat you decided?” என்றான், “thinking of dropping him” என்றோம், அதற்கு அவன் தடாலடியாக well wisher அவதாரம் எடுத்து சொன்னது தான் அன்றும் சுகுமாரை விடிய விடிய சிரிக்க வைத்தது, அவன் சொன்னது இது தான் “really u taken a right decision, I’m thinking about u all nit yesterday, how paavam you’re… you shud chose a rit guy like me ma… “. அடுத்த நாள் வகுப்பில் சுகுமார் ஷ்யாமை பார்த்து “உனக்கு பாவனாவை தெரியுமா?” என்று தான் கேட்டான், “சும்மா ஆர்குட்டில் தெரியும், அவ்ளோ தான், மத்தபடி ஒண்ணுமில்லை” என்று விழுந்தடித்து ஓடியே விட்டான். இன்று வரை அந்த பாவனா சுகுமார் தான் என்று அந்த ஷ்யாமிற்கு தெரியாது.

சுகுமாருக்கு கலாசலா பாட்டு மிகவும் பிடித்ததற்கு காரணம் என்னவென்று ப்ரீத்தி கேட்டாள். இந்த ‘கடினமான’ கேள்வியை ப்ரீத்தி சட்டென்று கேட்டு விடவே, சுகுமார் சற்று நிதானித்து, வெறும் என் செவிகளை நிரப்பி விட்டு செல்லும் இசையை நான் என்றுமே விரும்புவதில்லை, அது நிச்சயம் என் இதயம் வரை ஊடுரவ வேண்டும். கேட்கும் போது நிச்சயம் என் உடம்பு அனிச்சையாக நடனமாக அசைந்து கொடுக்க வேண்டும். கேட்கும் போது என்னுள் இருக்கும் குதூகலம் கொண்டாட்டமாக வெளிப்பட வேண்டும். அன்று முழுதும் அந்த பாடலை மனதுக்குள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்க  வேண்டும். அது போன்ற ஓர் சமயத்தில் நான் நிச்சயம் ஓர் கோமாளியாக மக்கள் கண்ணிற்கு தெரிய வேண்டும், நான் அப்படி தெரிந்தால் தான் நான் சரியான பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம், என் மனமும் உடலும் ஆரோக்யமாய் இருக்கிறது என்று அர்த்தம், என் ரசனை உயிர்ப்பாய் இருக்கிறது என்று அர்த்தம். என்னை கோமாளியாக மாற்றிய பெருமை கலாசலாவிற்கு இருப்பதால் தான் கலாசலா பிடித்திருக்கிறது என்றான் சுகுமார். இதை உணர்வு பூர்வமாய் சுகுமார் சொல்லி முடித்தவுடன், ப்ரீத்தி கேட்ட ‘எளிதான’ கேள்விக்கு தான் சுகுமாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, ப்ரீத்தி கேட்டது இது தான், “சரி அதை வுடு, அப்பறம், என்ன சாப்பிட்ட?” என்று கேட்டாள், ஆக இவ்வளவு உணர்ச்சிபூர்வமாய் சொன்னது எதையும் அவள் காதில் வாங்கி கொண்டதாக தெரியவில்லை.

ஷ்யாமை பார்த்து “நீ chat பண்ண பாவனா யார் தெரியுமா? அது நான் தான் டா, நல்லா ஏமாந்தியா?” என்று கடுப்பேற்ற வேண்டும் என்று சுகுமாரும் முயற்சித்த வண்ணமே இருக்கிறான், ஆனால், சூழ்நிலை தான் சிக்க மாட்டேங்கிறது. என்று தான் அந்த பொன்னான நாள் வருமோ என்று காத்திருந்தான் சுகுமார்.

சுகுமார் யாரிடமாவாது அன்று சண்டை போடுகிறான் என்றால் நிச்சயமாக, “நீ ஒண்ணும் எனக்கு தேவையில்லை” என்று இணைப்பை துண்டித்து விடுவான். அவனுக்கு தெரிந்து சண்டை போடுவதென்றால், அவனை விட்டு எதிராளி விலகி செல்ல வேண்டும். இதில் அதிகமாக மாட்டுவது அவனது அம்மாவும், ராஜியும் தான். அந்த சமயத்தில் சுகுமார் குழந்தை போல் நடந்து கொள்கிறானா, அல்லது சைக்கோ போல் நடந்து கொள்கிறானா என்பது சுகுமாருக்கே சந்தேகமாய் இருக்கும். அது போன்ற ஓர் சமயத்தில் தான் அப்துல், நான் உங்களை சைக்கோவா இல்லையா என்று டெஸ்ட் செய்யட்டுமா என்று முன்வந்தான். அதாவது அப்துல் கேட்கும் கேள்விக்கு சுகுமார் என்ன பதில் சொல்கிறானோ அதை பொறுத்தே சுகுமார் சைக்கோவா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும்.

கேள்வி இது தான் :-

ஒரு வீட்டில் தன் இரு மகள்களுடன் ஒரு பெண் வாழ்ந்து வருகிறாள். அந்த பெண்ணின் கணவன் தற்போது உயிருடன் இல்லை, 5 வருடங்களுக்கு முன்பே இறந்துவிடுகிறான். இது போன்ற ஒர் சமயத்தில் அந்த பெண் நோய்வாய் பட்டு இறந்துவிடுகிறாள். அந்த பெண்ணின் இறுதி சடங்கை அவளின் உறவினர்களே கவனித்து கொள்கிறனர். 2 நாட்கள் கழித்து அந்த பெண்ணின் இளைய மகள் மர்மமான முறையில் இறந்து விடுகிறாள். இளைய மகளின் சாவிற்கு யார் காரணம்?
பதிலை யோசித்து நாளை சொல்வதாக சொல்லி ஒரு நாள் அவகாசம் கேட்டான் சுகுமார்.

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ற பாடல் சுகுமாருக்கு மிகவும் பிடித்தமான பாடல், கானா பாடல் என்பதையும் தாண்டி அந்த பாடலில் ஓர் அழகான மெலடி ரம்மியமாய் இருக்கும். தாளமும் அவசர கதியில் ஓடாமல் பொறுமையாய், நின்று நிதானமாய் போகும். பாடலின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நம்மால் கேட்க முடியும். அவசர ஆம்புலன்ஸ் போல அலறாது. இந்த பாடலை இசையமைக்கும் காலக்கட்டங்களில் தேவா, இளையராஜாவிற்கும் ரகுமானுக்கும் போட்டியாகவும் மாற்றாகவும் போற்றப்பட்டவர். சில சமயம் மெல்லிசை மன்னர் என்று கூட போற்றபட்டார். அடுக்கடுக்காய் தொடர்ந்து நிறைய பாடல்கள் கொடுத்தார். ஆனால் ஓர் கட்டத்துக்கு மேல் அவரால் அத்தனை தரமான பாடல்களை கொடுக்க முடியவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை, இளைய ராஜாவே நல்ல பாடல்களை கொடுக்க சிரமப்பட்டு கொண்டு இருக்கும் போது தேவா சொதப்புவது ஒன்றும் ஆச்சர்யமில்லை என்றாலும் தேவாவை இழந்ததற்காக சுகுமார் பெரிதும் வருத்தபடுவான்.

”ஏய் குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தால…
ஏதோ என் மனசு தான் படபடங்குது உன்னால…”

இந்த பாடலை சுகுமார் எத்தனை முறை கேட்டிருப்பான் என்று நினைக்கிறீர்கள், உங்களின் எண்ணிக்கை எத்தனையாய் இருந்தாலும் அதோடு ஓர் 350ஐ சேர்த்து கொள்ளுங்கள். தேவாவின் இடம் காலியாகவே இருக்கிறது. இருந்தாலும் ‘கலாசலா’ போன்ற பாடல்கள் சுகுமாருக்கு ஆறுதலிக்க செய்கிறது.

சென்னையில் ஒரு கல்லூரி மாணவன், தன் நண்பனிடம் தனக்கு ஏதேனும் பெண்களை அறிமுகம் செய்து வைக்குமாறு சதா நச்சரித்து கொண்டே இருந்திருக்கிறான், அவன் நண்பனும் விளையாட்டிற்காக தன்னுடைய மற்றொரு, யாரும் அறியாத நம்பரை, இது தனது பள்ளி தோழி ஜூலியின் நம்பர் என கொடுத்துள்ளான். இவனும் நம்பி அந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான். எதிர் புறம் இவன் நண்பனும் அசல் ஓர் பெண்ணை போல் இவனுக்கு பதில் அளித்தான். பதில் வந்த சந்தோஷத்தில் இவனும் தொடர்ந்து பல குறுஞ்செய்திகளை அனுப்பி தகவல் பரிமாறிகொண்டான். இது ஒரு வேடிக்கையான விஷயமாக போகவே, இவன் நண்பனும் பதிலுக்கு தொடர்ந்து எல்லாவற்றிர்க்கும் பதில் அளித்த வண்ணமே இருந்தான். இது அன்றோடு முடிந்திருந்தாலும் பரவாயில்லை, இது பல மாதங்களாக ஓர் தொடர்கதையாக ஓடி கொண்டு இருந்தது. இவனது நண்பன், அச்சு அசல் பெண் குரலிலே வேறு பேசி அவனது சந்தேகத்துக்கு, சிறிதும் இடமளிக்கா வண்ணம் இவனை ஏமாற்றி வந்தான். கொஞ்ச நாள் கழித்து, இவன் காதலில் விழுந்து விடவே, அந்த காதலை வெளிபடுத்தியிருக்கிறான். அப்போதாவது அந்த நண்பன் உண்மையை சொல்லி இருக்கலாம். மாறாக அப்போதும் விளையாட்டு தனமாய் காதலை ஏற்று கொண்டான். இதனால், இவன் தீவிர காதலில் ஈடுபட தொடங்கினான்., இவனது நண்பன் வெகு புத்திசாலித்தனமாய் ஒவ்வொரு முறையும் இவனை சந்திப்பதையே முழுதுமாய் தவிர்த்தான். முழுதாக ஒரு வருடத்திற்கு மேல் இந்த நாடகம் நடந்தேறியது, இவன் தான் உண்மையிலே ஒரு பெண்ணை நிஜமாக காதலித்து கொண்டிருப்பதாய் நினைத்து உருகி உருகி காதலித்தான்.

ஒரு வருடத்திற்கு பிறகு சிறிதளவு மனசாட்சி உறுத்தவே இவனது நண்பன், இவனை நேரில் சந்தித்து எல்லா உண்மையும் சொன்னான். இவன் எதையும் நம்பவில்லை, மாறாக சிரித்துக் கொண்டே, “ என்ன காமெடியா? என் ஜூலியை பத்தி எனக்கு தெரியும், ஒரு வருஷ லவ் டா…”. இதை இவனது நண்பன் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அவன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் இவனால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. சூழ்நிலையின் தீவிரம் அறிந்து தன்னுடைய இரு நம்பர்களும் ஒரே செல்போனில் தான் இருந்தது என்று ஆதாரத்துடன் நிரூபித்தான். அப்போதும் இவன், தன்னுடைய காதல் மேல் உள்ள பற்றுதலை துறக்கவில்லை, கடைசி வரை நம்ப மறுத்தான்.

தினம் இரவு இல்லாத ஜூலிக்கு, ஜூலி ஜூலி என்று குறுஞ்செய்தி அனுப்பி, பதிலுக்காக தவம் கிடந்தான். நண்பர்கள் அனைவரும் வந்து ஜூலி என்று யாருமே இல்லை என்று விளக்கினர். தொடர்ந்து நம்ப மறுத்தான். அவர்கள் போன பிறகும்,  அன்று இரவு முழுதும் பால் மாறா புன்னகையுடன் சுவற்றை பார்த்து “நீங்க பொய் சொல்றீங்க…. நீங்க பொய் சொல்றீங்க..” என்று சொல்லிய வண்ணம் இருந்தான். இவனது ஆசிரியர்களும் கூட இவனுக்கு சொல்லி புரிய வைக்க பார்த்தனர். எதுவும் கை கூடவில்லை, முழுதாய் மூன்று வாரம் ஆகியும் இவனது பால் மாறா புன்னகையுடன், “நீங்க பொய் சொல்றீங்க” என்று சுவற்றை பார்த்து பினாத்தி கொண்டிருப்பது மாறாமல் இருக்கவே, இதற்கு காரணமான இவனது நண்பன், தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு இவனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாய் போயிற்று.

இந்த விஷயத்தை கேள்வி பட்ட பிறகு சுகுமார் இனி தான் பெண் பெயரில் முகமூடி அணிய போவதில்லை என்று முடிவு செய்தவனாய், அன்று பொங்கி வந்த அவனது கண்ணீரின் மேல் சத்தியம் செய்தான். அதோடு இல்லாமல், ஷ்யாமிடம் அவன் தான் பாவனா என்று சொல்லும் படி இருந்த யோசனையை கை விட்டவனாயிருந்தான் சுகுமார்.

ப்துல் கேட்ட கேள்விக்கு சுகுமாருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சொல்ல போனால் கேள்வியே முழுமையாய் இல்லை. அந்த பெண்ணின் அப்பாவும் எப்பவோ இறந்து விட்டார், அவளின் அம்மாவும் சமீபத்தில் இறந்து விட்டார், அவளின் அக்கா அவளை கொல்லவும் வாய்ப்பில்லை. இம்மூன்று பெயர் தவிர்த்து வெளியாள் யாரும் கொல்லவும் இல்லை என அனுமானிக்க வேண்டியுள்ளது, ஒரு வேளை சமீபத்தில் இறந்த அவளின் அம்மா சின்ன பெண்ணை பிரிந்திருக்க முடியாமல், தன்னுடன் அழைத்து கொண்டாரோ என ஒரு முடிவிற்கு வந்தவனாய், ”கொன்னது அவங்க அம்மா தான்” என்று அவனின் விடையை சொன்னான் சுகுமார்.
அந்த விடை தப்பு என்றான் அப்துல். சுகுமார் சைக்கோ இல்லை என அறிவித்து, கேள்விக்கான விடையை அவிழ்த்தான்.
கொலை செய்தது, வேறு யாருமில்லை, அக்கா தான். இவளுடைய அம்மாவின் ஈம சடங்குக்காக வந்திருந்த ஓர் பையனை அக்காவிற்கு பிடித்து போயிருந்திருக்கிறது. ஆனால் அவன் யார், என்ன பெயர் என எந்த தகவல்களையும் வாங்காமல் விட்டிருக்கிறாள். இப்போது அவனை மறு முறை பார்க்க அவனை எங்கு தேடுவது என தெரியாமல், அவனை இவள் வீட்டிற்கே வர வைக்க, தங்கையை கொலை செய்திருக்கிறாள். இவளின் அம்மா ஈம சடங்கிற்காக வந்தவன், தங்கையின் ஈம சடங்கிற்கு வர மாட்டானா?, அப்போது அவன் யார் என கேட்டு விடலாம் என்பதற்காக தான் அக்கா கொலை செய்திருக்கிறாள்.
எப்படியோ, சுகுமார் சைக்கோ இல்லை.


சுகுமார் கடைசியாக செருப்பு வாங்கி முழுதாய் ஒன்றரை வருடங்கள் கடந்திருந்தின. செருப்பு பழசாகி, தேய்ந்து, பொலிவு இழந்து, அறுந்த பின்னரும் கூட அந்த செருப்பை அவன் மாற்ற நினைத்ததில்லை, காரணம், சுகுமார் அப்போதைய தேதிகளில் சம்பாத்தியம் இல்லாமல் இருந்தான். அடுத்த எடுக்கவிருக்கும் செருப்பு கண்டிப்பாக அவனது பணத்தில் தான் எடுக்க வேண்டும் என்ற சிறிய வீராப்பு அவனிடம் பிடிவாதமாக இருந்தது. ஒன்றரை வருடம், முழுதாய் ஒன்றரை வருடத்திற்கு பிறகு, தண்டையார்பேட்டையில் அவனுக்கு ஓர் சொல்லி கொள்ளும் படியான ஓர் வேலை கிடைத்தது. அவனது முதல் மாத சம்பளத்தில், அவன் முதலில் எடுத்ததே செருப்பு தான். தி.நகரில் உள்ள காதிம்ஸ் செருப்பு கடையில் தான், அவன், அவனுக்கான செருப்பை தேர்ந்தெடுத்து கொண்டான். வீட்டிற்கு வந்ததும் அவனது பழைய செருப்பை அத்தனை கோபத்தோடு குப்பையில் எறிந்தான். அந்த கோபம் சுகுமாருக்கு பெருமிதமாய் இருந்தது.

L.R.ஈஸ்வரி பாடிய பல பாடல்கள் ஹை பிட்ச்சில் பாடியவை தான். L.R.ஈஸ்வரிக்கு லோ பிட்ச்சும் பாட தெரியும் என்று நிரூபித்த காட்ட இவர் பாடியது தான்

  “காதோடு தான் நான் பாடுவேன்
  மனதோடு தான் நான் பேசுவேன்”

இதை பாடியது L.R.ஈஸ்வரியா என்னுமளவிற்கு குரல் அத்தனை மென்மையாய், ரம்மியமாய் இருக்கும். என்ன இருந்தாலும், L.R.ஈஸ்வரி என்றாலே

”செல்லாத்தா…. செல்ல மாரியாத்தா….
எங்கள் சிந்தையில் வந்து அரை விநாடி நில்லாத்தா”

இந்த பாட்டு தான் ஞாபகம் வந்து கொண்டு இருந்தது, இப்போது ’கலாசலா கலசலா’ தான்.

சுகுமாரின் உறவுக்கார பையன் கிஷோர், சுகுமாருக்கு ரொம்ப நெருக்கம். கிஷோருக்கு சிறு வயதிலிருந்தே படிப்பு கொஞ்சம் கடுப்பு தான். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அடுத்த வகுப்பிற்கு போவானா, மாட்டானா என்ற அளவிற்கு படிப்புக்கும் இவனுக்கும் தூரம். பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரை தாக்கு பிடித்தான், அதற்கு மேல் அவனால் அங்கு தாக்கு பிடிக்க முடியவில்லை, TC வாங்கி கொண்டு வெளியே வந்துவிட்டான்.
’அடுத்து என்ன?’ என்ற கேள்விக்கு இவனின் பெற்றோர் மண்டைய பிய்த்து கொண்டிருந்த வேளையில், தன்னால் மேற்கொண்டு படிக்க முடியாது எனவும், அவனுக்கு ஓர் ஆட்டோ கேரேஜ் வைத்து தருமாறும் கேட்டான். அது தான் அவனது லட்சியக் கனவு என்றெல்லாம் சொல்லி பில்டப் ஏற்றினான். இவனது பெற்றோரோ இவனை மேற்கொண்டு ஏதாவது பாலிடெக்னிக் கல்லூரியிலாவது சேர்த்து விட பிராயத்தன பட்டு கொண்டிருந்தனர். இவனோ என்ன சொல்லியும் கேட்பதாய் இல்லை. ஆட்டோ கேரஜ் என்றால் சாதரண விஷயமும் அல்ல, குறைந்தது 10 லட்சமாவது பணம் விதைத்தாக வேண்டும். கிஷோருக்கு லட்சியமும் இல்லை, புண்ணாக்கும் இல்லை என்பது சுகுமாருக்கு நன்றாக தெரியும், இதனால் கிஷோரை குறைந்தது ஒரு வருடமாவது ஓர் ஆட்டோ கேரஜில் வேலை செய்து, வேலை கற்றுக் கொண்டு, அதன் பிறகு ஆட்டோ கேரஜ் வைப்பது பற்றி கேள் என்று கிஷோருக்கு யோசனை சொன்னான்.

அதன் படி கிஷோரும் பனகல் பார்க் அருகில் ஓர் ஆட்டோ கேரஜில் சேர்ந்தான், ஆனால் வேலைக்கு சேர்ந்த வேகத்தில் வேலையை கைவிட்டான், ஏனென்று கேட்டதற்கு அந்த வேலை தமக்கு சரி பட்டு வராது என அத்தனை சாதரணமாக சொன்னான். இதை தான் சுகுமாரும் எதிர் பார்த்தான், ஆக படிக்கவும் மாட்டானாம், வேலைக்கு செல்லவும் மாட்டானாம், வேலையை தெரிந்து கொள்ளவும் மாட்டானாம் ஆனால் எடுத்த எடுப்பில் முதலாளியாக கல்லாவில் உட்கார வேண்டுமாம், அதுவும் அவனது பெற்றோரின் மூலதனத்தில்… என்ன நியாயமோ, என்ன கருமாந்திரமோ…

சுகுமார் ஓசூரில் இருக்கும் ராஜேந்திரன் வீட்டிற்கு ஓர் முறை யுகாதி விழாவிற்கு அழைக்கபட்டு இருந்தான். சுகுமார் வசிப்பதோ சென்னையில், அந்த நேரம் பார்த்து சுகுமாரிடம் 10 ரூபாய் கூட முழுதாய் இல்லை, தெரிந்தவர்களிடம் கைமாத்து வாங்கி கோயம்பேடு சென்று ஓசூர் பஸ் ஏறி, ஜன்னல் ஸீட்டெல்லாம் பிடித்து 170 ரூபாயை கொடுத்து டிக்கெட் கேட்டால், டிக்கெட் விலை 182 ரூபாய் ஆகி விட்டது என்று சுகுமார் தலையில் குண்டை தூக்கி போட்டு விட்டார்கள், அந்த நேரம், சுகுமாரிடம் இன்னும் 12 ரூபாய் இருப்பில் இருக்குமா என்பதே பலத்த சந்தேகமாய் இருந்தது, கையில் உள்ள சில்லரையெல்லாம் எண்ணினால் 11 ரூபாய் தான் இருந்தது. எத்தனை முறை கூட்டினாலும் அதே ’தொகை’ தான் வந்தது, இன்னும் ஒரு ரூபாய் இடித்தது. அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவர் தூங்கி கொண்டிருந்தார், அவரிடம் காசு கேட்க வேண்டுமென்றாலும் அவரை எழுப்பி தான் கேட்க வேண்டும். கண்டக்டரிடமே தலையை சொரியலாமா, அல்லது யாரிடமாவது கேட்டு விடலாமா என்ற கேள்வி அவனை அந்த நேரத்தில் குத்தி கிழித்து கொண்டிருந்தது. கண்டக்டரை கண் நிமிர்ந்து பார்த்தான், சீக்கரம் காசை கொடுக்குமாறு மிரட்டலாய் அவசரப்படுத்தினார், மேற்கொண்டு அவரிடம் கேட்க சுகுமாருக்கு துணிச்சல் வரவில்லை. எதற்கும் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு துளாவிய போது, நாணயம் ஒன்று அகப்பட்டது, எடுத்து பார்த்தால், 2 ரூபாய் நாணயம். கண்டக்டரிடம் பெருமையாய் நீட்டினான். 182 ரூபாய்க்கு, 183 ரூபாய் கொடுத்த கணக்கு ஆனது. ஆனால் காசை வாங்கி கொண்டு, டிக்கெட்டை மட்டும் கொடுத்து விட்டு மீதி ஒரு ரூபாயை தராமலே நகர்ந்துவிட்டார் கண்டக்டர். ஒரு ரூபாய் அவருக்கு ஒரு ரூபாயாக இருந்தது, ஆனால்  சுகுமாருக்கு அந்த ஒரு ரூபாய் ஒரு ரூபாயாக இருந்தது.


கிஷோரிடம் பேச வேண்டுமென்று தோணவே, கிஷோருக்கு அலைபேச நம்பரை தட்டினான் சுகுமார்.
சுகுமார்: என்ன மாப்பு எப்படி இருக்க….
கிஷோர்: நல்லா இருக்கேன் டா…
சுகுமார்: அடுத்து என்ன பண்றதா இருக்க…
கிஷோர்: ஆட்டோ கேரஜ் வேண்டாம்னு முடிவு பண்ணீட்டேன். சேலத்துல kfc restaurant ஆரம்பிக்கலாமானு வீட்ல பேசிட்டு இருக்கேன்.
சுகுமார்: ????????????????????!!!


ப்போது வரும் குத்து பாட்டுகளில் ஓர் அழகியலே இருப்பதில்லை. பாட்டு முழுக்க தாரை தப்பட்டைகளை தட்டி விட்டால் அது குத்து பாட்டு ஆகிவிடுமா, என்று சுகுமார் அடிக்கடி கோபப்படுவது உண்டு. கலாசலா பாடலில் அப்படி இருப்பதில்லை. எங்கு தேவையோ அங்கு தான் தாளம் பிரவேசிக்கும், மற்ற இடங்களில் தாளம் அமுங்கியே வாசிக்கும்.

“நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா”

என்னும் பாடல் எடுத்த எடுப்பிலே தாளங்களுடன் துவங்குவதில்லை. முதலில் ஓர் புல்லாங்குழல் இசை வரும், அதை தொடர்ந்து, நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என்று குரல் மட்டும் ஒலிக்கும், அதுவரை தாளம் இருக்காது.
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா என்று ஆரம்பிக்கும் இடத்தில் தான் தாளமே துவங்கும். அதாவது பாட்டின் தாளமே பாடலை பின் தொடர்ந்து தான் வருகிறது.

இந்த யுக்தி கலாசலா பாட்டிலும் அழகாக கையாள பட்டிருக்கிறது.

கலாசலா கலசலா கலாசலா கலசலா கல்லாசா கலசலா
கலாசலா கலசலா எனும் முதல் சுற்றில் தாளமே இருக்காது.
அடுத்த சுற்று கலாசலா கலசலா கலாசலா கலசலா கல்லாசா கலசலா கலாசலா கலசலா வரும் போது தான் தாளம் ஆரம்பிக்கும்.

தாளமும் ரசித்து எழுந்து ஓர் கெட்ட ஆட்டம் ஆடும் வகையில் இருக்கும்.

1 2  1 2 3 4
1 2  1 2 3 4
1 2  1 2 3 4
1 2  1 2 3 4

என்ற ரீதியில் தாளம், ஆளை மயக்கும். இப்படியொரு பாட்டை சுகுமார் எப்படி ரசிக்காமல் இருப்பான்?

     ரு முறை சுகுமார் மின்சார ரயிலில் வேளச்சேரியிலிருந்து பூங்கா நகர் சென்று கொண்டிருந்தான். திருவான்மியூர் அருகே ரயில் சென்று கொண்டிருக்கும் போது அவனுக்கு வெகு அருகில் ‘கலாசலா’ பாட்டு ஒலித்து கொண்டிருந்தது. எதேச்சையாக திரும்பி பார்த்தால் அங்கே ஷ்யாம். ஷ்யாமும் அந்த பாட்டை விரும்பி கேட்பது சுகுமாருக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஷ்யாமை கூப்பிட்டு அருகே அமர வைத்து பூங்கா நகர் வரை பேசி கொண்டு வந்தான். சுமார் 30 நிமிடம் சிரிக்க சிரிக்க பேசினார்கள். பேச்சின் ஊடே சுகுமார் பாவனாவை பற்றி பேச்சை மறந்தும் கூட எடுத்து விட வில்லை.

     சுகுமார் காதிம்ஸில் வாங்கிய செருப்பு நாளாக அதன் பொலிவை இழந்து கொண்டே வந்தது. செருப்பில் பாதங்கள் அழுந்தபட்டு, பாதத்தின் அச்சு விழுந்தது. முதன் மாத சம்பளத்தில் வாங்கிய முதல் பொருள் என்பதால் சுகுமாருக்கு இது ஓர் உறுத்தலாகவே இருந்தது. நல்ல வேளையாக செருப்புக்கு  90 நாட்கள் வாரண்ட்டி இருக்கவே சுகுமார் செருப்பை மாற்றிக் கொள்ள எத்தனித்தான்.
      அன்று ஓர் புதன் கிழமை, சுகுமாருக்கு 2nd shift என்பதால் அவன் 1 மணிக்குள் கம்பெனி சென்றாக வேண்டும், 1 மணிக்கு சென்றால் மறுபடியும் 9 மணிக்கு தான் வெளியே வர முடியும். எனவே வேலை முடித்த அந்த நாள் மாலை செருப்பை மாற்றி கொள்வது என்பது இயலாத காரியம். வேலைக்கு செல்லும் முன்பே காதிம்ஸ் சென்று வாரண்ட்டி க்ளைம் செய்தால் தான் உண்டு. ஆனால் கடை திறப்பதோ 10 மணிக்கு மேல் தான், அதனால் ரொம்ப நேரத்தில் போயும் பிரயோஜனம் இல்லை. சுகுமார் தங்கி இருக்கும் வேளச்சேரியில் இருந்து தி.நகர் சென்று செருப்பை மாற்ற வேண்டுமே என்பது தான் சுகுமாருக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தது. இருந்தாலும் விட முடியுமா செண்டிமெண்ட் சமாச்சாரம், அது மட்டுமில்லாமல் 400 ரூபாய் கொடுத்தெல்லாம் சுகுமார் அடுத்தவர்கள் காசில் கூட செருப்பு வாங்கியதில்லை. அதனால் வாங்கியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து கிளம்பினான்.

09:45 மணியளவில் இருப்பிடத்தை விட்டு கிளம்பினான் சுகுமார். வேளச்சேரியிலிருந்து கிண்டி சென்று, அங்கிருந்து மின்சார ரயிலில் செல்ல சென்ட்ரல் டிக்கெட் வாங்கி மாம்பலம் இறங்கி, மாம்பலத்திலிருந்து பனகல் பார்க் வரை நடந்து, செருப்பு வாங்கி, திரும்ப மாம்பலம் சென்று அங்கிருந்து சென்ட்ரல் சென்று, அங்கிருந்து கும்மிடிப்பூண்டி ரயில் பிடித்து தண்டையார் பேட்டை இறங்கி 1 மணிக்குள் கம்பெனி செல்வது தான் திட்டம் என்று மனதுக்குள் தீர்மானித்து கொண்டான். தற்சமயம் அவனின் பணம் இருப்பு 118 ரூபாய்.

10:00 மணியளவில் சுகுமார் வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தான்.

10:07 வரை பஸ் ஏதும் வரவில்லை, அதனால் காதில் ஹெட் போன் சொருகி பாட்டு கேட்க ஆயுத்தமானான் சுகுமார். இருக்கும் 492 பாடலில் “சாலையோரம் பூக்கள் வந்து பூக்குதே” என்ற பாடலை தேடி பிடித்து கேட்க தொடங்கினான்.

10.14 மணிக்கு கிண்டி செல்லும் ஓர் பேருந்து நிரம்பி வழிந்து வந்தது. நேரம் தான் நிறைய இருக்கிறதே என்று அந்த பேருந்தை தவிர்த்து விட்டான்…. “ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா, டூ விட்டு மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா”

10.18 மணிக்கு கிண்டி செல்லும் மற்றுமொரு பேருந்து பின்னாடியே வந்தது. டிக்கெட் எடுத்தான். டிக்கெட் விலை 9 ரூபாய், பணம் இருப்பு 109 ரூபாய்“எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோழா… குடிக்க நான் தரவா சோ சோ சோடா….”

10.42 மணிக்கு அவன் கிண்டி இறங்கினான், “கரிகாலன் காலை போல கறுத்திருக்குது குழலு”

10.44 மணிக்கு அவன் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றான், “கரிகாலன் காலை போல கறுத்திருக்குது குழலு”

10.58 மணிக்கு அவனுக்கு டிக்கெட் கிடைத்தது, டிக்கெட் விலை 6 ரூபாய், பணம் இருப்பு 103 ரூபாய், “கை தட்டி தட்டி அழைத்தாலே, என் மனதை தொட்டு தொட்டு உடைத்தாலே”

11.06 மணிக்கு அவனுக்கு கடற்கரை செல்லும் ரயில் வந்தது, “அன்று வந்ததும் அதே நிலா, ஜ ஜ ஜா, இன்று வந்ததும் இதே நிலா ஜ ஜ ஜா”.

11.17 மணிக்கு அவன் மாம்பலம் இறங்கினான், ”குலுவாலிலே முத்து வந்தல்லோ”

11.36 மணிக்கு போத்தீஸுக்கு எதிரில் இருக்கும் காதிம்ஸுக்கு வந்து சேர்ந்தான். உள்ளே நுழையும் முன்னே பாட்டை நிறுத்திவிட்டு அதன் பின் உள்ளே நுழைந்தான். இந்த முறை காதிம்ஸ் உள்ளே நுழையும் போது போன முறை பிறந்த உற்சாகம் பிறக்கவே இல்லை. சுகுமார் அவன் போட்டிருந்த செருப்பை கழட்டி காட்டி இதை வாங்கி 10 நாள் கூட முழுதாய் ஆகவில்லை, என பில்லை எடுத்து காண்பித்தான். எதாவது காரணம் சொல்லி மாற்றி தராவிட்டால் கத்தி பிரச்சனை செய்துவிடலாம் என்று தயாராய் இருந்தான், ஆனால் பில்லையும் செருப்பையும் ஒரு முறை பார்த்து விட்டு, வேற எடுத்துக்கோங்க என்று சர்வ சாதரணமாய், செருப்புகள் இருக்கும் இடத்தை நோக்கி கை நீட்டினார். இது போல் ஒரு நாளைக்கு 5 வாடிக்கையாளர்களை பார்ப்பார்கள் போலும் என்று மனதுக்குள்ளே நினைத்து கொண்டான் சுகுமார்.
    
இப்போது செருப்பின் விலை 400 ரூபாய், இதற்கு அதிகமாக தான் வேறு ஒரு செருப்பை எடுக்க வேண்டும், அல்லது அதற்கு நிகரான விலையிலாவது எடுக்க வேண்டும், இது இரண்டுமில்லாது 400 ரூபாய்க்கு கம்மியாய் எடுப்பது சாத்தியமில்லாதது. கடைக்குள் ஒரு தமிழ் ஆள் கூட இருக்கவில்லை, இருந்தது அனைத்தும் இந்திக்காரர்களாகவே இருந்தனர். அவர்களிடம் 400 முதல் 450 ரூபாய்க்கு உள்ளாக செருப்பு ஒன்றை தாருங்கள் என்று சொல்லி புரிய வைக்கவே  அவனுக்கு 3 நிமிடத்திற்கும் மேலாக கடந்தது. அடுக்கி வைத்திருக்கும் செருப்புகள் பலவற்றது நன்றாய் இருந்தது, ஆனால் விலையோ ஒவ்வொன்றும் 1200க்கும் மேல். ஒன்றிரண்டு செருப்புகள் வெகு எளிமையாய் இருந்தது, விலை 300 ரூபாய்க்குள் இருந்தது, ஆனால் அதை எடுக்க முடியாத சூழ்நிலை. இப்படியாக நன்றாய் இருக்கும் செருப்புகள் தொட முடியாத விலையில் இருக்க, சுகுமாருக்கு எதை எடுப்பதென்றே தெரியவில்லை. ஒரு பக்கம் நேரம் அநாயசமாக கடந்துக் கொண்டு இருந்தது. இப்போது நேரம் என்ன என்று பார்க்கவே சுகுமாருக்கு பயமாய் இருந்தது, குறைவான நேரம் தான் கடந்திருக்கும் என்று தன்னை தானே தைரியப்படுத்தி கொண்டான். 500 ரூபாய்க்கு ஒரு செருப்பு இருந்தது, அதை பார்க்க ஒன்று அத்தனை அருமையாய் இருந்திடவில்லை, ஆனால் அதை தான் எடுத்தாக வேண்டும் என்ற சூழ்நிலை, வேறு எந்த செருப்பும் அந்த விலை வட்டத்தில் இல்லை. எவ்வளவு நேரம் தான் தேடி கொண்டிருப்பது என்றும் தெரியவில்லை. பணம் இருப்பை ஒரு முறை பார்த்தான், 103 ரூபாய், நேரத்தை ஒரு முறை பார்த்தான், 12.03. செருப்பின் தரத்தை அவனுக்கு தெரிந்த அளவில் நோட்டமிட்டான்…. இறுதியாய் அதையே பில் போட சொன்னான், வேறு வழி இல்லை, இங்கேயே 12.03, ஆனால் 12.40க்குள் சுகுமார் சென்ட்ரலில் இருந்தாக வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் அவனால் கும்மிடிப்பூண்டி ரயிலை பிடிக்க முடியும், ஒரு வேளை அதை தவற விட்டால் 01.15க்கு தான் அடுத்த வண்டி, அதில் சென்றால் 01.40க்கு தான் கம்பெனிக்கு செல்ல முடியும். நேற்று தான் வேளைக்கு தாமதமாய் சென்றான், இன்றும்  தாமதமாய் செல்ல முடியாது. அதனால் அந்த செருப்பை கூடுமான வரையில் விரைவாய் பில் போட்டு கடையை காலி செய்யும் அவசரத்தில் துடித்து கொண்டிருந்தான்.

     பில் போடும் இடத்தில் பேரம் வேறு பேசியாக வேண்டும், இல்லாவிட்டால் இருக்கும் 103 ரூபாயில் 100 ரூபாயை கொடுத்து விட்டு மிச்சம் 3 ரூபாயில் மதிய சாப்பாட்டை பற்றி யோசிக்க முடியாது. ஒரு 20 ரூபாயையாவது பேரம் பேசிவிட்டால் தேவலாம் என்று பில் போடும் நபரிடம் பேசி பார்த்தான். பில் போடுபவன் இந்தி கலந்த தமிழில் கறராய் முடியாது என்று மறுத்துவிட்டான், கொஞ்ச நேரம் பேசி பார்த்தான், நாம் எதற்கு இந்திகாரன் காலை பிடிக்க வேண்டும் என்று நூறு ரூபாயை கிட்டதிட்ட கிடாசி விட்டு பழைய செருப்பை ஒப்படைத்து விட்டு. புதிய செருப்பை அணிந்து கொண்டு கடையில் இருந்து வெளியேறினான். புது செருப்பு வலது காலை கடிக்க செய்த்து.

     சுகுமார் வெளியே வந்தவுடன் ஒரு முறை மணி பார்த்தான், 12.07. இப்போது ஓடியே ஆக வேண்டும், ஓடினால் தான் வேலைக்கு நேரத்திற்கு செல்ல ஓரளவாவது வாய்ப்புள்ளது. ஆனால் உஸ்மான் சாலையில் ஓடுவது என்பது சாதரண விஷயமல்ல… வழி நெடுகிலும் இரு புறமும் கடைகள், மக்கள் ஊர்ந்த வண்ணம் தான் நடப்பார்கள், நடந்து கொண்டே இருப்பார்கள் ஏதாவது கடையை பார்த்தால் அப்படியே நின்று விடுவார்கள், வழியிலே விற்பன்னர்களும் ஆட்டோகாரர்களும் நின்று இடைமறிப்பார்கள், இவ்வளவும் மீறி எப்படி ஓடுவது, ஓடினாலும் ரயிலை பிடிக்க முடியுமா என்பதை சுகுமாரால் நிச்சயம் கணிக்க முடியவில்லை. ஆனால் ஓடி தான் ஆக வேண்டும்…

12.07 மனதில் நம்பிக்கையை வர வைத்துகொண்டு சுகுமார் ஓட துவங்கினான். கூட்டத்தில் ஓடுவது மிக அபாயமானது, யார் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம், அதனால் கண்களை கூர்மையாக வைத்து , எதிர்படும் அனைத்து நபர்களின் அடுத்த 6 விநாடி நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று கணக்கிட்டு கொண்டு அவன் ஓடி கொண்டிருந்தான். எதிர்படுன் நபர்கள் தன் பாதையில் குறுக்கிடுபவர்களாக இருப்பின் அதற்கு மாற்று பாதை தேட வேண்டும், தேடியே ஆக வேண்டும், அப்போது தான் ரயிலை பிடிக்க முடியும். அவனுக்கு வேகமாய் ஓட அப்போதிருந்த வாய்ப்புகள் இரண்டு தான், ஒன்று கூட்டத்தில் காலி இடங்களை கண்டு பிடித்து அதை அவனது பாதையாக தேர்ந்தெடுக்க வேண்டும், மற்றொன்று கூட்டத்தை ஊடுருவ வேண்டும். சுகுமார் இரண்டையும் நேரம் அறிந்து செய்தான். அது மதிய நேரமாய் இருந்ததால் சுகுமாருக்கு ஓடுவது என்பது சிறிதளவு சாத்தியப்பட்டது. கூட்டத்தை ஊடுருவி ஊடுருவி விரைந்தான், ஓட முடியாத கட்டத்தில் வேகமாய் நடக்க செய்தான். அப்போது பார்த்து அந்த கூட்டமான பாதையில் ஓர் ஆட்டோ எதிர்புறம் வந்து கொண்டிருந்தது. ஜனங்கள் அந்த ஆட்டோக்கு வழி விடும் பொருட்டு ஒதுங்கியதில் சுகுமாரின் ஓட்டம் தடை பட்டது, அதிர்ஷ்டவசமாக ஆட்டோ எதிர் வருவதிலும் ஓர் சாதகத்தை கண்டு கொண்டான். ஆட்டோ கடந்து போகும் வரை ஒதுங்கி இருந்து விட்டு, ஆட்டோ கடந்தவுடன் ஆட்டோவிற்காக ஒதுங்கிய பாதையை ஓட்டத்திற்காக உபயோக படுத்திகொண்டான், ஆனால் 3 மீட்டர் வரை தான் அவனுக்கு அந்த ஓட்டம் சாத்தியபட்டது. மறுபடியும் வேக நடை போட ஆரம்பித்தான், கூட்டத்தை ஊடுருவி ஊடுருவி செல்வதில் நேரம் இழுத்து கொண்டிருப்பதை உணர்ந்தான். ஆனால் வேறு வழியில்லை. இன்னும் முக்கால் கி.மீ. இப்படிதான் செல்ல வேண்டும், அதன் பின் வலது புறம் திரும்பி ரங்கநாதன் தெருவில் ஒரு கால் கி.மீ கடக்க வேண்டும். ஓடினான், நடந்தான், ஒதுங்கினான், தாண்டினான், மூச்சிறைத்தான், வழி விட சொல்லி கத்தினான், அவ்வப்போது நேரம் பார்த்து கொண்டான்….. ஆனால் நிற்க மட்டும் அவன் கடிகாரம் அவனை அனுமதிக்கவில்லை. ரயில் நிலையம் நெருங்க நெருங்க அடிக்கடி நேரம் பார்த்தான்.

12.09

12.11

12.12.45

12.14.11

12.14.51 ரயில் நிலையத்தில் நுழைந்துவிட்டான், தண்டவாளத்தில் இவனுக்கான ரயில் நின்று கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் ஓடியதை விட இப்போது ஓடுவது மிக முக்கியமானது என்று உணர்ந்தவனாய் பேய் போல் ஓடினான்.

12.15.06 ரயில் நகர ஆரம்பித்தது.

12.15.12 ரயில் சற்று வேகம் பிடிப்பதற்கு முன் சுகுமார் அதில் ஓட ஓட ஏறி விட்டான்.

நல்ல வேளையாக இந்த ரயிலை சரியான நேரத்தில் பிடித்தோம், இல்லையென்றால் 12.40 ரயிலை பிடிப்பது மிகவும் சிரமமாய் போயிருக்கும் என்று மூச்சிறைத்தவாறே மனதில் நினைத்து கொண்டான். ஆனால், இப்போதும் 12.40 ரயிலை உறுதியாய் பிடித்து விட முடியாது என்பது சுகுமாருக்கு தெரியும், ஏனெனில் சுகுமார் இந்த ரயில் சென்ட்ரல் போகவே 25 நிமிடம் எடுக்கும், அதற்குள் 12.40 ஆகி விடும், அதன் பின் இன்னொரு ஓட்டம் ஓட வேண்டும், அப்போதும் ரயில் உறுதியாய் கிடைக்கும் என்று உத்தரவாதம் இருக்காது.

ரயில் நல்ல வேகத்தில் போனது, எதிர்பார்த்த நேரத்தை விட ரயில் முன்பாகவே போய் விடும் என்று சுகுமார் சந்தோஷ பட்டு கொண்டான்.

12.38.54 ரயில் பார்க் ஷ்டேசன் வந்து விட்டது. இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரயிலை பிடித்தாக வேண்டும், அதனால் ஓடுவது என்று எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை சுகுமாருக்கு. உஸ்மான் சாலையில் ஓடுவதை விட பார்க்கில் ஓடுவது சுகுமாருக்கு அத்தனை சிரமமாய் இல்லை. ஆனால் இடையில் ஒரு சப் வே ஒன்றில் ஏறி இறங்க வேண்டும், ஆனால் அன்று பார்த்து கூட்டம் சற்று குறைவாகவே இருக்க சுகுமார் சடசடவென கூட்டத்தினுள் புகுந்து புகுந்து சப் வேயில் இருந்து வெளியே வந்து விட்டான்.

12.39.33 எப்படியும் ரயிலை பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு பிறந்தது. கூட்டமான இடங்களை எல்லாம் கடந்தாகி விட்டது, கண்ணிற்கு எட்டும் தூரத்தில் தான் ஷ்டேஷன் இருக்கிறது, 30 விநாடி ஓட்டத்தில் எப்படியும் ஓடி விடலாம் என்று ஓட்ட வேகத்தை அதிகரித்தான். மெலிதாய் ஒரு வெற்றி புன்னகை அந்த களைப்பிலும் அவன் முகத்தில் பூத்தது. அந்த நேரத்தில் ஓர் ஆட்டோ திடீரென்று அவன் பாதையில் வலதுபுறமிருந்து குறுக்கே வந்து கொண்டிருந்தது, இதை அவன் அறியும் போது அவனை அவனே வேகத்தை கட்டுபடுத்தி நிறுத்தமளவிற்கு அவனுக்கும் அவகாசம் இருக்கவில்லை. அதற்குள் ஆட்டோவின் முன்பாகம் அவனுக்கு குறுக்கே வந்திருந்தது, இன்னமும் சுகுமார் வேகத்தை குறைத்திருக்கவில்லை, ஒரு சூழ்நிலையில் ஆட்டோவை பிடித்து தான் தன்னை தானே நிறுத்தி கொள்ள வேண்டுமென அனிச்சையாய், ஓடி கொண்டிருக்கும் ஆட்டோவின் நடுபாகம் மேலே கை வைத்து அவனை நிறுத்த பார்த்தான். அந்த முட்டாள் தனத்தில் கையில் சிறு காயங்கள் ஏற்பட்டது, ஆட்டோவின் பின் சக்கரம் இவனது வலது காலின் மீது ஏறி இறங்கி கடந்தது. சற்று தூரம் கடந்து ஆட்டோ நின்று சுகுமாருக்கு என்ன ஆனதென்று திரும்பி பார்த்தது. சுகுமாரும் சற்று நிதானித்து எப்படி இது நடந்தது என்று அவன் வந்த வழியை திரும்ப பார்த்தான். குறுகலான சந்தில் இருந்து வேகமாய் ஓடி வர, அதன் வழியே வேகமாய் வந்த ஆட்டோவின் மேல் மோதிவிட்டிருந்தான். இது அவனுக்கு புரிந்த போது, கூட்டம் மெல்ல மெல்ல கூடி கொண்டிருந்தது. கடிகாரம் பார்த்தான், 12.39.47. மறுபடியும் ஓட ஆரம்பித்தான்.

12.40.54 கும்மிடிபூண்டி செல்லும் ரயில் புறப்பட தயராய் நின்று கொண்டிருந்தது. ஓடி போய் ஏறி கொண்டான்.

12.42 ரயில் நகர ஆரம்பித்தது. ஓர் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு, கையில் இருந்த காயங்களை பார்த்தான். ஒன்றும் பெரிய அடி இல்லை என ஹெட்போன் போட்டு பாட்டு கேட்க ஆயுத்தமானான். தேடி பிடித்து ’கலாசலா’ பாட்டை தேர்ந்தெடுத்து கேட்டான். அவனையும் அறியாமல் சற்று நேரத்திற்கு முன் ஆட்டோ ஏறி இறங்கிய, அவனது காலை இறுக்க கடித்து கொண்டிருக்கும் அவனது வலது செருப்பு தாளத்திற்கு ஏற்றவாறு ஆடி கொண்டிருந்தது.

ன்புள்ள ராஜிக்கு,
       யுகாதிக்கு என்னை வீட்டிற்கு அழைத்து சிறப்பு விருந்தினை அளித்ததற்கு மிக்க நன்றி. நன்றி பரிமாறி கொள்ளும் அளவிற்கெல்லாம் நம்மின் உறவு தூரத்தில் இல்லை என தெரிந்திருந்தாலும் ஏன் நன்றி சொல்கிறேன் என்றால் என்னுடைய மீனா அக்காவிற்கு அடுத்து என்னை வீட்டிற்கு அழைத்து சிறப்பாக கவனித்து கொண்டது நீ தான். நீ எனக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆச்சர்யம் தான். உனக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை, உன்னை எனக்கு ஆரம்பத்தில் பிடிக்காது. அதனால் நீ என்னிடம் வந்து பேசினாலும் நிறைய முறை பெரிதாய் மரியாதை கொடுத்த பேசி இருக்க மாட்டேன். அதற்கு குறிப்பிட்ட காரணமெல்லாம் என்ன என்று நான் அறிய கூட முற்பட்டதில்லை, எனக்கு நட்பு என்றாலே பிடிப்பதில்லை என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் நான் என்னை நல்லவனாய் அடையாளப்படுத்தி கொள்ள விரும்புவதேயில்லை. நான் நானாக இருக்கவே விரும்புவேன். இதனால் யார் காயபட்டாலும் நான் என்றுமே பொருட்படுத்துவதில்லை. இதனால் நான் பலருக்கு சைக்கோவாகவும், சுயநலவாதியாகவும், கோமாளியாகவும், சுதந்திரனனாகவும் அடையாள பட்டிருக்கிறேன். உன்னிடமும் என் போக்கை நான் மாற்றி கொண்டதில்லை. ஆனால் நீயோ என்னிடம் தொடர்ந்து அன்பை வெளிகாட்டி கொண்டே இருந்தாய், இதற்கிடையில் நான் உன்னை எப்போது நேசிக்க ஆரம்பித்தேன் என்று எனக்கு தெரியவில்லை. உன்னிடம் நாள் முழுதும் பேசி கொண்டே இருக்க வேண்டும், பேக்கரிக்கு உன்னை அழைத்து சென்று மணிகணக்கில் ஒரு முட்டை பப்ஸை சாப்பிட வேண்டும், மணி கணக்கில் கிரிக்கெட் பேச வேண்டும், சினிமா பேச வேண்டும், அரசியல் பேச வேண்டும், கை பிடித்து நடக்க வேண்டும், உன் வீட்டில் உட்கார்ந்து பாடல்கள் கேட்க வேண்டும், உன்னை என் வீட்டிற்கு அழைத்து சாப்பிட கொடுக்க வேண்டும், லொள்ளு சபா பார்க்க வேண்டும், கைலாஷ் கேர் கேட்க வேண்டும், அம்மாஞ்சிகளை ஓட்ட வேண்டும், உன் முதுகில் சாத்தி கொண்டே இருக்க வேண்டும், கிறுக்கு தனமாய் கேள்விகள் பல கேட்க வேண்டும், நீ சொல்வது அனைத்தும் ஆட்சேபிக்காமல் ஏற்று கொள்ள வேண்டும், உன்னை ஆட்சேபிக்கும் ஒருவனை காலி செய்ய வேண்டும், திரையரங்கில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது தோள் மேல் கை போட்டு கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் எனக்கு தோன்றி கொண்டே இருக்கும். இப்படியெல்லாம் எனக்கு தோன்றுவதால் நமக்குள் இருப்பது நட்பு என்று நீ பெயர் வைத்து விட்டாய். ஆனால் உண்மையில் உன்னை நான் அப்போது காதலிக்க ஆரம்பித்து இருந்தேன். நீ என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆனாய். நான் என் படிப்பை முடிப்பதற்கு நீ பெரிதும்  பக்க பலமாய் இருந்தாய், அதற்கெல்லாம் நான் என்றுமே பிராயிச்சத்தமாய் இருந்ததில்லை. நான் இருக்கவும் மாட்டேன் என்று உனக்கே தெரியவும் கூடும், ஆனால் இருந்தும் நீ என்னுடன் நெருக்கமாகவே இருக்கிறாய், நீ என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.

உன்னை நான் காதலிக்கிறேன் என்பதால் உன்னை எல்லா நாளும் கவனித்து கொண்டிருக்கவில்லை. ஒரு முறை தீபாவளி பர்சேஸ்க்காக நீ சென்னை வந்திருந்த போது உன்னை நான் துளியும் கவனித்து கொள்ளவில்லை, நீயாக வந்தாய், நீயாக துணி எடுத்தாய், நீயாக போனாய்…. நான் அருகில் மட்டுமே இருந்தேன். உன்னை நான் கவனித்து கொள்ளவே இல்லை என்று எனக்கு தெரியும். அந்த நாள் நான் வேறு பல கடுப்புகளில் இருந்தேன் என்பதை நீ புரிந்து கொண்டாய், உன்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நீ என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.

ஆனால் அடுத்த முறை நீ ஓசூரில் இருந்து சென்னை வந்த போது உன்னை என்னால் முடிந்தவரை பார்த்து கொண்டேன். அதுவும் ஒன்றும் அத்தனை சிறப்பான கவனிப்பு என்று சொல்லிவிட முடியாது, ஆனால் இருந்தாலும் நீ சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றவுடன் நீ சென்னை வந்து போனதை ஓர் பயண கட்டுரைகயாக எழுதி அதில் என்னை சிறப்பித்து எழுதி என்னை தூக்கி வைத்து கொண்டாடினாய். அதை எல்லாம் என்றுமே என்னால் மறக்க முடியாது.

நீ ஒரு முறை கைகள் இருக்கும் பண கஷ்டத்தில் இருக்கும் போது யுகாதி வந்து தொலைத்தது. ஆனால் இருந்தும் என்னை நீ யுகாதிக்கு அழைத்திருந்தாய், அழைத்தது மட்டுமில்லாமல் திரும்ப சென்னை வருவதற்கு பேருந்தையும் ரிசர்வ் செய்து கொடுத்தாய். இதை எழுதும் போது தான் அதற்குரிய பணத்தை நான் உன்னிடம் தராமலே வந்து விட்டது எனக்கு ஞாபகம் வருகிறது, பண கஷ்டத்தில் இருந்த போதிலும் உங்கள் வீட்டிற்கு என்னை ஆட்டோ வைத்து கூட்டி சென்றாய், வகைவகையாய் அசைவம் சமைத்து பரிமாற சொன்னாய், நான் கேட்டேன் என்பதற்காக ஒரு பெட்டி நிறைய இனிப்புகளை வாங்கி வந்து கொடுத்தாய், எனக்காக ஒரு சட்டை வாங்கி அன்பளிப்பளித்தாய்…. நீ என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.

ஓசூருக்கு வருவதற்கு 2 நாட்கள் முன்பு தான் உன்னிடம் சண்டை பிடித்திருந்தேன். நீ என்னை வேலை நேரத்தில் தொடர்பு கொண்ட ஒரு சிறு பிரச்சனைக்காக, அதன்பின் உன் அழைப்புகளை புறக்கணிக்க தொடங்கினேன். நீ என் அலைபேசிக்கு கூப்பிட்டு கொண்டே இருந்தாய், நான் துண்டித்து கொண்டே இருந்தேன். 15 முறைக்கும் மேலாக நான் துண்டிக்க துண்டிக்க நீ என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தாய், நீ அழைப்பதை நிறுத்துவாய் என்று எதிர்பார்த்தேன், ஆனால் நீ நிறுத்தவில்லை, நீ கூப்பிட்டு கொண்டே இருந்தாய், ஒரு கட்டத்தில் துண்டிக்க கை வராமல் உன் அழைப்பை ஏற்று உன்னிடம் பேசினேன், அந்த நாள் நான் உனக்கு எவ்வளவு முக்கியம் என்று ரொம்ப நேரம் விளக்கி சொன்னாய், நீ செய்த தவறிற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டாய். உன்னுடைய அந்த 35 நிமிட பேச்சு என் கண்களில் கண்ணீரை முட்ட செய்தது, நீ பேசி கொண்டிருக்கும் போதே என் கண்களில் நீர் வழிந்தது உனக்கு தெரியாது,… எந்த ஆணும் என்னை இவ்வாறு அழ வைத்ததில்லை…. நீ என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்..


அன்று முழுதும் நான் உன் வீட்டை என் வீடு போல் உணர்ந்தேன். இருக்கையில் திமிராய் அமர்ந்திருந்தேன், யார் உபசரிப்புக்கும் காத்திருக்காமல் வாங்கி வந்த இனிப்புகளை நானே காலி செய்தேன், உன் கணினியில் 40 முறைக்கும் மேலாக ‘கலாசலா’ பாட்டை கேட்டேன்….ஆனந்தமான நாள் அது. பொதுவாக நான் ஒரே பாட்டை திரும்ப திரும்ப கேட்டாள் என் பக்கத்தில் இருப்பவர்கள் கடுப்பு ஆகிவிடுவது வாடிக்கை. ஆனால் நான் அன்று அந்த பாட்டை ரசித்து கேட்டதையே நீ ரசித்து கொண்டிருந்தாய்… நீ என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.

                                                       --சுகுமார்—


     The Shawshank Redemption என்கிற படத்தில் Andy Dufrense என்னும் கதாபாத்திரம் செய்யாத ஒரு தப்பிற்காக ஆயுள் தண்டனை அளித்து இங்கிலாந்தில் உள்ள ஒரு பெரிய சிறையில் அடைக்கபடுவார். ஒரு முறை சிறை அதிகாரியின் அறையில் இவர் மட்டும் தனியாக இருக்கும் போது இவர் கண்களில் ஓர் இத்தாலி இசைதட்டு கண்களில் படும், பக்கத்திலே ரெக்கார்ட் ப்ளேயரும் இருக்கவே, இந்த இசைதட்டினை கேட்க வேண்டும் என்கிற ஆசை அவருள் மலரும். உடனே அந்த அறையின் கதவுகளை உள்ளிருந்தபடியே பூட்டி கொண்டு, அந்த பாடலை ஒலிக்க விடுவார். பக்கத்திலே சிறையின் எல்லா ஸ்பீக்கர்களுக்கும் இணைக்க பட்டுள்ள மைக்கும் இவர் கண்களில் படவே உடனே மைக்கையும் ஆன் செய்து சிறை முழுதும் அந்த இத்தாலி பாட்டினை ஒலிக்க விடுவார். பல ஆண்டுகளாக எந்த வகை இசையினையும் கேட்டிராத அந்த சிறை கைதிகள் அந்த இத்தாலி பாட்டினை ஒலிக்க செய்யும் அந்த ஸ்பீக்கர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்ப்பார்கள். ஆயிர கணக்கான கைதிகளுக்கும் ஆயிர கணக்கான ரசனைகள் இருக்க கூடும், ஆனால் அந்த பாடலை கேட்டு கொண்டிருந்த தருணம், அந்த ஆயிரகணக்கான ரசனைகளும் ஒரே கடலில் கலக்கும் ஆயிரகணக்கான நதிகளை நினைவுபடுத்தும்.

     ”அந்த இரண்டு இத்தாலி பெண்களும் என்ன பாடி கொண்டிருந்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. உண்மை என்னவென்றால் எங்களுக்கு அதை தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. மிஞ்சி போனால் ஏதோ ஒன்றின் அழகை வர்ணிக்கும் வகையில் உருகி உருகி அவர்கள் பாடியிருக்க கூடும். ஆனால் அந்த பாடலை கேட்டு கொண்டிருந்த அந்த நிமிடம் கூண்டுக்குள் இருக்கும் பறவை தன் சிறகை அடித்து அடித்து கூண்டையே உடைத்து வெளியே பறக்கும் தவிப்பை எங்களுக்கு நினைவூட்டியது. எங்கள் அனைவருக்கும் இந்த சிறை கதவுகள் என்றாவது திறந்து எங்களை வெளியே விடும் என்ற நம்பிக்கை ஆழமாய் பிறந்தது.” – என்று Andy Dufrenseன் சக கைதி அந்த பாடலை வர்ணிப்பார்.

     சுகுமார் ‘கலாசலா’ பாட்டை தன் அம்மாவிற்கு அறிமுக படுத்தினான். அவனது அம்மா அந்த பாட்டை கேட்டு விட்டு “இதெல்லாம் ஒரு பாட்டா டா? என்னவோ போ” என்று தன் அபிப்ராயத்தை சொன்னார்கள். அப்போது அவன் இந்த இத்தாலி பாட்டினை தான் நினைவு கூர்ந்து கொண்டான். இசை எத்தனை வகையோ ரசனையும் அத்தனை வகை தான் போலும்.


Wednesday, 14 March 2012

உணவு, உடை, உறையுள், காதல்.



            ‘வலி’.- நமக்கு இறைவன் கொடுத்த ஓர் அழகிய பாதுகாப்பு சாதனம். வலி என்ற ஒன்று இல்லையேல் நம்மை நாமே எப்போதோ மாய்த்திருப்போம். வலியின்மைக்கும், உயிர் இருத்தல்க்கும் ஓர் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தான் வாழ்க்கை சாத்தியமாகிறது. “Heart attack” ஆகிறது, அதன் விளைவாய் இதயம் வலிக்கிறது, அதன் பொருட்டு தான் நம்மால் மருத்துவம் செய்ய இயல்கிறது. ஒரு வகையில் பார்த்தால் நம் உடம்பு நம்மிடம் பேசும் ரகசிய பாஷை தான் வலி. நம் உடம்பு அதற்கான சௌகரியத்தை நம்மிடம் கேட்டு வாங்காமல் போனால் நம்மை நாமே சிதைத்து இருப்போம். இவ்வளவு நாளும் நாம் பாதுகாப்பாய் இருந்ததின் பிண்ணனி, வலியிடம் இருந்து நம்மை நாமே தப்பிவித்து கொண்ட முயற்சிகளே. வலி மட்டும் இல்லையேல் முள் மீது நடந்திருப்போம், குளிர் பொருட்படுத்த மாட்டோம், பாம்பு கடிக்கு அஞ்ச மாட்டோம்…. அவ்வளவு ஏன் பசிக்கும் நேரம் எது என தெரியாமல் ஒழுங்காய் உணவருந்த கூட மாட்டோம். பசி என்பதே ஒரு வலியாய் இருக்கும் பட்சத்தில் வயிற்று பசிக்கு தீர்வு தேடி, தீர்வு தேடி தான் நம் இத்தனை நாள் உயிர் வாழ்தல் சாத்தியமாயிருக்கிறது. வலி என்பது துன்பம் என்று  ஒரு புறம் இருந்தாலும், வலி தான் இத்தனை நாளும் நம்மை வழி நடத்தி வந்திருக்கிறது… ஓர் கண்டிப்பான ஆசிரியர் போல.
     வலியை பற்றிய இந்த உண்மை புரிந்துவிட்டால், காதலை பற்றி புரிந்துகொள்வதும் அத்தனை கடினமல்ல…

            *           *           *           *           *

எந்த வகையில் பார்த்தாலும் காமம், குடும்பம், பெற்றோரின் கனிவு, சகோதர சகோதரிகளின் நேசம், தொழிலாளியின் விசுவாசம், ஆசிரியரின் அக்கறை, கூட்டத்தில் தடுக்கி விழும் போது தூக்கி விடும் கைகள், உரிமையாய் தோள் மேல் கை போடும் நண்பன், போன்ற நிறைய நிறைய விஷயங்களுக்கு பின்னால் காதலே ஆழ்ந்த ஆதிக்கம் செலுத்திகிறது. பிறந்த கணம் முதல் இறக்கும் கணம் வரை காதல் நம் ஒவ்வொருவருக்கும் மிக தேவையாய் இருக்கிறது. அவன் துறவியே ஆனாலும், அவனுக்கு துறவின் மேல் ஓர் காதல் இருந்தால் தான், அவனின் துறவு சாத்தியம். பிச்சைகாரனாகவே இருந்தாலும் அவனுக்கு திருவோட்டின் மேல் ஓர் காதல் இருக்க தான் செய்கிறது.

            *           *           *           *           *

காதல் பற்றி சொல்லும் போது காமத்தை தவிர்த்து செல்ல முடியாது. ஆண் பெண் காதலின் பல நோக்கங்களில் காமமும் ஒன்று. காமம் இல்லையேல் இங்கு யாரும் இல்லை. ஆக, மனிதனின் ஆதியே காதல் தான். காதல் இல்லையேல் ஆதாம், ஏவாள் சேர்க்கை நடந்திருக்காது. குழந்தைகள் கண்டிருக்காது. மனித இனம் தழைத்தோங்கி இருக்காது. ஏன் எந்த உயிரும் தழைத்தோங்கி இருக்காது. பிற கோள்களை போல பூமியும் வெட்டவெளியாய் இருந்திருக்கும்.

அடிப்படையில் மோகத்திற்க்காகவும், மோகத்தின் விளைவாய் உருவாகும் கருவிற்காகவும், கருவினால் விழையும் குழந்தைக்காகவும் மனிதனின் ஆரோக்கியம் பெரிதாய் இழக்க நேரிடுறது. 70 துளி ரத்தம் சேர்ந்தால் தான் ஆணுக்கு ஒரு துளி விந்து சத்தியம். பெண்ணிற்கு பிரசவம் என்பதே மரணம் வரை எட்டி பார்க்கும் ஓர் வலி மிகுந்த பயணம். குழந்தை பிறந்த பின்னரும் எவ்வளவு போரட்டம்… கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாவது குழந்தையை பேணி பாதுகாத்தல் வேண்டும், உணவளிக்க வேண்டும், விளையாட்டு காட்ட வேண்டும் என எவ்வளவு கடமைகள். இருந்தும் உலகம் முழுதும் காமம் நடந்து கொண்டே இருக்கிறது? ஏன் மனிதர்கள் அனைவரும் ஒரு நாள் சேர்க்கைக்கு பின் நடக்கும் இவ்வளவு போரட்டங்களையும் சந்திக்க ஆயுத்தமாகின்றார்கள்?

மனிதனுக்கு காமம் தான் வேண்டுமென்றால் இந்நேரம் விபச்சாரி விடுதிகள் தெருவிற்கு தெரு இயங்கி வந்திருக்கும். குழந்தை தான் வேண்டும் என்றால் அனாதை ஆசிரமங்கள் அனைத்தும் எப்போதோ காலியாகி இருக்கும். ஆனால், உண்மையில் காமத்தை தேடியும், குழந்தையை தேடியும் நாம் இங்கு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கவில்லை. நம் தேடல் வேறு… அது ஆத்மார்த்தமான காதலை தேடி.

காம சுகமும், குழந்தை பேறும் காதல் நமக்கு அளித்த பரிசு. திருமணங்கள் காதலை நோக்கிய பார்வையாய் இல்லாமல் பரிசுகளை நோக்கிய பார்வையாய் இருக்கும் பட்சத்தில் தான் காதல் அவர்களிடம் இருந்து விலகி செல்கிறது.

            *           *           *           *           *

பிற உயிர் இனங்களை காட்டிலும் அதீத வளர்ச்சி மனிதனுக்கு மட்டும் எப்படி சாத்தியமாற்று என்பதை தேடி பயணித்தால் ஆச்சர்யமாகவும் இருக்கிறது, அபத்தமாகவும் இருக்கிறது.

மனிதன் உட்பட புறா, அன்னப் பறவை இவ்விரண்டை தவிர எந்த உயிர் இனமும் “ஒருத்தனுக்கு ஒருத்தி” என்ற குடும்ப கோட்பாட்டில் வாழ்வதில்லை. அதனால் ஒரு ஆண் இனத்திற்கு அதற்கான பெண் இனத்தை தேடுவதில் அதிக சிக்கல் இருப்பதில்லை. எப்போதாவது ஒன்றிற்கும் மேலான ரோமியோக்கள் ஒரு ஜுலியட்டிற்க்காக குழுமும் போது அங்கே சிறிதாய் ஒரு வன்முறை அவ்வளவு தான். அதில் எது ஜெயித்து வருகிறதோ அது தான் ஜுலியட்டின் அன்றைய ரோமியோ. அதன்பிறகு குட்டிகளை பார்த்துகொள்வதெல்லாம் ஜுலியட்டின் வேலை தான். குட்டிகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கண்டவுடன் ஜுலியட்டின் கடமை முடிந்தாயிற்று. அதன்பின் அவரவர் உணவுகளை அவரவரே தேடிகொள்ள வேண்டியது தான். இயற்கையின் வடிவமைப்பு அப்படி… எப்படியோ, ரோமியோவும் ஜுலியட்டும் சேர பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை. எப்போதவது அடித்த கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வளவு தான்.

ஆனால் மனிதனின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் சற்று பரிதாபம் தான். ஆதிவாசி காலத்தில் இருந்தே ஒரு ஆண் ஒரு பெண்ணை அடைய வேண்டுமென்றால், தன்னை தனித்திறமையாளனாகவோ, வீரமானவனாகவோ, பாதுகாப்பளிக்க உரியவனகவோ அந்த பெண்ணிற்கும், அவளை சார்ந்தவர்க்கும் நிரூபிக்க வேண்டும். வெகு குறைந்த பட்சமாய் வாழ்நாள் முழுக்க ஒரு பெண்ணை உணவளித்து பாதுகாப்பாக வைத்துகொள்ள முடியும் என்றாவது அவன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கும் ஓர் ஆணை அடைய வேண்டுமென்றால் தன்னை அழகாக காட்டிகொள்ளவோ, தனித்திறமை கொண்டவளாகவோ காட்டக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்.  

இந்த நிர்பந்தங்களின் விளைவே ஆடல், பாடல், வேடிக்கை, விளையாட்டு, நகைச்சுவை, அலங்கார வீடு, வாகனம், நகை, அழகு நிலையம், அழகழகான உடைகள், என பல பல அம்சங்கள் தோன்றலாயிற்று. ’தன்னை தேர்வு செய்ய வேண்டும்’ என்று கையாண்ட உத்திகள் இன்றைய நாளில் பல அம்சங்களாக வடிவமாற்றம் பெற்று விட்டது. இப்போது இவையனைத்தின் மூலம் என்ன தேடினால் காதலும் காமமும் கைகோர்த்து புன்முறுவல் பூக்கின்றன.

சரியாக சொன்னால் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் செயற்கையான “ஒருவனுக்கு ஒருத்தி” கோட்பாட்டால் தான் நிறைய சிக்கல்களில் சிக்கிக் கொண்டோம். இதை ஒவ்வோர் தனிமனிதனின் விருப்பமாக விடாமல், நாகரிக அடையாளமாக திரித்து, காமத்தையும் நாகரிகத்தையும் குழப்பிகொள்கிறோம். இந்த கோட்பாட்டை எவன் மீறுகிறானோ, அவன் கேள்விக்குள்ளாகாமல் புறக்கணிக்க படுகிறான். இந்த “ஒருவனுக்கு ஒருத்தி” கோட்பாட்டை எளிதாகவோ, நிர்பந்த்தின் பேரிலோ ஒரு சிலரால் பின்பற்ற முடிகிறது. ஆனால் மனிதனுக்கு ஒத்து வராத, இந்த இயற்கைக்கு முரணான கோட்பாட்டை உலகமே பின்பற்ற வேண்டும் என கலாச்சாரமாய் திரித்ததில் தான் சிக்கல்கள்.

மனிதன் உட்பட, புறா, அன்னம் தவிர எந்த உயிரனமும் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கோட்பாட்டை முழுமையாய்  பின்பற்றுவதில்லை. இங்கே புறா என்றால் ஏதோ ஒரு புறா, இரண்டு புறா கணக்கில்லை இது. மொத்த புறா இனமும் ஒருமித்தமாய் பின்பற்றும் கோட்பாடு இது. இப்போது பிரச்சனை என்னவென்றால் கண்ணகி போன்ற பெண்கள் psycho போல் செயல்பட்டாலும் உலகம் கண்டுகொள்வதில்லை, ஆனால் ஷகிலா போன்ற பெண்கள் அவர்கள் ‘தேமே’ என்று அவர்கள் பாட்டுக்கு வேலையை பார்த்துகொண்டு சென்றாலும் “போறா பாரு, அடுத்தவனோட படுத்து வாழ்வதெல்லாம் ஒரு பொழப்பா?” என்று காது பட கமெண்ட் அடிப்பது தான் பிரச்சனை. இவளுக்கு மளிகை கொடுக்கும் அண்ணாச்சியில் இருந்து டிக்கெட் கொடுக்கும் கண்டக்டர் வரை அனைவரும் இவளை ஒதுக்கி பார்ப்பது எவ்வளவு மனிதம் கொள்ளும் செயல் என்று யாரும் யோசிப்பதில்லை. இப்போது, ஷகிலா என்ன புறா கூட்டத்தில் இருந்து கொண்டா விதிமுறை மீறிவிட்டாள்?. எதற்காக இவள் இப்படி புறக்கணிக்க படுகிறாள்.? எல்லா உயிர் இனமும் இப்படி தானே ஐயா இருக்கிறது,? நீ நல்லவன் என்று காட்ட அடுத்தவரை கெட்டவன் என்று வர்ணிக்க நீ யார்?

இப்போது இருக்கும் 90 சதவீத கெட்ட வார்த்தைகள் காமத்தை வைத்து தான் உருவாகி இருக்கிறது. நீங்கள் பஸ்ஸில் யார் மீதாவது தெரியாமல் இடித்து விடுகிறீர்கள்… அவன் உன்னுடைய அம்மாவை திட்டிவிடுகிறான், அன்று முழுதும் மன உளைச்சலாய் இருப்பாயா மாட்டாயா? ஒரே நிமிடத்தில் அவன் உன்னை வார்த்தையால் பலவீனப்படுத்தி விட்டான். உன்னால் என்ன செய்ய முடிந்தது. விலங்குகளில் கெட்ட வார்த்தை, மன உளைச்சல், யோகா எதுவுமே கிடையாது. விலங்குகளுக்கு காமம் என்பது குளிப்பது, டை கட்டி கொள்வது போல் ஓர் செயல். அவ்வளவு தான். முடித்து விட்டு அது அது அதன் வேலையை பார்க்க கிளம்பி விடும். நாம் தான் நயன்தாரா, படத்தில் ’லிப் லாக்’ செய்தால், “படத்துல எத்தனை டேக் எடுத்தீங்க” என்று வழிந்து கொண்டு பேட்டி எடுக்கிறோம். காமம் ஓர் செயலாய் இருக்கும் பட்சத்தில் இத்தனை முக்கியத்துவம் காமத்திற்கு இருக்குமா?

”ஒருத்தனுக்கு ஒருத்தி” என்ற மனிதனுக்கு ஒத்தே வராத கோட்பாட்டை பின்பற்றும் விளைவுகளை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? ”இந்த கோட்பாடு மனிதனுக்கு ஒத்து வராது என்று யார் உனக்கு சொன்னது… காலங்காலமாய் மனிதர்கள் இதை தானடா பின்பற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்….” என்று சண்டை கட்ட ஆயுத்தமாகும் கண்ணகி ரசிகர் நற்பணி மன்றத்தை நோக்கி நான் சில கேள்விகளை கேட்கிறேன்…

à அவ்வளவு அழகான உங்கள் கண்ணகியை விட்டுச்சென்ற  கோவலன் ஏன் மாதவியை நாடினான். கண்ணகி அவ்வளவு அழகாக இருந்தாலும் அவளின் காதலும், காமமும் கோவலனுக்கு பற்றவில்லை. மாதவி அவனுக்கு தேவைப்படுகிறது. இப்போது அவனை அடக்கி கொண்டு இருக்க சொல்ல உங்கள் கலாசரத்திற்கு என்ன தகுதி இருக்கிறது? ‘கலாசாரம்’ என்பதே காலத்திற்கு ஏற்றவாறு மாறி கொள்ளும் பச்சோந்தி தானே?

à ”கற்பு”, “கற்பு” என அடித்து கொள்கிறீர்களே…. எல்லா புறாக்களும் தன் வாழ்நாள் முழுதுற்குமே ஒரே இணையை தான் வைத்து கொள்ளும். வேறு இணை தேடவே தேடாது. நீ உன் முட்டாள்தனத்தால் புறாவை இணை மாற்றி கூண்டில் அடைத்து விட்டால், ஒன்று பெண் புறா தற்கொலை செய்து கொள்ளும், அல்லது ஆண் புறாவை கொத்தியே கொன்று விடும். உங்கள் எல்லா தமிழ்நாட்டு பெண்களும் இதே போல் செய்வார்களா?


à வருடம் முழுதுமாய் விவாகரத்திற்காக கோர்ட் வாசலில் நின்று கொண்டும், உரக்கடையில் தயங்கி தயங்கி பால்டாயில் வாங்கி கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்தால் உங்களுக்கு எப்படி தான் தெரிகிறது? அப்போதும் கலாசாரத்தில் எல்லாம் எந்த  குறையும் இல்லை, அது அவனது விதி என்று அறிவுஜீவி போல் வாதிடுவாயா? யோவ்… 30 நொடிக்கு ஓர் தற்கொலைகள் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. பிடித்தவர் நிராகரித்ததனாலும், கற்பை பற்றி தப்பாய் பேசி விட்டார் என்றும், சந்திகத்து விட்டார் என்றும், கள்ள தொடர்பு அம்பலப்பட்டு விட்டதே என்றும், பிடிக்காத கணவனுடன் இருக்க முடியவில்லை என்றும் பல பல காரணங்களால் இங்கு பல பல உயிர்கள் மாண்டுகொண்டு இருக்கிறது. எல்லாத்திற்கும் காரணம் உங்கள் கற்பு நெறி தானே?

à மேற்கத்திய நாட்டில் பின்பற்றும் “ஒருத்தனுக்கு ஒருத்தி கோட்பாடு” சற்று தேவலாம். அங்கு வாழ்நாள் முழுதும் ஒரே துணையை விருப்பம் இருந்தால் தான் வைத்து கொள்கின்றனர், பிடிக்கவில்லையென்றால், தன் ஒருத்தனுக்கான ஒருத்தியை மாற்றும் அளவிற்காவது அவன் சற்று தெளிவாக இருக்கிறான். அப்படி மாற்றிக்கொண்டாலும் முகம் சுளிக்காத அளவிற்கு அந்நாட்டு மக்களுக்கு பக்குவம் இருக்கிறது. அது சரி, அங்கு 35 வயது விதவை மறுமணம் பண்ணிகொண்டு தன் மீதமுள்ள வாழ்வை அர்த்தபடுத்தி கொள்ள முடிகிறது, இங்கு ஒரு விதவைக்கு அந்த சுதந்திரம் இருக்கிறதா? அவள் மளிகை சாமான் வாங்க சென்றால் கூட ”எவனோடோ படுக்க கிளம்பி போறாளோ…” என்று வீணாய் புரளியை கிளப்பி அவளை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்களாமே? அப்படியா?


 ஒரு சமுதாயமே, ஒருவன்/ஒருத்தியின் படுக்கையறையை எட்டிப்பார்த்துவிட்டு தான், அவன்/அவள் எப்படிபட்டவன் என்பதை எடைப்போடுகிறது. தனிமனிதனின் படுக்கை சுதந்திரத்தில் சமுதயத்தின் விமர்சினத்திற்க்கு என்ன வேலை என்று தெரியவில்லை. இங்கே திருநங்கைகளிடமும், விபச்சாரிகளிடமும் முகம்சுளிக்காமல் பேசுபவர்கள் எத்தனை பேர்?

இந்த கோட்பாட்டால் எத்தனை புறக்கணிப்புகள்? எத்தனை தற்கொலைகள்? எத்தனை மன அழுத்தங்கள்? விலங்குகள் இந்த விஷயத்தில் எத்தனை புத்திசாலிகள் என்று பார்த்துகொள்ளுங்கள். பகவத்கீதையை முழுதாய் புரிந்துகொண்டது விலங்குகள் மட்டுமே…

உன்னுடையதை எதை நீ இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்து எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இந்த மாற்றம் உலக நியதியாகும்.

            *           *           *           *           *

இன்று 2012, இன்னமும் இந்தியாவில் காதல் திருமணத்திற்கு தடையாய் ஜாதியும், மதமும் இருக்கிறது. நியூ யார்க்கும் சரி, நைஜீரியாவும் சரி கைக்கொட்டி சிரிக்கும் விஷயமிது. அடிப்படையில் தொழில்தன்மையை வைத்து தோன்றிய ஜாதிகள் இன்னமும் இருமனம் இணைவதை தடுக்கிறது. அதுவும், ஜாதிக்கும், தனிமனிதனின் தொழிலுக்கும் தொடர்பற்று போய்விட்ட இன்றைய நிலையிலும் இந்தியர்கள் ஜாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர். இது பிற்போக்கானது என்ற தெரிந்த பின்னும் அதை மாற்றிக் கொள்ள முன் வர முடியாத நிலையில் சமுதாயம் நம்மை ஆட்கொள்கிறது. ஒருவனின் சுயமுடிவை ஒரு சமூகம் வெளியேயிருந்து ஒடுக்குகிறதென்றால் அந்த சமூகத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்? இந்த பூமியே ஓர் திறந்தவெளி சிறைச்சாலை தான். எதற்கு பிறந்தோம், எதற்கு இறக்கிறோம் என்று யாரும் இன்றுவரை உணராத பட்சத்தில், சக சிறைக் கைதியை “நீ இது தான் செய்ய வேண்டும்” என சொல்ல யாருக்கு என்ன உரிமை இருக்கிறது.

காதலர்களும் இந்த விஷயத்தில் ஒரு தலை பட்சம் தான், வெறும் திருமணத்திற்கு மட்டும் தான் அவர்களுக்கு ஜாதி தடையாய் இருப்பதில்லை. மற்றபடி குறைந்தபட்சமாக, அவனது சொந்த ஊரில் ஓர் கீழ்சாதி பையனின் தோள் மேல் கை போட்டு என்றும் சென்றிருக்க மாட்டான். பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி ஓர் பாதிப்பும் இருக்காது, அவன் மனதில். ஆறுதலாக, ஜாதிகளை  காதலாவது அவன் கண்ணை மறைக்கின்றதே… சந்தோஷம் தான்.

      *           *           *           *           *

”எனக்கு நீ தேவை… உனக்கு நான் இருப்பேன்” என்று சொல்லும் காதலே இறுதி வரை ஜெயிக்கிறது. இந்த இரண்டில் எதையாவது ஒன்றை உணர்த்த தவறும் பட்சத்தில் கூட காதல் முறிந்து தான் போகிறது. அன்பை வெளிகாட்ட பல வழிகள் இருக்கிறது, அதன் எந்த சாராம்சத்தை ஆராய்ந்தாலும், அது எதையாவது ’கொடுத்தால்’ தான் அன்பை வெளிகாட்டுதல் என்பது சாத்தியம். பரிசு, முத்தம், ஆச்சர்யங்கள், பூ, கடிதம், புடவை, மணிபர்ஸ், சிறிது நேரம், ஓர் செல்ல குட்டு, ஒன்று சேர்ந்து ஓர் நீண்ட பயணம், வெட்கப் படுத்தும் சிறிய கேலிக்கள், சின்ன சின்ன சேவைகள், மனம் திறந்த புலம்பல்கள், பகிர்தல்கள், முக்கியத்துவங்கள், ஒருவர் அழும் போது கொடுக்கும் சமாதானங்கள், விடை பெறும் போது வீசும் ஏக்க பார்வை, பாராட்டு, ஓர் அழைப்பு, புன்னகைக்க குட்டி குட்டி பொய்கள், உத்த்ரவாதம், நம்பிக்கை, தலையை கோதும் நுனி விரல்கள்  என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்… எதையாவாது கொடுக்கும் பொருட்டே அன்பை வெளிகாட்ட முடியும். இதுபோல், எளிய விஷயங்களை கொடுக்காமல் போவதன் பொருட்டே உறவுகள் கசக்கின்றன. காதல் கனக்கின்றன.

            *           *           *           *           *

உலகமே ’சௌகர்யத்தை’ (being comfortable) நோக்கி தான் நகர்கிறது. சௌகர்யமே உலகை இயக்குகிறது. பசித்தால் சாப்பிட சோறு, வானிலைக்கு ஏற்ற உடைகள், பாதுகாப்பான ஒரு வீடு, மன அமைதி தரும் கோவில், அலைபேசி, தண்ணீர் குழாய், தொப்பி, செருப்பு என எல்லாமும் நம்மை சௌகர்யப் படுத்துவதற்க்காகவே. அசௌகர்யகர்யத்தை யாரும் விரும்புவதில்லை. சாக்கடை அள்ளும் தொழிலாளியின் அசௌகர்யகர்யம் கூட 3 வேளையும் சாப்பிடும் சௌகர்யகர்யத்திற்காகவே. எல்லா உயிர்களுமே சௌகர்யத்தை வாங்கவே, அசௌகர்யத்தை விலையாய் கொடுக்கிறது, கொடுத்து தான் ஆக வேண்டும், அது தான் இயற்கை நியதி. இந்த வகையில் ஒவ்வொரு காதலர்களும் அவரவர் காதலர்களை சௌகர்யபடுத்தும் கருவிகள் தான். ஆனால், இங்கே காதலின் மாயம் என்றால் சௌகர்யப்படுத்துவதற்க்காக மேற்கொள்ள படும் அசௌகர்யகர்யங்கள் என்றுமே அசௌகர்யங்களாக கருதப்படுவதே இல்லை. எடுத்துகாட்டாக, முதல் மாத சம்பளத்தில் அம்மாவிற்கு எடுக்கப்பட்ட புடவைக்கான தொகை 500 ரூபாய், எந்த காலக்கட்டத்திலும் அசௌகர்யம் ஆகவே ஆகாது. காதலிக்கான 3 மணி நேர காத்திருப்பு, எந்த நாளிலும் கசப்பதேயில்லை. காதல் என்ற வணிக வங்கியில் எதை முதலீடு செய்தாலும் பன்மடங்கு லாபம் மட்டுமே சாத்தியம்.
.
     ஆக, காதல் என்பதே ஒரு மெனக்கெடல் என்று இருந்தாலும், காதல் கையில் நம்மை நாமே ஒப்புவித்ததன் பொருட்டு, காதல் நம்மை எத்தனை அழகாய் வழி நடத்தி வந்து இருக்கிறது, பாருங்கள் !!! இந்த நிலையில் தான் காதலும், வலியும் ஒன்று போல செயல்படுகிறது.

            *           *           *           *           *

மனிதனின் முக்கிய தேவைகளாக கருதப்படுவது உணவு, உடை, உறையுள் தான். காதல் ஏன் சொல்லப்படமால் போனதென்று தெரியவில்லை. எந்த நிலையிலும் உணவு, உடை, உறையுள் இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் காதல் இல்லாத வாழ்வு கடினம், அது தற்கொலை வரை ஒருவனை உந்தி விடும்.  உணவின்றி எத்தனையோ நாள் பசித்திருந்து இருக்கிறோம், குழந்தையில் உடையின்றி தான் பிறந்தோம், உறையுளின்றி பல மனிதர்கள் இன்றளவும் உலகம் முழுதும் நடைமேடையில் தூங்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிறந்த கணம் முதல் இறக்கும் கணம் வரை எல்லா உயிர்க்கும் காதலின் அரவணைப்பு அத்தனை அவசியாமாய் இருக்கிறது. காதலின் ஸ்பரிசம் உணராதவர் என யாரும் இங்கு இலர்.

            <3          <3          <3          <3          <3

கணினி, அலைபேசி, வாகனம் போன்ற பயன்பாட்டுக்கு தேவையான உபகரணங்கள் எல்லாம் காதலித்துக் கொண்டும், அம்மா, அப்பா, மனைவி, சகோதரர்கள் போன்ற காதலிக்கப்பட வேண்டியவர்களை பயன்படுத்திக் கொண்டு இருக்கும் உலகமாக இன்று ஜப்பான் இருக்கிறது. நாமும் ஜப்பான் ஆக வேண்டாம். 
அன்பிற்காக எதிர்பார்த்து கிடந்தது போதும். எதையாவாது கொடுக்கும் பொருட்டே அன்பை வெளிகாட்ட முடியும்…. நீங்கள் எதை கொடுக்க போகிறீர்கள்…?



Wednesday, 25 January 2012

atom ஆட்டம்

        கூடங்குளம் பிரச்சனை, தமிழக மக்கள் முதன் முறையாக கையாளும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட போராட்டம் என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடையே போராட்ட குணமும், விழிப்புணர்வும் இருப்பது மக்கள் பற்றிய நல்ல அபிப்பிராயத்தையே உருவாக்குகிறது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு பிறகான நல்ல பாடத்தை நம் மக்கள் கற்று கொண்டு உள்ளனர். அதுவே ஒற்றுமை.

கூடங்குளத்தில் என்ன பிரச்சனை???
     
      "கூடங்குளம்" என்பது நெல்லை என கூறப்படும் திருநெல்வேலியின் ஒரு கிராமம். இங்கே முதன் முதலில் 2002 ம் ஆண்டு அன்று அணு உலை கட்டு மானப்பணி  துவங்கப்பட்டது. அப்போதே அணு மின் நிலையத்தை பற்றிய பாதுகாப்பு அம்சங்கள் கேள்வியாக்க்கப்பட்டது. ஆகவே விஞ்ஞானிகள் பொது மக்களை, பொது இடங்களில் கூட்டி விளக்கம் அளித்து, பதில் கொடுத்த  பின்பு தான் கட்டடங்களை கட்டவே அனுமதித்தனர்.


      'கூடங்குளம் திட்டம் நிறைவேறினால் தமிழகத்தின் மின் தட்டுபாடு உடனடியாக குறையும் என்றும் , முதல் உலையை கட்டி முடித்து அதில் இருந்து 1000 MW மின்சாரத்தை எடுத்து விநியோகித்து , அடுத்த உலையை அடுத்த 6  மாத காலத்தில் கட்டி முடித்து அதில் இருந்து 1000MW மின்சாரத்தை  விநியோகித்து , அடுத்த 6 வருட காலத்திற்குள் அனைத்து கட்டட வேலைகளும் முடித்து மொத்தமாக 4000MW மின்சாரத்தை விநியோகிக்கலாம்' என்ற திட்டத்துடன் கடந்த 8 ஆண்டுகளாக தங்கு தடையன்றி அணு மின் நிலையத்தை உருவாக்கி கொண்டு இருந்தனர். இந்த 8 வருடங்களில் அவ்வப்போது உபகரணங்களின் சோதனை ஓட்டம் நடக்கும், சிறிது பெரிதாக சத்தங்கள் கேட்கும் . அம்மக்கள் அந்த சத்தங்களுக்கெல்லாம்  பழக்கப்படுத்தி கொண்டார்கள்.

      ஒரு நாள் தெரு நாய்கள் எல்லாம் தெறித்து ஒடுமளவிற்கும், வீட்டில் serial பார்த்து கொண்டு இருந்த பெண்களெல்லாம் அலறி தெருவிற்கு  ஓடிவருமளவிற்கும், டீ கடையில் ஆண்கள் எல்லாம் மாநாடு போடும் அளவிற்கும் , ஒரு கூட்டம் MLA, Councillor வீடுகளுக்கு படை எடுக்கும் அளவிற்கும் வந்தது ஒரு சத்தம் அணு மின் நிலையத்தில் இருந்து .... அந்த சத்தம் காதை கிழிக்கும் அளவிற்கு இருந்ததாகவும் , மிக நீண்டதாகவும், 10 கி.மீ வரை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்த சத்தம் தான் இன்று நிலவும் அனைத்து ப்ரிச்சனைக்கும் தொடக்க புள்ளியாய் அமைந்தது . தன் வாழ்நாளிலே கேட்டிராத ஒரு அகோரமான சத்தத்தை ஒரு சர்ச்சைக்குரிய அணு மின் நிலையத்தில் இருந்து வந்தால் எந்த சாமானியனும் கலங்க தான் செய்வான். அந்த கலக்கத்தை எழுச்சியாய் பயன்படுத்திகொண்டனர் சிலர் ,அரசியிலாய் பயன் படுத்திகொண்டனர் சிலர் . அந்த ஒரு நாளில் பல்வேறு பயத்திற்கும் பீதிக்கும் தம்மை ஆட்படுத்திகொண்டனர்  அந்த மக்கள் .


கூடங்குளத்தின் பயங்கள் :


  • அணு உலை செயல் பட ஆரம்பித்தால் கசியும் கதிர்வீச்சின் மூலம் கேன்சர் போன்ற நோய்கள் வருமா?
  • கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தை ஊனமாக பிறக்குமா?
  • மின் நிலையத்திற்காக கையகபடுத்திய நிலம் போக மேலும் நிலம் கையகபடுத்தப்படுமா?
  • ரஷ்யா சொன்ன இடத்தில் மின் நிலையம்  எழுப்பாமல் வேறு இடம் ஏன் தேர்வு செய்தனர்? 
  • அணு உலை கழிவுகளை ஏன் ரஷ்யா வாங்கி கொள்ளமறுக்கிறது?
  • பிரதமர் ஏன் ரஷ்யாவில் இருந்தபடி அணு உலை பற்றி அறிவித்தார்?
  • அணு உலை குளிர்ச்சிக்காக பயன் படுத்தப்படும் நீர் மறுபடியும் கடலில் கலந்தால் மீன் வளம் பாதிக்குமா?
  • மக்களுக்கு பாதுகாப்பு விளக்கங்களை சொல்லி குடுக்காமல் ஏன் மின் நிலையத்தை திறக்கிறார்கள்? இது சர்வதேச விதிமுறையை மீறும் செயல் இல்லையா?
  • சுற்றுசூழல்அறிக்கை, 16.11.11 அன்றுதான் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது , அது ஏன் ? (2002 முதலே கட்டடம் கட்ட தொடங்கி ஆயிற்று)
  • 6.5 ரிக்டர் பூகம்பம் வரை அணு மின் நிலையம் தாங்கும், 6.6 ரிக்டர் பூகம்பகம் வந்தால் என்ன ஆகும்?
இவையே கூடங்குளத்தை ஆட்டுவிக்கும் மெகா கேள்விகள்... சில கேள்விகளுக்கு விடை கிடைத்தது, சில கேள்விகளுக்கு விடைகள் ரகசியமானது, சில கேள்விகளின் விடைகளுக்கு பதிலே இல்லை, சில கேள்விகளின் விடைகள் மழுப்பும் வகையில் இருந்தது.

இதற்கிடையில் அணு உலை பாதிக்கபட்டால் வாய், மூக்கு போன்றவற்றை துணி கொண்டு பொத்திக்கொள்ள வேண்டும், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளிய வராமல் இருக்க வேண்டும், உணவிலும் கதிர்வீச்சு கலந்திருப்பதால் அதிகாரிகள் சொல்லும்வரை யாரும் உணவை உண்ணக்கூடாது, தண்ணீரும் குடிக்ககூடாது, அணு உலைக்கு பாதிப்பு என்று முன்கூட்டியே தெரிந்தால் அணு உலையை விட்டு 30 கி.மீ. தள்ளி செல்லவேண்டும் போன்ற ஆபத்துகால முன்னெச்சரிக்கைகளை போட்டு  குழப்பிகொள்கின்றனர். இதன் எல்லாமும் பொருட்டு திரண்டது மக்கள் சக்தி.


மக்கள் சக்தி 

         'மக்கள் சக்தி, மகத்தான சக்தி" என்பதில் தான் அழிவும், ஆரம்பமும்! நான் பார்த்தவரை மக்கள் சக்தி பெரும்பாலும் ஒரு கட்டமைப்பை உடைக்கிறதே தவிர, ஒரு கட்டமைப்பை உருவாக்குவதில்லை. நம் மக்கள் எங்கேயாவது ஒரு தொழிற்சலையை உருவாக்கவோ, SIPCOT  உருவாக்கவோ, புதிய அணைகளை உருவாக்கவோ  தன்னெழுச்சியாக போராடியுள்ளனரா?

        எல்லா உலக நாட்டு மக்களும் மக்கள் சக்தி என்ற அம்சத்தில் ஒரே சாயல் தான். ஒரு பிரச்சனையால், எங்கு இரு வேறு பட்ட பிரிவு பிரிகறதோ, அப்போது   மக்கள் எங்கு பெரும்பான்மையான கூட்டம் இருக்கிறதோ , அந்த திசை நோக்கி அவர்கள், அவர்களை நகர்த்திகொள்கின்றனர். அது என்ன பிரச்சனை , இரு தரப்பு நியாயங்கள் என்ன என்று ஆராய்ந்து பார்க்க யாரும் தயாராய் இல்லை, அவர்கள் தன்னை உடனடியாக எதாவது ஒரு பக்கம் சேர்த்திகொள்ள வேண்டும் என்ற முனைப்புடனே இருக்கின்றனர். தவறான பக்கம் சேர்ந்துவிட்டோம் என்று உணர்ந்த பின்னும் மாறாமல் தன்மானம் கருதி தொடர்ந்து வாதிடவே செய்கின்றனர். சிறுபான்மையின் பக்கம் இருந்தோ, நடுநயமாக இருந்தோ,  பெரும்பான்மையினரை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும் என்ற கவலை வேறு! கூடங்குளத்தில் நடப்பதும் இது போன்று ஓர் பிரச்சனை தான். 

      
     Fidel Castro வை எடுத்து கொள்ளுங்கள், அவர் அவரது போராட்டம் பற்றி ஒவ்வொருவருக்கும் விளக்கி விட்டு தான் Batista விற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தார்.இதானாலே  போராட்டத்தை வீரியத்திற்கு கொண்டு வர அவருக்கு 5 வருடங்களுக்கும் மேல் ஆனது. போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேத படுத்தவோ, மக்களை தொந்தரவு செய்யவோ, யாரையும் கட்டாயபடுத்தி குழுவில் சேரவோ அவர் அனுமதிக்கவில்லை. இருந்தும் போராடினார், ஜெயித்தார். பின்னாளில் cuba வின் முதல்வராகி இன்று வரை சிறப்பான ஆட்சி அமைத்துக்கொண்டு வருகிறார். ஒரு போராட்டம் இதுபோல் ஒரு ஆக்கபூர்வமான கட்டமைப்பைநோக்கி நகரவேண்டும்.

      உம்மன்சாண்டியை எடுத்துகொள்ளுங்கள், கேரளர்கள் தமிழ் மக்களை தரக்குறைவாய் நடத்துகின்றனர், அடிக்கின்றனர். இதுவரை கேரளா மக்களிடம் வன்முறையை கையில் எடுக்கவேண்டாம் என்ற ஒரு அறிக்கை கூட விடவில்லை உம்மன்சாண்டி . பச்சிளம் குழந்தைகள் கைகளில் கூட மெழுகுவர்த்தி கொடுத்து போராட சொல்கின்றனர். அவர்கள் போராட்டம் வென்றாலும் கூட, கடைசியில் அவர்கள் அடைந்தது, என்ன என்று பார்த்தால் நம் வெறுப்பு   மட்டுமாக தான் இருக்கும். இதில் யாருக்கு என்ன பயன்?

     போராட்டத்திற்கும் வன்முறைக்குமான வித்தியாசத்தை உணரமாலே பலரும் மக்கள் சக்தி என்ற மகத்தான ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். Fidel castro முதலில் போராட்ட குழுவிற்கு  கொள்கைகளை கற்றுகொடத்த பின் தான் ஆயுதங்களை கையில் கொடுத்தார். என்றும், கொள்கைகள் உள்ள போராட்டம் தான் வெற்றி பெரும். கொள்கைகள் அற்ற போராட்டம் வெறும் வன்முறையே! 

    வன்முறைகள், வானை நோக்கிச்சுடும் ஒரு துப்பாக்கி குண்டில் அடங்கிவிடும். ஆனால் ஒரு போராட்டம், பீரங்கிகளையே பிடுங்கி எறிந்துவிடும்.

    அடுத்த நாட்டை விடுங்கள், நம் தமிழகம், மக்கள் சக்தியால் எப்படி வீழ்ந்தது என்று தெரியுமா? 1967 க்கு முன்வரை  ஊழல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் நம் தமிழ் மக்கள். வேலையின்மை காரணமாகவும், நிதிபற்றாக்குறை காரணமாகவும், ஜாதிகள் ஒழிய வேண்டியும் போராட்டம் செய்து பழக்கப்பட்ட மக்கள் ஊழலிற்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்தது தி.மு.க ஆட்சிற்கு வந்த 1967 க்கு பிறகே...

   காமராஜர்  ஒரு பெருந்ததலைவர். மக்கள் சேவகன். கிண்டி தொழிற்பேட்டை முதல் சத்துணவு திட்டம் வந்தது வரை காமராஜரின் ஆட்சித்திரனாலும்   சேவை மனப்பான்மையலுமே ! தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கிராமத்திற்கும், 2 முறை சுற்றுபயணம் சென்று, மலை எங்கு இருக்கிறது, குளம் எங்கு இருக்கிறது, குறவன் எங்கு இருக்கிறான், நெசவாளி எங்கு இருக்கிறான் என்று அனைத்தையும் அத்துபடியாய் வைத்துகொண்டார் காமராஜர் .

   மாநில தேர்தல் வந்தது.  இந்நிலையில், அண்ணா, கலைஞர், MGR அனைவரும் மேடை பேச்சாலும், சினிமா மோகத்தாலும் மக்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தனர். மக்கள் சக்தி காமராஜருக்கு எதிராக திரும்பியது. விளைவு, காமராஜரும் தன் சொந்த தொகுதியில் தோற்றார் , காங்கிரசும் மாநில தேர்தலில் தோற்றது. அண்ணாவே அவரின்  வெற்றியை எதிர்பார்கவில்லை, முதன் முறையாக ஜெயித்த அந்த புதிய கட்சிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பல பெருச்சாளிகள் இருந்த அந்த கட்சியில் ஊழல் ஒரு பிரதான செயலானது. அண்ணா மாநில முதல்வாராக இருந்தும், கட்சியின் பாசமிகு தலைவானாக இருந்தும், அவரால் ஊழலை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசின் செயல்பாட்டிற்கு கூட அண்ணா காமராஜரையே நாட வேண்டியதாய் இருந்தது.
   
        இந்தியாவின் King maker ஆக வலம் வந்த  காமராஜர் சென்ற பிறகு, நம் மாநில  அரசிற்கும் மத்திய அரசிற்கும் நல்ல ஓர் உறவு, இன்று வரை உருவாகவேயில்லை. தமிழ்நாட்டு காங்கிரசும் பெயரளவு இயங்கும் ஓர் இயக்கமாகவும், அந்த இயக்கத்திற்கே சத்தியமூர்த்தி பவனில் தலைமை பொறுப்பிற்கு அடித்துகொள்ளும் நிலைக்கு மாறிவிட்டது.

      அண்ணா, MGR சிறந்த மனிதர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இங்கில்லை. ஆனால், தேர்தல் என்பது ஓர் நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கும் களமே தவிர,  அவரவர்க்கு பிடித்த மனிதர்களை தேர்ந்தெடுக்கும் களம் அல்ல. காமராஜரை தோற்கடித்த அந்த மக்கள் சக்தி இன்று வரை ஒரு மோசமான மக்கள் சக்தியாகவும், ஓர் சோக வரலாறாகவும் பார்க்கபடுகிறது.





             கூடங்குளத்தின் போராட்டவகைகள் அனைத்தும் மெய் சிலிர்க்கும் வகை தான், குறிப்பாக சுப.உதயக்குமார் விகடனின் 2011's Top 10 மனிதர்களில் முதல் ஆளாக பாராட்டுபடும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள்  இருந்தன .  150 நாட்களை தாண்டியும், போராட்டத்தின் வீரியம் சற்றும் குறைவில்லை. இவர்களுக்கு பயந்து மன் மோகன் சிங்கே ரஷ்யாவில் இருந்தபடி அணு மின் நிலையத்தை பற்றிய அறிவிப்பை அறிவிக்கிறார். எழும்பூர் ரயில் நிலையத்தை யாரும் எதிர்பாராவண்ணம் நெல்லை பெண்கள் அணு மின்  நிலையத்தை எதிர்த்து ரயில் மறியல் செய்ய, வேலைக்கு செல்வதை மறந்து கூட்டம் போட்டனர் சென்னை மக்கள்.

      மறுபுறம், மக்களின் சிறு பகுதி மட்டுமே  போராட்டத்தில் தீவரமாய் இருப்பதும், மற்றவர்கள் ஒத்துழைக்கமால் இருப்பது பெரும் பின்னடைவே! இதன் பொருட்டு அவர்களை கவர பணமும் பிரியாணியும் குடுக்கும் அளவிற்கு தள்ள படுகின்றனர், தப்பான முடிவுதான் என்றாலும்  அது அவர்களின் களநிலை. இதனால் கூலிகள் வேலைக்கு போவதில்லை. இதனால் பண்ணையம் செய்பவர்கள் அதிக கூலிகளை கொடுத்தும், வெளியூர் கூலிகளை வைத்து பண்ணையம்  செய்ய வேண்டிய நிலை. தொழிற்சாலைகளுக்கும் அதே நிலை என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை.

விஞ்ஞானிகளின் விளக்கம் 

          கூடங்குளம் பிர்ச்சனை முழுவீச்சில் இருக்கும் போது, அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று பலவகையில் மத்திய அரசு சமதானபடுத்தியது . ஒரு கட்டத்தில் அணு மின் நிலையம் மேல் இருக்கும் அதீத நம்பிக்கையில், வேண்டுமென்றால் அப்துல் கலாமையே கேட்டு கொள்ளுங்கள் என்று ஒரு ட்விஸ்ட் வைத்தது மத்திய அரசு . கலாமும் மின் நிலையத்தை ஆராய்ந்துவிட்டு, நல்லா தானே இருக்கு, என்று சான்றிதழ் தர, அப்துல் கலாம் தூதுவர் போல செயல் படுகின்றார் என்று ஒரே போடாய் போட்டது போராட்ட குழு . அதன் பிறகு, எந்த விஞ்ஞானி எந்த தொழில்நுட்ப விளக்கத்தை சொன்னாலும் யாரும் கேட்க தயாராய் இல்லை. "நீங்கள் அறிவாளிகள் அல்ல!" என்று முகத்திற்கு நேராய் சொன்னதும், "ஆனானப்பட்ட அப்துல் கலாமே விலை போயிட்டாரு, இவன்லாம் ஒரு ஆளா?" என்று முகத்திற்கு பின் சொன்னதும் மெத்த படித்த விஞ்ஞானிகளை மிகுந்த வருத்ததுக்குள்ளக்கியது.

        மறுபுறம் விஞ்ஞானிகளிடம் சில கேள்விகளுக்கு விடையே இல்லை. சில கேள்விகளுக்கான விடைகள் பதிலளிக்க முடியாதென்றும் அது ரகசியமென்றும் சொல்கின்றனர். இது போராட்ட குழுவிற்கு சற்று சாதகமாய் போயிற்று என்று தான் சொல்ல வேண்டும், ஏனென்றால் இது மட்டும் தான் விஞ்ஞானிகளுக்கு  பின்னடைவாய் இருப்பது . இவர்கள் ரகசியம் என சொல்லப்படும் அனைத்தும், அணு உலை கழிவுகள் சம்பந்தப்பட்டதே,  இவர்கள் பதில் அளிக்கமால் இருக்கும் கேள்விகள், என்று பார்த்தால் ,அது  மன் மோகன் சிங்க் சம்பந்த பட்டதே. 

         இப்போதைக்கு அணு உலை கழிவு பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுத்துவிட்டால் எல்லா பிரச்சனைக்கும் முடிவுக்கு  வந்துவிடும், ஆனால் அதை தான் செய்ய மாட்டேன் என்கிறார்கள்  . இந்தியாவும் ரஷ்யாவும் அணு உலை கழிவுகளை தட்டிக்களிப்பதை பார்த்தால்  ஒரு புறம் அச்சமாக இருந்தாலும், இது உண்மையிலே ரகசியமானதாக  இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றமால் இல்லை. 

       அடுத்து, மன்மோகன் சம்பந்தபட்ட கேள்விகள், மன் மோகன் ஏன் ரஷ்யாவில் இருந்தபடி அறிவிப்பை வெளியிட்டார் என்று விஞ்ஞானிகளிடம் கேட்பது என்ன நியாயம் என்றே  தெரியவில்லை. மன் மோகனையும் மின் நிலையத்தையும் பிணைத்து போடுவதே தவறு. அது என்ன அவருடைய திட்டமா? நம் விஞ்ஞானிகளின் திட்டம். மின் நிலையத்தையும் மன் மோகனின் திறனற்ற ஆட்சியையும் வீண் முடிச்சு போட்டு அரசியலாக்கி ஆதாயம் தேடுகின்றனர் எதிர்க்கட்சிகள். இயக்கும் சக்தி ஒன்றாகவும், இயங்கும் சக்தி ஒன்றாகவும் இருக்கும் இடத்தில் இது தான் சிக்கல். அரசிடத்தில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்காது . என்ன  கேள்விகளை கேட்டாலும் பதில்கள் இயக்குபவரிடத்தில் இருந்தும் வராது, இயங்கும்பவரடத்தில் இருந்து வராது. 

       அதற்காக, காங்கிரஸ் ஆட்சியில் எது வந்தாலும் கண்மூடித்தனமாய் சாடுவது சரியா என்பதையும் யோசித்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

      
  • இந்தியாவில் பல்வேறு இடங்களில் 20 அணு மின் நிலையங்கள் உள்ளன. அனைத்தும் பாதுகாப்பான நிலையிலே உள்ளன. 
  • இந்த நிலையங்களை பாதுகாப்பாக செயல்படுத்த ஏராளமான விஞ்ஞானிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்க பட்டிருக்கிறது. 
  • ஜப்பான் புகிஷிமா அணு மின் நிலையத்தை இதனோடு ஒப்பிட வேண்டாம். புகிஷிமா அணு மின் நிலையம் முதல் தலைமுறை (first generation) மின் நிலையம். 
  • ஆனால் நம் மின் நிலையம் மூன்றாம் தலைமுறை வடிவமைப்பை சேர்ந்தது.
  • கூடங்குளத்தின் அணு உலைகள் மூடப்படும்போது, அணு எரிபொருளைக் குளிர்விப்பதற்காக தலா ஒரு டீசல் ஜெனரேட்டர் கொண்ட நான்கு தனித்தனி அமைப்புகள் இருக்கிறன. ஒவ்வோர் அமைப்பிலும் பம்ப் வசதியும், வெப்பத்தை பரிமாற்றிக்கொள்ளும் வசதிகளும் உள்ளன*. 
  • பொதுவாக இது போன்ற அணு உலைகளுக்கு ஒரே ஓர் அமைப்பே போதுமானது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இது போன்ற நான்கு அமைப்பு உள்ளன*. 
  • ஒட்டுமொத்த அணு உலைகளுக்கும் தானியங்கி மூலம் குளிர்விக்கும் வசதி உள்ளது*.
  • அடுத்த சிறப்பு அம்சமான core catcher பற்றியும் சொல்லி விடுகிறேன். அதவாது எதிர்பாராத விபத்துகள் வந்தால், அணு எரிபொருள்கள் அணு உலையின் அழுத்த கருவியை மீறி செல்லும்போது, நியுட்ட்ரான்களை கவர்ந்து இழுக்கும் அமைப்பை நோக்கி இந்த core catcher சென்றுவிடும். உடனே, அணு எரி பொருள்கள், அணு தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையை இழந்து விடும்*. 
           (* - LATEST TECHNOLOGIES) 

கல்பாக்கம், ஒரு பார்வை

         உலகமெல்லாம், அணு மின் நிலையம் இருப்பது இருக்கட்டும், நம் தமிழ்நாட்டில் ஏற்கனவே நிறுவப்பட்ட கல்பாக்கத்தின் குறைகள் என்ன ஆராய்ந்தால் ரொம்ப சிரமப்பட்டு தான் குற்றம் கண்டு பிடிக்க முடிகிறது.


  • கல்பாக்கம் பூகம்பகம் வரக்கூடிய நிலப்பகுதி - 3 என்பதால் நாளொருமுறை செயற்கை பூகம்பகம் வரவைத்து சோதித்து பார்கின்றனர். உலைகள் அதுவாக நின்று விடுகிறது.
  • சுனாமி வந்தும் மின் நிலையம் பாதிக்காமல் பாதுகாப்பாகவே இருந்ததும் இல்லாமல் , சுனாமி வந்த மூன்றாம் நாளே மின் நிலையம் செயல் பட ஆரம்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
  •  24 மணிநேரமும் பேரிடர்களை கண்காணிக்கும் அமைப்பும் உள்ளது.
  •  மனித உடலில் 250 சீவர்ட் வரை அணு கதிர் வீச்சு ஏற்பட்டால் ஒன்றும் ஆகாது. ஆனால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர், ஓர் ஆண்டுக்கு 1.87 மில்லி சீவர்ட் மட்டுமே உள்வாங்குகிறார்.
  • 2010 ஆய்வின் படி 1.6 km தொலைவில் எடுத்த சோதனையில் 0.026 மில்லி சீவர்டே இருந்தது. ஒருவரின் மொத்த வாழும் ஆண்டுகளையும் 0.026 மில்லி சீவர்டுடன் பெருக்கினால், 250 சீவர்ட் பக்கம் கூட வருவதில்லை.
  • Aspire ஆய்வு நிறுவனம் மூலம் எடுத்த ஆய்வின் படி, 22 கிராமத்தில் கேன்சர் உட்பட பல நோய்களுக்கான ஆய்வுகளை எடுத்தன. 25,146  பேரில் 48 நபர்களுக்கு  மட்டுமே கேன்சர் இருப்பது தெரிய வந்தது . அதாவது 0.22%, ஆனால் இது கேன்சரின் தேசிய சதவீதமான 4-12% க்கும் குறைவே.
  • Cooling tower இல் இருந்து வெளிவரும் தண்ணீரில் ஆயிரகணக்கான மீன்கள் குஞ்சு பொரித்து வாழ்கின்றன. ஆகா மீன் வளம் பற்றிய சந்தேகமும் தீர்ந்தபடி தான். அதுமட்டுமில்லாமல் அந்த தண்ணீரும் 8 km சுற்ற வைத்து அதன் பின் தான் கடலில் கலக்க விடுகின்றனர்.

கரும் புள்ளி என்று பார்த்தால் 2010 இல் ஒரு ஆபத்து கால பரிசோதனை நடத்தி உள்ளனர். அதன் ஒரு கட்டமாக உள்ளே இருக்கும் 2500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை விரைவில் அணு மீன் நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வர வேண்டும். ஆனால் 1000 பேர்களை மட்டுமே வெளி கொண்டு வரவைக்க முடிந்தது. அதிலும் ஒரு பேருந்து பங்ச்சர் ஆனது, 3 பேருந்து ப்ரேக் டௌன் ஆனது. மீடியாக்கள் கேள்வி எழுப்பியதற்கு அசடு வழிந்தது கல்பாக்கம்.

மின்சாரத்தின் பிடியில் மக்கள் 

           ஏன் அணு மின் நிலையமே வேண்டும்? என்ற கேள்விகளும் எழாமல்  இல்லை. பிற மின் நிலையங்கள் சந்திக்கும் சவால்களை காண்போம் ஒரு அலசலில்.

அனல் மின் நிலையம்:  இது காற்றை கெடுக்கிறது.  இது மின் நிலையத்தை சுற்றியுள்ள மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை குறைக்கிறது. நம் நாட்டில் புதைந்து கிடக்கும் நிலக்கரியின் அளவும் குறைகிறது. இந்தோனேசியாவில் கை ஏந்தி கொண்டிருக்கிறோம், நிலக்கரிக்கு. 5000 கிலோ நிலக்கரியை எரித்து வரும் மின்சாரத்தை யுரேனியம் ஒரு கிலோவில் தருகிறது.

நீர் மின் நிலையம்: 3 மடங்கு செலவு வைக்கும் திட்டம் இது. பருவ மழையை எதிர்  நோக்கும் நிலையம் இது. மனிதர்களையும் மரங்களையும் துரத்தி பெருமளவு இடத்தில் ஆக்கரமிக்கும் நிலையம் இது. புதிய நீர் மின் நிலையம் என்றால் எந்த வகையிலும் ஒத்து வராத திட்டமிது.

சூரிய சக்தி மின் நிலையம்: ஒரு solar deviceஐ உருவாக்க தேவையான மின்சாரம் மிக மிக அதிகமாக இருப்பதே இதன் பெரிய குறைபாடு. அந்த மின்சாரத்தை அந்த solar device மீட்டு கொடுப்பது மிக சொற்ப மின்சாரமே. 1MW மின்சாரத்திற்கு 5 ஏக்கர் நிலம் தேவை. கோடை காலத்தில் மட்டுமே உதவும். புழுதி மற்றும் மண் அடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பராமரிப்பு செலவும் அதிகம்.

காற்றாலை: பரந்த வெளி தேவை. தொடர்ச்சியான மின்சாரம் எதிர்நோக்க முடியாது. 

வெளிநாட்டவர்களுக்கு மிகுந்த விருப்பமான  மாமல்லபுரத்திற்கு, இப்போது  மின்சார வெட்டுக்களுக்கு பயந்தே, வர மறுக்கின்றனர். "தொழிற்ச்சாலை அமைக்க இந்தியா சிறந்த இடம் இல்லை" என்று சமீபமாக ஜப்பான் அரசாங்கம் அறிவுத்துள்ளது. தென் கொரியாவும் இந்தியாவில் முதலீடு செய்வதை பற்றி யோசிக்கிறது. மின்சாரம் என்பது சௌகரியம் என்ற நிலை போய் அத்தியாவசியம் என்ற நிலை ஆகிவிட்டது. வேலையின்மை, பொருளாதார வளர்ச்சி, மக்கள் தரம் ஆகிய பல மின்சாரத்தை நோக்கியே இருக்கிறது. போராட்ட குழு, விஞ்ஞானிகள் குழு இரண்டிலுமே சிறு சிறு ஓட்டைகள் இருக்க தான் செய்கின்றன. அதை நிவர்த்தி செய்து, கூடங்குளம்  மக்கள் ஒரு குழுவாக அமைந்து  அணு மின் நிலையத்தை செயல் பட விட்டு, அதை அந்த குழு, வாரம் இரு முறை என  கண்காணிப்பில் வைத்து கொள்ளலே என் அறிவிற்கு எட்டிய தீர்வாக நான் கருதுகிறேன்.

இதை, மின்சாரத்தின் போராட்டமாய் பார்க்காமல், வாழ்வாதாரத்தின் போராட்டமாய் பார்த்து,  மின்சாரத்தை மிச்ச படுத்த நீங்கள் ஒரு சிறிய படி எடுத்து வைத்தால் அதுவே இந்த கட்டுரையின் வெற்றி.