Saturday, 1 September 2012

ஸ்வாதி ராஜீவ் (4)


எனக்கு பசிக்கல என்று பெற்றோரிடத்து என எறிந்து விழுவது, வண்டியில் செல்லும் போது கூட்ட நெரிசலில் அதீத வேகத்தில் செல்வது, கைப்பேசியின் இணைப்பில் ஏதாவது கோளாறென்றால் உடனடியாக வாடிக்கையாளர் சேவை அதிகாரியை தொடர்பு கொண்டு காய்ச்சி எடுப்பது, ஸ்வாதியிடம் சமாதானமாக போகும் படி பேச நண்பர்கள் போனில் அழைத்தால் எடுக்காமல் இருப்பது, நட்ட நடு ராத்திரியில் வண்டி எடுத்து கொண்டு ஆளில்லாத ரோட்டில் மென்மையான வேகத்தில் நகரை ஒரு உலா வருவது, பிச்சைகாரர்களோ சேல்ஸ்மேன்களோ அணுகினால் எதுவும் பேசாமல் அவர்களை முறைத்து பார்ப்பது, டி.வி ரிமோட் வேலை செய்யாத பட்சத்தில் ஓங்கி தரையில் எறியும் வரை போய் மனசு கேட்காமல் அருகில் இருக்கும் சோபாவை முஷ்டியால் ஓங்கி குத்துவது, வீட்டு நாய் எப்போதும் போல் பாசமாக வந்து வாலாட்டி முன் நின்றால் அதை உதாசீனப்படுத்துவது என விரக்தியின் உந்துதலில் ராஜீவ் இயங்கி கொண்டிருந்தான். அவனுள் எங்கிருந்தோ வந்து குடியமர்ந்த வேதனையை விரட்ட வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்தான்.

என்னன்னவோ செய்தும் ராஜீவ்வின் ஆள்மன வெறுப்பு தகித்தப்படியே தான் இருந்தது. எத்தனையோ குறுஞ்செய்திகளை ஸ்வாதி தட்டி விட்ட போதும் ராஜீவ் அதனை மதிக்கவில்லை. அதில் பெரும்பாலானவை “call me” என்றும் “why you doing this to me?” என்றுமே இருந்தன. ஒரு கட்டத்தில் அவள் “Atleast speak me upto the end of our college, afterwards I’ll not force you to talk me, you can go away” என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டாள். ராஜீவ்விற்கு பரிதாபமாக இருந்தது ஒரு புறம் இருந்தாலும், அந்த செய்தியை பார்த்த மாத்திரத்திலே அவன் திகைத்து போனான். இன்னும் 3 மாதங்களில் கல்லூரி முடிவடைந்து விடும், அதற்கு மேல் ஸ்வாதியை பார்க்கவே முடியாதா, ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாள், பிரிவு பொறுக்க முடியாமல் அவளுள் இருக்கும் காதலை வெளிபடுத்துவாள் என்று பார்த்தால் இப்படி அனுப்பி விட்டாளே, பெரிய தவறு செய்து விட்டோம், மிக பெரிய தவறு செய்து விட்டோம், காதலை வற்புறுத்தியிருக்க கூடாது என மிகவும் வருந்தினான். இனி பேசுவதில்லை என்ற முடிவில் ராஜீவ் தான் ஆரம்பம் முதலே ஆர்வமாய் இருந்தான் எனினும், ஸ்வாதியும் அந்த முடிவில் ஆர்வத்தை திருப்புவது ராஜீவால் ஏற்று கொள்ள முடியவில்லை. கண்களில் கண்ணீரை முட்ட செய்தது. அவனது நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய் பதற்றம் கொள்ள ஆரம்பித்தது. You can go away என்று எதற்காக அவள் சொல்ல வேண்டும், நான் அவளை அவ்வளவு வருத்தி விட்டேனா என்ற கேள்வி மலையை போல் தோற்றம் கொண்டு அவனை திகில் அடைய செய்தது. ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் அவளுக்கு கால் செய்தான்.

“ஹலோ”

“ம்…. சொல்லு”

“எப்படி இருக்க”

“நல்லா இருக்கேன், இப்ப தான் என் ஞாபகம் வந்துச்சா….”

“ப்ளீஸ் அதை பத்தி இப்ப பேச வேண்டாமே”

“சரி சொல்லு, நீ எப்படி இருக்க…”

”நீ என்னை மிஸ் பண்லையா”

“பண்ணேன்”

“அது ஏன் லவ்னு உனக்கு புரிய மாட்டேங்குது”

“உன் மேல எனக்கு பாசம் மட்டும் தான் இருக்கு, நான் லவ்வை பத்தியே இது வரைக்கும் யோசிக்கலை, கல்யாணம் மாதிரியான ஒரு ஜெயில் எதுவுமேயில்லை, என்னோட Cousin sisters கல்யாணம் பண்ணிகிட்டு கஷ்டப்படறத பார்த்துகிட்டே தான் இருக்கேன்…. நானும் ஒரு மெஷின் ஆகறத பத்தி இப்பவே கனவு காண சொல்றியா, எனக்கு அதுல கொஞ்சமும் விருப்பமில்லை ” – இவ்வளவு தெளிவான பதிலை சொன்ன பிறகு ராஜீவ்வால் மேற்கொண்டு அது தொடர்பாக பேச முடியவில்லை. நாமும் ஏன் லவ், கல்யாணம், குழந்தை என்று குறுகிய வட்டத்துக்குள்ளே சிந்தித்து கொண்டிருக்கிறோம், இதில் இருந்து வெளி வருவதை பத்தி யோசித்தாக வேண்டும், கண்டிப்பாக யோசித்தாக வேண்டும். யாருக்கு தெரியும் தான் காதலின் மேல் ஈடுபாடாற்றவனாக காட்டி கொள்வது கூட சமயத்தில் அவளை ஈர்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என மாற்று வழியில் சிந்தித்து அந்த பிரச்சனைக்கு அத்தோடு ஒரு முற்று புள்ளி வைத்தான் ராஜீவ்.

”அப்புறம், என்ன முடிவு பண்ணியிருக்க…. இனிமேல் என்கிட்டலாம் பேசுவீங்களா மாட்டீங்களா…. அன்பு, நிர்மலாலாம் போன் பண்ணியும் கூட எடுக்கலையாமே”

“ஹேய், பேச மாட்டேன்னு சொல்றதுக்கு போய் யாராவது call பண்ணுவாங்களா… ”

”அப்ப பேசுவேன்னு வாயை திறந்து தான் சொல்லேன்…”

“பேசுவேன், போதுமா”

………..
……….
………..
…………
………..
………

என அன்றைய உரையாடல் ஆரம்பித்து பல புன்னகை பரிமாற்றங்களுடன் நெடு நேரம் நீள ஆரம்பித்தது. மாலை ஆரம்பித்த செல்போன் பேச்சு ராஜீவ் கட்டிலிலே தூங்கி போகும் வரை நீண்டது.

ராஜீவ்வின் அடுத்தடுத்த நாட்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியது. கல்லூரி முடியப்போகும் தருணம் என்பதாலோ என்னவோ ராஜீவ்விற்கு நாட்கள் வெகு வேகமாக நகர்வதாக தெரிந்தது. காதலை தான் சொல்லி விட்டோமே என்ற தையரியத்தில் முன்பை விட ராஜீவ் ஸ்வாதியை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை, அடிக்கடி செய்பவனாய் இருந்தான். இது ஸ்வாதிக்கு தெரிந்திருந்தாலும் அவள் அமைதியாய் அனுமதித்து கொண்டிருந்தாள். Slam books, Group photographs, outing என் ராஜீவ் நண்பர்களுடன் சந்தோஷமாக வலம் வந்தாலும், அவனுள் ஸ்வாதி தன் காதலை நிராகரித்து விட்டாளே என்ற எண்ணம் அவனை நெருடி கொண்டு இருந்தது. இது விஷயமாக நிர்மலாவிடம் தனித்து இருக்கும் போது பேசி விடலாம் என்று முடிவு செய்தான். நிர்மலா ஸ்வாதியின் அறையிலே தங்கி இருப்பதால் அவளிடம் பேசுவது குறித்த அவசியம் அவனுக்கு அதிகமாக பட்டது. ஸ்வாதி தன்னை காதலிப்பதை நிர்மலாவிடம் மட்டும் ரகசியமாக சொல்லியிருக்க வாய்ப்பு இருப்பதாய் ராஜீவ் உணர்ந்தான்.

ஒரு மதிய வேளையில் நிர்மலாவை கேண்ட்டினுக்கு வரவழைத்து ஸ்வாதி அப்படி ஏதாவது சொல்லியிருக்கிறாளா என்று கேட்டு பார்த்தான், அப்படி ஏதும் சொல்லவில்லை என தெளிவாக சொல்லி விட்டாள். அவளது பதில் அவனை சுருங்க செய்து விட்டது. நிர்மலா அவனுக்கு தைரியம் கூறுவதற்காகவும், அவனை தேற்றவும் 45 நிமிடங்களுக்கும் மேலாக அவள் பல ஆறுதல் வார்த்தைகளை அவள் சொல்லி கொண்டிருந்தாள். அவன் எதையும் காது கொடுத்து கேட்டு கொள்ளவில்லை, அவள் சொல்வதற்கெல்லாம் சரி சரியென்று தலையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தான். அவள் அவ்வளவு நேரம் பேசியதில் ராஜீவ்விற்கு எதுவுமே சுவாரஸ்யமாய் இருந்து விடவில்லை. ஆனால் அவள் சொன்ன ஒரே ஒரு விஷயம் ராஜீவ்விற்கு மிகவும் புதிதாக பட்டது.

“ஒரு பையன் எதையும் எதிர்பார்க்காம தன்னை லவ் பண்றான்னு அந்த பொண்ணுக்கு தோணிடுச்சுனா, அந்த பொண்ணால அவனை திரும்பி லவ் பண்ணாம இருக்கவே முடியாது”   

அவள் இதை சொன்னதிலிருந்து ராஜீவ்விற்கு இதுவே மனதில் ஓடி கொண்டிருந்தது, எங்கோ வாயில் நுழையாத பெயரை கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து இவள் வந்ததே இதை சொல்ல தானோ என்று ஆச்சர்யமடைந்தான். இது நாள் வரை கல்யாணத்தை எதிர்பார்த்து அவளை காதலித்தது கூட அவனது காதலுக்கு முட்டுகட்டையாக இருந்திருக்கலாம் என்று சந்தேகித்தான். அதனாலேயே பின்வரும் நாட்களில் ஸ்வாதியிடம் கல்யாணத்தை பற்றி பேச்செடுப்பதை தவிர்த்தான்.

நிர்மலாவிடம் அற்புதமாக ஓவியம் வரைவாள், கேட்டால் அவனது அண்ணன் சொல்லி கொடுத்தது என்பாள், அவள் தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள் கண்ணிற்கு அத்தனை இனியனவாக இருக்கும். எப்போதும் போன்ற ஒரு நாளில் நிர்மலா ராஜீவ் முன்னால் வந்து நின்று அவனை கண்ணை மூட சொல்லி சொன்னாள். அவள் ஒரு ஓவியத்தை எடுத்து அவன் மூடிய கண் முன் விரித்து வைத்ததற்கு பிறகு அவனை கண் திறக்க சொன்னாள்.

அம்மாவுடன் ஸ்கூலுக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு குட்டி பெண், பிளாட்பார்த்தில் சட்டையில்லாமல் அமர்ந்திருக்கும் சிறுவனுக்கு ஒரு Lolly pop ஐ நீட்டுவது போல் வரையபட்டு, கீழே Giving is Loving என்று எழுதபட்டிருந்தது.

ராஜீவ்விற்கு அந்த ஓவியத்தை பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருந்தது, கண்களில் ஒத்தி கொள்ளலாம் என்பது போன்ற ஓர் அழகு. அந்த மிட்டாயை வாங்கும் அந்த சிறுவனின் கண்களில் இருக்கும் பரவசம் ராஜீவ்வை மிகவும் சிலிர்ப்படைய வைத்தது. அதை பார்த்து கொண்டிருக்கும் போதே “இது உனக்கு தான், வெச்சுக்கோ” என்றாள். அந்த நிமிடம் ஓவியத்தில் இருந்த சிறுவனின் பரவசம் ராஜீவ்வின் கண்களில் மிளிர்ந்தது. நிர்மலா எதற்காக இந்த ஓவியத்தை நமக்கு அளித்திருக்கிறாள் என்பதை உள்ளூர புரிந்தவனாய் நன்றியுடன் அந்த பரிசை ஏற்று கொண்டான்.

அடுத்த நாள் காலேஜ் கேண்டினுக்கு ஸ்வாதியை ராஜீவ் தனியாக வர சொல்லியிருந்தான். ஸ்வாதியும் மாலை 5 மணிக்கு மேல் வருவதாக சொல்லி நீல வண்ண கலரில் ஒரு சுடிதாரை அணிந்து சென்றிருந்தாள். அங்கே இவள் வருவதற்கு முன்னரே ராஜீவ் காத்து அமர்ந்திருந்தான். ராஜீவ் கறுப்பு கலரில் ஒரு டீ சர்ட் போட்டு, ஒரு Coolers போட்டு வந்திருந்தான். அவனுக்கு பக்கத்தில் இருந்த helmetஐ பார்த்து அவன் வண்டியில் வந்திருக்கிறான், என்பதை அவளால் எளிதில் யூகிக்க முடிந்தது. போய் ஹாய் சொல்லி அவன் எதிரில் அமர்ந்தாள். அவனும் பதிலுக்கு ஹாய் சொல்லி புன்னகைத்தான். என்ன விஷயமாக வர சொன்னாய் என்று கேட்டதற்கு, “சும்மா தான், உன்னோட சேர்ந்து பானி பூரி சாப்பிடனும் போல தோணிச்சு அதான் வர சொன்னேன்” என்றான். அவள் “இதுக்கு தான் வர சொன்னியா, சரி போய் வாங்கிட்டு வா” என்றாள். அவன் பதிலுக்கு நீ போய் வாங்கிட்டு வாயேன் என்று சொல்லி கண்களால் கெஞ்சினான். அவள் அவளது Hand bagல் உள்ள purse ஐ மட்டும் எடுத்து கொண்டு, hand bagஐ அவனிடமே கொடுத்து சென்றாள். இதற்கு முன் 10 ரூபாய் இருந்த பானி பூரி, 12 ரூபாய் ஆகி விட்டதற்காக கேண்ட்டினை சபித்து கொண்டே டோக்கனை வாங்கினாள். டோக்கனை வாங்கி கவுண்ட்டருக்கு சென்றால் இவளுக்கு முன்னரே 4 பேர் வரிசையில் பானி பூரி டோக்கனை கையில் வைத்து கொண்டு வரிசையில் வைத்து காத்து கொண்டிருந்தனர். காத்திருந்து அந்த பானி பூரிகளை வாங்கி வர வேண்டியதாய் போயிற்று. 2 பானி பூரி தட்டுகளையும் அத்தனை லாவகமாக எடுத்து வந்தும், தட்டு லேசாக சாய்ந்ததில், பானி பூரியின் புளி தண்ணீர் (பானி) 2 துளி அவளது நீல சுடிதாரின் மேல் பட்டு விட்டது. அவள் வந்து அமர்ந்ததும் “ஹேய் தண்டம் நீயே போய் வாங்கிட்டு வர வேண்டியது தானே, பாரு என் சுடிதார்ல கறை பட்டுருச்சு” என்று பொய்யாய் கோவித்து கொண்டாள். இவனும் “ஐயையோ, என் கறுப்பு ட்ரஸ்ல அழுக்கு பட்டுருச்சுனா எங்க அம்மா என்னை திட்டுவாங்கல்ல, அதனால தான் உன்னை அனுப்பினேன்” என்று சொல்லி சிரித்தான். ”பன்னி, கறுப்பு டிரஸ்ல அழுக்கு பட்டா என்ன டா ஆய்ட போது” என்று கையில் இருந்த purseஐ தூக்கி அவன் மேல் எறிந்தாள். சாப்பிட்டு விட்டு ஆரம்பித்த பேச்சு, கொஞ்ச நேரத்திலேயே முடிவிற்கு வந்தது. ராஜீவ்வே ஸ்வாதியை நேரம் ஆகி விட்டதால் கிளம்ப சொன்னான்.

அவள் கிளம்புவதற்கு எழுந்து நின்று, அவள் purse ஐயும் hand bagஐயும் கொடுக்க சொன்னாள். அவன் அவளது purseஐ கொடுத்து விட்டு, ஒரு புதிய அழகான hand bagனை அவள் முன் நீட்டினாள்.

”டேய், இது என்னுடைய hand bag இல்லை டா” என்று கிட்ட தட்ட  பதறினாள்.

“இது என்னோட gift, வாங்கிக்கோ”    

“gift ஆ, எதுக்கு…”

“உன்னுடைய பழைய bag ல தான் முன்னாடி இருக்குற குட்டி ஜிப் ஜாம் ஆய்டுச்சே அதுக்கு தான்” என்று சொல்லி அவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த அவளது பழைய bagஐ எடுத்து காட்டினான்.

“உனக்கு எப்படி தெரியும்”

“உங்க ஏரியா கவுன்சிலர் போன் பண்ணி சொன்னாங்க…”

அவள் முகத்தில் வெட்கம் மிளர சிரித்து கொண்டே அடை வாங்கி “நல்லா இருக்கு, யார் செலக்ட் பண்ணது” என்று கேட்டாள்.

“உங்க கவுன்சிலரே தான்”

“டேய், எங்க ஏரியா கவுன்சிலர் 2 நாள் முன்னாடி இறந்து போய்ட்டாரு, அதனால எங்க ஏரியாக்கு கவுன்சிலரே இல்லை, ஓவரா கதை விடாத… re-election வெச்சா தான் உண்டு”

வைத்த கண் வாங்காமல் அதை பார்த்து, பின் உள்ளே எத்தனை ஜிப் இருக்கிறது என்பதை பார்க்க bagஐ திறந்தால் அவளின் அத்தனை பொருட்களும் புதிய bagல் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ராஜீவ்வை பார்த்து நன்றி சொல்லி, பழைய hand bag ஐயும் கொடுக்க சொல்லி கையை நீட்டினாள், அதற்கு அவன் இது என்னிடமே இருக்கட்டுமே என்று சொல்ல, அவள் சிரிப்புடன் சம்மதித்து அறைக்கு கிளம்பினாள். ஸ்வாதி அறைக்கு போனவுடன் அவளது டைரியில் ”இன்றைய நாள் என் வாழ்வின் அழகான நாள்” என்று அன்றைய நாளில் எழுதி வைத்து கொண்டாள்.

கல்லூரி நாட்கள் வெகு சீக்கரம் முடிந்ததாய் போல் தான் எல்லோருக்கும் பட்டது. கல்லூரி முடியவிருக்கும் கடைசி 2 மாதங்களில் மட்டும் ராஜீவ் ஸ்வாதியை 7 முறை “இன்றைய நாள் என் வாழ்வின் அழகான நாள்” என்று அவளது டைரியில் அவளை எழுத வைத்திருந்தான். புடவை ; பார்பி பொம்மை ; குட்டியான ஒரு  pink coloured pillow ; sonata ladies watch ; coffee mug ; eva women’s body spray ; dairy milk silk.

கல்லூரி முடிந்ததும், அன்பு அவனது சொந்த ஊரான மதுரைக்கு சென்று கொஞ்ச நாள் இருந்து விட்டு, மீண்டும் சென்னைக்கே வேலை தேட வந்துவிட்டான்.

ரோஹித் அவனது சொந்த ஊரான கோயம்பத்தூரில் இருந்த படியே வேலை தேடி கொள்வதாக சொல்லிவிட்டான்.

ராஜீவ்வின் சொந்த ஊரே சென்னை என்பதால், அவன் வீட்டில் வேலை தேடுவதில் அவனுக்கு சிக்கல் இருந்து விடவில்லை.

நிர்மலா கடலூரிலே இருந்து கொள்வதாகவும் ஏதாவது நேர்காணல் இருக்கும் பட்சத்தில் மட்டும் சென்னை வந்து விட்டு போவதாகவும் சொன்னாள்.

ஸ்வாதி அவளது சொந்த ஊரான சேலத்தில் கொஞ்ச நாள் இருந்து கொள்வதாகவும், வீட்டில் கல்யாணம் செய்து கொள்ள நிர்பந்தித்து கொண்டிருப்பதால், அவர்களை கல்யாணம் வேண்டாம் என்று சமாதான படுத்தி விட்டு அதன் பின் தான் வேலை தேடுவதை பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறினாள். ஸ்வாதி இதை ராஜீவ்விடம் சொன்ன போது, ராஜீவ்விற்குள் எங்கிருந்தோ வந்த மிக கனமான கல் நெஞ்சில் அறைந்து, அது நெஞ்சிலே தங்கி விட்டாற் போல் கனத்தது.

ஆனால் யார் செய்த புண்ணியமோ ஸ்வாதி வீட்டில் அவளது வேண்டுகோளிற்கு அத்தனை முரண்டு பிடிக்கவில்லை, கல்யாணத்தை 2 வருடம் ஒத்தி போட சம்மதம் வாங்கி இருந்தாள். ஸ்வாதி சென்னைக்கு வந்து அவளது சித்தி வீட்டில் இருந்த படியே வேலை தேட ஆரம்பித்தாள். வேலை தேடிய ஒரே மாதத்தில் வேலை கிடைத்தது ஸ்வாதிக்கு மட்டும் தான். அவளுக்கு HCL technologies கம்பெனியில் வேலை கிடைத்தது.

ராஜீவ்வும் 2 மாதம் வேலை தேடி பார்த்தான், எந்த பெரிய நிறுவனமும் அவனை தேர்ந்தெடுத்து கொள்ளவில்லை. அதனால் அவன் அவனது அப்பாவின் கம்பெனியையே பார்க்க போய் விட்டான்.

அன்புவிற்கும் கூட ஒரு சின்ன கம்பெனியில் ஒரு சொல்லி கொள்ளும் படியான ஒரு வேலை கிடைத்தது. ஆனால், அவனால் அந்த வேலையிலும் ரொம்ப நாள் தங்க முடியவில்லை. அதன் பின்னும் அவனுக்கு அடுத்தடுத்து 3 கம்பெனியில் வேலை கிடைத்தது, ஆனால் எதிலும் அவன் பிடிமானமாக வேலை செய்யவில்லை.

”முதலாளிக்கு கும்பிடு போட்டுகிட்டுலாம் என்னால வேலை பார்க்க முடியாது, அவன் யார் ரா என்னை டைம்க்கு வர சொல்றதுக்கு, ராஸ்கல், அதான் நீயும் வேணா உன் வேலையும் வேணாம்னு வந்துட்டேன்” என்ற காரணத்தையே ஒவ்வொரு கம்பெனியில் இருந்தும் அவனை dismiss பண்ணும் போதும் அன்பு  சொன்னான். ராஜீவ்வும் அன்பை தன்னுடன் வந்து இருந்து கொள்ளும் படி கூப்பிட்டான், அவன் நமது நட்பு கெட்டு விட கூடாது என்று பார்க்கிறேன் என்று மறுத்து விட்டான்.  

ரோஹித்தும், நிர்மலாவும் ஒன்றரை வருடங்களுக்கு மேல் வேலை தேடியும், எந்த வேலையும் கிடைக்காமல் கஷ்டபட்டனர். இத்தனைக்கும் அவர்கள் இருவரும் Distinctionல் pass செய்தவர்கள்.

ஒரு நாள் திடீரென்று, அன்பு எல்லோரையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது, எல்லோரும் வரும் ஞாயிறு சந்திக்கலாம் என்று அனைவருக்கும் போன் செய்து சொன்னான். முழுதாக ஒன்றரை வருடங்களுக்கு பிறகு சந்திக்க இருப்பதால் எல்லோரும் சம்மதித்து வந்தனர். அந்த சந்திப்பு எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் ஒரு சம்பிரதாய சந்திப்பு என்று நினைத்தே எல்லோரும் வந்திருந்தனர். ஆனால் அன்பு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்கே அவர்கள் எல்லோரையும் அழைத்திருந்தான்.


                                           (தொடரும்….)





Thursday, 30 August 2012

ஸ்வாதி ராஜீவ் (3)


அவனுக்கு வந்த கனவு போலவே அவளுக்கும் ஒரு கனவு வந்தது குறித்து ராஜீவ்க்கு ஆச்சர்யம் பீறிட்டது. இதை பற்றி அப்போதே கேட்டு விடலாமா என்று யோசித்து, ஹாஸ்பிட்டலில் வைத்து வேண்டாம் என்று விட்டுவிட்டான். சற்று நேரத்திலே நிர்மலாவும், ஸ்வாதியும் விடைபெற்று ஹாஸ்டல் கிளம்பினர். அன்பு தான் ஹாஸ்பிட்டல் வாசல் வரை சென்று ஆட்டோ ஏற்றி அனுப்பினான். ரோஹித் அவர்களுடன் போவதை தவிர்த்து என்னுடனே இருந்து கொண்டான். சற்றும் எதிர் பார்க்காத போது, “நீங்க அவங்களை லவ் பண்றீங்களா ராஜீவ்” என்று கேட்டு விட்டான், ராஜீவிற்கு என்ன சொல்வது என்று ஒரு கணம் குழப்பம் வந்து விட்டது, உண்மையை சொன்னால் எப்படி எடுத்து கொள்வானோ என்று சற்று தயக்கத்துடனே ஆமாம் என்று ஒத்து கொண்டான். அவன் முகம் மலர்ந்து சந்தோஷத்துடன் ”அப்பிடினா சீக்கீரம் சொல்லிடுங்க ராஜீ, அவங்க உங்களுக்கு ஏத்த Pair தான், அதில சந்தேகமே இல்லை” என்று சொன்ன போது தான் ராஜீவ்க்கு அப்பாடா என்றது. உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே என்று சொல்ல வாயெடுத்து கேட்காமல் விட்டு விட்டான், அதை எப்படி கேட்பது என்று வெட்கத்தில் தலை குனிந்து கொண்டான், அவன் மலர்ந்த முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது வேறு திசை பார்த்தான். அவனின் முக மாற்றத்தை கவனித்த ரோஹித் என்ன ஆச்சு என பதற்றமாய் விசாரித்தான், ஒன்னுமில்லை என்று ராஜீவ் மழுப்ப பார்த்தான். பிறகு அவனாக புரிந்து கொண்டு “ பாஸ், நான் 1st yearல ஸ்வாதியை பண்ணதெல்லாம் லவ்வே இல்லை பாஸ், 7 வருஷம் boyses schoolல படிச்சிட்டு இங்க வந்து பார்த்தா, பொண்ணுங்களா இருக்கவே, ஆவேசப்பட்டுட்டேன், இப்ப அதையெல்லாம் நினைச்சா எனக்கே சிரிப்பா இருக்கு, அதையெல்லாம் இன்னுமா நினைச்சுட்டிருக்கீங்க , விடுங்க பாஸ், ரொம்ப பீல் பண்றவங்களா பார்த்தா எனக்கு சிரிப்பு வந்துரும்” என்று சொல்லி முடிக்க ராஜீவ் சிரித்து விட்டான். ராஜீவ் சிரிக்க , ரோஹித்தும் சிரித்து விட்டான். அந்நேரம் பார்த்து அன்பு உள்ளே நுழைய, அவன் எதுக்கு டா சிரிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்க அவர்கள் அவனுக்கு கதையை முதலில் சொல்ல வேண்டியதாய் போயிற்று. முழுதும் கேட்டு விட்டு ”இதுக்கு தான் புரண்டு புரண்டு சிரிச்சீங்களா, எனக்கு சிரிப்பே வரலையே” என்று சொல்லி அவர்களை வெறுப்பேற்றி ஹாஸ்பிட்டலை விட்டு எல்லோருமாக ராஜீவ் வீட்டிற்கு கிளம்பினர். ராஜீவ்வை தானே போய் கொள்வதாக சொல்லியும் அவர்கள் வலுகட்டயமாக அவனை வீட்டில் விடுவதற்காக கிளம்பினர்.

வீட்டிற்குள் ராஜீவ்வும் அவன் சகாக்களும் சரியாக உள்ளே நுழையும் போது, ராஜீவ்வின் அம்மா கமலாவும், அப்பா பாலசுந்தரமும் இவனை பார்ப்பதற்காக ஹாஸ்பிட்டல் கிளம்பி கொண்டிருந்தனர். கொஞ்சம் இல்லையேல் காரில் கிளம்பி இருந்திருப்பார்கள். இவர்களை பார்த்ததும், ராஜீவ்வின் அம்மா கண்களில் நீரை வைத்து கொண்டு ராஜீவ்வை கட்டி அணைத்து உள்ளே கூட்டி சென்றார்கள். நிர்மலா தான் இவர்களுக்கு விஷயத்தை சொல்லி விட்டு இருந்தாள், ராஜீவ்வின் அம்மா அரை நாள் லீவ் விடுத்து வந்திருந்தார்கள். ராஜீவ்வின் அம்மா ஹாஸ்பிட்டலில் என்ன மருத்துவம் செய்தார்கள் என்று அன்புவிடமும் ரோஹித்திடமும் விசாரித்து தெரிந்து கொண்டார்கள். மனது கேட்காமல் ராஜீவ்வின் அம்மா அவர்களது குடும்ப மருத்துவரை தொடர்பு கொண்டு வந்து பார்த்து விட்டு செல்லுமாறு கேட்டு கொண்டார். ராஜீவ்வும், அவரது அப்பாவும் அதெல்லாம் தேவையில்லை என்று எவ்வளவோ தடுத்தும் கூட ராஜீவ்வின் அம்மா கேட்பதாய் இல்லை. ராஜீவ், அவர்கள் நண்பர்கள் இருவரையும் வீட்டிற்கு போக சொல்லி அவனது அறையில் வந்து படுத்து கொண்டான். அவனுடைய கைகள் அவனது செல்போனை எடுத்து ஸ்வாதியிடம் பேசலாம் என்று பரபரத்து கொண்டிருந்தது. ஒரு மணி நேர தனிமை அவனுக்கு அப்போது மிக தேவையாக இருந்தது. ஆனால், அவனது அப்பாவும், அம்மாவும் இவனை கவனித்து கொள்வதற்காக இவனை கொஞ்சமும் விலகாது இருந்தார்கள். ராஜீவ்வின் அம்மா சட்டு சட்டென்று அழ தொடங்குபவராய் இருந்தார். “நான் வேணும்னா வேலையை விட்டு உன்னை பத்திரமாய் பாத்துகிட்டுமா கண்ணு” என்று கேட்டு ராஜீவ்வை கலவரபடுத்தினார்கள். ராஜீவ் அதெல்லாம் வேண்டாம் என்று தான் சின்ன குழந்தை இல்லை என்றும் தான் எருமை மாடு கணக்காக வளர்ந்தாயிற்று என்றும் சொல்லி சமாதான படுத்த வேண்டியதாயிற்று. இவன் தன்னை எருமை மாடு என்று பேச்சு வழக்கில் சொல்லி கொண்டிருக்கும் போது, பாலந்தரத்திடம் ஒரு நகைப்பு ஏற்பட்டதை யாரும் பார்த்திருக்கவில்லை. சற்று நேரத்திலே ராஜீவ்வின் குடும்ப மருத்துவர் வந்து இவனை சரிபார்த்து, ஒன்றும் பயப்படுவதிற்கில்லை என்று ஆறுதலை மட்டும் சொல்லி, Consulting fees ஆக 2000 ரூபாயை பாலசுந்தரத்திடம் வாங்கி சென்றார்.

அவர் சென்ற பிறகு தான் ராஜீவ்வை அவனது அறையில் படுக்க சொல்லி கதவை சாத்தி சென்றார்கள். அவனது அம்மா சென்ற சற்று நேரத்திலே சித்ரா உள்ளே நுழைந்து ராஜீவ்வை நலம் விசாரித்து, அனுமார் கோவிலில் பெற்ற செந்தூரத்தை ராஜீவ் நெற்றியில் பூசி, ஒரு அனுமார் அட்டை படத்தை தலையணை அடியில் வைத்து சென்றாள். அப்பாடா என்று நிம்மதியாக அவள் சென்ற பிறகு கதவை தாளிட்டு கொண்டான்.

ராஜீவ் ஸ்வாதிக்கு போன் செய்யலாம் என்று போனை கையில் எடுத்த போதே அவளிடம் இருந்து “hw u feel nw?”  என்று sms வந்தது. அதை பார்த்து ரொம்பவும் உற்சாகமாகி அவளுக்கு போன் செய்தான். இவ்வளவும் நாளும் பேசிய பெண் தான் என்றாலும், இன்று அவளிடம் பேசுவது வித்தியாசமான ஒன்றாய் இருந்தது, அவன் காதலை சொல்லியதற்கு வேண்டாம் என்று சொல்லி விட்டாலும், இப்போது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவன் கைவெட்டு வலியினை எல்லாம் மறக்க செய்திருந்தது. ராஜீவ் காலேஜ் போகவில்லை என்பதற்காக அவளும் ஏன் போகாமல் விட வேண்டும், ராஜீவ்விற்கு வந்த கனவு அவளுக்கும் ஏன் வர வேண்டும் என்பன போன்ற இயல்பான கேள்விகளுக்கு பின்னே காதலே இருக்க கூடும் என்று நினைக்கும் போதே ராஜீவ்விற்கு மனதிற்குள் குளிர்ச்சியான உணர்ச்சி ஏற்பட்டது.

”ஹலோ”

“சொல்லு ராஜீ… எங்க இருக்க “

“நீங்க கிளம்பன கொஞ்ச நேரத்திலே நாங்களும் கிளம்பிட்டோம், இப்ப வீட்ல இருக்கேன்… என்ன பண்ற…”

“சும்மா ரூம்ல பேசிகிட்டு இருக்கோம்… நீ என்ன பண்ற..”

”ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்,  நேத்து சொன்னது பத்தி யோசிச்சியா?”

“எது?”

“உன்னை பிடிச்சிருக்குனு சொன்னேனே…. ஏன், மறந்துட்டியா?”

“அது தான், அப்பவே சொல்லிட்டேனே, என்னால இது பத்தி யோசிக்க முடியாதுனு”

“So…”

” So னா என்னா சொல்றது….”

“என்ன காரணம்…”

”கண்டிப்பா தெரிஞ்சாகனுமா”

“நாங்க பணக்காரங்க, அது தானே… பணக்காரங்கனா என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, ஒருத்தன் ஏழையா பொறக்கறது தப்பில்லை, ஏழையா சாகறது தான் தப்பு, ஒருத்தன் பணம் சம்பாரிக்கிறது, அவ்ளோ பெரிய தப்பா… ஒண்ணு புரிஞ்சிக்கோ…”

“ஹேய் நிறுத்து நிறுத்து… நீ சொல்றதெல்லாம் யாரு கேக்கறது, அதெல்லாம் ஒன்னும் இல்லை… எனக்கு ஒரு தங்கச்சி இருக்கு, அதை நான் என் பணத்துல படிக்க வைக்கனும்னு ஆசை படறேன், அடுத்த வருஷம் அவ +2 முடிச்சு வெளிய வர்றா… அதுக்குள்ள நான் வேலை தேடி செட்டில் ஆகனும்.. அதுவுமில்லாம எங்க அப்பா அம்மா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க, அழுது கெஞ்சி கூட சம்மதம் வாங்க எனக்கு விருப்பமில்ல..  என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது சிக்கலாகிடும், அதுவுமில்லாம எங்க கிராமத்துல எங்க வீட்டை பத்தி எப்படி ஊருக்குள்ள பேசிப்பாங்கனு சொன்னா, நீயே உன் லவ்வை தூக்கி எறிஞ்சிறிவ… அவ்வளவு மட்டமா பேசிப்பாங்க… ”

“இத்தனை negatives யோசிக்கிற நீ ஏன் ஒரே ஒரு positive கூட யோசிக்க மாட்டிங்கிற”

“ஏன்னா அப்படி ஒண்ணு இல்லை…”

“நிஜமாலுமே நீ என்னை லவ் பண்லையா…”

“என்னை மாதிரி ஒரு பொண்ணால அதை பத்தி நினைச்சு கூட பார்க்க முடியாது ராஜீவ்… உனக்கோ எனக்கோ அதுக்கு கொடுத்து வைக்கல ”

”கொடுத்து வைக்கலன்னுலாம் சொல்லாத, அப்பறம் ஏன் உனக்கும் எனக்கும் ஒரே கனவு வரணும்”

”என்ன கனவு…”
”இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல சொன்னேனே…”

“ஹய்யோ ராஜீவ், உனக்கு வந்த அதே கனவு எனக்கு வரல, என் கனவுல நீ நான் ரோஹித் அன்பு நிர்மலா எல்லோரும் ஒரு ஜீப்ல ஒரு forest area போற மாதிரி தான் வந்தது… “

“இதை ஏன் அப்பவே சொல்லல”

“அப்பறமா சொல்லிக்கலாம்னு தான் விட்டுட்டேன், ஆனா அதுக்குள்ள நீ இப்பிடி எடுத்துருக்க …. “

”நீ பொய் சொல்ற…”

“நான் ஏன் பொய் சொல்னும்…”

“தெரியல… ஆனா நீ பொய் சொல்ற… அதை விடு, நான் காலேஜ் போலங்கறதுக்காக நீயும் ஏன் போகாம விட்ட…”

“ஹய்யோ… இதையும் நீ..”

“சரி விடு ஸ்வாதி, இதுக்கும் ஏதாவது சொல்ல தான் போற… சரி இனிமேல் என்ன..”

“இனிமேல் இது பத்தி பேச்சு எடுக்க வேண்டாமே ராஜீ… நாமே நண்பர்களாகவே இருந்திடலாமே..”

”சரி, நானும் கூட இனிமேல் இதை பத்தி பேச பிரிய படல, ஆனா இனி நண்பர்களாக இருக்கிறதெல்லாம் சாத்தியமில்ல.. அதனால உங்கிட்ட இனிமேல் பேச வேண்டாம்னு பார்க்கிறேன்….”

“என்ன இது, இத்தனை நாள் பிரண்டா இருந்த உன்னால இனிமே இருக்க முடியாதா என்ன…”

”நான் பர்ஸ்ட் இயர்லயே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டனு உனக்கு தெரியாது, அதனால இனிமே பிரண்டா பழகுறதுலாம் சான்ஸே இல்லை…”

”பொய் சொல்லாத…”

“நான் ஏன் பொய் சொல்னும்”

”எனக்கு எவ்ளோ guilty ஆ இருக்கு தெரியுமா…”

”அதுக்கு என்னால என்ன பண்ண முடியும், ஒரு ஸாரி தான் கேக்க முடியும் ”

“இப்படி பேசாத ராஜீ, ரொம்ப வலிக்குது…”

“ ஹேய், எனக்கு எவ்ளோ வலிக்குது தெரியுமா… உனக்கு தான் என்னை பார்த்தா விளையாட்டா இருக்கு ”

” உனக்கு வலிக்குதுங்கறதுக்காக என்னை எங்க வீட்டை மறந்து உன்னோட வர சொல்றியா ராஜீ “

” நான் அப்படிலாம் சொல்லல ஸ்வாதி, சரி அதெல்லாம் விடு, நீ என்னை லவ் பண்ணலைன்னா மட்டும் மேற்கொண்டு நாம பேசிக்கலாம், இல்லைன்னா வேண்டாம்…”

“பிளாக்மெய்லா ராஜீவ்?”

”என்னை கோவப்படுத்துறதுக்காகனே கேள்வி கேக்காத, 3 வருஷத்துக்கும் மேல உன்னை மனசுக்குள்ளேயே லவ் பண்ணியிருக்கேன், நீ எனக்கில்லைனு தெரிஞ்சதுக்குப்பறமும் உன் கூட நான் எப்படி பேசி பழக முடியும்… எனக்கு கஷ்டமா இருக்காதா…”

”ஏன் அதே மாதிரி என்னை யோசிச்சு பார்க்க மாட்டிங்கற… 3 வருஷத்துக்கும் மேல உன் கூட நான் பிரண்டா இருந்திருக்கேன், உன் கூட என்னால எப்படி பேசாம இருக்க முடியும்…”

”ஏன், அன்பு, ரோஹித்லாம் இருக்காங்கல்ல…”

”செருப்பால அடிப்பேன். என்னை என்னான்னு நினைச்சிட்டு இருக்க… உன்னை பார்க்கற மாதிரி தான் அவங்களையும் பார்க்கிறனா… அவங்களையெல்லாம் எனக்கு உன் மூலமா தான் தெரியும்… ரோஹித்தை பத்தி எப்படி உன்னல பேச முடியுது, அவன் இது வரைக்கும் என் கிட்ட பேசி நீ பார்த்து இருக்கியா…. .“

“என்னை விட்டுருனு தான் சொல்றேன், நான் வேற எதையும் mean பண்ணல…”

“அது எப்படி டா முடியும்…”

“அதை பத்தி வருத்தப்படற நிலைமைல நான் இல்லை”

என்று சொல்லி இணைப்பை எதிர்பார்க்காத போது துண்டித்து விட்டான். துண்டித்த பிறகு தான், தான் எவ்வளவு ஆணாதிக்கமாகவும், கீழ்த்தனமாகவும் நடந்து இருக்கிறோம் என்றே அவனுக்கு புரிந்தது. எது நடந்ததோ அது நடந்ததாகவே இருக்கட்டும், இது ஒரு முடிவிற்கு வருவது எவ்வளவோ பரவாயில்லை, எதற்காக மனதினுள் வீண் ஆசையை வளர்க்க வேண்டும் என்று மனதை சமாதான படுத்த முயன்றான். அடுத்த 2 விநாடிகளிலே ஸ்வாதியிடமிருந்து அழைப்பு வந்தது. ராஜீவ் எடுக்கவில்லை. அதனை தொடர்ந்து ஸ்வாதி பல முறை தொடர்ந்து கால் செய்தும் ராஜீவ் ஏற்க மறுத்தான்.

அழைப்பை ஏற்காததால், போனை எடுக்க சொல்லி sms அனுப்பினாள். எதற்கும் பதலளிக்காமல் வெறுப்பின் உச்சத்தில் இருந்தான். அவன் அடைந்திருக்கும் வெறுப்பு எதன் மேல், யார் மேல் என்பதை கூட தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஒரு குருட்டு தனமான ஒரு வெறுப்பில் இருந்தான். அவன் செயல்கள் எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒன்று என்று தெரிந்தாலும், அவனுக்கு என்ன மாதிரியான ஆற்றுவது என்று தெரியவில்லை. ஆனால் அவள் வரிசையாக அனுப்பி கொண்டிருந்த குறுஞ்செய்திகளை மட்டும் திரையில் பார்த்து கொண்டிருந்தான்.


                                           (தொடரும்…..)



 

Monday, 27 August 2012

ஸ்வாதி ராஜீவ் (2)


அன்று காலை 08.45 மணி ஆகியும் ராஜீவ் எழாததால் அவள் வீட்டில் வேலை செய்யும் சித்ராவே அவனை எழுப்பி விட வேண்டியதாய் போயிற்று, ’அண்ணா, அண்ணா’ என்று இரண்டு முறை கூப்பிட்டு பார்த்தாள். அப்படியும் எழாததால், கவிழ்ந்த படி படுத்திருந்த அவனது  தோள்களை மெலிதாக குலுக்கினாள், இவளது கை பட்ட உடனே, என்ன கெட்ட கனவோ ராஜீவ் இழுத்து இழுத்து மூச்சு விட்டான், இதை பார்த்து, சித்ரா, அண்ணா அண்ணா என்று பெரிதாக கத்த ஆரம்பித்தாள், ராஜீவ் ரொம்ப நேரமாக எதையோ சொல்ல  வாயெடுத்தான், ஆனால் வார்த்தை வரவில்லை, 4-5 முயற்சிகளுக்கு பின், ரொம்பவும் முனகிய குரலில், தண்ணீ என்றான். இதை கேட்டதும், அவசரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வீடு துடைத்து கொண்டிருந்த தண்ணீரை கொஞ்சம் கையில் எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள், அப்போதும் அவனிடம் எந்த முன்னேற்றமும் இல்லை, அவனை எழுப்ப ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற பதற்றத்தில் அவனை புரட்டினாள், புரட்டியதில் அவனாக மற்றொரு முறை புரண்டு முதுகு கீழே படும் படி விழுந்தான். விழும் போது தண்ணீர் துடைத்து கொண்டிருந்த வாளி மீது விழுந்ததில் வாளியில் இருக்கும் மொத்த தண்ணீரும் இவனது முகத்திலும் உடம்பிலும் கவிழ விழித்து கொண்டான். விழித்து பார்த்தால், அந்த ப்ளாஸ்டிக் வாளி உடைந்து போயும், உடைந்த ஒரு கூரான பகுதியின் வாளி ராஜீவ்வின் இடது முழங்கையில் கிழித்து ரத்தம் வர ஆரம்பித்தது. ராஜீவ்விற்கு சற்று நேரம் தாம் எங்கு இருக்கிறோம் என்று நினைப்பே வரவில்லை, சுற்றி முற்றி திரும்பி பார்த்தான். அவனுடைய அறையில் சித்ரா நின்று கொண்டிருந்ததை பார்த்தான், இவன் பார்த்ததும் சித்ரா ஓவென்று அழத் தொடங்கினாள். ராஜீவ் எழுந்து நின்று அவளை சமாதான படுத்துவதற்குள் அவள் அறையை விட்டு ஓடி விட்டாள். உடம்பெல்லாமும் ஒரே துர்நாற்றமாக இருந்தது. மணியை பார்த்தான் 08.47, இனி காலேஜ்ஜிற்கு போக முடியாது என்று முடிவெடுத்தவனாய் அன்புவிற்கு போனில் தொடர்பு கொண்டு, தான் வர முடியாது என்பதை ப்ரொபசரிடம் சொல்லி விடுமாறு சொல்லி வைத்தான். சித்ரா பயந்து போய், ட்ரைவர் குமாரை கூப்பிட்டு வந்திருந்தாள். குமார் வந்ததும் ராஜீவ்வின் கையை பார்த்தார், ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. எங்கோ ஓடியவர், சற்று நேரத்தில் நிறைய மருந்தகளுடனும், ப்ளாஸ்த்திரிகளுடனும் வந்தார். சித்ரா அழுந்து கொண்டே, இப்போது கட்ட முடியாது எனவும், ராஜீவ் உடல் முழுவதும் அழுக்கு தண்ணீரால் நனைந்து இருக்கிறது, செப்டிக் ஆகி விடும் என்று அழுது கொண்டே தெளிவாக சொன்னாள். பிறகு குமாரும், சித்ராவும் ராஜீவ் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல கேட்காமல் அவனை குளிக்க வைத்து, கையில் ப்ளாஸ்த்திரி போட்டு விட்டார்கள். சித்ரா அவ்வளவு கண்ணீரை எங்கு தான் வைத்திருந்தாளோ, கட்டு போடும் வரை அழுந்து கொண்டே இருந்தாள். கட்டு போட்ட பிறகு தான் அவள் அழுவதை நிறுத்தி அவள் வேலையை பார்க்க சமயலறைக்குள் நுழைந்தாள்.

அம்மாவும், அப்பாவும் எங்கே போனார்கள் என்று ராஜீவ் கேட்ட போது, ’அம்மா ஆபீஸ் போய்ட்டாங்க… அப்பா கம்பெனியில இருந்தே இன்னைக்கு விடியக்காலைல தான் வந்தாரு, தூங்கிட்டு இருக்காரு’ என்று சமையல் அறையில் இருந்து வெறும் சத்தம் மட்டுமே பதிலாக வந்தது.  

டி.வி. பார்க்கலாம் என்று ஸ்விட்சை போட்டு, சோபாவில் உட்கார்ந்த வேகத்தில் கரண்ட் போனது. எதுவும் கேட்காமலே ‘சனிக்கிழமை ஷட் டௌன்’ என்று சமையலறையில் இருந்து பதில் வந்தது. ராஜீவ் திரும்பி மணியை பார்த்தால் மணி 09.30, இனி 04.30 மணிக்கு தான் கரண்ட் வரும் என்பதால் ராஜீவ், காலேஜ் செல்லலாம் என யோசித்து, மறுபடியும் அன்புவிற்கு போன் அடித்து, லீவ் சொல்ல வேண்டாம் என்றான். அதற்கு மறுமுனையில் அன்பு சொன்னது கேட்டு தலையே சுற்றி விட்டது. ‘டேய், அயோக்ய பயலே, நீ லீவ் போட்டுட்டனு சொல்லி நானும் போக வேண்டாம்னு முடிவு பண்ணி, ரோஹித்தையும் போக விடாம பண்ணி இப்ப அவனோட மார்னிங் ஷோ கிளம்பிட்டு இருக்கேன், நீ வரலன்னு சொன்னதுக்கு அப்பறம் ஸ்வாதியும், அவளுக்கு உடம்புக்கு ஏதோ பண்ணுதுனு சொல்லி அவளும் கிளம்பறன்னு சொல்லி கிளம்பிட்டா, அவ கிளம்பிட்டான்னு நிர்மலாவும் கிளம்பிட்டா. இப்படி எல்லாத்தையும் கிளப்பி விட்டுட்டு நீ மட்டும் கிளாஸ்க்கு போக போறீயா, செருப்பால அடிப்பேன், ஒழுங்கா தியேட்டர்க்கு 10.30 மணிக்குள்ள வந்து சேரு டா’ என்றான். ராஜீவ்க்கு சிரிப்பு தான் வந்தது. நேற்று ராத்திரி தான், சினிமாவை அந்த திட்டு திட்டியிருந்தான், இப்படி திட்டி அடுத்த நாளேவா சினிமாவிற்கு செல்ல வேண்டும் என்று அவனது டூ வீலரை எடுத்து கொண்டு தியேட்டருக்கு கிளம்பினான்.

ராஜீவ் இப்போது சென்று கொண்டிருக்கும் தியேட்டர் அவனுக்கு  ரொம்ப பிடித்தமான தியேட்டர், அதனால் தான் என்ன படம் பார்க்க போகிறோம் என்று கூட கேட்காமல் கிளம்பி விட்டான். அவன் நண்பர்களுடனான பல சந்தோஷ தருணங்கள் இந்த தியேட்டரில் அவனுக்கு கிடைத்திருக்கிறது. அந்த தியேட்ட்ரின் பெயர் R.K.தியேட்டர், ரொம்பவும் பிரமாதமான தியேட்டர் என்று சொல்லி விட முடியாது, நடுத்தரமான தியேட்டர் தான், கல்லூரிக்கு வெகு அருகில் இருப்பதாலும், நண்பர்கள் எளிதில் கூட வசதியான இடமாகவும் இருப்பதால், இது அவனுக்கு ஒரு பிடித்தமான இடமாக மாறி போனது.

கல்லூரி சேர்ந்து 4 வருடங்கள் ஆனதே கூட்டி பார்த்தால் தான் தெரிகிறது, என்று அடிக்கடி அன்பு ராஜீவ்விடம் சொல்லி கொண்டிருப்பான். அன்புவை பற்றி யோசிக்கும் போது, ராஜீவ்விற்கு நிச்சயம் இந்த தியேட்டர் ஞாபகத்தில் வராமல் இருக்கவே முடியாது. கல்லூரி சேர்ந்த முதல் வாரம் வரைக்குமே ராஜீவ்வால் யாரிடமும் நெருங்கி பழக முடியாமல் இருந்தது. எல்லோரும் சடங்குக்காக பேசுவது போலவே இருந்தது. கல்லூரி பாடங்களும் அநியாயத்திற்கு அறுத்து தள்ளியது. அந்த மாதிரியான ஒரு சாதாரண நாள் காலையில், அன்பு ராஜீவ் தோள் மேல் கையை போட்டு, ’பாஸ் க்ளாஸ் ரொம்ப போர் அடிக்குது படத்துக்கு போலாமா?’ என்று கேட்ட நிமிடம் முதலே ராஜீவ் தன்னை அன்புவிற்கு நண்பனாக்கி கொண்டான். அப்போதிருந்து ராஜீவ்வை கல்லூரியில் எங்குமே அன்பு இல்லாமல் பார்க்க முடியாது, அந்தளவு இணை பிரியாமல் ஒன்றாகவே வலம் வந்தனர்.

நிர்மலா கிராமத்து பள்ளியில், தமிழ் மீடியம் படித்ததால் கல்லூரி துவங்கிய நாட்களில் ரொம்பவும் தடுமாறினாள், அந்த ஆரம்ப கட்டத்தில் அவளுக்கு நட்பு வட்டமும் பெரிதாய் அமையாமல் கஷ்டப்பட்டு இருப்பதை அறிந்து ராஜீவ் அவளுக்கு உதவியாய் இருந்தான். அவள் எந்த மாதிரியான ஜடை போட வேண்டும், என்ன மாதிரியான ஆடை அணிய வேண்டும், ஆங்கில உச்சரிப்புகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது அவளை கவனித்து வந்தான். ஆரம்பத்தில் அவன் அதையொரு உதவியாய் தான் நினைத்து செய்து கொண்டு வந்தான். ஆனால் ரொம்ப சீக்கரத்திலே அவள் ராஜீவ்க்கு தோழியாய் மாறியது இந்த தியேட்டரில் வைத்து தான். ஒரு நாள் ராஜீவ்வும், அன்புவும் மார்னிங் ஷோ முடித்து கல்லூரியில் வந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, நிர்மலா வந்து காலையில் எங்கு காணாமல் போனீர்கள் என்று கேட்க, அவர்கள் தியேட்டரிற்கு சென்று படம் பார்த்தோம் என்று சொல்ல அவள், ‘தியேட்டருக்கா…’ என்று ஆச்சர்யத்தில் விரிந்தது இன்னமும் ராஜீவ்விற்கு ஞாபகம் இருக்கிறது. எதற்காக அவ்வளவு ஆச்சர்யம் காட்டுகிறாய் என்று கேட்டதற்கு, தான் இன்னமும் தியேட்டருக்கே போனதில்லை எனவும், தன்னுடைய கிராமத்தில் அந்த வசதியில்லை எனவும், பக்கத்து வீட்டு டி.வி.யில் தான் சில படங்கள் பார்த்திருப்பதாய் சொல்லி, தன்னையும் ஒரே ஒரு முறை தியேட்டருக்கு அழைத்து செல்லுமாறு கேட்டாள். ராஜீவ் இந்தளவு வெள்ளிந்தியை தன் வாழ்நாளிலே பார்த்திராததால், அந்த நிமிடமே அவளை படத்திற்கு கூட்டி செல்ல முடிவு எடுத்தான். அந்த நாள் மேட்னி ஷோவிற்கு 10 நிமிடம் இருந்தது. உடனே ராஜீவ் அன்புவிடம் சாப்பிட்டது போதும் கை கழுவி விட்டு வா, என்று சொல்லி நிர்மலாவையும் கூட்டி கொண்டு தியேட்டருக்கு சென்றான். அவளது முதல் நாள் தியேட்டர் அனுபவங்களை பல மாதங்களாக பார்ப்பவரிடத்திலெல்லாம் அலுக்காமல் சொல்லி திரிந்து கொண்டிருந்தாள்.

நிர்மலா தங்கியிருக்கும் ஹாஸ்டல் ரூமில் ஸ்வாதி தங்கி இருப்பதால் தான், ராஜீவ்விற்கு ஸ்வாதியின் அறிமுகம் கிடைத்தது. கல்லூரி துவங்கிய 3வது மாதத்திலே ஸ்வாதி ராஜீவ்விற்கு அறிமுகம் ஆகி விட்டாள். அது ஒரு 3 மாதம் வரை பார்த்தால் புன்னகைக்கும் ஒரு நட்பாகவே இருந்தது. அப்போதே ராஜீவ்விற்கு அவளை பிடித்து விட்டிருந்தது. ஒரு நாள் ஸ்வாதி ராஜீவ்விடம் வந்து, ரோஹித்னு ஒருத்தன் என்னை லவ் பண்றேன்னு சொல்லி டார்ச்சர் பண்றான், கொஞ்சம் என்னன்னு கேக்கறீங்களா என்று தூரத்தில் இருந்தே ராஜீவ்க்கு ஆளை காட்டினாள். ராஜீவ்க்கு இந்த மாதிரி மிரட்டி வைப்பதில் எல்லாம் முன்பின் பரிச்சயம் இல்லை, ஆனாலும் முடியாது என்று சொல்ல முடியாததால் துணிந்து இறங்கினான். அந்த நாளை நினைத்தால் இப்போதும் ராஜீவ்விற்கு பிரமிப்பே மேலிடுகிறது. அவள் காட்டிய ஆள் நல்ல வாட்ட சாட்டமான ஆளாகவும், ஸ்மார்ட்டான ஆளாகவும் இருந்தான். அவன் ஸ்வாதியின் க்ளாஸ் மேட்டாக இருந்தான். அவனை மிரட்டுவதும், பணிய வைப்பதும் அந்த நிமிடத்தில் முடியாது என்று தெரிந்து இருந்தாலும் ராஜீவ் அவனை நோக்கி சென்று, அவன் முன் நின்றான். அவன் கேண்டினின் முன் நின்று கொண்டு போகும் வருபவர்களிடத்திலெல்லாம் எதையோ கேட்டு கொண்டிருந்தான். ராஜீவ் போய் நின்றதும் ரோஹித், ‘பாஸ், 100 ரூபாய்க்கு சில்லரை இருக்கா?’ என்று கேட்டான். ராஜீவ்வால் அப்போது தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியவில்லை, எதுவும் சொல்லாமல், ‘இந்தாங்க பாஸ்” என்று இரண்டு 50 ரூபாய் தாள்களை நீட்டினான். ’தேங்க் யூ’ என்று புன் சிரிப்போடு வாங்கி, கேண்ட்டின் கவுண்ட்டரில் கொடுத்து சாப்பாடு வாங்கி, ஒரு காலியான மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். ராஜீவ் அவன் அருகே உட்கார்ந்து, ‘பாஸ், நான் ஸ்வாதியோட friend, நீங்க லவ் சொன்னதால ஸ்வாதி ரொம்ப அப்ஸெட் ஆகி காலேஜ் மாத்தறது பத்தி யோசிக்கிறாங்க, எங்க friend எங்களை விட்டு பிரியறது ரொம்ப கஷ்டமா இருக்கு, உங்களால அவங்களை லவ் பண்ணாம இருக்க முடியுமா பாஸ்?’ என்று கேட்டான். அதை கேட்டு ரோஹித் ரொம்பவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்திருக்க கூடும், இல்லாமல் போனால் ராஜீவ் அப்படி சொன்னவுடனே ரோஹித் மன்னிப்பு கேட்டு, இனிமேல் இது போல் நடக்காது என்று சொல்லி அனுப்பியிருக்க மாட்டான். அதன் பிறகு ரோஹித் ஸ்வாதி இருக்கும் புறமே திரும்பாதவனாய் இருந்தான். பின்னாளில் ராஜீவ் அன்பு கூட ஒரு முறை ஐஸ் க்ரீம் கடையில் இருக்கும் போது, உள்ளே நுழைந்த  ரோஹித் ராஜீவ்வை பார்த்த பின் வெளியே போய் விட்டான். இது போல் 2-3 முறைக்கு மேல் ராஜீவ்வை கண்டவுடன் ரோஹித் ஒதுங்கி விடவே, ராஜீவ் ஒரு நாள் ரோஹித்திடம் சென்று ‘பாஸ், ஏதாவது படத்துக்கு போலாமா’ என்று கேட்டு அவனை நண்பனாக்கி தியேட்டருக்கு சென்றான். அதன் பின் தியேட்டர் போகும் போதெல்லாம் ரோஹித்தை கூட்டி செல்வது வாடிக்கை ஆகி விட்டது.

ஒவ்வொரு முறை யாருடனாவது தியேட்டருக்கு செல்லும் போதும், ராஜீவ் தவறாமல் ஸ்வாதியை வர சொல்லி கேட்பான். ஆனால் இன்று வரை பசங்களுடன் படத்திற்கு செல்ல கூடாது என்ற கொள்கையில் பிடிவாதமாக இருப்பதால் அவள் ஒவ்வொரு முறையும் மறுத்து விடுவாள். அவளை தியேட்டருக்கு கூட்டி சென்று அவளுடன் படம் பார்ப்பதற்காகவாவது அவளை மணக்க வேண்டும் என்று ராஜீவ் ஒரு செல்ல ஆசையை யாருக்கும் தெரியாமல் மனதினுள் வளர்த்து வந்தான்.

தியேட்டர் வாசலிலே ரோஹித்தும், அன்புவும் நின்று கொண்டிருந்தார்கள். வண்டியை பார்க் செய்து விட்டு டிக்கெட் கவுண்ட்டரில் நிற்கும் போது, அன்பு தான் ராஜீவ் கையில் இருக்கும் கட்டை முதலில் பார்த்தான். என்ன ஏது என்று ராஜீவ் சொல்லி கொண்டிருக்கும் போதே ரோஹித், ‘பாஸ் ரத்தம் நிக்காம வந்துட்டு இருக்குது, வாங்க ஹாஸ்ப்பிட்டல் போகலாம் என்று ராஜீவ்வை இழுத்து சென்று வண்டியில் உட்கார வைத்து விரைந்தான். இதற்குள் அன்பு ஸ்வாதிக்கும், நிர்மலாவிற்கும் சொல்லி விட்டிருக்க வேண்டும். அவர்களும் ராஜீவ் சென்ற 30 நிமிடத்திற்குள்ளாகவே ஹாஸ்ப்பிட்டலிற்கு வந்து சேர்ந்தனர்.

ரத்தம் உறைய வைப்பதற்காக ராஜீவ்விற்கு ஒரு ஊசி போட்டு அவனை 1 மணி நேரம் ஓய்வு எடுத்து செல்லுமாறு சொன்னார்கள்.

ஸ்வாதி அவனுக்கு என்ன ஆனது என்று அவன் சொல்ல ஒரு முறை கேட்டு விட்டு, அவன் அருகே நெருங்கி அப்படி என்ன கனவு அவன் கண்டான் என்று கேட்டாள். மற்றவர்கள் அனைவரும் ஹாஸ்பிட்டல் பில்லை செட்டில் செய்வதற்காக அலைந்து கொண்டிருப்பதை உறுதி படுத்தி கொண்டு, அவன் கனவை சொல்ல ஆரம்பித்தான்.

‘நானும் நீயும் யாருமில்லாத ஒரு ரோட்ல கார்ல போய்க்கிட்டு இருக்கோம், நான் வண்டி ஓட்ட நீ எனக்கு பக்கத்துல உட்காந்துட்டு இருக்க , உடனே நீ என்னை அண்ணா அண்ணானு ரெண்டு முறை கூப்பிடற, நான் ஷாக்காகி உன்னை திரும்பி பார்க்கறான், நீ என்னை பார்த்து சிரிச்சிட்டு இருக்க, அப்புறம் என்னை பின்னாடி யாரோ தட்டற மாதிரி இருக்கேன்னு திரும்பி பார்த்தா, நமக்கு 4 குழந்தைங்க பிறந்திருக்கு, நான் அப்பிடியே ஷாக்காகி வண்டிய பாலத்து மேல இருந்து கீழ தள்ளி கடல்ல விழுந்தடறேன், அப்பறம் எழுந்து பார்த்தா நான் கட்டில் மேல இருந்து கீழ விழுந்திருக்கேன், என்னை அண்ணானு கூப்பிட்டது  யார்னு திரும்பி பார்த்தா வீட்டு வேலைக்காரி’ என்று ராஜீவ்.சொல்லி முடித்தவுடன் ஸ்வாதி குலுங்கி குலுங்கி சிரித்தாள். சிரித்து விட்டு ’எனக்கும் இதே போல ஒரு கனவு வந்துச்சு, ஆனா நான் ஒண்ணும் உன்னை மாதிரி காரை போய் கடல்ல தள்ளல’ என்று ராஜீவ்வை பார்த்து மறுபடியும் சிரித்தாள்.

                                                                                                            (தொடரும்...)