Monday 27 August 2012

ஸ்வாதி ராஜீவ் (2)


அன்று காலை 08.45 மணி ஆகியும் ராஜீவ் எழாததால் அவள் வீட்டில் வேலை செய்யும் சித்ராவே அவனை எழுப்பி விட வேண்டியதாய் போயிற்று, ’அண்ணா, அண்ணா’ என்று இரண்டு முறை கூப்பிட்டு பார்த்தாள். அப்படியும் எழாததால், கவிழ்ந்த படி படுத்திருந்த அவனது  தோள்களை மெலிதாக குலுக்கினாள், இவளது கை பட்ட உடனே, என்ன கெட்ட கனவோ ராஜீவ் இழுத்து இழுத்து மூச்சு விட்டான், இதை பார்த்து, சித்ரா, அண்ணா அண்ணா என்று பெரிதாக கத்த ஆரம்பித்தாள், ராஜீவ் ரொம்ப நேரமாக எதையோ சொல்ல  வாயெடுத்தான், ஆனால் வார்த்தை வரவில்லை, 4-5 முயற்சிகளுக்கு பின், ரொம்பவும் முனகிய குரலில், தண்ணீ என்றான். இதை கேட்டதும், அவசரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வீடு துடைத்து கொண்டிருந்த தண்ணீரை கொஞ்சம் கையில் எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள், அப்போதும் அவனிடம் எந்த முன்னேற்றமும் இல்லை, அவனை எழுப்ப ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற பதற்றத்தில் அவனை புரட்டினாள், புரட்டியதில் அவனாக மற்றொரு முறை புரண்டு முதுகு கீழே படும் படி விழுந்தான். விழும் போது தண்ணீர் துடைத்து கொண்டிருந்த வாளி மீது விழுந்ததில் வாளியில் இருக்கும் மொத்த தண்ணீரும் இவனது முகத்திலும் உடம்பிலும் கவிழ விழித்து கொண்டான். விழித்து பார்த்தால், அந்த ப்ளாஸ்டிக் வாளி உடைந்து போயும், உடைந்த ஒரு கூரான பகுதியின் வாளி ராஜீவ்வின் இடது முழங்கையில் கிழித்து ரத்தம் வர ஆரம்பித்தது. ராஜீவ்விற்கு சற்று நேரம் தாம் எங்கு இருக்கிறோம் என்று நினைப்பே வரவில்லை, சுற்றி முற்றி திரும்பி பார்த்தான். அவனுடைய அறையில் சித்ரா நின்று கொண்டிருந்ததை பார்த்தான், இவன் பார்த்ததும் சித்ரா ஓவென்று அழத் தொடங்கினாள். ராஜீவ் எழுந்து நின்று அவளை சமாதான படுத்துவதற்குள் அவள் அறையை விட்டு ஓடி விட்டாள். உடம்பெல்லாமும் ஒரே துர்நாற்றமாக இருந்தது. மணியை பார்த்தான் 08.47, இனி காலேஜ்ஜிற்கு போக முடியாது என்று முடிவெடுத்தவனாய் அன்புவிற்கு போனில் தொடர்பு கொண்டு, தான் வர முடியாது என்பதை ப்ரொபசரிடம் சொல்லி விடுமாறு சொல்லி வைத்தான். சித்ரா பயந்து போய், ட்ரைவர் குமாரை கூப்பிட்டு வந்திருந்தாள். குமார் வந்ததும் ராஜீவ்வின் கையை பார்த்தார், ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. எங்கோ ஓடியவர், சற்று நேரத்தில் நிறைய மருந்தகளுடனும், ப்ளாஸ்த்திரிகளுடனும் வந்தார். சித்ரா அழுந்து கொண்டே, இப்போது கட்ட முடியாது எனவும், ராஜீவ் உடல் முழுவதும் அழுக்கு தண்ணீரால் நனைந்து இருக்கிறது, செப்டிக் ஆகி விடும் என்று அழுது கொண்டே தெளிவாக சொன்னாள். பிறகு குமாரும், சித்ராவும் ராஜீவ் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல கேட்காமல் அவனை குளிக்க வைத்து, கையில் ப்ளாஸ்த்திரி போட்டு விட்டார்கள். சித்ரா அவ்வளவு கண்ணீரை எங்கு தான் வைத்திருந்தாளோ, கட்டு போடும் வரை அழுந்து கொண்டே இருந்தாள். கட்டு போட்ட பிறகு தான் அவள் அழுவதை நிறுத்தி அவள் வேலையை பார்க்க சமயலறைக்குள் நுழைந்தாள்.

அம்மாவும், அப்பாவும் எங்கே போனார்கள் என்று ராஜீவ் கேட்ட போது, ’அம்மா ஆபீஸ் போய்ட்டாங்க… அப்பா கம்பெனியில இருந்தே இன்னைக்கு விடியக்காலைல தான் வந்தாரு, தூங்கிட்டு இருக்காரு’ என்று சமையல் அறையில் இருந்து வெறும் சத்தம் மட்டுமே பதிலாக வந்தது.  

டி.வி. பார்க்கலாம் என்று ஸ்விட்சை போட்டு, சோபாவில் உட்கார்ந்த வேகத்தில் கரண்ட் போனது. எதுவும் கேட்காமலே ‘சனிக்கிழமை ஷட் டௌன்’ என்று சமையலறையில் இருந்து பதில் வந்தது. ராஜீவ் திரும்பி மணியை பார்த்தால் மணி 09.30, இனி 04.30 மணிக்கு தான் கரண்ட் வரும் என்பதால் ராஜீவ், காலேஜ் செல்லலாம் என யோசித்து, மறுபடியும் அன்புவிற்கு போன் அடித்து, லீவ் சொல்ல வேண்டாம் என்றான். அதற்கு மறுமுனையில் அன்பு சொன்னது கேட்டு தலையே சுற்றி விட்டது. ‘டேய், அயோக்ய பயலே, நீ லீவ் போட்டுட்டனு சொல்லி நானும் போக வேண்டாம்னு முடிவு பண்ணி, ரோஹித்தையும் போக விடாம பண்ணி இப்ப அவனோட மார்னிங் ஷோ கிளம்பிட்டு இருக்கேன், நீ வரலன்னு சொன்னதுக்கு அப்பறம் ஸ்வாதியும், அவளுக்கு உடம்புக்கு ஏதோ பண்ணுதுனு சொல்லி அவளும் கிளம்பறன்னு சொல்லி கிளம்பிட்டா, அவ கிளம்பிட்டான்னு நிர்மலாவும் கிளம்பிட்டா. இப்படி எல்லாத்தையும் கிளப்பி விட்டுட்டு நீ மட்டும் கிளாஸ்க்கு போக போறீயா, செருப்பால அடிப்பேன், ஒழுங்கா தியேட்டர்க்கு 10.30 மணிக்குள்ள வந்து சேரு டா’ என்றான். ராஜீவ்க்கு சிரிப்பு தான் வந்தது. நேற்று ராத்திரி தான், சினிமாவை அந்த திட்டு திட்டியிருந்தான், இப்படி திட்டி அடுத்த நாளேவா சினிமாவிற்கு செல்ல வேண்டும் என்று அவனது டூ வீலரை எடுத்து கொண்டு தியேட்டருக்கு கிளம்பினான்.

ராஜீவ் இப்போது சென்று கொண்டிருக்கும் தியேட்டர் அவனுக்கு  ரொம்ப பிடித்தமான தியேட்டர், அதனால் தான் என்ன படம் பார்க்க போகிறோம் என்று கூட கேட்காமல் கிளம்பி விட்டான். அவன் நண்பர்களுடனான பல சந்தோஷ தருணங்கள் இந்த தியேட்டரில் அவனுக்கு கிடைத்திருக்கிறது. அந்த தியேட்ட்ரின் பெயர் R.K.தியேட்டர், ரொம்பவும் பிரமாதமான தியேட்டர் என்று சொல்லி விட முடியாது, நடுத்தரமான தியேட்டர் தான், கல்லூரிக்கு வெகு அருகில் இருப்பதாலும், நண்பர்கள் எளிதில் கூட வசதியான இடமாகவும் இருப்பதால், இது அவனுக்கு ஒரு பிடித்தமான இடமாக மாறி போனது.

கல்லூரி சேர்ந்து 4 வருடங்கள் ஆனதே கூட்டி பார்த்தால் தான் தெரிகிறது, என்று அடிக்கடி அன்பு ராஜீவ்விடம் சொல்லி கொண்டிருப்பான். அன்புவை பற்றி யோசிக்கும் போது, ராஜீவ்விற்கு நிச்சயம் இந்த தியேட்டர் ஞாபகத்தில் வராமல் இருக்கவே முடியாது. கல்லூரி சேர்ந்த முதல் வாரம் வரைக்குமே ராஜீவ்வால் யாரிடமும் நெருங்கி பழக முடியாமல் இருந்தது. எல்லோரும் சடங்குக்காக பேசுவது போலவே இருந்தது. கல்லூரி பாடங்களும் அநியாயத்திற்கு அறுத்து தள்ளியது. அந்த மாதிரியான ஒரு சாதாரண நாள் காலையில், அன்பு ராஜீவ் தோள் மேல் கையை போட்டு, ’பாஸ் க்ளாஸ் ரொம்ப போர் அடிக்குது படத்துக்கு போலாமா?’ என்று கேட்ட நிமிடம் முதலே ராஜீவ் தன்னை அன்புவிற்கு நண்பனாக்கி கொண்டான். அப்போதிருந்து ராஜீவ்வை கல்லூரியில் எங்குமே அன்பு இல்லாமல் பார்க்க முடியாது, அந்தளவு இணை பிரியாமல் ஒன்றாகவே வலம் வந்தனர்.

நிர்மலா கிராமத்து பள்ளியில், தமிழ் மீடியம் படித்ததால் கல்லூரி துவங்கிய நாட்களில் ரொம்பவும் தடுமாறினாள், அந்த ஆரம்ப கட்டத்தில் அவளுக்கு நட்பு வட்டமும் பெரிதாய் அமையாமல் கஷ்டப்பட்டு இருப்பதை அறிந்து ராஜீவ் அவளுக்கு உதவியாய் இருந்தான். அவள் எந்த மாதிரியான ஜடை போட வேண்டும், என்ன மாதிரியான ஆடை அணிய வேண்டும், ஆங்கில உச்சரிப்புகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது அவளை கவனித்து வந்தான். ஆரம்பத்தில் அவன் அதையொரு உதவியாய் தான் நினைத்து செய்து கொண்டு வந்தான். ஆனால் ரொம்ப சீக்கரத்திலே அவள் ராஜீவ்க்கு தோழியாய் மாறியது இந்த தியேட்டரில் வைத்து தான். ஒரு நாள் ராஜீவ்வும், அன்புவும் மார்னிங் ஷோ முடித்து கல்லூரியில் வந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, நிர்மலா வந்து காலையில் எங்கு காணாமல் போனீர்கள் என்று கேட்க, அவர்கள் தியேட்டரிற்கு சென்று படம் பார்த்தோம் என்று சொல்ல அவள், ‘தியேட்டருக்கா…’ என்று ஆச்சர்யத்தில் விரிந்தது இன்னமும் ராஜீவ்விற்கு ஞாபகம் இருக்கிறது. எதற்காக அவ்வளவு ஆச்சர்யம் காட்டுகிறாய் என்று கேட்டதற்கு, தான் இன்னமும் தியேட்டருக்கே போனதில்லை எனவும், தன்னுடைய கிராமத்தில் அந்த வசதியில்லை எனவும், பக்கத்து வீட்டு டி.வி.யில் தான் சில படங்கள் பார்த்திருப்பதாய் சொல்லி, தன்னையும் ஒரே ஒரு முறை தியேட்டருக்கு அழைத்து செல்லுமாறு கேட்டாள். ராஜீவ் இந்தளவு வெள்ளிந்தியை தன் வாழ்நாளிலே பார்த்திராததால், அந்த நிமிடமே அவளை படத்திற்கு கூட்டி செல்ல முடிவு எடுத்தான். அந்த நாள் மேட்னி ஷோவிற்கு 10 நிமிடம் இருந்தது. உடனே ராஜீவ் அன்புவிடம் சாப்பிட்டது போதும் கை கழுவி விட்டு வா, என்று சொல்லி நிர்மலாவையும் கூட்டி கொண்டு தியேட்டருக்கு சென்றான். அவளது முதல் நாள் தியேட்டர் அனுபவங்களை பல மாதங்களாக பார்ப்பவரிடத்திலெல்லாம் அலுக்காமல் சொல்லி திரிந்து கொண்டிருந்தாள்.

நிர்மலா தங்கியிருக்கும் ஹாஸ்டல் ரூமில் ஸ்வாதி தங்கி இருப்பதால் தான், ராஜீவ்விற்கு ஸ்வாதியின் அறிமுகம் கிடைத்தது. கல்லூரி துவங்கிய 3வது மாதத்திலே ஸ்வாதி ராஜீவ்விற்கு அறிமுகம் ஆகி விட்டாள். அது ஒரு 3 மாதம் வரை பார்த்தால் புன்னகைக்கும் ஒரு நட்பாகவே இருந்தது. அப்போதே ராஜீவ்விற்கு அவளை பிடித்து விட்டிருந்தது. ஒரு நாள் ஸ்வாதி ராஜீவ்விடம் வந்து, ரோஹித்னு ஒருத்தன் என்னை லவ் பண்றேன்னு சொல்லி டார்ச்சர் பண்றான், கொஞ்சம் என்னன்னு கேக்கறீங்களா என்று தூரத்தில் இருந்தே ராஜீவ்க்கு ஆளை காட்டினாள். ராஜீவ்க்கு இந்த மாதிரி மிரட்டி வைப்பதில் எல்லாம் முன்பின் பரிச்சயம் இல்லை, ஆனாலும் முடியாது என்று சொல்ல முடியாததால் துணிந்து இறங்கினான். அந்த நாளை நினைத்தால் இப்போதும் ராஜீவ்விற்கு பிரமிப்பே மேலிடுகிறது. அவள் காட்டிய ஆள் நல்ல வாட்ட சாட்டமான ஆளாகவும், ஸ்மார்ட்டான ஆளாகவும் இருந்தான். அவன் ஸ்வாதியின் க்ளாஸ் மேட்டாக இருந்தான். அவனை மிரட்டுவதும், பணிய வைப்பதும் அந்த நிமிடத்தில் முடியாது என்று தெரிந்து இருந்தாலும் ராஜீவ் அவனை நோக்கி சென்று, அவன் முன் நின்றான். அவன் கேண்டினின் முன் நின்று கொண்டு போகும் வருபவர்களிடத்திலெல்லாம் எதையோ கேட்டு கொண்டிருந்தான். ராஜீவ் போய் நின்றதும் ரோஹித், ‘பாஸ், 100 ரூபாய்க்கு சில்லரை இருக்கா?’ என்று கேட்டான். ராஜீவ்வால் அப்போது தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியவில்லை, எதுவும் சொல்லாமல், ‘இந்தாங்க பாஸ்” என்று இரண்டு 50 ரூபாய் தாள்களை நீட்டினான். ’தேங்க் யூ’ என்று புன் சிரிப்போடு வாங்கி, கேண்ட்டின் கவுண்ட்டரில் கொடுத்து சாப்பாடு வாங்கி, ஒரு காலியான மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். ராஜீவ் அவன் அருகே உட்கார்ந்து, ‘பாஸ், நான் ஸ்வாதியோட friend, நீங்க லவ் சொன்னதால ஸ்வாதி ரொம்ப அப்ஸெட் ஆகி காலேஜ் மாத்தறது பத்தி யோசிக்கிறாங்க, எங்க friend எங்களை விட்டு பிரியறது ரொம்ப கஷ்டமா இருக்கு, உங்களால அவங்களை லவ் பண்ணாம இருக்க முடியுமா பாஸ்?’ என்று கேட்டான். அதை கேட்டு ரோஹித் ரொம்பவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்திருக்க கூடும், இல்லாமல் போனால் ராஜீவ் அப்படி சொன்னவுடனே ரோஹித் மன்னிப்பு கேட்டு, இனிமேல் இது போல் நடக்காது என்று சொல்லி அனுப்பியிருக்க மாட்டான். அதன் பிறகு ரோஹித் ஸ்வாதி இருக்கும் புறமே திரும்பாதவனாய் இருந்தான். பின்னாளில் ராஜீவ் அன்பு கூட ஒரு முறை ஐஸ் க்ரீம் கடையில் இருக்கும் போது, உள்ளே நுழைந்த  ரோஹித் ராஜீவ்வை பார்த்த பின் வெளியே போய் விட்டான். இது போல் 2-3 முறைக்கு மேல் ராஜீவ்வை கண்டவுடன் ரோஹித் ஒதுங்கி விடவே, ராஜீவ் ஒரு நாள் ரோஹித்திடம் சென்று ‘பாஸ், ஏதாவது படத்துக்கு போலாமா’ என்று கேட்டு அவனை நண்பனாக்கி தியேட்டருக்கு சென்றான். அதன் பின் தியேட்டர் போகும் போதெல்லாம் ரோஹித்தை கூட்டி செல்வது வாடிக்கை ஆகி விட்டது.

ஒவ்வொரு முறை யாருடனாவது தியேட்டருக்கு செல்லும் போதும், ராஜீவ் தவறாமல் ஸ்வாதியை வர சொல்லி கேட்பான். ஆனால் இன்று வரை பசங்களுடன் படத்திற்கு செல்ல கூடாது என்ற கொள்கையில் பிடிவாதமாக இருப்பதால் அவள் ஒவ்வொரு முறையும் மறுத்து விடுவாள். அவளை தியேட்டருக்கு கூட்டி சென்று அவளுடன் படம் பார்ப்பதற்காகவாவது அவளை மணக்க வேண்டும் என்று ராஜீவ் ஒரு செல்ல ஆசையை யாருக்கும் தெரியாமல் மனதினுள் வளர்த்து வந்தான்.

தியேட்டர் வாசலிலே ரோஹித்தும், அன்புவும் நின்று கொண்டிருந்தார்கள். வண்டியை பார்க் செய்து விட்டு டிக்கெட் கவுண்ட்டரில் நிற்கும் போது, அன்பு தான் ராஜீவ் கையில் இருக்கும் கட்டை முதலில் பார்த்தான். என்ன ஏது என்று ராஜீவ் சொல்லி கொண்டிருக்கும் போதே ரோஹித், ‘பாஸ் ரத்தம் நிக்காம வந்துட்டு இருக்குது, வாங்க ஹாஸ்ப்பிட்டல் போகலாம் என்று ராஜீவ்வை இழுத்து சென்று வண்டியில் உட்கார வைத்து விரைந்தான். இதற்குள் அன்பு ஸ்வாதிக்கும், நிர்மலாவிற்கும் சொல்லி விட்டிருக்க வேண்டும். அவர்களும் ராஜீவ் சென்ற 30 நிமிடத்திற்குள்ளாகவே ஹாஸ்ப்பிட்டலிற்கு வந்து சேர்ந்தனர்.

ரத்தம் உறைய வைப்பதற்காக ராஜீவ்விற்கு ஒரு ஊசி போட்டு அவனை 1 மணி நேரம் ஓய்வு எடுத்து செல்லுமாறு சொன்னார்கள்.

ஸ்வாதி அவனுக்கு என்ன ஆனது என்று அவன் சொல்ல ஒரு முறை கேட்டு விட்டு, அவன் அருகே நெருங்கி அப்படி என்ன கனவு அவன் கண்டான் என்று கேட்டாள். மற்றவர்கள் அனைவரும் ஹாஸ்பிட்டல் பில்லை செட்டில் செய்வதற்காக அலைந்து கொண்டிருப்பதை உறுதி படுத்தி கொண்டு, அவன் கனவை சொல்ல ஆரம்பித்தான்.

‘நானும் நீயும் யாருமில்லாத ஒரு ரோட்ல கார்ல போய்க்கிட்டு இருக்கோம், நான் வண்டி ஓட்ட நீ எனக்கு பக்கத்துல உட்காந்துட்டு இருக்க , உடனே நீ என்னை அண்ணா அண்ணானு ரெண்டு முறை கூப்பிடற, நான் ஷாக்காகி உன்னை திரும்பி பார்க்கறான், நீ என்னை பார்த்து சிரிச்சிட்டு இருக்க, அப்புறம் என்னை பின்னாடி யாரோ தட்டற மாதிரி இருக்கேன்னு திரும்பி பார்த்தா, நமக்கு 4 குழந்தைங்க பிறந்திருக்கு, நான் அப்பிடியே ஷாக்காகி வண்டிய பாலத்து மேல இருந்து கீழ தள்ளி கடல்ல விழுந்தடறேன், அப்பறம் எழுந்து பார்த்தா நான் கட்டில் மேல இருந்து கீழ விழுந்திருக்கேன், என்னை அண்ணானு கூப்பிட்டது  யார்னு திரும்பி பார்த்தா வீட்டு வேலைக்காரி’ என்று ராஜீவ்.சொல்லி முடித்தவுடன் ஸ்வாதி குலுங்கி குலுங்கி சிரித்தாள். சிரித்து விட்டு ’எனக்கும் இதே போல ஒரு கனவு வந்துச்சு, ஆனா நான் ஒண்ணும் உன்னை மாதிரி காரை போய் கடல்ல தள்ளல’ என்று ராஜீவ்வை பார்த்து மறுபடியும் சிரித்தாள்.

                                                                                                            (தொடரும்...)

No comments:

Post a Comment