Wednesday 3 April 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா – ஓர் ஜாலி காவியம்



இந்த படத்தை  நேற்று பார்த்தே ஆக வேண்டும் என்று அடித்து பிடித்து கொண்டு போய் பார்த்தேன்.  காரணம் ‘பசங்க’ படத்தின் இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரினா’ என்னும் மொக்கை படைப்பிற்கு, அடுத்த படைப்பு இது...  சந்தேகமே இல்லை, 10 நாட்கள் தமிழர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி விட்டு. 11-வது நாள் இந்த படத்தை சன் டி.வி யில் போட்டால் கூட பார்க்க  ஆள் இருக்காது. காலத்தால் மறக்கடிக்கப்படும். 

படத்தின் ஆரம்பத்தில் ஒரு  பாட்டு  வர வேண்டும், அதற்கு  சிச்சுவேஷன் மேக்கப் செய்கிறேன் என்று ஆக சில மொக்கைகளாக போட்டு தள்ளி கொண்டிருந்தார்கள்... நண்பர்கள் எல்லாம் சேர்ந்து குடிக்க நிப்பாட்ட முக்குகிறார்களாம். இதை இயக்குனரே திரையின் பின் சொல்லியிருந்திருக்கலாம். ஆனால் நம் பொறுமையின் அளவுகோலை வேவு பார்த்து கொண்டிருந்தனர். அப்போதே கிளம்பி விடலாம் என எழுந்து விட்டேன். அப்போது தான் பின்னாடி ஸீட்டில் இருப்பவர் சொன்னார், லேட்டா வர்றவங்க படத்தை புரிஞ்சுக்கணும்ங்கறதுக்காக இப்பிடி தான் கொஞ்ச நேரம் மொக்கையா போகும், கண்டுக்காதீங்க என்றார். தியேட்டருக்கு ஒரு ஆளை இது போல், தயாரிப்பு நிறுவனமே அனுப்பியிருக்க கூடும் என்று படத்தை மேற்கொண்டு பார்க்க ஆரம்பித்தேன்.

ரயில்வே ஸ்டேஷனிலேயே கதியாக கிடக்கும் நண்பர்கள், ஜெராக்ஸ் கடை காதல், கராத்தே காதலி, அரசியல்வாதிகளுக்கு சால்வை போடும் ஹீரோக்கள் என ஏதேதோ வெரைட்டி காட்டுகிறார்கள், ஆனாலும் கதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து சுட்டு கொண்டு வந்தது அப்பட்டமாக தெரிகிறது. ஊர் சுற்றி கொண்டும், அப்பாவை திட்டி கொண்டும், வேலையில்லாமல் காதலில் திரியும் ஹீரோக்கள் எப்படி காதலிலும் ஜெயித்து, வாழ்க்கையிலும் ஜெயித்து ‘செட்டில்’ ஆகிறார்கள் என்பது தான் கதை. இந்த கதையை அநேகம் பேர்கள் திருடி விட்டதால், தொல்பொருள் ஆய்வாளர்கள் யாரை குற்றம் சொல்வது என்று தெரியாமல் தவிப்பதாய் ஒரு கேள்வி.

ஆனால், சும்மா சொல்ல கூடாது, கதையிலும் திரைக்கதையிலும் தான் நொண்டி அடித்தார்களே தவிர சில காமெடிகளுக்கு வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்கள். ஆனால் ஒரு நல்ல காமெடிக்காக ஐந்து மொக்கை காமெடிகளை பல்லை கடித்து கொண்டு நாம் திரையரங்கில் பொறுமை காப்பது தான் வரலாற்று சோகம் !

எடிட்டிங் தான் ஆக பிரமாதம், கதை கொஞ்ச தூரம் போகிறது, அப்புறம் “நடந்தது என்னன்னா?” என்று யாரேனும் ஒருவர் ப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்து விடுகிறார். இப்படியே ஒரு 4-5 ப்ளாஷ்பேக் பார்த்ததாய் நியாபகம். நாம் எழுதும் போது, திடீரென்று அடைப்புகுறியிட்டு ஒரு விஷயத்தை சொல்லி படிப்பவர்களை கடுப்பேத்துவோம் இல்லையா... அந்த வேலையை சீரும் சிறப்புமாய் செய்தனர்.

யுவன் சங்கர் ராஜா புகழின் உச்சியில் இருப்பதாலோ என்னவோ, நிறைய வேலை இருப்பதால் அவருடைய அஸிஸ்டன்ட்டுகளை விட்டு “இவனுங்களை வெச்சு தொழில் கத்துக்கோங்க டா” என்று அஸிஸ்டன்ட்டுகளை இசையமைக்க சொல்லி, தன் பெயர் போட்டு கொள்கிறார் போலும்... தியேட்டரிலும் பாட்டு எப்போ டா வரும், எப்போ தம்மடிக்க போகலாம் என்று வெந்நீரில் கால் வைத்தாற் போல் காத்து கிடந்தனர். ஒரு சிலர், கதவு பக்கத்திலே தயாராய் நின்று கொண்டிருந்ததை கூட காண முடிந்தது.

கோடி கோடியாய் கொட்டி ஹீரோ ஹீரோயின் கால்ஷீட் வாங்குகின்றனர். ஆனால் கதை திரைக்கதை வசனத்துக்கு மட்டும் இயக்குனர்கள் எங்கேனும் சல்லீசாக ஆட்களை பிடித்து கொள்கிறனர். இல்லையென்றால் எதற்கு செலவு என்று தாங்களே மொத்த ஸ்க்ரிப்ட்டையும் எழுதி கொள்கிறனர்....இதெல்லாம் விளங்குவதற்கா?

படத்தை ஒரு கட்டத்தில் ஸீரியஸாக காட்ட வேண்டும் என்று அநியாயமாக ஒரு கதாபாத்திரத்தை போட்டு தள்ளுகின்றார்கள். அடங்கோ... பாண்டிராஜ், பாலாஜி சக்திவேல்கிட்ட வேலை பார்த்தாரோ என்று நாம் ஐயம் எழுப்பும் தருணத்தில், கதையில் ட்விஸ்ட்டு வைக்கிறேன் என்ற பேர்வழியில் சிவகார்த்திகேயனின் அப்பா இறந்ததற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். அதை கேட்டு மொத்த திரையரங்கும் ஒப்பாரி வைத்து, அழுது, கதறி கண்ணீர் சிந்தினர். இதையெல்லாம் எதிர்பார்த்தே, திரையரங்க குழுவினர் சோடா, கர்ச்சீப், தண்ணீர் பாட்டில் சகிதமாக திரையரங்குகளில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். அந்த இடத்தில் பாண்டிராஜ், பாலாஜி சக்திவேலையே ஓரம் கட்டிவிடுகிறார். வாழ்த்துக்கள் பாண்டிராஜ் !

இப்போதைய சூழ்நிலையில் அரசியல் களத்தில் எவ்வாறான நடைமுறை பிரச்சனைகள் இருக்கிறது என காமெடியாக தெரிந்து கொண்டு வரலாம், அதை தவிர படத்தில் சொல்வதற்கென வேறு எதுவும் இல்லை.

ஒரு கோடு வரைந்து கொள்ளுங்கள், இப்போது அந்த கோட்டை அளவில் சிறியதாக்க வேண்டுமானால், அதை விட ரெண்டு செ.மீ நீளமான கோட்டை அதன் அருகில் வரைந்து விட்டால் போதும்... முந்தைய கோடு சிறியதாகி விடும். இந்த அழகிலே தான் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் போட்டி போட்டு கொண்டு காவியம் படைக்கின்றனர்.

“சார்... ஒருத்தன் 5 நிமிஷம் லேட்டா வரலாம், 10 நிமிஷம் லேட்டா வரலாம்.... ரெண்டரை மணி நேரமா லேட்டா வருவான்... ஏன் சார் படத்துல மொக்கைங்க முடிவில்லாம போய்ட்டுருக்கு...” என்று இந்த கேள்வியை நான் கிளம்பும் போது தடுத்து நிறுத்தினாரே ஒருவர், அவரிடம் கேட்கலாம் என்று இருந்தேன், ஆனால், அவர் இடைவேளையின் போதே கிளம்பி போய் விட்டாராம்...

மனிதர்கள் எப்படியெல்லாம் தன்னலத்தோடு இருக்கிறார்கள் என்று  பார்த்து கொள்ளுங்கள்....

No comments:

Post a Comment