Saturday 11 August 2012

எலி


ஒரு நாள் அலுவலகம் கிளம்பும் போது நான் தங்கியிருக்கும் அறையை பூட்டி விட்டு 10 அடி நகர்ந்திருப்பேன், செல்போனை உள்ளேயே வைத்து பூட்டி வந்து விட்டதை உணர்ந்து, திரும்பி அறையை நோக்கி நடக்கலானேன். அறையை திறந்து பார்த்தால் ஒரு எலி குட்டி என்னுடைய நட்ட நடு கட்டிலில் சொகுசாக அமர்ந்திருந்தது. நான் உள்ளே வந்த நின்ற போது கூட அந்த எலி என்னை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. ஹூய் என்று ஒரு விரட்டு விரட்டியதும் தான் அது அங்கிருந்து விறுவிறுவென கட்டிலில் இருந்து கீழே இறங்கி, ஷெல்ப் மேலே வரை ஏறி, மேற்கூரைக்கு சென்று, அங்கிருந்து Fan-ற்க்கு போட பட்டிருந்த Beamல் ஏறி, Cement sheetல் இருக்கும் சந்தில் புகுந்து ஓடிற்று. நான் செல் போனை எடுத்து கொண்டு கிளம்பி வந்து விட்டேன்.

அடுத்த நாள் இரவு, கடையில் சாப்பிட்டு திரும்புகையில் 1 வாழைப்பழம் சாப்பிடுவதற்கும், 2 வாழைப்பழம் அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் என 3 வாழைப்பழமாக வாங்கி கொண்டேன். அறைக்கு வந்து மீதமிருந்த 2 வாழைப்பழத்தை Shelfன் மீது வைத்தேன். இதற்க்கிடையில் என் அறையில் ஒரு எலி குட்டி இருப்பதையே மறந்து போனேன். அடுத்த நாள் தூங்கி எழுந்து பார்த்தால் அந்த 2 பழங்களிலும் எலி கைவரிசையை காட்டி இருந்தது. பழத்தை முழுவதுமாக சாப்பிட்டு இருந்தாலும் பரவாயில்லை, இரண்டிலுமே அங்கங்கே கொறித்து விட்டு சென்றிருந்தது. இனி இந்த பழங்களை சாப்பிட முடியாது என்று குப்பை கூடையில் போட்டு விட்டேன். போட்ட பிறகு மனசு கேட்கவில்லை, சரி, அதுவும் சாப்பாட்டிற்கு என்று, அந்த பழங்களை குப்பை கூடையில் இருந்து எடுத்து அறையின் ஒரு மூலையில் வைத்து விட்டேன். அன்று மாலை வேலைக்கு  சென்று திரும்பி வந்து பார்க்கையில் இரு பழங்களிலுமெ முக்கால்வாசி அளவு காலி ஆகி இருந்தது. அடுத்த நாள் காலை எழுந்து பார்த்ததில் வாழைப்பழ தோல் கூட மிஞ்சாமல் மொத்தமாக காலி ஆகி இருந்தது.

பின்னொரு நாளில், அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் அப்துல் பேக்கினை, எங்கள் அலுவலகத்தில் எங்கோ ஒளிந்திருக்கும் எலி துவம்சம் பண்ணி இருந்தது. அதனால் அவன் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானான். புதிதாக வாங்கியிருந்த விலை உயர்ந்த பேக் என்பதால் விடாமல் புலம்பி தீர்த்தான். எனக்கும் கொஞ்சம் திக்கென்று இருந்தது, எனது அறையில் இருக்கும் எலியும் இது போல் ஒரு துவம்சத்தை கையாண்டால் என்ன செய்வது என்று கலக்கமுற்றேன். அதற்கு உணவு கிடைக்காததன் காரணமாகவே இப்படி கண்டதையும் கொறித்து வைக்கிறது, மாறாக அதற்கு நாமே கொஞ்சம் உணவளித்து விடலாம் என்று தீர்மானித்துக் கொண்டேன். அதை எந்த நேரத்தில் தீர்மானித்தேனோ, அதை அப்பவே மறந்து விட்டிருந்தேன். அன்று மாலையும் நினைவு வரவில்லை. அடுத்த நாள் காலையும் நினைவு வரவில்லை. அடுத்த நாள் அப்துல் புது பேக்கோடு வந்து போது தான் நினைவு வந்தது. சரி இன்றிலிருந்து ஆரம்பித்து விடலாம் என்று அறைக்குள் நுழையும் போதே நான் கண்ட காட்சி என்னை முகம் சுளிக்க வைத்தது.

நான் கதவை திறந்தவுடனே எலி குட்டி இந்த முறை மேஜை மேல் இருந்து முன்பு ஓடியது போல் ஓடி கூரைக்கு நடுவில் புகுந்து ஓடிற்று. மேஜை மீது பார்வையை சுழற்றி பார்த்தால் water bottle, shoe polish, shaving set என எல்லாமும் கலைந்திருந்தும், விழுந்திருந்தும் கிடந்தது. எதேச்சையாய் தான் சோப்பை பார்த்தேன். இன்னும் ஐந்து, ஆறு தினங்களில் தீர்ந்து விடக்கூடிய Lux Soap அது, சன்னமாக இருந்தது. அதை உணவு என்று நினைத்தோ, என்னவென்று நினைத்தோ, 3 இடத்தில் கொறித்து இருந்தது. இதை கடித்து விட்டதால் ஒன்று பெரிய நஷ்டமல்ல, இதை இப்படியே விட்டு விட்டால் நாளை என்ன விபரீதம் வருமோ என்று என் மனது யூகத்திற்கு கை கால முளைக்கவிட்டது. இதை சமாளிக்க சோற்று பருக்கைகளையோ, பிஸ்க்கட் துண்டினையோ கொஞ்சம் கொஞ்சமாக ரூமை விட்டு தள்ளி வைத்து கொண்டே வந்தால், ஒரு நாள் எலி என் ரூமை மறந்து விட்டு வேறு இடம் குடிபெயரக்கூடும் என்று ப்ரவீனிடம் ஆலோசித்து பார்த்தேன். அவன் அதெல்லாம் சரிப்பட்டு வராது, பேசாமல் ஒரு Gum pad ஒன்றை வாங்கி எலி அடிக்கடி நடக்கும் இடத்தில் வைக்க சொன்னான். அதில் இருக்கும் வாசனையை முகர்ந்து எலி அதன் மேல் நடக்கும் போது, எலியின் கால்கள் அதோடு ஒட்டி கொள்ளும், அதன் பின் அதை அப்படியே அடித்து கொள்ள வேண்டியது தான், இல்லையேல், தண்ணீரில் முக்கி கொள்ள வேண்டியது தான் என்று யோசனை சொன்னான். நான் பதறி போய், அது துடிக்குமே என்ன செய்ய என்று கேட்டேன். அது துடித்தால் துடித்து கொண்டு போகிறது, உனக்கென்ன என்றான். பொதுவாகவே எலி, பூச்சி, பூரான், பாம்பு இது போன்ற வஸ்துக்களுக்கு நான் பெரிதும் பயப்படுபவன். புலி, சிங்கம் என்றால் அது வேறு மாதிரியான பயம். ஆனால் இது தரும் அருவருப்பு கொஞ்சமும் சகித்து கொள்ள முடியாதது. அதனால் இந்த Gum pad சமாச்சாரமெல்லாம் வேண்டாம் என்று முடிவிற்கு வந்து விட்டேன்.

பேசாமல் எலி மருந்து ஒன்றை வாங்கி, உணவில் கலந்து வைத்து கொடுத்து அதை கொல்வது தான் வழி என்று கடைக்கு போய் எலி மருந்து கேட்டேன். அவன் Mortein Cake தான் இருக்கிறது, இதை முயற்சி செய்து பாருங்கள், எலி வீட்டினுள்ளே சாகாமல் வெளியே போய் சாகும் என்று விளம்பரத்தில் வருவது போலவே சொன்னான். சரி, இது போல் ஒன்று தான் நமக்கேத்தது என்று வாங்கி வந்தேன். ஒரு பேப்பர் வெய்ட்டை விட சற்று பெரியதாக இருந்தது.

என் அறையில் இருக்கும் எலியை தவிர என் அலுவலகத்திலும் ஒரு எலி இருக்கிறதே, அதுவும் என்றாவது ஒரு நாள் என் Bagற்கு வேட்டு வைக்கும் என்று, வாங்கி வந்த Cakeனை இரண்டாக வெட்டி, ஒரு துண்டினை ஷெல்ப் மேல் பத்திரமாக காகிதம் சுற்றி வைத்தேன், இன்னொரு துண்டினை எலி அடிக்கடி நடக்கும் இடமான மேஜைக்கு கீழே ஒரு பேப்பர் வைத்து அதன் மேல் துண்டினை வைத்தேன். அது பெயருக்கு தான் Cake என்று இருந்ததே தவிர அது Biscuit மாதிரி இருந்தது. வைத்துவிட்டு, அடுத்த நாள் தூங்கி எழுந்து பார்த்தால் பேப்பரையும் காணோம் அதன் மேல் வைத்திருந்த துண்டினையும் காணோம். அது கூட பரவாயில்லை ஷெல்ப்பின் மேல் என் அலுவலக எலிக்கென்று வைத்திருந்த மற்றொரு துண்டினையும் காணோம். எப்படியோ அதையும் மோப்பம் பிடித்து அதையும் முடித்து விட்டிருக்கிறது. அப்பாடா, எப்படியோ எலி சாப்பிட்டு விட்டது இனி இறந்து விடும் என்று நிம்மதியாக அலுவலம் கிளம்பினேன். போகும் போது அது வெளியே சென்று சாவதற்கு வசதியாக ஜன்னல்கள் எல்லாம் திறந்து விட்டு சென்றேன். அந்த நாள் இரவு எலி இருக்கும் தடயம் ஒன்று பெரிதாய் இருந்திட வில்லை, சோப்பு கட்டியினை பார்த்தேன், கொறிக்க படாமல் இருந்தது, நாளை வேறு ஒரு சோப்பு வாங்கி தான் ஆக வேண்டும், ரொம்பவும் சன்னமாகி விட்டது. அந்த நாள் கொஞ்சம் நிம்மதியாகவே தூங்கி எழுந்து பார்த்தால் அந்த சோப்பை மொத்தமாகவே காணோம். சோப்பு போனது பற்றி ஒன்றும் பிரச்சனையில்லை, ஒரு முழு கேக்கையும் சாப்பிட்டு விட்டும் கூட அது சாகாமல் இருப்பது தான் என்னை திகைக்க வைத்து விட்டது. இதை பற்றி நண்பர்களிடம் விசாரித்த போது பக்கத்தில் நீர் நிலைகளோ, குட்டையோ, சேற்று தண்ணீரோ இருந்தால் எலி சாகாது என்று சொன்னார்கள்.

அப்போது பார்த்து ஆகஸ்ட் மாதம் வேறு, சென்னையில் எப்போது மழை பொழியும், எப்போது வெயில் அடிக்கும் என்றே கணிக்க முடியாத மாதம் இது. மழை பொழிந்தால், எப்படியும் ஒரு பொழுதிற்கு நான் தங்கியிருக்கும் இருக்கும் இடத்தை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கவே செய்யும். இனி Gum pad வாங்குவது தான் உத்தேசம் என்று முடிவிற்கு வந்தேன். சென்னையில் யாருக்கும் அது பற்றி தெரிந்திருக்கவில்லை, நான் கடை கடையாய் ஏறி பார்த்தும் அது எனக்கு கிடைக்கவில்லை. சில கடைகளில் அது என்னவென்று நான் விலாவரியாக விளக்க வேண்டியதாய் போயிற்று. சலிப்புற்றவனாய் இந்த Cakeனையே மறு முறை முயற்சி செய்து விடலாம் என்று முடிவிற்கு வந்தேன், வெறும் 11ரூபாய் தானே என்பதினால் கூட நான் அந்த முடிவினை எடுத்திருக்கலாம்.

இந்த முறை வைக்கும் போது முழு கேக்கினையும் அப்படியே வைத்தேன். தண்ணீர் தேடி வெளியே போய் விட கூடாது என்று  கதவு ஜன்னல்களை எல்லாம் மூடி வைத்தேன். அடுத்த நாள் காலை பார்த்த போது, முன்பு போலவே கேக்கையும் காணோம், பேப்பரையும் காணோம். இந்த முறை எலியை எப்படியும் விடக்கூடாது என்று முழு வெறியில் இருந்தேன். எதற்கோ Cake cover-ல் கண்களை சுழல விட்ட போது, அந்த கேக்கினை எலி சாப்பிடுவதால் ரத்த நாளங்கள் வெடித்து சாக கூடும் எனவும், மெதுவாய் தான் வேலை செய்யும் எனவும், 90% எலி வெளியே போய் சாகும் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. ரத்த நாளங்கள் எல்லாம் வெடித்து என்ற வார்த்தையை படிக்கும் போது ஒரு சின்ன பூரிப்பு ஏற்படவே, அதையே இன்னொரு முறை படித்து கொண்டேன்.

முந்தைய சோப் தீர்ந்து விட்ட படியால் கடைக்கு சென்று ஒரு புது சோப்பினை வாங்கி வந்தேன். இந்த முறை சற்று விலை கூடுதலான Park Avenue Soap வாங்கி வந்தேன். அதன் வாசனையே கும்மென்று இருந்தது. இந்த சோப்பும் அடுத்த நாள் எலியின் பற்களால் கொறிக்க படவே, கடும் மன உளைச்சலிற்கு ஆளானேன். சோப்பினை மூடி போட்டு மூடி வைக்க முடியாது, அடுத்த நாள் சோப் கொழகொழவென்று ஆகிவிடும். சோப்பினை குளியலறையிலும் வைக்க முடியாது, ஏனெனில் அது ஒரு Common bathroom. முடிவாய், குளித்து முடித்து வந்தவுடன் சோப்பை கவரில் போட்டு ஆணியில் மாட்ட ஆரம்பித்தேன். இந்த திட்டம் ஓரளவிற்கு கை கொடுத்தது. சோப் பாதுகாக்கப்பட்டது.

இப்போது பிரச்சனை என்னவென்றால், இவ்வளவு நாளும் எலி இருக்கிறதா இல்லையா என்று சோப் கொறிக்கப்படுவதை வைத்து அறிந்து கொள்ளலாம், இனி அது கஷ்டம், நாமே கண்ணால் பார்த்தால் தான் உண்டு என்று நினைத்து கொண்டே, Shelf-ல் மடித்து வைத்திருந்த என் வெள்ளை சட்டையை வெளியே கிளம்புவதற்காக எடுத்தேன். எடுத்தால், துணிகளுக்கு இடையே ஒண்டி கொண்டிருந்தது எலி. இம்முறையும், அந்த எலி என்னை பார்த்து ஓடவில்லை. இந்த முறை ஹூய் என்று ஒரு விரட்டு விரட்டியும் ஓடவில்லை. கையில் வைத்திருக்கும் சட்டையை ஏதாவது கொறித்து வைத்திருக்கிறதா என்று அவசரமாக பார்த்தேன், நல்ல வேளையாக அப்படி ஒன்றும் இல்லை, அது நடந்து போன குட்டி குட்டி கால்தடங்கள் மட்டுமே இருந்தது. அதை தட்டி விட்டவுடன் போயிற்று. அந்த எலியை இந்தமுறை தான் ரொம்ப நேரம் சேர்ந்தாப்போல் பார்க்க முடிந்தது, எலி மந்தமாக காணப்பட்டது, இல்லாமல் போனால், இந்நேரம் அது ஓடியிருக்க கூடும். அப்போது ரூமில் ஒரு காலி Boost பாட்டில் இருந்தது, அதற்குள் எலியை அடைத்து தூக்கி போட்டு விடலாம் என நினைத்து, பாட்டிலை எடுத்து பக்கம் நெருங்கினேன். என் திட்டம் தெரிந்தால் அது என்ன மாதிரியான் ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை யூகிக்க முடியாத வண்ணம் இருந்தது. அதனால் பக்கத்து ரூமில் இருந்த பையனை அழைத்து வந்து உதவி கேட்டேன். அவன் எலி கடித்து விட்டால் என்ன செய்வது என்று ஒதுங்கி கொண்டான். இவனை கூப்பிட்ட பாவத்திற்கு எலி கடிக்கும் என்று வேறு ஒரு உப தகவலை சொல்லி பீதியை கிளப்பி விட்டு சென்று விட்டான். பிறகு, நானே என் மனதில் துணிவை வரவழைத்து கொண்டு, பாட்டிலை எலியின் முகத்திற்கு நேராக கொண்டு வந்து, பாட்டிலின் மூடியை எலிக்கு பின் பக்கமாக மெல்ல மெல்ல எடுத்து வந்தேன். அப்படியே, மூடியோடு தள்ளி அடித்து விடலாம் என்று செயல் பட்டு கொண்டிருந்தேன், அது என் திட்டத்தை புரிந்து கொண்டது போலும், அது கீழே இறங்கி விடுவிடுவென ஓடி விட்டது. ஆனால் வழக்கத்தை விட வேகம் கம்மியாக தான் ஓடியது.

நான் பார்த்த மற்ற எலிகளை விடவும் இது அழகானதாகவே தோன்றிற்று. சிறுசிறு குறும்புகளை செய்தாலும் பொறுத்து கொள்ளலாம், தினம் கொஞ்சம் சோறு வைத்து நாமே பார்த்து கொள்ளலாம் என்று மனதில் ஒரு சிறு யோசனை வந்தது. அதன்பின் அவசர வேலை காரணமாக வெளியே கிளம்பி விட்டேன்.

அறைக்கு திரும்பி, கதவை திறந்ததுமே கெட்ட வாடை அடித்தது. எலி செத்து விட்டதால் தான் இப்படி நாறுகிறது என்று எளிதில் யூகித்து விட்டேன். இவ்வளவு நாளாய் இல்லாமல் இன்று தான் அதற்காக கரிசனப்பட்டேன், இன்றா அது சாக வேண்டும். சரி எங்கு செத்து விழுந்திருக்கிறது என்று ஒவ்வொரு இடமாக தேடினேன். மேஜை அடியிலும், கட்டில் அடியிலும் கீழே குனிந்து பார்த்தேன். கிடைக்கவில்லை. ஷெல்ப்பை நகர்த்தி பார்த்தேன், கிடைக்கவில்லை. Computer table அடியிலும் பார்த்தேன், கிடைக்கவில்லை. எங்கேயும் கிடைக்கவில்லை. அதற்கு மேல் தேட எனக்கு பொறுமையும் இல்லை, தெம்பும் இல்லை, ரொம்பவும் அலுப்பாக இருந்தது, அன்று ஒரு நாள் பக்கத்து பையன் அறையில் போய் படுத்து கொண்டேன். அடுத்த நாள் எழுந்ததே தாமதமாக எழுந்தேன். எழுந்து அலுவலகம் கிளம்புவதற்கே சரியாக இருந்தது. அன்றும் முந்தைய இரவு அடித்தது போலவே கெட்ட வாடை அடித்தது. சம்பிரதாயத்திற்காக ஒரு தேடு தேடினேன், அகப்படவில்லை. வந்து தேடி கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அலுவலகம் முடித்து நேரே அறைக்கு வராமல் தி.நகர் சென்று ஒரு ஷாப்பிங் பண்ணி வந்ததில் அன்றும் உடல் சோர்வு, சம்பிரதாய் தேடல், ஒத்திப் போடல். ஆனால் காலையை விட, இரவு ரொம்பவும் வாடை அடித்தது போல் இருந்தது. இதே போல் நாளையும் ஒத்தி போட முடியாது, ஏனெனில் நாளை அலுவலகம் போய் வந்து சொந்த ஊரிற்கு கிளம்ப வேண்டும். போனால் 2 நாட்கள் கழித்து தான் வர முடியும், அத்தனை நாள் அறையை நாற்றத்தில் விட முடியாது.

அதனால் அடுத்த நாள் அலுவலகம் முடித்து வந்து எலியை தேடுவதற்கு ஆயுத்தமானேன். அறைக்குள்ளே நுழைய முடியாத அளவிற்கு கெட்ட நாற்றம். அறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் வெளியே எடுத்து வந்து ஆராய்ந்து வெளியே ஓரமாக வைத்தேன். அறையில் பல்வேறு இடங்களில் எலி புழுக்கைகளாக இருந்தது. அறையையே மொத்தமாக காலி செய்து வெளியே வைத்தும் கூட எலி கிடைக்கவில்லை. இவ்வளவு நேரம் தேடியும் கிடைக்காததால் மனம் சலிப்பும், வெறுப்பும் ஒரு சேர அடைந்தது. சரி, ஊரிற்கு போகிற வழியை பார்ப்போம் என்று தேவையான 2-3 துணிகளை எடுத்து வைத்து கொண்டு, Mobile charger, படிக்க தேவையான 2 புத்தகங்களையும் எடுத்து ஒரு Travel bag-ல் போட்டு கொண்டு Pack செய்தேன். அறையை பெறுக்கி, தண்ணீர் போட்டு துடைத்து விட்டு, எல்லா பொருட்களையும் பழைய படி இருந்த இடத்தில் வைத்து விட்டு கிளம்பினேன். 2 நாள் கழித்து இதே போல் இன்னொரு முறை எலியை தேட வேண்டும் என்று நினைத்த போதே ரொம்பவும் சோர்வாக இருந்தது.

வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு போய் நிற்பதற்கும், ஒரு கோயம்பேடு பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. ஏறினால் பஸ்ஸே காலியாக தான் இருந்தது. ஒரு ஸீட்டில் உட்கார்ந்து கொண்டேன். சில்லரை இல்லாத்தால் 15 ரூபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாயை நீட்ட வேண்டியதாய் போயிற்று, கண்டெக்டர் முறைத்தவாறு 5 ரூபாயாவது இருக்கானு பாருங்க என்றார், அவர் சொல்கிறாரே, என்று இல்லாத 5 ரூபாயை பொய்யாக தேடி, இல்லை என்றேன். மீதி 85 ரூபாயை கொடுத்து விட்டு, அடுத்த ஸீட் நகர்ந்தார். அவரும் 100 ரூபாயை நீட்ட அவர் புலம்ப ஆரம்பித்து விட்டார். CMBT போக எப்படியும் 1 மணி நேரம் ஆகும் என்பதால் ஹெட் போனை எடுத்து கொண்டிருந்தேன். அப்போது என்னருகில் இருப்பவர்கள் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் எங்கேயோ கெட்ட நாற்றம்  அடிக்கிறது என்று பேசி கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் அதுவே பெரிய சலசலப்பு ஆகி விட்டது. ஆனால் எனக்கு இந்த நாற்றம் பற்றி ஒரு உணர்வும் வராமல் இருந்தது. இவ்வளவு நேரமும் செத்த எலியின் நாற்றத்தில் இருந்ததால் என் வாசனை உணர்வே மறுத்து போய்  விட்டதா என்று எனக்கே சந்தேகம் வந்து விட்டது. அதே சமயம், இந்த நாற்றம் ஏன் நமது செத்த எலியின் நாற்றமாய் இருக்க கூடாது என்ற சந்தேகம் வர, குதூகலமாய் Travel Bag-ல் இருக்கும் ஒவ்வொரு ஜிப்பையும் சோதனையிட்டேன். பையின் முன்னாடி சின்னதாய் திறந்து இருந்த குட்டி ஜிப்பில் எலி செத்து கிடந்ததை பஸ்ஸின் மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. இதற்குள் எப்படி தான் போனதோ தெரியவில்லை. எலி Bag-ன்னுள்ளே கிடந்ததை கண்ட பின்பு சந்தோஷம் கொந்தளித்தது. ஆனால் அதை வெளிகாட்டி கொள்ளாமல், அடுத்து வந்த பஸ் ஸ்டாப்பிலே இறங்கி கொண்டேன். நான் இறங்கியதை கண்டெக்டர் விநோதமாய் பார்த்ததை கவனிக்க முடிந்தது, ஆனால் அதை கண்டு கொள்ளாமல் நான் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு காலி இடம் தேடி நடந்து கொண்டிருந்தேன். ஒரு மூடிய டீ கடையின் பெஞ்சின் மேல் Bag-ஐ வைத்து, ஒரு பேப்பரின் உதவி கொண்டு செத்த எலியை தூக்கி குப்பை தொட்டியில் போட்டேன். ஒரு தெரு நாய், நான் ஏதோ உணவை தான் தூக்கி போடுகிறனோ என்று ஆவலாய் வந்து முகர்ந்து பார்த்து விட்டு திரும்ப அதன் இடத்திலே சென்று படுத்த கொண்டது.

நான் திரும்பவும் இறங்கிய பேருந்து நிலையத்திற்கே வந்து அடுத்த CMBT பஸ்ஸிற்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.




3 comments:

  1. andha eli ku enna oru nandri visvasam anna neenga kudutha pazhathukaga unga bag ah onnum pannama vitruchae......

    ReplyDelete
    Replies
    1. I enjoyed the humour sense of the story.. But, sreemol.., I like ur different view of this story!!!!:):):)

      Delete
  2. எனக்கு நண்பர் பிரவீன் வின் எழுதிய மயிறு பற்றிய பதிவு எலியை படிக்கையில் நினைவு வந்தது. ஏன் என்று தெரியவில்லை. அலுக்காமல் கதை நகர்ந்தது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதே நேரத்தில் தெரிந்த விஷயத்தை பற்றி படிப்பதால் (எலி பிடிக்கிறதுல நாங்கெல்லாம் பி.ஹெச்.டி.) சுவாரஸ்யமற்ற தன்மையே அதில் இருந்தது. ஆனால் சின்ன விஷயத்தை நன்கு டெவலப் செய்து எழுதும் திறமை தங்களுக்கு நிறைய இருப்பதை வாழ்த்துக்கள் சொல்லி வரவேற்கிறேன்..

    ReplyDelete