Sunday 2 September 2012

என் முக்கியமான பின்னூட்டம்

http://prawinvenkatesh.blogspot.in/2012/09/blog-post.html

மேற்கண்ட வலைப்பதிவில் உள்ள பதிவிற்கு என் பின்னூட்டம் :


இந்த “நான் ஒரு பைத்தியக்காரன்” என்ற வலைப்பதிவை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். இதை உன்னுடைய Statement ஆகவும் பார்க்க முடிகிறது, அதே சமயம் இது சிறுகதைக்கு உண்டான ஒரு பிரதான வடிவத்தில் பொருந்துவதால் ஒரு சிறுகதையாகவும் பார்க்க முடிகிறது.

எங்கள் வீட்டில், எனது பெரியப்பா குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் 9 பேர். நான், அப்பா, அம்மா, என் தம்பி, பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அண்ணா, பாட்டி. எனது குடும்பமும் பெரியப்பா குடும்பமும் எதிரெதிர் வீட்டில் தான் இருக்கிறோம்.

நான் +2 போகும் வரையே, வீட்டில் உள்ள சில்லரை வேலைகள் எல்லாம் என் மேல் தான் வந்து விழும். கடைக்கு சென்று வெங்காயம் வாங்கி வருவது, தண்ணீர் பிடிப்பது, ஆயுத பூஜைக்கு மாவிலை பறித்து வருவது என்பன போன்ற வேலைகள் தான், ஒன்று அத்தனை கடினமான வேலைகள் என்று எல்லாம் சொல்லி விட முடியாது, இருந்தாலும் எல்லாமும் என் மேல் தான் வந்து விழும், வேறு யாரிடமும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அண்ணன் வீட்டிற்கே பெரிய பையன் அவனுக்கு டிவி. பார்ப்பது, தூங்குவது போன்ற இன்ன பிற வேலைகள் இருக்கும் அதனால் அவனை அனுப்ப முடியாது, அக்கா வீட்டிற்கு ஒரே பெண் குழந்தை, அவளை அனுப்பவதும் இயலாத ஒன்று, அப்புறம் என் தம்பி, அவன் தான் வீட்டிற்கே செல்ல கடை குட்டி, அவனையும் அனுப்ப முடியாது, கடைசியாக யார் மிஞ்சி இருக்கிறார்கள் என்று பார்த்தால் நான் தான் என்னை தான் அனுப்புவார்கள். எனக்கு மிகவும் பிரச்சனையாய் இருந்தது எது என்றால் என் அம்மா, அப்பா, பெரியப்பா, பெரியம்மா, பாட்டி எல்லோரும் மற்ற மூன்று பேரையும் ஒரு பேச்சுக்கு கூட “கடைக்கு போறியா” என்று கேட்காமல் நேரடியாக என்னிடம் தான் வந்து சொல்வார்கள்.

யோசித்து பாருங்கள், ஒரு ஞாயிற்று கிழமை காலையில் நான், எனது தம்பி, அக்கா, அண்ணன் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சன் டிவி. Top 10 movies பார்த்து கொண்டு இருக்கும் போது, என்னிடம் மட்டும் வந்து “கடைக்கு போய் 4 முட்டை வாங்கிட்டு வா” என்று சொன்னால் எவ்வளவு எரிச்சல் வரும். நியாயமாக என்னிடம் அவர்கள் கேட்பது என்ன…. உதவி, ஆனால் அதை ஒரு உதவி கேட்பதாய் என்னை அணுகாமல், செய்வது என்னுடைய கடமை என்ற ரீதியில், ஒரு அதிகாரமாக என்னை அந்த வயதில் அழுத்தியதே எனக்கு பிரச்சனையாய் இருந்தது.
    
இப்போது பரவாயில்லை, என்னுடைய தம்பி சற்று வளர்ந்தவனாகி விட்டதால், அவனாகவே என் எடுபிடி வேலைகளில் பங்கு எடுத்து கொள்கிறான். வேலை கிடைத்து சென்னை வந்து விட்டதால் அந்த எடுபிடி வேலைகளில் இருந்து தப்பித்து கொண்டோம். நான் மட்டுமல்லாது என் அண்ணன், அக்கா, தம்பி எல்லோரும் அவரவர் பணி/படிப்பு நிமித்த காரணமாக வீட்டில் இல்லாமல் வெளியூரில் தங்கி இருக்கிறோம். அதனால் என் வீட்டு மக்கள், 4th standard படிக்கும் யோகா-வை  (என்னுடைய இன்னொரு அக்காவின் மகள், அவர்களும் எங்கள் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறார்கள்)  பிடித்து கொண்டார்கள். இந்த விஷயமே விடுமுறைக்கு வீட்டிற்கு போயிருந்த போது தான் தெரிந்தது, விளையாடி கொண்டிருந்த அவளை கூப்பிட்டு பால் வாங்கி வர அனுப்பினர், பார்த்த மாத்திரத்தில் எங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் டோஸ் விட்டு, இனி யோகாவிற்கு யாரும் வேலை வைக்க கூடாது என்று கட்டளையிட்டோம். ஆனால் அடுத்த முறை வீட்டிற்கு செல்லும் போதும் அவளை கூப்பிட்டு வேலை வைத்து கொண்டு தான் இருந்தனர். (கவனிக்க- என் அக்கா கல்யாணம் ஆகி அடுத்த வீட்டிற்கு செல்லும் வரை இது போல் பால் வாங்கி வர அனுப்ப படவில்லை)

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் தெரியுமா ப்ரவீன். உன்னை எப்படி பைத்தியக்காரனாய் பாவித்து உன்னை எடுபிடி வேலைகளுக்கு உபயோக படுத்தி கொண்டிருந்தார்களோ, அதே போல் தான் என்னையும், அடுத்த தலைமுறையான யோகாவையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் என் விஷயமோ, யோகா விஷயமோ வேறு, நாங்கள் உபயோக படுத்த பட்டிருந்தால், நாங்கள் எங்கள் குடும்பத்தால் உபயோகபடுத்த பட்டிருக்கிறோம். என்ன, எங்களை அதிகாரத்திற்கு உட்படுத்தாமல் உபயோக படுத்தியிருந்தால் சந்தோஷமடைந்திருப்போம். ஆனால் உன் விஷயம் வேறு, ஒரு பகுதி மக்களே உன்னை உபயோக படுத்தியிருக்கிறார்கள்.

உனக்கு எந்தெந்த மாதிரியான வேலைகள் வழங்கபட்டது என்பதனை சொல்லப்பட்டுருந்ததை பார்க்க முடிந்தது. அதில் சிலவற்றது என்னை மிகவும் உறைய வைத்தது. ஒரு தாயையும் கைக்குழந்தையையும் மருத்துவமனைக்கு கூட்டி சென்று வரும் வேலை, பள்ளி குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டி வரும் வேலை, கணவனுக்கு சாப்பாடு கொடுத்து விடுவது போன்ற வேலை. இது போன்ற வேலைகளை எல்லாம் என் வீட்டு மக்களே எங்களுக்கு சொன்னதில்லை. ஆனால், உன் வாழ்வில், எப்படி அடுத்த வீட்டு ஆட்கள் எல்லாம் உன்னை அந்த வேலைகளை எல்லாம் செய்ய வைத்துள்ளனர் என்பதை நினைக்கும் போதே தலை முதல் கால் வரை பற்றி கொண்டு வருகிறது.

கை குழந்தையையும், அதன் தாயையும் ஒரு ஆட்டோ வைத்து மருத்துவமனை கூட்டி செல்லாத அளவிற்கு அவளது கணவன் என்ன மயிரை பிடுங்கி கொண்டிருக்கிறான், அந்த ஒன்றுக்கும் உதவாத சொம்பை வேலைக்கு போனதாகவே இருக்கட்டும், அவனது அம்மாவும் அப்பாவும் என்ன எழவு முக்கியமான காரியம் செய்து கொண்டிருந்தார்கள், என்று உன்னை அனுப்பினார்களாம். வெட்டி போட வேண்டும் போல் ஆத்திரம் வருகிறது. அவனவன் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் குமுறி கொண்டிருக்கிறான், இவர்களுக்கு குழந்தை பிறந்தால் அத்தனை உதாசீனம், அத்தனை அலட்சியம். குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட கூட்டி வர முடியாத படி, அப்படி என்ன மதிய தூக்கமும், மெகா சீரியலும் கேட்கிறது நம் நாட்டு பெண்களுக்கு. இதெல்லாம் கடமை, கடமைக்கும் மேலான உன்னத உரிமை. இதை கூட செய்ய முடியாமல், அடுத்த ஆளை தேடுபவர்களை எதை கொண்டு அடிக்க? இவர்களெல்லாம்,  முதலிரவு அன்று மாப்பிள்ளை களைப்பாயிருப்பார் என்று அடுத்த ஆளை அனுப்புவார்களோ என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

எனக்கு ஆத்திரம் மேல் ஆத்திரமாய் வர வைப்பது எது தெரியுமா, ஒரு சிறுவனின் ஏழ்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிச்சைகாரனுக்கு விட்டெறிவது போல் சில்லறைகளை விட்டெறிந்து உன்னை வேலை வாங்கியிருக்கின்றனர். அவர்கள் விட்டெறியும் சில்லறைகளுக்கு ஆசைப்பட்டு நீ படிப்பை விட்டிருந்தால், அவர்கள் பொறுப்பேற்று கொள்வார்களா? Assholes அவர்களையெல்லாம் வரிசையில் நிற்க வைத்து முகத்தில் காறி உமிழ்ந்து, ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் கன்னம் பழுக்கும் வரை செருப்பால் அடிக்க வேண்டும். Bastards.

மனிதர்கள் இயல்பிலேயே அடுத்தவர்களை வீழ்த்த எந்த கணமும் தயாராகவே இருக்கின்றனர். சட்டம், நியதி, தூக்கு தண்டனை, சிறை, அடுக்குமுறை ஆகியவை இவர்களுக்கு தடையாய் இருப்பதாலே மனிதர்கள் கட்டுண்டு இருக்கின்றனர். இல்லையெனில் நாய்களின் எண்ணிக்கை இந்த உலகத்தில் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு தான் மனிதனின் எண்ணிக்கையும் இருந்திருக்கும். மனிதன், அவனின் தேவைகளுக்காகவே அடுத்தவனிடம் சமரசம் பாராட்டி கொண்டிருக்கிறான். உன் எதிரி, உன் எதிரி என்று முருகானந்தத்தை பற்றி நீ எழுதியிருந்ததை படித்த போது இதுவே எனக்கு ஞாபகம் வந்தது. அவனை போன்ற Culpritகளை எல்லாம் அட்டை பூச்சிகளோடு எளிதில் ஒப்பிடலாம், அவர்களை சுற்றியுள்ளவர்களை எங்கு சுரண்டலாம் என்பதில் மட்டும் தான் அவர்கள் புத்தி யோசிக்கும். இது ஒரு புறம் இருக்க அவன் யார், அவன் அப்பா யார் என்று பார்த்தால் பெரும் வசதி படைத்தவனாக இருப்பான்…. த்தூ.

கல்லூரி படிக்கும் போது, பகுதி நேரமாக நீ வேலை பார்த்தது எனக்கு தெரியும். இதை வினோத் தான் என்னிடம் மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டான். மிகவும் அதிர்ச்சியாகி விட்டேன். உன் வீட்டில் அவ்வளவு கஷ்டம் என்பதால் அல்ல, இவ்வளவு கஷ்டம் இருந்தும் நெருங்கிய நண்பனாக என்னிடம் கூட நீ பகிர்ந்து அனுதாபத்தை தேடாததே, என் அதிர்ச்சிக்கு காரணம். உண்மையில் இது போன்று ஒரு மன துணிவு உனக்கிருந்ததை நினைத்து நான் பெருமை தான் பட்டேன்.

நீ சென்னைக்கு வந்து என்னிடம் சில நாள் இருந்து சென்று, அதை பற்றி நீ எப்படி உணர்ந்தாய் என்பதை கடிதமாக எழுதுகிறாய் என்று சொன்ன போது ”ஏன்டா ரொம்ப எமொஷனல் ஆகற, அதெல்லாம் வேண்டாம்” என்று மறுதலித்ததை பற்றி உன் பதிவை படித்த பிறகு வருத்தம் கொள்கிறேன். நான் எல்லாம் ஒரு ஊருக்கு செல்வதே சுற்றி பார்க்கவும், ஜாலியாக ஆட்டம் போட்டு விட்டு வருவதற்காகவும் தான். இன்னமும் சொல்ல போனால் பணம் இருக்கிறதே என்ற கொழுப்பில் தான் சுற்றி பார்க்க போவேன். ஆனால் நீ சென்னை வந்து போனதை பற்றிய  காரணத்தை தெரிவித்த இடத்தில், உன் கஷ்டங்களில் இருந்து தப்பி வருவதற்க்காக சென்னை வந்து போவதாய் சொல்லி இருந்தாய். நான் என்னை போல் எல்லோரையும், முக்கியமாக உன்னையும் நினைத்ததே பிழையாய் போயிற்று. நீ நிச்சயம் அந்த கடிதத்தை எழுதி அனுப்பு, நான் அதற்காக காத்திருக்கிறேன்.

உனக்கு நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களை பற்றி மிகவும் புலம்பி எழுதியிருந்தாய். கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய, உன்னை சிறப்பாக எழுத வைக்க வேண்டுமே. நீயே பார், இவ்வளவு சிறப்பான பதிவினை வெளியிட்டு இருக்கிறாய். இந்த பதிவு அத்தனை அழகாக சமகால மனிதர்களின் குறுக்கு வெட்டு தோற்றங்களை படம் பிடித்து காட்டியிருக்கிறது. அந்த வகையில் இதை ஒரு வெற்றி அடைந்த ஒரு பதிவு என்றே சொல்வேன்.

இந்த வெற்றிக்கு நானும், பால கணேசன், ராஜ ராஜேந்திரன், ப்ரவீன் வின் போன்றோரே காரணம் என்பதனை நீ ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும்.

உன்னுடைய பதிவில் நிறைய எழுத்து பிழைகள் வந்து விடுகிறது. தாய்மொழியை தமிழாக கொண்ட நானே கூட சில எழுத்து பிழைகளை செய்து விடுகிறேன். ஆனால் கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட நீ தமிழில் எழுதும் போது நிறைய எழுத்து பிழைகள் வர தான் செய்யும். அது தவிர்க்க முடியாது. ஆனால் அதனை நீ திருத்தி கொள்ள தயராக இருத்தல் அவசியம். உன் பதிவினை படிப்பவர்கள் உன்னை மேன்மையான இடத்தில் வைத்திருப்பதாலே உன்னிடம் அப்படி ஒரு Perfection எதிர்பார்க்கிறார்கள் என்று நீ புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழை முழுதாக கற்காமல் இனி நீ எழுத போவதில்லை என்ற அறிவிப்பு என்னை குற்ற உணர்ச்சி கொள்ள செய்கிறது. தமிழை நீ முழுதாக கற்பது குறித்த உன் முயற்சி பாராட்டதக்கது தான் என்றாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் எழுதுவதை நீ நிறுத்த வேண்டாம். என் அம்மா சொல்வது போல் எழுதுவது என்பது ஆண்டவனின் கொடை. அது எல்லோராலும் முடியாது. உனக்குள் இருக்கும் Creativity நீ எழுத எழுத தான் மெருகு ஏறும். இதை நீ விடும் பட்சத்தில் உன் creativityக்கு பங்கம் வந்து விடுமோ என்று அச்சம் கொள்கிறேன். தயவு செய்து, நீ தமிழில் ஆழமாக வேர் ஊன்றும் வரை, உன்னுடைய பதிவுகளை, நன்கு தமிழ் அறிந்த ஒருவரை வைத்து Proof reading பார்த்து, தொடர்ந்து பதிவிடு.

பால கணேசன் உன்னை பற்றி என்னிடம் பேசும் போது “ஒருத்தனை என்ன தான் திட்டினாலும் அவன் நல்ல கவிதையை எழுதி காட்டுவேன்னு முனைப்போடு எழுதறான் பாத்தீங்களா, அவனால தான் பாஸ் சாதிக்க முடியும், உண்மையிலே ப்ரவீனை அந்த விஷயத்தில பாராட்டணும்” என்றார். நீ எழுத நிறுத்தும் முன் பால கணேசன் உன்னிடம் கண்டு புகழ்ந்த விடாமுயற்சியை இழக்க விரும்புகிறாயா என்பதை ஒரு கணம் யோசித்து பார், சகோதரனே….





No comments:

Post a Comment