Saturday, 11 August 2012

எலி


ஒரு நாள் அலுவலகம் கிளம்பும் போது நான் தங்கியிருக்கும் அறையை பூட்டி விட்டு 10 அடி நகர்ந்திருப்பேன், செல்போனை உள்ளேயே வைத்து பூட்டி வந்து விட்டதை உணர்ந்து, திரும்பி அறையை நோக்கி நடக்கலானேன். அறையை திறந்து பார்த்தால் ஒரு எலி குட்டி என்னுடைய நட்ட நடு கட்டிலில் சொகுசாக அமர்ந்திருந்தது. நான் உள்ளே வந்த நின்ற போது கூட அந்த எலி என்னை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. ஹூய் என்று ஒரு விரட்டு விரட்டியதும் தான் அது அங்கிருந்து விறுவிறுவென கட்டிலில் இருந்து கீழே இறங்கி, ஷெல்ப் மேலே வரை ஏறி, மேற்கூரைக்கு சென்று, அங்கிருந்து Fan-ற்க்கு போட பட்டிருந்த Beamல் ஏறி, Cement sheetல் இருக்கும் சந்தில் புகுந்து ஓடிற்று. நான் செல் போனை எடுத்து கொண்டு கிளம்பி வந்து விட்டேன்.

அடுத்த நாள் இரவு, கடையில் சாப்பிட்டு திரும்புகையில் 1 வாழைப்பழம் சாப்பிடுவதற்கும், 2 வாழைப்பழம் அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் என 3 வாழைப்பழமாக வாங்கி கொண்டேன். அறைக்கு வந்து மீதமிருந்த 2 வாழைப்பழத்தை Shelfன் மீது வைத்தேன். இதற்க்கிடையில் என் அறையில் ஒரு எலி குட்டி இருப்பதையே மறந்து போனேன். அடுத்த நாள் தூங்கி எழுந்து பார்த்தால் அந்த 2 பழங்களிலும் எலி கைவரிசையை காட்டி இருந்தது. பழத்தை முழுவதுமாக சாப்பிட்டு இருந்தாலும் பரவாயில்லை, இரண்டிலுமே அங்கங்கே கொறித்து விட்டு சென்றிருந்தது. இனி இந்த பழங்களை சாப்பிட முடியாது என்று குப்பை கூடையில் போட்டு விட்டேன். போட்ட பிறகு மனசு கேட்கவில்லை, சரி, அதுவும் சாப்பாட்டிற்கு என்று, அந்த பழங்களை குப்பை கூடையில் இருந்து எடுத்து அறையின் ஒரு மூலையில் வைத்து விட்டேன். அன்று மாலை வேலைக்கு  சென்று திரும்பி வந்து பார்க்கையில் இரு பழங்களிலுமெ முக்கால்வாசி அளவு காலி ஆகி இருந்தது. அடுத்த நாள் காலை எழுந்து பார்த்ததில் வாழைப்பழ தோல் கூட மிஞ்சாமல் மொத்தமாக காலி ஆகி இருந்தது.

பின்னொரு நாளில், அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் அப்துல் பேக்கினை, எங்கள் அலுவலகத்தில் எங்கோ ஒளிந்திருக்கும் எலி துவம்சம் பண்ணி இருந்தது. அதனால் அவன் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானான். புதிதாக வாங்கியிருந்த விலை உயர்ந்த பேக் என்பதால் விடாமல் புலம்பி தீர்த்தான். எனக்கும் கொஞ்சம் திக்கென்று இருந்தது, எனது அறையில் இருக்கும் எலியும் இது போல் ஒரு துவம்சத்தை கையாண்டால் என்ன செய்வது என்று கலக்கமுற்றேன். அதற்கு உணவு கிடைக்காததன் காரணமாகவே இப்படி கண்டதையும் கொறித்து வைக்கிறது, மாறாக அதற்கு நாமே கொஞ்சம் உணவளித்து விடலாம் என்று தீர்மானித்துக் கொண்டேன். அதை எந்த நேரத்தில் தீர்மானித்தேனோ, அதை அப்பவே மறந்து விட்டிருந்தேன். அன்று மாலையும் நினைவு வரவில்லை. அடுத்த நாள் காலையும் நினைவு வரவில்லை. அடுத்த நாள் அப்துல் புது பேக்கோடு வந்து போது தான் நினைவு வந்தது. சரி இன்றிலிருந்து ஆரம்பித்து விடலாம் என்று அறைக்குள் நுழையும் போதே நான் கண்ட காட்சி என்னை முகம் சுளிக்க வைத்தது.

நான் கதவை திறந்தவுடனே எலி குட்டி இந்த முறை மேஜை மேல் இருந்து முன்பு ஓடியது போல் ஓடி கூரைக்கு நடுவில் புகுந்து ஓடிற்று. மேஜை மீது பார்வையை சுழற்றி பார்த்தால் water bottle, shoe polish, shaving set என எல்லாமும் கலைந்திருந்தும், விழுந்திருந்தும் கிடந்தது. எதேச்சையாய் தான் சோப்பை பார்த்தேன். இன்னும் ஐந்து, ஆறு தினங்களில் தீர்ந்து விடக்கூடிய Lux Soap அது, சன்னமாக இருந்தது. அதை உணவு என்று நினைத்தோ, என்னவென்று நினைத்தோ, 3 இடத்தில் கொறித்து இருந்தது. இதை கடித்து விட்டதால் ஒன்று பெரிய நஷ்டமல்ல, இதை இப்படியே விட்டு விட்டால் நாளை என்ன விபரீதம் வருமோ என்று என் மனது யூகத்திற்கு கை கால முளைக்கவிட்டது. இதை சமாளிக்க சோற்று பருக்கைகளையோ, பிஸ்க்கட் துண்டினையோ கொஞ்சம் கொஞ்சமாக ரூமை விட்டு தள்ளி வைத்து கொண்டே வந்தால், ஒரு நாள் எலி என் ரூமை மறந்து விட்டு வேறு இடம் குடிபெயரக்கூடும் என்று ப்ரவீனிடம் ஆலோசித்து பார்த்தேன். அவன் அதெல்லாம் சரிப்பட்டு வராது, பேசாமல் ஒரு Gum pad ஒன்றை வாங்கி எலி அடிக்கடி நடக்கும் இடத்தில் வைக்க சொன்னான். அதில் இருக்கும் வாசனையை முகர்ந்து எலி அதன் மேல் நடக்கும் போது, எலியின் கால்கள் அதோடு ஒட்டி கொள்ளும், அதன் பின் அதை அப்படியே அடித்து கொள்ள வேண்டியது தான், இல்லையேல், தண்ணீரில் முக்கி கொள்ள வேண்டியது தான் என்று யோசனை சொன்னான். நான் பதறி போய், அது துடிக்குமே என்ன செய்ய என்று கேட்டேன். அது துடித்தால் துடித்து கொண்டு போகிறது, உனக்கென்ன என்றான். பொதுவாகவே எலி, பூச்சி, பூரான், பாம்பு இது போன்ற வஸ்துக்களுக்கு நான் பெரிதும் பயப்படுபவன். புலி, சிங்கம் என்றால் அது வேறு மாதிரியான பயம். ஆனால் இது தரும் அருவருப்பு கொஞ்சமும் சகித்து கொள்ள முடியாதது. அதனால் இந்த Gum pad சமாச்சாரமெல்லாம் வேண்டாம் என்று முடிவிற்கு வந்து விட்டேன்.

பேசாமல் எலி மருந்து ஒன்றை வாங்கி, உணவில் கலந்து வைத்து கொடுத்து அதை கொல்வது தான் வழி என்று கடைக்கு போய் எலி மருந்து கேட்டேன். அவன் Mortein Cake தான் இருக்கிறது, இதை முயற்சி செய்து பாருங்கள், எலி வீட்டினுள்ளே சாகாமல் வெளியே போய் சாகும் என்று விளம்பரத்தில் வருவது போலவே சொன்னான். சரி, இது போல் ஒன்று தான் நமக்கேத்தது என்று வாங்கி வந்தேன். ஒரு பேப்பர் வெய்ட்டை விட சற்று பெரியதாக இருந்தது.

என் அறையில் இருக்கும் எலியை தவிர என் அலுவலகத்திலும் ஒரு எலி இருக்கிறதே, அதுவும் என்றாவது ஒரு நாள் என் Bagற்கு வேட்டு வைக்கும் என்று, வாங்கி வந்த Cakeனை இரண்டாக வெட்டி, ஒரு துண்டினை ஷெல்ப் மேல் பத்திரமாக காகிதம் சுற்றி வைத்தேன், இன்னொரு துண்டினை எலி அடிக்கடி நடக்கும் இடமான மேஜைக்கு கீழே ஒரு பேப்பர் வைத்து அதன் மேல் துண்டினை வைத்தேன். அது பெயருக்கு தான் Cake என்று இருந்ததே தவிர அது Biscuit மாதிரி இருந்தது. வைத்துவிட்டு, அடுத்த நாள் தூங்கி எழுந்து பார்த்தால் பேப்பரையும் காணோம் அதன் மேல் வைத்திருந்த துண்டினையும் காணோம். அது கூட பரவாயில்லை ஷெல்ப்பின் மேல் என் அலுவலக எலிக்கென்று வைத்திருந்த மற்றொரு துண்டினையும் காணோம். எப்படியோ அதையும் மோப்பம் பிடித்து அதையும் முடித்து விட்டிருக்கிறது. அப்பாடா, எப்படியோ எலி சாப்பிட்டு விட்டது இனி இறந்து விடும் என்று நிம்மதியாக அலுவலம் கிளம்பினேன். போகும் போது அது வெளியே சென்று சாவதற்கு வசதியாக ஜன்னல்கள் எல்லாம் திறந்து விட்டு சென்றேன். அந்த நாள் இரவு எலி இருக்கும் தடயம் ஒன்று பெரிதாய் இருந்திட வில்லை, சோப்பு கட்டியினை பார்த்தேன், கொறிக்க படாமல் இருந்தது, நாளை வேறு ஒரு சோப்பு வாங்கி தான் ஆக வேண்டும், ரொம்பவும் சன்னமாகி விட்டது. அந்த நாள் கொஞ்சம் நிம்மதியாகவே தூங்கி எழுந்து பார்த்தால் அந்த சோப்பை மொத்தமாகவே காணோம். சோப்பு போனது பற்றி ஒன்றும் பிரச்சனையில்லை, ஒரு முழு கேக்கையும் சாப்பிட்டு விட்டும் கூட அது சாகாமல் இருப்பது தான் என்னை திகைக்க வைத்து விட்டது. இதை பற்றி நண்பர்களிடம் விசாரித்த போது பக்கத்தில் நீர் நிலைகளோ, குட்டையோ, சேற்று தண்ணீரோ இருந்தால் எலி சாகாது என்று சொன்னார்கள்.

அப்போது பார்த்து ஆகஸ்ட் மாதம் வேறு, சென்னையில் எப்போது மழை பொழியும், எப்போது வெயில் அடிக்கும் என்றே கணிக்க முடியாத மாதம் இது. மழை பொழிந்தால், எப்படியும் ஒரு பொழுதிற்கு நான் தங்கியிருக்கும் இருக்கும் இடத்தை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கவே செய்யும். இனி Gum pad வாங்குவது தான் உத்தேசம் என்று முடிவிற்கு வந்தேன். சென்னையில் யாருக்கும் அது பற்றி தெரிந்திருக்கவில்லை, நான் கடை கடையாய் ஏறி பார்த்தும் அது எனக்கு கிடைக்கவில்லை. சில கடைகளில் அது என்னவென்று நான் விலாவரியாக விளக்க வேண்டியதாய் போயிற்று. சலிப்புற்றவனாய் இந்த Cakeனையே மறு முறை முயற்சி செய்து விடலாம் என்று முடிவிற்கு வந்தேன், வெறும் 11ரூபாய் தானே என்பதினால் கூட நான் அந்த முடிவினை எடுத்திருக்கலாம்.

இந்த முறை வைக்கும் போது முழு கேக்கினையும் அப்படியே வைத்தேன். தண்ணீர் தேடி வெளியே போய் விட கூடாது என்று  கதவு ஜன்னல்களை எல்லாம் மூடி வைத்தேன். அடுத்த நாள் காலை பார்த்த போது, முன்பு போலவே கேக்கையும் காணோம், பேப்பரையும் காணோம். இந்த முறை எலியை எப்படியும் விடக்கூடாது என்று முழு வெறியில் இருந்தேன். எதற்கோ Cake cover-ல் கண்களை சுழல விட்ட போது, அந்த கேக்கினை எலி சாப்பிடுவதால் ரத்த நாளங்கள் வெடித்து சாக கூடும் எனவும், மெதுவாய் தான் வேலை செய்யும் எனவும், 90% எலி வெளியே போய் சாகும் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. ரத்த நாளங்கள் எல்லாம் வெடித்து என்ற வார்த்தையை படிக்கும் போது ஒரு சின்ன பூரிப்பு ஏற்படவே, அதையே இன்னொரு முறை படித்து கொண்டேன்.

முந்தைய சோப் தீர்ந்து விட்ட படியால் கடைக்கு சென்று ஒரு புது சோப்பினை வாங்கி வந்தேன். இந்த முறை சற்று விலை கூடுதலான Park Avenue Soap வாங்கி வந்தேன். அதன் வாசனையே கும்மென்று இருந்தது. இந்த சோப்பும் அடுத்த நாள் எலியின் பற்களால் கொறிக்க படவே, கடும் மன உளைச்சலிற்கு ஆளானேன். சோப்பினை மூடி போட்டு மூடி வைக்க முடியாது, அடுத்த நாள் சோப் கொழகொழவென்று ஆகிவிடும். சோப்பினை குளியலறையிலும் வைக்க முடியாது, ஏனெனில் அது ஒரு Common bathroom. முடிவாய், குளித்து முடித்து வந்தவுடன் சோப்பை கவரில் போட்டு ஆணியில் மாட்ட ஆரம்பித்தேன். இந்த திட்டம் ஓரளவிற்கு கை கொடுத்தது. சோப் பாதுகாக்கப்பட்டது.

இப்போது பிரச்சனை என்னவென்றால், இவ்வளவு நாளும் எலி இருக்கிறதா இல்லையா என்று சோப் கொறிக்கப்படுவதை வைத்து அறிந்து கொள்ளலாம், இனி அது கஷ்டம், நாமே கண்ணால் பார்த்தால் தான் உண்டு என்று நினைத்து கொண்டே, Shelf-ல் மடித்து வைத்திருந்த என் வெள்ளை சட்டையை வெளியே கிளம்புவதற்காக எடுத்தேன். எடுத்தால், துணிகளுக்கு இடையே ஒண்டி கொண்டிருந்தது எலி. இம்முறையும், அந்த எலி என்னை பார்த்து ஓடவில்லை. இந்த முறை ஹூய் என்று ஒரு விரட்டு விரட்டியும் ஓடவில்லை. கையில் வைத்திருக்கும் சட்டையை ஏதாவது கொறித்து வைத்திருக்கிறதா என்று அவசரமாக பார்த்தேன், நல்ல வேளையாக அப்படி ஒன்றும் இல்லை, அது நடந்து போன குட்டி குட்டி கால்தடங்கள் மட்டுமே இருந்தது. அதை தட்டி விட்டவுடன் போயிற்று. அந்த எலியை இந்தமுறை தான் ரொம்ப நேரம் சேர்ந்தாப்போல் பார்க்க முடிந்தது, எலி மந்தமாக காணப்பட்டது, இல்லாமல் போனால், இந்நேரம் அது ஓடியிருக்க கூடும். அப்போது ரூமில் ஒரு காலி Boost பாட்டில் இருந்தது, அதற்குள் எலியை அடைத்து தூக்கி போட்டு விடலாம் என நினைத்து, பாட்டிலை எடுத்து பக்கம் நெருங்கினேன். என் திட்டம் தெரிந்தால் அது என்ன மாதிரியான் ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை யூகிக்க முடியாத வண்ணம் இருந்தது. அதனால் பக்கத்து ரூமில் இருந்த பையனை அழைத்து வந்து உதவி கேட்டேன். அவன் எலி கடித்து விட்டால் என்ன செய்வது என்று ஒதுங்கி கொண்டான். இவனை கூப்பிட்ட பாவத்திற்கு எலி கடிக்கும் என்று வேறு ஒரு உப தகவலை சொல்லி பீதியை கிளப்பி விட்டு சென்று விட்டான். பிறகு, நானே என் மனதில் துணிவை வரவழைத்து கொண்டு, பாட்டிலை எலியின் முகத்திற்கு நேராக கொண்டு வந்து, பாட்டிலின் மூடியை எலிக்கு பின் பக்கமாக மெல்ல மெல்ல எடுத்து வந்தேன். அப்படியே, மூடியோடு தள்ளி அடித்து விடலாம் என்று செயல் பட்டு கொண்டிருந்தேன், அது என் திட்டத்தை புரிந்து கொண்டது போலும், அது கீழே இறங்கி விடுவிடுவென ஓடி விட்டது. ஆனால் வழக்கத்தை விட வேகம் கம்மியாக தான் ஓடியது.

நான் பார்த்த மற்ற எலிகளை விடவும் இது அழகானதாகவே தோன்றிற்று. சிறுசிறு குறும்புகளை செய்தாலும் பொறுத்து கொள்ளலாம், தினம் கொஞ்சம் சோறு வைத்து நாமே பார்த்து கொள்ளலாம் என்று மனதில் ஒரு சிறு யோசனை வந்தது. அதன்பின் அவசர வேலை காரணமாக வெளியே கிளம்பி விட்டேன்.

அறைக்கு திரும்பி, கதவை திறந்ததுமே கெட்ட வாடை அடித்தது. எலி செத்து விட்டதால் தான் இப்படி நாறுகிறது என்று எளிதில் யூகித்து விட்டேன். இவ்வளவு நாளாய் இல்லாமல் இன்று தான் அதற்காக கரிசனப்பட்டேன், இன்றா அது சாக வேண்டும். சரி எங்கு செத்து விழுந்திருக்கிறது என்று ஒவ்வொரு இடமாக தேடினேன். மேஜை அடியிலும், கட்டில் அடியிலும் கீழே குனிந்து பார்த்தேன். கிடைக்கவில்லை. ஷெல்ப்பை நகர்த்தி பார்த்தேன், கிடைக்கவில்லை. Computer table அடியிலும் பார்த்தேன், கிடைக்கவில்லை. எங்கேயும் கிடைக்கவில்லை. அதற்கு மேல் தேட எனக்கு பொறுமையும் இல்லை, தெம்பும் இல்லை, ரொம்பவும் அலுப்பாக இருந்தது, அன்று ஒரு நாள் பக்கத்து பையன் அறையில் போய் படுத்து கொண்டேன். அடுத்த நாள் எழுந்ததே தாமதமாக எழுந்தேன். எழுந்து அலுவலகம் கிளம்புவதற்கே சரியாக இருந்தது. அன்றும் முந்தைய இரவு அடித்தது போலவே கெட்ட வாடை அடித்தது. சம்பிரதாயத்திற்காக ஒரு தேடு தேடினேன், அகப்படவில்லை. வந்து தேடி கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அலுவலகம் முடித்து நேரே அறைக்கு வராமல் தி.நகர் சென்று ஒரு ஷாப்பிங் பண்ணி வந்ததில் அன்றும் உடல் சோர்வு, சம்பிரதாய் தேடல், ஒத்திப் போடல். ஆனால் காலையை விட, இரவு ரொம்பவும் வாடை அடித்தது போல் இருந்தது. இதே போல் நாளையும் ஒத்தி போட முடியாது, ஏனெனில் நாளை அலுவலகம் போய் வந்து சொந்த ஊரிற்கு கிளம்ப வேண்டும். போனால் 2 நாட்கள் கழித்து தான் வர முடியும், அத்தனை நாள் அறையை நாற்றத்தில் விட முடியாது.

அதனால் அடுத்த நாள் அலுவலகம் முடித்து வந்து எலியை தேடுவதற்கு ஆயுத்தமானேன். அறைக்குள்ளே நுழைய முடியாத அளவிற்கு கெட்ட நாற்றம். அறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் வெளியே எடுத்து வந்து ஆராய்ந்து வெளியே ஓரமாக வைத்தேன். அறையில் பல்வேறு இடங்களில் எலி புழுக்கைகளாக இருந்தது. அறையையே மொத்தமாக காலி செய்து வெளியே வைத்தும் கூட எலி கிடைக்கவில்லை. இவ்வளவு நேரம் தேடியும் கிடைக்காததால் மனம் சலிப்பும், வெறுப்பும் ஒரு சேர அடைந்தது. சரி, ஊரிற்கு போகிற வழியை பார்ப்போம் என்று தேவையான 2-3 துணிகளை எடுத்து வைத்து கொண்டு, Mobile charger, படிக்க தேவையான 2 புத்தகங்களையும் எடுத்து ஒரு Travel bag-ல் போட்டு கொண்டு Pack செய்தேன். அறையை பெறுக்கி, தண்ணீர் போட்டு துடைத்து விட்டு, எல்லா பொருட்களையும் பழைய படி இருந்த இடத்தில் வைத்து விட்டு கிளம்பினேன். 2 நாள் கழித்து இதே போல் இன்னொரு முறை எலியை தேட வேண்டும் என்று நினைத்த போதே ரொம்பவும் சோர்வாக இருந்தது.

வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு போய் நிற்பதற்கும், ஒரு கோயம்பேடு பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. ஏறினால் பஸ்ஸே காலியாக தான் இருந்தது. ஒரு ஸீட்டில் உட்கார்ந்து கொண்டேன். சில்லரை இல்லாத்தால் 15 ரூபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாயை நீட்ட வேண்டியதாய் போயிற்று, கண்டெக்டர் முறைத்தவாறு 5 ரூபாயாவது இருக்கானு பாருங்க என்றார், அவர் சொல்கிறாரே, என்று இல்லாத 5 ரூபாயை பொய்யாக தேடி, இல்லை என்றேன். மீதி 85 ரூபாயை கொடுத்து விட்டு, அடுத்த ஸீட் நகர்ந்தார். அவரும் 100 ரூபாயை நீட்ட அவர் புலம்ப ஆரம்பித்து விட்டார். CMBT போக எப்படியும் 1 மணி நேரம் ஆகும் என்பதால் ஹெட் போனை எடுத்து கொண்டிருந்தேன். அப்போது என்னருகில் இருப்பவர்கள் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் எங்கேயோ கெட்ட நாற்றம்  அடிக்கிறது என்று பேசி கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் அதுவே பெரிய சலசலப்பு ஆகி விட்டது. ஆனால் எனக்கு இந்த நாற்றம் பற்றி ஒரு உணர்வும் வராமல் இருந்தது. இவ்வளவு நேரமும் செத்த எலியின் நாற்றத்தில் இருந்ததால் என் வாசனை உணர்வே மறுத்து போய்  விட்டதா என்று எனக்கே சந்தேகம் வந்து விட்டது. அதே சமயம், இந்த நாற்றம் ஏன் நமது செத்த எலியின் நாற்றமாய் இருக்க கூடாது என்ற சந்தேகம் வர, குதூகலமாய் Travel Bag-ல் இருக்கும் ஒவ்வொரு ஜிப்பையும் சோதனையிட்டேன். பையின் முன்னாடி சின்னதாய் திறந்து இருந்த குட்டி ஜிப்பில் எலி செத்து கிடந்ததை பஸ்ஸின் மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. இதற்குள் எப்படி தான் போனதோ தெரியவில்லை. எலி Bag-ன்னுள்ளே கிடந்ததை கண்ட பின்பு சந்தோஷம் கொந்தளித்தது. ஆனால் அதை வெளிகாட்டி கொள்ளாமல், அடுத்து வந்த பஸ் ஸ்டாப்பிலே இறங்கி கொண்டேன். நான் இறங்கியதை கண்டெக்டர் விநோதமாய் பார்த்ததை கவனிக்க முடிந்தது, ஆனால் அதை கண்டு கொள்ளாமல் நான் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு காலி இடம் தேடி நடந்து கொண்டிருந்தேன். ஒரு மூடிய டீ கடையின் பெஞ்சின் மேல் Bag-ஐ வைத்து, ஒரு பேப்பரின் உதவி கொண்டு செத்த எலியை தூக்கி குப்பை தொட்டியில் போட்டேன். ஒரு தெரு நாய், நான் ஏதோ உணவை தான் தூக்கி போடுகிறனோ என்று ஆவலாய் வந்து முகர்ந்து பார்த்து விட்டு திரும்ப அதன் இடத்திலே சென்று படுத்த கொண்டது.

நான் திரும்பவும் இறங்கிய பேருந்து நிலையத்திற்கே வந்து அடுத்த CMBT பஸ்ஸிற்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.




Friday, 29 June 2012

A Review about Zero degree


நான் ஆரம்பத்தில் சாரு நிவேதிதாவை பற்றியும், ஜீரோ டிகிரி நாவலை பற்றியும் ஒன்றையும் அறிந்திருக்கவில்லை. எனது நண்பன் ப்ரவீன் தான், விகடனில் வெளி வந்த “மனம் கொத்தி பறவை” தொடரை பார்த்து சாரு நிவேதிதாவால் ஈர்க்கப்பட்டான். ஈர்ப்பின் விளைவாய், சாருவின் நாவல்களின் ஏதேனும் ஒன்றினை வாங்கி முயற்சி செய்து பார்க்க ஆர்வமானான். நான் சென்னையில் இருப்பதால் என்னிடம் சொல்லி ஜீரோ டிகிரி நாவலை கூரியர் செய்து விடுமாறு கேட்டான். கடை கடையாய் ஏறி இறங்கி பார்த்தேன், எதிலும் கிடைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக தி.நகரில் உள்ள ஓர் புத்தக கடையில் பெரிய தேடலக்கு பின் கிடைத்தது. நாவலின் 5 பக்கம் கூட புரட்டி இருக்கவில்லை, எழுத்தாளரை பற்றியும் எழுத்தை பற்றியும் மொத்தமாக அருவருப்பான அபிப்ராயம் வந்து விட்டது. அதன் பின் அந்த புத்தகத்தை அவனிடமே கூரியர் செய்து அவனையே  படிக்க சொன்னேன், படித்து விட்டு அவனது கருத்தையும் முன்மொழியுமாறு கேட்டு கொண்டேன். படிக்கும் போது நான் எப்படி உணர்ந்தேனோ, அவனும் அதே போல் தான் உணர்ந்தான், ஆனால் அவன் என்னை போல் வாசிப்பதை நிறுத்தவில்லை, தொடர்ந்து படித்தான். காசு கொடுத்து வாங்கியாயிற்று இனி என்ன செய்ய முடியுமென்று படிக்கிறானோ என்று நினைத்து கொண்டேன். ஆனால், நாவல் முழுதையும் படித்து விட்டு, ஒன்றுமே புரியவில்லை, ஆனால் நாவல் பிடித்திருந்தது, நீயும் படித்து பார் என எனக்கு பரிந்துரைத்தான். அவன் எந்த புத்தகம் படித்தாலும் அந்த புத்தகத்திலே அதற்கான விமர்சனத்தையும் எழுதி விடும் பழக்கமுடையவன் . அவன் ஜீரோ டிகிரி நாவலுக்கு என்ன விமர்சனம் அளித்திருக்கிறான், என பக்கங்களை திருப்பி பார்த்தால், அதில் இருந்தது, பெரியதாய் ஒரு கேள்விக்குறி.

அந்த கேள்விக்குறியே ஒரு தூண்டிலாய் வினையாற்றி என்னை மீனை போல் கொத்தி இழுத்து, ஜீரோ டிகிரி நாவலை படிக்க தூண்டியது. அவன் கேள்விக்குறிய இடத்தில் நானும் கேள்விக்குறி இட கூடாது, என்று தீர்மானித்து படிக்க முடிவு செய்தேன். ஆனால் எடுத்த எடுப்பிலே ஜீரோ டிகிரியை தொட வேண்டாம் எனவும் சாருவின் இன்ன பிற புத்தகங்களை படித்து விட்டு அதன்பின் ஜீரோ டிகிரியை முயற்சித்து பாருங்கள் என வாசிப்பு அனுபவமிக்க சில நண்பர்கள் எனக்கு அறிவுரை வழங்கினார்கள். அதன்படி கடவுளும் நானும், எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும், எக்ஸைல், மனம் கொத்தி பறவை புத்தகங்களை முடித்து விட்டே ஜீரோ டிகிரியை அணுகினேன்.

என்ன ஆச்சர்யம்… இப்போது அந்த முதல் 5 பக்கங்கள் என்னை உறுத்தவே இல்லை, மாறாக வெகு சுவாரஸ்யமான ஒன்றாய் இருந்தது. ஒரு தந்தை ஒரு மகளுக்கு எழுதும் கடிதத்துடன் நாவல் ஆரம்பிக்கும், அதில், மகளே இப்போது நீ கனவு கண்டு கொண்டிருக்கலாம், பீடி சுற்றி கொண்டிருக்கலாம், நாடக ஒத்திகை பார்த்து கொண்டிருக்கலாம் என 62 ‘லாம்’கள் தொடர்ந்து வருகிறது. சற்று நிதானித்து பார்த்தேன், இத்தனை வகையான பெண்களை எப்படி இவர் ஒரே கடிதத்தின் மூலம் கொண்டு வர எத்தனித்தார் என ஆச்சர்யமாய் இருந்தது. அதற்கு அடுத்தாற்பிலே “கோட்டிக்குப்பனின் மொழிபெயர்ப்புகள்”… அதை படித்து முடித்தவுடன் தான் எனக்கு அந்த நாவலின் மேல் ஓர் நம்பிக்கையே வந்தது. அதன் பின் இறக்கை கட்டி கொண்டு 247 பக்க நாவலை 4 தினங்களிலே பரபரவென படித்து முடித்தேன். (பொதுவாக, ஒரு 300 பக்க புத்தகத்தை முடிக்க எனக்கு குறைந்தப்பட்சம் 80 நாட்களாவது தேவை).

இனி நாவலுக்கான விமர்சனம்….

நாவல் மொத்தமும் எந்த இடத்திலும் எழுத்தாளர் எங்கேயும் கருத்து சொல்லவோ, கதை சொல்லவோ முற்படவில்லை. நாவல் மொத்தமும் நிகழ் காலத்தில் நிகழும் அநீதிகளையும், ஒரு பெண்ணின் தற்கால நடைமுறை அசாத்தியங்களையும், மனித மனங்களின் உணர்வுகளையும், சில மனிதர்களின் அபத்தங்களையும், நெகிழ்ச்சியான சம்பவங்களையும், அட்டகாசமான பகடிகளையும், சொந்த அனுபவங்களையும், இனவெறிக் கொலைகள் பற்றிய தகிப்பையும், பத்திரிக்கைகளின் பொறுப்பின்மையையும், மனிதர்களின் அழிக்கும் மனப்பாங்கினையும், மனிதர்களின் காம வேட்கையையும் அதை தணித்து கொள்ள அவர்களின் கையாளும் முறைகளையும், அன்பின் மொத்த வெளிபாட்டினையும் பதிவிட்டிருக்கிறார். இவையனைத்தும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நாவல் எழுதப்படவில்லை என்றாலும் என் பார்வையில் ஜீரோ டிகிரி இதையே ஆணித்தரமாக செய்கிறது. 

ஒரு துப்பறியும் நாவலை படிப்பதற்கு வாசகனாகிய நம்மிடத்தே இருந்து எந்த ஓர் முயற்சியும் தேவையில்லை, வெறுமனே படித்தால் மட்டும் போதும், கதை புரிந்து விடும், புத்தகத்தை தூக்கி போட்டு போய் கொண்டே இருக்கலாம். ஆனால் இந்த ஜீரோ டிகிரி வாசகனாகிய என்னை பெண்டு நிமிர்த்தி வேலை வாங்கி விட்டது, சொல்ல போனால் இன்னும் வேலை வாங்கி கொண்டு இருக்கிறது…. ஏனெனில் இவருடைய எழுத்துக்கள் ஒரு  சில இடங்களில் Puzzle போல் இருக்கிறது, மிகவும் விழிப்போடு படித்தால் மட்டுமே ஓரளவேனுமாவது புரிந்து கொள்ள முடிகிறது. அந்த புதிரை அவிழ்த்து அதனின் அர்த்தங்களை கண்டு கொள்ளும் போது ஏற்படும் சிலிர்ப்புக்காகவே பக்கங்களை புரட்டி கொண்டே இருக்கலாம்.

நாவல் படிக்கும் போது இடையே வரும் வன்மம், வலி, பரபரப்பு ஆகிய அனைத்தும் புத்தகத்தை அழுந்த பிடிக்க வைக்கும் ரகம். ஆனால் இவ்வளவு ஸீரியஸான நாவலில் ஆங்காங்கே தலை தூக்கும் பகடிகளை யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது. ஒரு இடத்தில் “ஆர்ய அல்குல் ஆர்ய அல்குல்” என 108 முறை கொடுக்கப்பட்டிருக்கும். ஏதோ ஒரு உள்ளுணர்வு அதை 108 முறை சரியாக கொடுக்க பட்டிருக்கிறதா என எண்ணி பார்க்க சொல்லிற்று, நானும் எண்ணிணேன், அதிலும் கூட ஏதாவது புதிரோ, பகடியோ ஒளிந்து கொண்டிருக்குமென ஒரு நப்பாசை தான்… எண்ணினால் சரியாக 108 இருந்தது. எண்ணி விட்டு அடுத்த வரி படித்தால், “சரியாக 108 முறை எழுதப்பட்டிருக்கிறதா என்று  எண்ணி சரிபார்க்கிற வாசகிகள் இந்த நாவலை தொடர்ந்து வாசிப்பதை நிறுத்திவிட்டு வேறு ஏதேனும் உருப்படியான காரியம் பார்க்கப் போகலாம்” என்று எழுதியிருந்தது… வாய் விட்டே சிரித்து விட்டேன், அதுவும் ஜன நெரிசலான ரயிலில்...

முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்நாவலின் பல்வேறு இடத்தில் கையாளப்பட்டிருக்கும் யுக்திகள், சமயங்களில் சொல்ல வரும் விஷயத்தினை ஆழ்ந்து பதிவித்து விடுகிறது.

இந்நாவலை படித்த / படிக்கவிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் “இனி நானும் என் மகளுக்கான கவிதைகளும்” என்னும் பகுதி தான் மனதிற்கு நெருக்கமான பகுதியாய் இருக்க கூடும் என்பது என் யூகம். கவிதைகளை வாசிக்க வாசிக்க கண்களில் நீரும், இதயத்தில் அன்பும் பொங்கி வழிகிறது. அந்த மொத்த பகுதியினையும் முடித்து விட்டதும், எனக்கு குழந்தை பிறந்தால் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும், அதற்கு ஜெனீ என்றே பெயரிட வேண்டும் என்று தீர்மனிக்க மனம் ஏங்கியது.

என்னால் ஒரு சில அத்தியாயங்களும், பகுதிகளையும் புரிந்து கொள்ள முடியவில்லை, வெகு எளிமையான வார்த்தைகளையே எளிமையான வடிவத்தில் தான் கொடுத்திருக்கிறார், இருந்தும் அதை புரிந்து கொள்ள முடியாதவாறு கொடுத்திருப்பது  ஆசிரியரின் சாதூர்யம் என்றே நினைக்கிறேன்.

எப்படி சொல்கிறேன் என்றால்,

நாவலின் ஒரு பகுதியில், ”ஆதி மனிதன் குறி வருகை ஸ்டைல் ஸ்ட்ரக்சுரலிஸம் ஸ்டைல் குறி குறியில் அடக்கம் மொழியில் இல்லை மொழி மொழியில் அடக்கம் குறியில் இல்லை குறியில் இல்லை மொழி வேறு குறி வேறு. எல்லோரும் வந்து குறியென்றால் எதுவெனக் கேட்டார்கள். நான் குறியை குறிக்குள் தேடென்றேன்.” என வருகிறது… இதை என்னால் சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இதை தெரிந்து கொள்ளாமல் விடக் கூடாது என்று மட்டும் என் மனதில் ஒரு உறுதியை வர வைத்து கொண்டேன். அதன் விளைவாய் ”சாரு நிவேதிதா வாசகர் வட்டம்” என்னும் வட்டத்தில் இதன் தொடர்பாக ஒரு பதிவு ஒன்றினை பதிவிட்டேன். அதற்கு நிர்மல் ம்ரின்ஜோ என்னும் அன்பர், “Semiotics for beginners: signs” என்னும் ஒரு வலைப்பூவின் லிங்க்கையும், MG Suresh என்பவரின் லிங்க்கையும் கொடுத்து உதவினார். அதை படித்தும் புரியாததை நிர்மல் ம்ரின்ஜோவிடம் விவாதித்து தெரிந்து கொண்டேன். ஒரு சின்ன தேடலின் விளைவாக நான் Signs, Signifier, Signified, Classism, Mannerism, romantism, modernism, impressionism, expressionism, cubism, purism, futurism, realism, naturalism, symbolism, imagism, constructuvism, kinetic art, tataism, suprematism, the style, pop art, minimalism, conceptual art, existentialism, structuralism, post structuralism, பின் நவீனத்துவம், பின் பின் நவீனத்துவம், post modern irony, pseudo modernism, critical realism,  indirect realism, போலி நவீனத்துவத்துக்கும் பின் நவீனத்துவத்துக்கும் உள்ள வித்தியாசம் என எதையெதையோ தெரிந்து கொண்டேன். அது எனக்கு தேவைப்படுமா, தேவைப்படாதா, புரிந்ததா, புரியவில்லையா என்பன போன்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும், இந்த ஜீரோ டிகிரியை வாசித்திராவிட்டால் இதை பற்றிய அறிமுகமெல்லாம் எனக்கு கிடைத்திராமலே போயிருக்கக்கூடும். இப்படி ஒரு பெரிய தேடலுக்கு பின்பு தான் ஒன்று புரிந்தது, இந்த நாவல் திட்டமிட்டு பல சூத்திரங்களை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்று. அதுவுமில்லாமல் ஒரு விஷயத்தை புரியாதது போல் கொடுத்து, என்னையே அது குறித்து தேட வைத்திருக்கிறார், இதுவும் அநேகமாக அவர் திட்டமிட்ட ஒன்றாகவே இருக்கக் கூடும். இதனால் தான் ஆசிரியரை சாதூர்யசாலி என்றேன்….

நாவலில் இன்னும் பல புரியாத பகுதிகளை விரட்டி சென்று வேட்டை ஆடலாம் என்று என்னை நானே தயார் படுத்தி கொண்டு இருக்கிறேன்.

இதுவரை சாரு நிவேதிதாவின் 5 புத்தகங்களை வாசித்து முடித்திருக்கிறேன். ஒரு மனிதன் எப்படி ஜெண்ட்டிலாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கண்ணியமாக இருக்க வேண்டும், நல்ல ரசிகனாக இருக்க வேண்டும் என நேரடி போதனைகளாய் இவரின் புத்தகங்கள் நமக்கு அளிக்காமல், ஒரு தாக்கமாக மனதில் விதைக்கிறது. அதுவே என்னை திரும்ப திரும்ப சாரு நிவேதிதாவின் புத்தகங்களை வாசிக்க தூண்டுகிறது. கையில் இப்போது …. நேநோ..

Sunday, 27 May 2012

சேப்பாக்கம் - ஒரு விசிட்


பெங்களூரில் நடந்த QUALIFIER 1 மேட்சிற்கு என் அப்பாவிடம் எதிர்பாராதவிதமாய் டிக்கெட் கிடைக்க, பெங்களூர் போய் கலக்கி விட்டு வந்தார். அவர் போய் வந்த அனுபவத்தையே 35 நிமிடம் விலாவரியாய் விளக்கினார். விளக்கத்தின் முடிவில் “சாமி, இப்போ என் மைண்ட் எப்படி தெரியுமா இருக்குது…. அப்டியே ப்ரீயா இருக்கு… ஒண்ணுமே இல்லை, வெறும் ஜீரோ, அவ்ளோ சந்தோஷமாய் இருக்கேன்” என்று சில்லாகித்து பேசி என் பொறாமையில் கரி அள்ளி போட்டார். அதுக்கெல்லாம் அமையணும், என்று என்னை நானே சாந்த படுத்தி கொண்டேன்.

QUALIFIER 2 மேட்ச் நடக்கவிருக்கும் நாள் அன்று தான் என் அப்பா இதையெல்லாம் அலைபேசியில் விளக்கினார். விளக்கி முடித்து அடுத்த ஐந்தாவது நிமிடம்  மறுபடியும் அழைத்தார். சென்னை மாநாகராட்சி இது நாள் வரை அனுமதித்திராத 3 புதிய கேலரிக்கள் இன்றைய மேட்சிற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது, முடிந்தால் போய் டிக்கெட் கிடைக்குதா என்று பார் என்று செய்திதாளில் சற்று முன் பார்த்த செய்தியை பரிமாறினார்.. அப்போது மணி 9:30. அன்று எனக்கு 2nd shift தான். ஆபீஸ் போற வழியில் தான் சேப்பாக்கம், டிக்கெட் கிடைத்தால் பார்ப்போம், இல்லையேல் ஆபீஸ் கிளம்புவோம் என்று தீர்மானித்து கிளம்பினேன்.

சேப்பாக்கம் போய் இறங்கினால், அந்த இடமே கோலகலமாய் இருந்தது. 750 ரூபாய் கவுண்ட்டர், 500 ரூபாய் கவுண்ட்டர் என இரண்டு கவுண்ட்டர்கள்ளாக இருந்தது. 750 ரூ கவுண்ட்டரில் நிற்கலாம் என முடிவெடுத்து வரிசையில் போய் நின்றால் அது வெறு கால் கிலோ மீட்டர் நீளத்திற்கே இருந்தது. இது நான் எதிர்பார்த்ததை விட கம்மி வரிசை நீளம் தான். எப்படியும் டிக்கெட் கிடைத்துவிடும் என நம்பிக்கை பிறந்தது. மொத்தமாக 4 டிக்கெட் வாங்குவதாய் உத்தேசம், நான் அம்மா அப்பா அண்ணா. அம்மா ஏற்கனவே சென்னையில் தான் இருந்தார்கள், அவருடைய அலுவல் வேலையாய் வந்திருந்தார். அண்ணன் குடியிருப்பதே சென்னை ஆதம்பாக்கத்தில் தான். ஆனால் அப்பா தர்மபுரியில் இருந்தார். டிக்கெட் கிடைத்தால் சொல்லு நான் பஸ் ஏறி வரேன் என்று சொன்னார், அப்பா எப்படியும் டிக்கெட் வாங்கிடலாம், வாங்க பா, என்று சொல்லி பார்த்தேன்,, ம்ஹூம், அதெல்லாம் முடியாது, டிக்கெட் கையில் வாங்கிட்டு கூப்பிடு என்று பிடிவாதம் பிடித்தார், சரி அவர் சொல்வது நியாயம் தான் என்று, வரிசையில் நின்றேன். வரிசை ஆமைகுட்டி வேகத்திற்கு நகர்ந்தது. வரிசையில் நிற்கும் போது மணி 10.45. எனக்கு முன்னாடி ஒரு ரீபோக் வயசாளியும், பின்னாடி ஒரு சித்தப்பா மற்றும் குட்டி பையன் கூட்டணியும் நின்றார்கள்.



ஒரு 15 நிமிடம் தான் நின்றிருப்போம், எனக்கு முன்னால் நின்றிருந்த ரீபோக் வயசாளி, தம்பி எனக்கு B.P இருக்கு, நான் அப்படி போய் நிழல்ல நின்னுக்குறேன், க்யூ கிட்ட வந்ததக்கப்பறம் வந்து சேர்ந்துக்குட்டமா என கேட்டார், நான் தான் நல்லவனாயிற்றே, ஓ யெஸ், பேஷா வந்து அப்புறமாய் ஜாயின் பண்ணிக்கோங்க என்று சொன்னேன். இப்போது அவர் போனதால் எனக்கு முன்னாடி இரண்டு நண்பர்கள் கூட்டணி வாய்த்தது. அவர்கள் வழியாக தான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது, ஒருத்தருக்கு 2 டிக்கெட் தானாம், வேண்டுமென்றால் இன்றைய மேட்சிற்கு 2 டிக்கெட்டும், நடக்கவிருக்கும் இறுதி ஆட்டத்திற்கு 2 டிக்கெட் என தனிதனியாய் வாங்கிகொள்ள முடியுமே தவிர, ஒரே ஆள் ஒரு மேட்சிற்கு இரண்டிற்கும் மேற்பட்ட டிக்கேட் வாங்க முடியாதென்று சொன்னார்கள். எனக்கு 4 டிக்கெட் அந்த நேரத்தில் வேண்டியதாய் இருந்தது, என்ன செய்வதென்று கையை பிசைந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு முன்பு நின்றிருந்த இரு நண்பர்களின் நண்பன் இன்னொருவன் வரிசைக்கு வெளியில் நின்று கொண்டு இவர்களுக்காக காத்திருந்தான், பாஸ் சும்மா வெளிய நிக்கறத்துக்கு, உள்ள வந்து எனக்கு 2 டிக்கெட்டாவது எடுத்து தாங்களேன், என ஜாலியாக கேட்க அவரும் ஓ.கே பாஸ் என களத்தில் குதித்தார். முழுதாக 5 மணி நேரம் ஆனது டிக்கெட் கவுண்ட்டர் கிட்டே நெருங்க, இப்போ என் அப்பாவிற்கு போன் செய்து வர சொன்னால், இனிமே எங்க டா வர்றது, நீங்க மட்டும் போங்க என காலை வாரி விட்டார். என் அண்ணணுக்கு போன் அடித்தால், எனக்கு வாங்காத, நான் இன்னைக்கு ஊருக்கு போறேன், நீங்க மட்டும் போய்ட்டு வாங்க என அவனும் காலை வாரி விட்டான். இப்போது எனக்காக அவரும் 5 மணி நேரம் பக்கம் வரிசையில் நின்றாகி விட்டது, அவர் உழைப்பை நான் வீண் செய்ய விரும்பவில்லை. மொத்தமாக 4 செமிபைனல் டிக்கெட் வாங்குவதற்கு பதிலாக 2 செமிபைனல், 2 பைனல் என எடுத்து கொள்ளலாம் என சமயோகிதமாய் யோசித்து, அவரை செமிபைனல் டிக்கெட் வாங்க வைத்து, நான் பைனல் டிக்கெட் வாங்கினேன். செமிபைனல் அம்மாவோடு, பைனல் அப்பாவோடு….

5 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக டிக்கெட் கிடைத்தது. நிழலுக்கு ஒதுங்கிய ரீபோக் வயசாளியும் சரியான நேரத்தில் எங்களுடன் இணைந்து அவரும் டிக்கெட் வாங்கி கொண்டார், நன்றியை கூட ரொம்ப நெகிழ்ச்சியாய் சொன்னார்.


அம்மாவை சேப்பாக்கம் வர சொல்லி, நானும் அம்மாவும் சேப்பாக்கத்திலே சந்தித்து மைதானத்திற்கு கிளம்பினோம். எங்களின் நுழைவு கேட் 14-ல், பெல்ஸ் ரோட்டில் இருக்கும் நுழைவு வாயில் அது. அங்கே செல்ல மைதானத்தையே அரை வட்டம் அடித்து கொண்டு போனோம். போகும் வழியில் ஆசையாக ஒரு பீப்பி வாங்கினோம், 10 ரூபாய் தான். ஒவ்வொரு 4 மற்றும் 6 ற்கும் ஜாலியாக ஊதி ஊதி கொண்டாடலாம் என சந்தோஷத்தில் ஊதி கொண்டே நடந்து சென்றோம். வழியில் ஒரு CSK கொடி ஒன்றை ஒரு பையன் கையின் விற்று கொண்டு வந்தான். 50 ரூபாய் சொன்னான். 30 ரூபாய் விலை என பேரம் பேசி வாங்கி கொண்டு நடந்தோம். 14-ம் கேட்டிற்கு போனால், அனுமார் வால் போல மிக நீண்ட வரிசையையாய் மக்கள் நின்று கொண்டிருந்தினர். அதனால் பெல்ஸ் ரோட்டின் போக்குவரத்தும்  கணிசமாக பாதிக்கப்பட்டது. அதனால் தான் என்னமோ, இந்த மூன்று கேலரிக்களையும் சென்னை மாநகராட்சி தடை பண்ணியதோ என்னமோ. ஆனால் என்ன இருந்தாலும் இது ஒரு அரை மணி நேர சிக்கல் தான். அதற்கெல்லாம் போய் 18000 கொள்ளளவு கேலரியை முடக்குவதா… என்று வரிசையில் நின்று என் அம்மாவிடம் நியாயம் பேசி கொண்டிருக்கும் போதே 15-ம் கேட்டையும் எங்களுக்கான நுழைவு வாயிலாய் அறிவித்தனார். அது எங்களுக்கு வெகு பக்கத்தில் தான் இருந்தது. உடனடியாக உள்ளே நுழைந்து விட்டோம், நுழையும் போதே என் அம்மா கையில் இருந்த பீப்பியை செக்யூரிட்டி புடிங்கி கொண்டான். இன்னொரு செக்யூரிட்டி என் கையில் இருந்த கொடியை புடிங்கி அதில் இருந்த குச்சியை உருவி வெறு துணியை மட்டும் கொடுத்தான். அதை வைத்து எப்படி கொடி அசைப்பது, சும்மா கையில் பிடித்து கொண்டு சுற்ற தான் முடியும். என்ன பண்ண முடியும் என நொந்து கொண்டு, மேற்கொண்டு உள்ளே நுழைந்தோம். இன்னொரு பெண் செக்யூரிட்டி, என் அம்மாவை சோதித்து அவர்களின் கைப்பையில் இருந்த தண்ணீர் பாட்டிலையும் எடுத்து கொண்டார்கள். மேற்கொண்டு நகர்ந்தோம், ஒரு இடத்தில் ஒருவர் எங்கள் கையில் இருந்த டிக்கெட்டை வாங்கி அதில் இருக்கும் பார் கோட்டை ஸ்கேன் செய்து அது கொடுக்கும் அனுமதியின் பேரில் ஆட்களை உள்ளே அனுப்பினார். அவ்வளவு தான் எல்லா செக்கிங்கும் அத்தோடு முடிந்தது.

எங்களுடையது G Upper Tier AA50, AA51. அது மேலே கடைசியாக இருந்தது. கடைசியாக இருந்தாலும் மொத்த ஸ்டேடியமும் பார்வையில் இருந்தது. மைதானத்தை பார்க்கவே பிரம்மாண்டமாய் இருந்தது. அது வெறு தரையாகவே தெரியவில்லை. பச்சை பசேலென பச்சை சொர்க்கமாய் காட்சி அளித்தது. அப்போது மணி 7.30 தான். அந்த நேரத்தில் பிட்சில் ரோலரை உருட்டி ஒரு குழு சமம் செய்து கொண்டிருந்தது. இன்னொரு குழு ஒரு நீள கயிறு கொண்டு குப்பை எல்லாம் வாரி கொண்டு இருந்தது. மற்றொரு பக்கம் நம் கேப்டன்கள் டாஸ் போட எத்தனித்து கொண்டு இருந்தார்கள். சென்னை டாஸ் ஜெயித்து பேட்டிங் எடுப்பார்கள் என்று மனதுக்குள் ஓர் எதிர்பார்ப்பு வைத்து கொண்டிருந்தேன். ஆனால் டெல்லி தான் டாஸ் ஜெயித்தது. ஆனால் என் எதிர்பார்ப்பின் அதிர்ஷ்டவசமாக அவர்கள் தேர்ந்தெடுத்தது பந்து வீச்சை.




மற்றொரு பக்கம் வீரர்கள் பயிற்சியில் இருந்தனர். ஒற்றை ஸ்டெம்ப் இருக்கும் திசை நோக்கி ஒருவர் பந்து வீசுவதும், அதை இன்னொருவர் விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுப்பதும், இன்னொரு பக்கம் ஒருவர் ஒரு சிறிய பேட்டை வைத்து கொண்டு பந்தை மேலே எழும்ப செய்ய அதை கேட்ச் செய்ய இன்னொரு குழு பயிற்சி எடுத்து கொண்டு இருந்தது. சிறு சிறு விஷயங்களை பார்த்த போதும் அனிச்சையாய் பிரமிப்படைந்தேன். எங்கே திரும்பினாலும் கண்ணிற்கு இனிமையான சித்திரங்களும், கட்டடங்களும், ஒளி விளக்கும் அலங்கரித்தன. நான் பார்க்கும் அனுபவிக்கும் Facebook மூலம் நண்பர்களுக்கு நொடிக்கு நொடி பகிரலாம் என நினைத்து இருந்தேன். ஆனால் மேட்ச் ஆரம்பிப்பதற்கு முன்னரே என் போன், Low battery  காட்டி தொலைத்து விட்டது. அதனால் அந்த கடமையை செவ்வென செய்ய இயலாமல் போயிற்று. அதனால் என் facebook நண்பர்கள் என் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருந்திருப்பார்கள் என இந்த இடத்தில் சொல்லி தெரிய வேண்டியதில்லை.





சரியாக 8 மணிக்கு 2 அம்ப்யர்களும் முதலில் நுழைந்தனர். அவர்களை தொடர்ந்து பொறி பறக்கும் புஸ்வான கூட்டத்துக்கு இடையில் Daredevils அணியினர் நுழைந்தனர். அவர்களை தொடர்ந்து மற்றுமொரு பொறி பறக்கும் புஸ்வான கூட்டத்திற்கு இடையில் ஹஸ்ஸியும், விஜய்யும் ஓடி வந்தனர். அவர்கள் உள்ளே நுழையும் போதே இவனுங்க எப்ப அவுட் ஆகி போறது, தோனி எப்ப வந்து ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது என எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். எல்லோரும் பொசிஷனில் நின்று கொண்டு இருந்தனர். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பிச்சுடுவாங்க என சிறிதாய் ஓர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் போதே, என்னை சுற்றியுள்ள ஜனங்கள் அனைவரும் எழுந்து நின்று கத்தினார்கள். என்ன ஏது என விசாரித்தால், விஜய் முதல் பாலிலே 4 ரன்கள் அடித்து விட்டாராம். அடப்பாவிங்களா, மொத பாலை போட ஆரம்பிச்சிட்டிங்களா, என அடுத்தடுத்த பாலை சின்சியராக கவனிக்க ஆரம்பித்தேன்.


ஒரு ஓவர் முடிந்தவுடன் விக்கெட் கீப்பரும், அம்ப்யர்களும், பீல்ட் மேன்களும் இடம் மாறுவதையெல்லாம் அன்று தான் நான் முதன்முறையாக பார்த்தேன். டிவி,யில் இந்த நேரத்தில் விளம்பரம் போட்டு விடுவதால் இதை பார்க்கும் வாய்ப்பு என்றும் எனக்கு கிடைத்ததில்லை. இப்படி இடம் மாறும் விஷயமே என் அம்மாவிற்கு அன்று தான் தெரியும் என ஆச்சர்ய பட்டார்கள். மேட்சை பற்றிய முழு விவரமெல்லாம் நம்மால் அங்கிருந்த படி தெரிந்து கொள்ள முடியாது. ஸ்கோர், பேட்ஸ்மேன் ஸ்கோர், பௌலர் விவரம் ஆகியன மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. மேட்சை நேரில் பார்க்கும் போது இன்னொரு பிரச்சனை என்னவென்றால் பந்து போடுவது, பந்தை அடிப்பது, பந்தை பீல்ட் மேன் பிடிப்பது என எல்லாமும் விசுக் விசுக்கென்று நடக்கும். பந்தையே கூர்ந்து கவனித்து கொண்டிந்தால் மட்டும் மேட்சை அனுபவிக்க முடியும். இல்லையேல் எல்லோரும் கத்துவதை மட்டுமே, பந்து பவுண்டரி தொட்டிருக்கிறது என தெரிய வரும். கொஞ்ச நேரத்தில் ஹஸ்ஸீயும் ரெய்னாவும் அவுட்டாக, தோனி ஆரவாரமான வரவேற்பில் மைதானம் உள்ளே வந்தார். எல்லோரையும் ரொம்ப ஏமாற்றாமல், அடித்தது 10 பால்கள் என்றாலும் வெறித்தனமான ஷாட்டுகளை அடித்து கூட்டத்தை உற்சாக படுத்தினார்.

5, 6 ஓவர்கள் போன பிறகு, மேட்சில் என்னமோ குறையதே என மண்டையை பிய்த்து கொண்டு, கடைசியாக பார்த்தால் அது கமெண்ட்ரி. ஓவர் இல்லாத டைமில் இந்தி பாட்டுகளையும் தமிழ் பாட்டுகளையும் மாறி மாறி ஒலிக்க விட்டு ஜனங்களை எழுந்து ஆட வைக்க எல்லா விதமான முயற்சிகளையும் கையாளுகின்றனர். ஓவர் ஆரம்பித்து விட்டால், மொத்த பாட்டும் அணைக்க படுகிறது, கூட்டமும் அமைதியாக ஆட்டத்தை பார்க்க உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு பால் முடியும் போதும் அங்கிருக்கும் டி.வியில் உடனடியாக ரீப்ளே காட்டபடுகிறது.அடுத்த பால் போட ஆரம்பிக்கும் வரை ரீப்ளே ஓடி கொண்டே இருக்கும், சரியாக போட ஆரம்பிப்பதற்கு 10 நொடிகள் முன்பு ரீப்ளே கட் ஆகி karbonn, volkswagon, Vodafone, citi bank, hero என திரையில் ஏதாவது ஒன்று தோன்றும். அப்படி தோன்ற செய்வது, பவுலிங் போடறாங்க பார் என சைகை செய்யும் யுக்தியாகும். எங்கெங்கோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாலும், அந்த டி.வி.யின் மேல் ஒரு கண் வைத்து கொண்டால் எல்லா பாலையும் தவறாமல் பார்க்கலாம்.

ஒவ்வொரு சிக்ஸிற்கும், போரிற்கும் கையிலிருந்த CSK கொடியினை ஆட்டி, நானும் ஆடி உற்சாகமடைந்தேன். இந்த விதத்தில் மட்டும் என் அம்மா இதற்கு நல்ல கம்பெனியாக அமையவில்லை. மற்றபடி நான் கவனிக்க மறந்த நிறைய விஷயங்களை காட்டி, பழைய கிரிக்கெட் ப்ளாஷ்பேக்குகளையெல்லாம் பேசி என நல்ல பேச்சு துணையாக இருந்தார். என் அம்மா எந்த மேட்ச்சையும் டி.வி.யில் கூட இது நாள் வரை சேர்ந்தாப்படி பார்த்ததில்லையாம், அந்த வகையில் இது தான் என் அம்மா பார்க்கும் முழு மேட்ச்சாம். நிறைய போர்களும், சிக்ஸ்களும், கேட்ச்களும் எங்கள் கேலரியை நோக்கி வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.


Strategic time out அறிவித்து விட்டால், மைதானம் முழுக்க ஆட்கள் திரண்டு விடுகிறார்கள். பிட்ச் சமப்படுத்துதல், ஸ்டெம்ப் சரி செய்தல், ப்ளேயர்களுக்கு குளிர்பானம் கொடுக்க என வசவசவென கூட்டம் கூடி விடுகிறது. அந்த நேரத்தில் போடும் பாட்டுகள் அனைத்தும் கெட்ட ஆட்டம் ரகம் தான். கலாசலா பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து திரும்ப திரும்ப ஒலிக்க செய்தார்கள் என்பதனை இங்கு சுட்டி காட்ட விரும்புகிறேன். நாக்க மூக்கா பாட்டை எதிர்பார்த்தேன், ஆனால் அது கடைசி வரை ஒலிபரப்பவில்லை. நேரம் குறைய குறைய மைதானத்தில் இருந்த ஆட்களெல்லாம் ஒவ்வொருவராக காணாமல் போகின்றனர். கடைசியாக 10 விநாடி கவுண்ட் டவுன் வரும் போது மைதானத்தில் ப்ளேயர்கள் மட்டுமே இருக்கின்றனர். கடைசி 10 விநாடிகளை ஒட்டு மொத்த கூட்டமும் சேர்ந்து கவுண்ட் டவுன் செய்தோம். அது ஒரு உற்சாக ஆராவரமாக இருந்தது.

மைதானம் முழுக்க செல்ல நாய் குட்டி போல் நினைத்த இடத்திற்கெல்லாம் ரவுண்டு அடித்து கொண்டிருந்த Spider web camera ஆச்சர்ய படுத்தாத கண்களே இல்லை. அது எங்கே போனாலும் அதை நோக்கி கூட்டம் கையசைத்து உற்சாகமாக கத்தியது. ஒவ்வொரு முறை பவுலர் பந்து போட ஓடி வரும் போதும், பவுலரின் கூடவே அதுவும் நகர்ந்து வந்து பவுலரின் பக்க பிம்பத்தை பதிவு செய்தது. பந்து போட்டு முடித்தவுடன், கேமரா மேல் பந்து பட்டு விடாமல் இருக்க கேமரா ‘சொய்ங்ங்ங்’ என்று மேலே பறந்து விடும். 


கூட்டத்தில் தோனிக்கும், ப்ரேவோக்கும் மட்டும் தான் வெகுவான உற்சாகம் தரப்பட்டன. இவர்கள் இருவரும் ஸ்ட்ரைக்கிங்கில் இருக்கும் போது, கூட்டம் தோனி தோனி தோனி என்று கத்துவது செம கிக்காக இருந்தது. ப்ரேவோக்கு பேட்டிங் பிடிக்கும் போது மட்டுமல்லாமல் பந்து போடும் போதும் இந்த உற்சாகம் தரப்பட்டது.

எப்போதாவது கூட்டம் டல்லடித்து சொங்கி போய் உட்காரும் போது IPL HORNஐ ஒலிக்க செய்கின்றனர். உடனே கூட்டம் உற்சாகமாகி, “ஹேய்…” என ஆர்ப்பரிக்கிறது.

டி.வி.யில் பார்ப்பதை ஒப்பிட்டு பார்க்கும் போது பெரும் பின்னடைவாகவும் பிரச்சனையாகவும் இருப்பது என்னவென்றால் யார் ஸ்ட்ரைக்கராக நிற்கின்றார், யார் எங்கே பீல்டிங் நிற்கிறான் என்பதே கடைசி வரை குழப்பத்திலே போகும். கடைசி வரை அனுமானத்தை விடாமல் பிடித்து தொங்கி கொண்டிருப்போம்.

என்ன தான் கடற்கரை பக்கத்தில் இருந்தாலும், புழுக்கம் தாங்க முடியவில்லை.

முரளி விஜய் 100 ரன் அடித்த போது ஒட்டு மொத்த ஸ்டேடியமும் எழுந்து நின்று கை தட்டி சந்தோஷம் கொண்டது. 222 ரன் ஏறினதே தெரியவில்லை. எல்லாம் வேகமாக நடந்து முடிந்தாற்போல் இருந்தது.

ஒரு இன்னிங்ஸ் முடிந்த பின் தியேட்டரில் இடைவேளை விட்டாற்போல் ஜனம் Food stallஐ படை எடுத்தது. விலையெல்லாம் அதிகமோ அதிகம். வாழைப்பழம் 10 ரூபாய், காபி 40 ரூபாய் ஆகியவனவற்றது சாம்பிள் விலைகள்.

Cheer girls-ஐ பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் பெரிதாய் ஸ்டேடியத்தில் கவனிக்கப்படுவதில்லை. 4 அடிக்கும் போதோ 6 அடிக்கும் போதோ மட்டும் தான் அவர்கள் வந்து பெர்பாமென்ஸ் காட்டுகிறார்கள். அந்த நேரத்தில் கூட்டம் ஒன்று ரீப்ளே பார்க்கிறது, இல்லையெனில் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடுகிறது இதனால் சீயர் கேர்ள்ஸ் முக்கியத்துவம் காணாமல் போகிறது. இன்னிங்ஸ் பிரேக்கில் மட்டும் தான் இவர்களுக்கு கவனிக்கப்படுத்த வாய்ப்பு, அந்த நேரத்திலும் கூட்டம் food stall-ற்கு போய் விடுகிறது. உண்மையில் Cheer girlsஐ பார்த்து பரிதாபம் தான் பட்டேன்.

அந்த ஒரு இன்னிங்ஸ் முடிவிலே நான் நிறைவு அடைந்து விட்டேன். இனி மாட்ச் தோற்றாலும் கவலையில்லை என்ற அளவிற்கு மனநிறைவு ஆகிவிட்டது. டெல்லி ஜெயித்தாலும் அது சேவாக்கின் தாண்டவத்தில் தான் ஜெயிக்க வேண்டும் என உள்ளூர ஓர் ஆசை இருந்தது.

இரண்டாவது இன்னிங்க்ஸில் சேவாக் தொடக்க ஆட்டக்காரராய் இறங்காததே மிகவும் வருத்தமளித்தது, 3-வதாக இறங்கி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது என்னை மிகவும் ஏமாற்றிவிட்டது. பிறகு 10 விக்கெட்களையும் வீழ்த்தியதையும் ஆசை தீர கொண்டாடி மகிழ்ந்தோம். பின்பு ஆசை தீர ஸ்டேடியத்தை சுற்றி பார்த்து புகைப்படங்கள் எடுத்து வெளியே வந்தோம்.







வெளியே வந்து சாப்பிட்டு, என் அம்மாவை கோயம்பேட்டிற்கு ஷேர் ஆட்டோ ஏற்றி அனுப்பி விட்டு வேளச்சேரி செல்வதற்கு ரயில் நிலையம் சென்றால் எல்லா ரயிலும் போய் விட்டிருந்தது. பஸ்ஸும் எதுவும் கிடைக்கவில்லை. ஆட்டோக்காரன் 300 ரூபாய் டிமாண்டினான். அதனால் ஆட்டோ வேண்டாமென்று முடிவெடுத்து நான் ஹீரோயிட்டிக்காக நடந்தே வேளச்சேரி செல்லலாம் என நடையை ஆரம்பித்தேன். கண்ணகி சிலை வரை நடந்து வருவதற்குள்ளே களைப்படைந்து விட்டேன். படுக்க வேண்டும் போல இருந்தது. இருக்கவே இருக்கு மெரினா பீச் என்று ஒரு பளபள தரையில் CSK கொடியை நீட்டி படுத்தேன். அங்கிருந்த பெரிய லேம்ப் போஸ்ட் கண்கள் கூச செய்தது. அப்போதைக்கு என்னிடம் 1045 ரூபாய் பணமும், 8000 மதிப்புள்ள செல் போனும் இருப்பதால் வெளிச்சத்தில் படுப்பது தான் புத்திசாலித்தனம் என்று அங்கே புரண்டு புரண்டு படுத்தேன். தூக்கமே வரவில்லை. நல்ல கடற்கரை காற்று இருந்தும் தூக்கமே வரவில்லை, வெற்றியின் உற்சாகம் இன்னமும் குறையாமல் இருந்தது. 45 நிமிடம் கடந்திருக்கும் ஆழ்ந்த ஓய்வினை முழு விழிப்பில் எடுத்து கொண்டிருந்தேன், கொஞ்ச நேரத்தில் தலைக்கு பக்கத்தில் வண்டு ஒன்று தலையை சொறிந்தது, அதை விரட்டி விட்டு திரும்பி பார்த்தால் என்னை சுற்றியும் நான் பெயர் அறியாத பல பூச்சிகள், என்ன பண்ண முடியும் அப்படியே தூங்க வேண்டியது தான் என்று ஓய்விற்கு திரும்பினேன்.

கொஞ்ச நேரத்தில் ஒரு போலீஸ்காரர் வந்து, இங்கெல்லாம் தூங்க கூடாது, என சொல்லி என்னை யார் என்னவென்று விசாரித்து, இங்கெல்லாம் படுக்காதீங்க ரொம்ப ஆபத்தான இடம் இது, யார் வேண்டும்னாலும் கத்தியை காட்டி பணம் பறிச்சிட்டு போய்டுவாங்க,  போலீஸ் ஸ்டேசன் வந்து அட்ரஸ் கொடுத்துட்டு அங்கேயே படுத்துகிட்டு காலைல போய்க்கோங்க என்று சொன்னார், இந்த டீல் நல்லா இருக்கே என்று நானும் அவருடனே கிளம்பினேன். என்னுடன் சேர்த்து 7 பேரை ஜீப்பில் ஏற்றினார். எனக்கு ஜன்னல் ஸீட் கிடைத்தது. ஜாம் பஜார் போலீஸ் ஸ்டேசனிற்கு வண்டியை விட்டார். எங்க எல்லாரையும் இறக்கி பேர், விலாசம் எல்லாத்தையும் வாங்கி கொண்டு போலீஸ் ஸ்டேஷன் ஹாலிலே படுத்து தூங்க சொன்னார். என்னை தவிர எல்லோரும் யார் முதலில் படுப்பது என சற்று தயங்கிய படி இருக்க, நான் தான் முதலில் நீட்டி படுத்தேன். நல்ல பேன் காற்றாய் இருந்தது. CSK கொடியை தலைக்கு வைத்து கொண்டு தூங்க ஆரம்பித்தேன். அந்த நிமிடம் இந்திய கொடியை வாங்காமல் CSK கொடியை வாங்கியதற்கு சந்தோஷம் கொண்டேன். சீக்கரமாகவே தூங்கிவிட்டேன். காலை 4.30 மணிக்கு முழிப்பு வந்தது.  என்னை கூட்டி வந்தவர் சின்சியராக எதையோ எழுதி கொண்டு இருந்தார். அவரிடம் சொல்லி கொண்டு ஸ்டேசனை விட்டு புறப்பட்டு வெளியே வந்து, வேளச்சேரி ரயில் பிடித்து இருப்பிடம் வந்து சேர்ந்தேன்.

என்னை அத்தனை அக்கறையாக பார்த்து கொண்ட அந்த காவலருக்கு இந்த கட்டுரையையும், என் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.