Saturday 25 May 2013

சே....!





ஜேம்ஸ் பாண்டு படங்கள் நமக்கு தெரியும். அந்த படத்தை பார்த்து ஒருவர் ரொம்பவும் சிலிர்த்து போய், நாமும் இப்படியான ஒரு கதையை எடுக்க வேண்டும் என முடிவு செய்து கதையில் ஒரு ஆண் கதாபாத்திரம் துப்பறிவதற்கு பதிலாக, ஒரு பெண் கதாபாத்திரம் துப்பறிவதாக மாற்றி போட்டு ஜேம்ஸ் பாண்டு கதையை, அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார். அதற்கு ரிவால்வர் ரீட்டா என்று பெயர் வைக்கிறார் என்று வைத்து கொள்வோம். இப்போது இந்த ரிவால்வர் ரீட்டாவை மற்றொருவர் பார்க்கிறார், இவரும் சிலிர்த்து போகிறார், நல்ல கதையாக இருக்கிறதே, நாமும் ஜெராக்ஸ் எடுத்து விடுவோம் என ஆசை பட்டு, பெண் கதாபாத்திரத்தை ஆண் கதாபாத்திரமாக மாற்றி போட்டு ஒரு படம் எடுக்கிறார். அதற்கு துப்பறியும் துரைசாமி என்ற பெயர் வைத்து ரிலீஸ் செய்கிறார் என்று வைத்து கொள்வோம்.

இப்போது என்ன ஆகும், ஜேம்ஸ் பாண்ட் படமும், துப்பறியும் துரைசாமி படமும் ஒன்று போலவே இருக்கும், இல்லையா... அதாகப்பட்டது A=B, B=C, So A==C. இதே தான் சேட்டை மற்றும் டெல்லி பெல்லியிலும் நடந்திருக்கிறது.

வில்லனின் வைர பொட்டலம் எங்கெங்கோ சுற்றி வந்து ஹீரோ கையில் சிக்கும், அதனால் ஹீரோவிற்கு ஏகப்பட்ட சிக்கல் வரும், அதையெல்லாம் ஹீரோ எப்படி சமாளிக்கிறார் என்ற கதையை ஹிந்தி சினிமாவும், தமிழ் சினிமாவும் கண்டு கண்டு சலித்து போனதால் தான், நிறைய adults only விஷயங்களை சேர்த்து டெல்லி பெல்லி வெளிவந்தது, அந்த adults only விஷயம் தமிழக மக்களுக்கு பிடிக்கவே பிடிக்காது என்று எப்படியோ உளவுத்துறை உதவியுடன் கண்டுபிடித்து, ‘பலான’ விஷயங்களை மட்டும் எடுத்து விட்டு புதுப்பொலிவுடன் “சேட்டை” வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து விட்டு, திரையரங்கை விட்டு வெளியே வரும் மக்கள், ஏனோ ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு ஓடும் குழந்தைகள் போல், முண்டியடித்து வீட்டுக்கு ஓடுகின்றனர். அது தான் ஏன் என்று தெரியவில்லை....

இயக்குனர் கண்ணனுக்கு என் அனுதாபங்கள்...!

‘டெல்லி பெல்லி’ படம் அமோகமான வசூலை அள்ளியதால் கண்ணன் இப்படத்தினை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டியிருந்திருக்க கூடும், ஆனால் துயரம் என்னவென்றால், இந்த படம் எதற்காக ஹிட் ஆனது என்ற அடிப்படையை கூட அவர் புரிந்து கொள்ளாமல், ரீமேக்கில் குதித்து விட்டார். கதை பிரமாதமான கதை, அது தான் மக்களுக்கு பிடித்திருக்கிறது என்று நினைத்து விட்டாற் போலும்... ஆனால் மக்களுக்கு பிடித்தது அதில் இருந்த ‘பலான’ மேட்டர்களும், கெட்ட வார்த்தைகளும், அருவருப்பான நகைச்சுவைகளும் தான் என்று அவருக்கு புரியாமல் போய் விட்டது.

எழுதுவதற்கே சலிப்பாக இருக்கிறது.

Adults only படங்கள் இந்தியாவை தவிர நிறைய நாடுகளில் சக்கை போடு போடுகிறது. American Pie படம் மட்டுமே 8 பாகம் வெளியானது. Hardcore ஆன படங்களை விட “காமெடி கலந்த செக்ஸ்” படங்கள் தான் வசூலை அள்ளும். இப்படி பட்ட படங்கள் இந்தியாவில் மட்டும் வெளிவராமலே இருந்தது. காரணம் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்ற யூகம். அதனால், தலையில் துண்டு போர்த்தி வந்து பார்க்கும் அங்கிள்களுக்கு மட்டும் ஷகிலா படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருந்தது நம் திரை உலகம். அதிலும் கூட இப்போதெல்லாம், முன்பு போல் அதிகம் படம் வருவதில்லை என சகல திசைகளில் இருந்தும் புகார்கள் வர ஆரம்பித்து விட்டன. இப்படியான ஒரு கட்டத்தில் தான் ஆமிர் கான் தயாரிப்பில் டெல்லி பெல்லி வந்தது. ஒரு மைல் கல், ஓர் புரட்சி, ஓர் ஆராய்ச்சி என பத்திரிக்கைகள் வானளாவ புகழ்ந்தது.

படம் முழுக்க எத்தனை Fuck உச்சரித்தார்கள் என்று விரல் விட்டு எண்ண கூட முடியாது. சராமரி Fuck கள் படம் முழுக்க இருக்கும். ஒரு இந்திய சினிமாவை செக்ஸுவல் வெர்ஷனில் மாற்றியிருப்பார்கள்.

ஒரு கல்யாண வீட்டில், மாப்பிள்ளை பெண்ணுக்கு தாலி கட்ட போகும் சமயத்தில், மணப்பெண்ணின் உண்மை காதலன் உள்ளே புகுந்து “நிறுத்துங்க... அவ என்னோட காதலி” என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தியதை எத்தனை படத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் டெல்லி பெல்லி படத்தில் கல்யாண வீட்டில் புகுந்து “இந்த கல்யாணம் நடக்காது... this girl has given me blow job, and because, I am 21st century man, I’ve given her Oral pleasure also... ” என்று சொல்வான். இதெல்லாம் தமிழில் அப்படியே உருவி விட்டார்கள், ஏனென்றால் தமிழ் மக்கள் ஒழுக்கசீலர்கள் ஆயிற்றே.... இப்போது என்ன பிரச்சனையென்றால் சேட்டை படமும், பஞ்சதந்திரம் படமும் ஒன்று போலவே இருக்கிறது. கலகலப்பும் கூட....

மற்ற படி, படத்தில் எல்லாமே அட்டை காப்பி, தமிழகத்திகு ஒரு ஜெயம் ராஜா போதாது என்று மற்றுமொருவர் வந்தே விட்டார். கதைக்களத்தை கூட மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றவில்லை, இப்படியிருக்க எதற்கு இந்த படத்தை ரீமேக் செய்தார்கள் என்றே தெரியவில்லை. பேசாமல் ‘பிட்டு’ சீன்களை எல்லாம் உருவி விட்டு வெறும் மொழிபெயர்ப்பு மட்டும் செய்திருக்கலாம். கண்ணனுக்கு மொழிபெயர்ப்பு மேல் ஏன் நம்பிக்கையில்லை என எனக்கு புரியவில்லை, ஜாக்கி சான் படத்தையெல்லாம் மொழிபெயர்ப்பிற்காகவே போய் பார்க்கும் கூட்டம் இருக்கிறது என யாராவது அவரிடம் சொல்ல வேண்டும்.

கதைக்கு ஹன்சிகா தேவையே இல்லை. ஏதாவது சாதாரண ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டே போதும். ஆனால் ஹன்சிகாவை போட்டதுமில்லாமல் அவருக்கு வெயிட்டேஜ் கொடுக்கிறேன் என்று சொல்லி பாட்டு மேல் பாட்டாக போட்டு தியேட்டர் கேன்ட்டீனுக்கு நல்ல லாபம் கொடுத்தார்.

நாசர், ஒரு இடத்தில் ஹன்சிகாவிடம் நீ கடைசியாக ஆர்யாவை எங்கு வைத்து சந்தித்தாய் என்று கேட்பார். பீச்சில் வைத்து சந்தித்தேன் என்று ஒரே வார்த்தையாக சொல்லியிருக்கலாம். அதற்கு ஒரு ப்ளாஷ்பேக், அதில் ஒரு பாட்டு, 6 நிமிட ப்ளாஷ்பேக்கில், 5 நிமிடம் பாட்டு தான், ஒரே நிமிடம் தான் வசனம். என்னத்த சொல்வது, jab we met—ஐ கற்பழிப்பு செய்த கும்பல் என்று தெரிந்த போதே சுதாரித்து கொண்டிருந்திருக்க வேண்டும். சந்தானத்திற்காக போய் ஏமாந்தது தான் மிச்சம். சந்தானம் கஷ்டப்பட்டு அடிக்கும் காமெடிகள் எல்லாம், டெல்லி பெல்லி படத்தில் விஷுவலாகவே இருந்தது. வீணாக அதை கெடுத்தது தான் மிச்சம்.

படத்தில் குட்டி குட்டியாக ஏகப்பட்ட சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கும், அதெல்லாம் சந்தானத்தாலே பாழாய் போனது. ஒரு காட்சியில், இம்ரான் கானும்(ஆர்யா), செனாஸும் (ஹன்சிகா) குடும்பத்தோடு உட்கார்ந்து மதிய சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். அப்போது அந்த அமைதியான வீட்டில், திடீரென்று 15 கடிகாரங்கள் ஒரே நேரத்தில் அலறி அடங்கும். எல்லோரும் செனாஸின் அம்மாவை திரும்பி பார்ப்பார்கள், அவள் சிரித்து கொண்டே “It;s one” என்பாள். அதாவது மணி ஒன்று. அப்படியானால் 12 மணி ஆனால் வீடு எப்படி அலறும் என்று நம் கற்பனைக்கு விட்டு விடுவார்கள். ஆனால் இந்த காட்சிகளை எல்லாம் தமிழ் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அவர்களாகவே நினைத்து கொண்டார்கள், அதனால் நீக்கி விட்டார்கள். ஏன் தான் தமிழனை எல்லாரும் முட்டாள் ஜந்து என நினைக்கிறார்களோ தெரியவில்லை, ஆனால் இதே தமிழகத்தில் தான் Da vince code –ம் மரண ஹிட் அடித்தது, அதை ஏன் நினைத்து பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என தெரியவில்லை.

இன்னும் நிறைய சொல்லலாம், ending title card பாட்டையே காணோம். அது தான் மிக மிக முக்கியமான பாட்டு, அதை எடுத்து விட்டார்கள்.

எந்த ஜோசியர் “சே” என்கிற எழுத்தில் ஆரம்பிக்கும் படி படம் வையுங்கள் என்ற சொன்னாரோ தெரியவில்லை, சேட்டை என்று பெயர் வைத்து விட்டார்கள். படத்தின் பெயரை பெயருக்கு “சேட்டை டா” என்று இறுதியில் உபயோக படுத்த படுகிறது. அதை எதற்கு சொல்கிறார்கள் என்று யாருக்கு வெளிச்சமோ தெரியவில்லை !

ஆனால் படக்குழுவினரின் ஜோசியரை நான் மிகவும் பாராட்டுகிறேன். அவருக்கு தான் படம் பார்த்து வெளியே வரும் மக்களின் ரியாக்‌ஷன் முன்னமே தெரிந்திருக்கிறது... ஜோசியம் எல்லாம் உண்மை தான் போல் இருக்கிறது....!  

No comments:

Post a Comment