Friday 25 January 2013

ஸ்வாதி ராகவ் 6



அன்பு சொல்லி முடித்து ஒரு இடைவெளி விட்டது கிட்டதட்ட  எல்லோருக்கும் பதற்றத்தையும், ஆர்வத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியது. அவன் பேச பேச அவனது பேச்சின் சாரத்தில் உணர்ச்சிகள் வேகம் எடுத்துகொண்டு இருந்தன. அந்த வேகம் மொத்தமும் எதை நோக்கிய உணர்வு என்று யாரும் யூகிக்க முடியா வண்ணம் இருந்தது. ஆத்திரமா, கோபமா, வன்முறையா, கதறலா, அழுகையா இதில் எதில் இந்த மொத்த பேச்சும் சென்று முடிய போகிறது என்ற பதற்றம் கிட்ட தட்ட எல்லோரது கண்களிலும் தெரிந்தது. கடற்கரையில் அவர்களை கடந்து செல்லும் அனைவரும், அவர்களை ஒரு கணம் திரும்பி பார்க்கும் தருணம் அவர்களுக்குள் மிகுந்த அசூயை ஏற்படுத்தியது. அன்பு பேசாமல், அமைதி காத்த தருணத்தில் யாரும் ஒருவரோடு ஒருவர் பேசி கொள்ள விரும்பவில்லை, பார்வை மொழி மட்டுமே அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது. அவனை ஆறுதல் படுத்தவோ, ஆசுவாச படுத்தவோ யாரும் எத்தனிக்கவும் இல்லை, காரணம் அவன் அவனது முழு கட்டுப்பாட்டில் இருந்தான், மிகுந்த வலி ஏற்படுத்திய தருணங்களை சொல்ல விரும்பாமல் தவிர்த்து தவிர்த்து சொல்லி கொண்டிருந்தான், எங்கே அவனது வலி மிகுந்த பேச்சு உச்சத்தை அடைந்துவிடுமோ என்ற பயம் எல்லோரையும் அழுத்தி கொண்டிருந்தது. இந்த இரண்டு வருடத்தில் அவனது மலர்ச்சியான முகம், பேச்சில் தெறிக்கும் கேலிகள், எல்லாமும் காணாமல் போய் இருந்ததை எல்லோராலும் அப்போது தான் உணர முடிந்திருந்தது. அன்பு சொல்ல வரும் விஷயத்தை கேட்க முழுதுமாய் ஆர்வம் இருந்தாலும், அவனை பேச விடாமல் தடுப்பதே நலம் என்ற எண்ணமே அனைவரது மனத்திலும் இருந்தது. காரணம் பேசி கொண்டிருக்கும் இடம் பொது வெளி என்பதே அனைவருக்கும் இடைஞ்சல் கொடுத்து கொண்டு இருந்தது. ஆனால் யார் அதை செய்வது என்பதில் தடுமாற்றங்கள் கண்டு கொண்டிருந்தனர். ஏனெனில் அன்பு முகம் சமாதான் படுத்தும் அளவிற்கான தேவையை ஏற்படுத்தாமல் தெளிவானதாகவே இருந்தது. நிறைய நாட்களாக யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்த விஷயத்தை சொல்லும் போது அவனுள் இருக்கும் உணார்ச்சியை அவர்களால் உணர முடிந்தாலும், அவனது முதிர்ச்சி தான் அவர்களை ஆச்சர்யப்படுத்தியது.

அன்பு பேசாமல் இருப்பதால் ஏற்பட்டு கொண்டிருக்கும் மௌனம் யாராலும் தாங்கி கொள்ள முடியாமல் இருந்தது, நொடிக்கு நொடி அதை பாரத்தை அளித்து கொண்டிருந்தது, அந்த மௌனத்தை ரோஹித்தே துணிந்து உடைத்தான். மிகவும் கம்மிய குரலில் பேச்செடுத்தான், “அன்பு, வீட்டுக்கு போய் பேசிக்கலாமா?” என்று சொல்லி முடித்த போது நிர்மலாவும் அவனோடு சேர்ந்து கொண்டாள், “ஆமா அன்பு, வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” அவளை தொடர்ந்து ஸ்வாதியும் அவளை ஆமோதித்தாள், ராகவ் மட்டும் அவர்கள் பக்கம் நிற்காமல், ”விடுங்க, அவன் பேசட்டும், பேசினா தான் அவன் பாரம் மொத்தமும் இறங்கி Relief ஆவான்”

அவன் சொல்லி முடிக்கும் முன்னரே, அன்பு குறுக்கிட்டு, “என் பாரத்தை இறக்கி வைக்க ஒண்ணும் உங்களை நான் கூப்பிடலை, அப்படி யாரும் நினைக்க வேண்டாம், யார்கிட்டயும் இவ்ளோ நாளா இந்த விஷயத்தை சொல்லாம உங்க கிட்ட சொல்றேன்னா, வெட்டி அனுதாபத்துக்காக இதை சொல்லிட்டு இருக்கலை” -  பேச்சின் உஷ்ணம் ராஜீவ்வை மட்டும்  அல்லாமல் எல்லோரையும் தூக்கிவாரி போட்டது. ராஜீவ் மெலிதான குரலில் அவனை மன்னிக்க சொல்லி கேட்டு, மேலே தொடர சொன்னான்.

“3 மாசத்துக்கு முன்னால Iscope technology ங்கற Software companyல சேர்ந்தேன். அதுவும் ஒரு Backdoor process மூலமா தான் சேர்ந்தேன். மறுபடியுமா backdoorல சேர்றனு நிறைய அப்பா, அம்மா, அண்ணனுங்க எல்லாம் கேட்டாங்க. ஆனா என்னால வேலை இல்லாம இருக்கவே முடியலை. ஒரு வேலை கிடைக்கிற மாதிரி கிடைச்சு கிடைக்காம போனதே, என்னை ஒரு வேலைக்கு போக சொல்லி அதிகம் துரத்திச்சு. ஏற்கனவே கிடைச்ச அனுபவத்துல இருந்து பாடம் கத்துக்கிட்டதுல இந்த முறை எவ்வளவோ உஷராய் இருந்தும், கடைசியில ஒண்ணுமில்லாம தான் போனேன். இதுல போய் சேர்ந்தது எப்படினு கேட்டா இதுவும் consultancy மூலமா தான். ஆனா இவங்களை ஓரளவுக்கு கூட நேரடியா தெரியாம போனது தான் சிக்கலா போச்சு.

இந்த consultancy ஐ எப்படி தெரியும்னு சொல்ல ஆரம்பிச்சாலே, அது ஒரு பெரிய கதையாய் போய் முடியும்னாலும், இந்த இடத்துல இது ரொம்ப தேவைங்கறதால சொல்றேன். இந்த கன்ஸல்டன்சியை நான் நேரடியா கூட தேடி போய் புடிக்கலை, ஏதாவது தெரிஞ்ச இடத்துல வேலை இருந்தா சொல்லுங்கன்னு நிறைய பேர்கிட்ட சொல்லி வெச்சுருந்தோம். அதுல ஒரு புண்ணியவான் கோத்து விட்டது தான் இந்த கன்சல்ட்டன்சி. அந்த புண்ணியவான் பேரு ரகு. ஒரு நாள் அவனா போன் செஞ்சி ஒரு பொண்ணோட நம்பரை கொடுத்து பேச சொன்னான், அந்த பொண்ணு இன்னொரு பொண்ணு நம்பரை கொடுத்து பேச சொல்லிச்சு, அந்த பொண்ணு இன்னொரு பையன் நம்பரை கொடுத்து பேச சொன்னான். அந்த ஒருத்தன் தான் கன்ஸல்டன்சிக்காரன். இப்படி அந்த கன்ஸல்டன்சியையே 4-5 பேர் கை மாறி தான் தெரியும். இதுல இன்னொரு விஷயம் என்னான்னா அந்த கன்ஸல்டன்சி காரன் மனோஜ்ங்கறவன இன்னைய வாரைக்கும் நான் பார்த்ததேயில்லை, அவன் ஆபீஸும் எங்க இருக்கும்னு எனக்கு தெரியாது. ஆனா ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல போன்ல பேசிப்போம். ஆரம்பத்துல இவனுக்கு போன் பண்ணி பேசும் போதும், இவன் மேலயும் பெரிசா நம்பிக்கை ஏற்படலை. அவன் ரெஸ்யும்மை அனுப்ப சொன்னதுக்காக நானும் கடனுக்குனு மெயில்லை அனுப்பி வைச்சேன். அவன் அடுத்த நாள் சாயங்காலமே எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணான். அப்ப இருந்து ஒரு நாளைக்கு 2 முறையாவது போன் பண்ணி அங்க வேலை இருக்கு, இங்க வேலை இருக்கு, 3 லட்சம் ஆகும், 4 லட்சம் ஆகும்னு சொல்வான். அவன் சொல்ற கம்பெனியெல்லாம் HMT, CTS, Ramco Cementsனு இந்த ரீதியில தான் இருக்கும். இது வரைக்கும் 15 கம்பெனியையாவது சொல்லி இருப்பான். ஒரு சில கம்பெனிங்களோட கமிட்மெண்ட்டை 6 லட்சத்துக்கு மேல சொன்னா மட்டும் அதை வேணாம்னு சொல்லிடுவேன். மீதி 5 லட்சத்துக்கு கீழ இருக்குற எல்லா கம்பெனியையும் இன்டர்வ்யூ ஏற்பாடு பண்ணுங்கன்னு தான் சொன்னேன். அவனும் சரின்னு தான் சொல்வான். ஒவ்வொரு இன்டர்வ்யூக்கும் தேதியை வேற 15 நாளைக்கு முன்னாடியே சொல்லிடுவான். ஆனா கரெக்டா அந்த தேதி வரும் போது, ஏதாவது காரணம் சொல்லி இன்டர்வ்யூ போக வேண்டாம்னு சொல்லிடுவான். அவன் சொல்ற காரணமெல்லாம் இருக்கே ஏதேதோ சொல்வான், சில காரணத்தையெல்லாம் கேட்டாலே கடுப்பாகிரும், ஒண்ணுமில்லாத காரணமெல்லாம் சொல்லி இண்டர்வ்யூ கேன்சல் ஆய்டுச்சுன்னு சொல்வான். உண்மையிலே பார்த்தா, அவன் கிட்ட experienced candidates அ அனுப்பி விட சொல்லி தான் கேட்டு இருப்பாங்க. ஆனா இவன்கிட்ட எல்லோருமே என்னை மாதிரி freshersஅ இருக்கிறதால, இவன் அவங்க கிட்ட எங்களை சேர்த்திக்க சொல்லி கேட்டு, கமிஷன் கொடுக்கிறதா சொல்லி HR கிட்ட பேசி பார்ப்பான். HR, கம்பெனியில பேசி பார்த்துட்டு சொல்றேன்னு சொல்லி இருப்பாரு. அவங்க கம்பெனியில இவங்க பயந்த மாதிரியே வேண்டாம்னு சொல்லிடுவாங்க. இதுக்கு நடுவுல கன்சல்டன்சிக்காரன் எனக்கு இண்டர்வ்யூ தேதி கொடுக்கறதெல்லாம் ஒரு காமெடி தான். சில சமயம் 5-6 experienced candidates ஐ கன்சல்டன்ஸி கூட்டிட்டு வந்தான்னா வேணா ஒரு 2 freshers candidates ஐ எடுத்துப்பாங்க. அந்த நம்பிக்கையில தான் இவனுங்க கம்பெனிக்காரன் பின்னால தான் தொங்குவானுங்க. அவனுங்க எப்பாவாவது முடிஞ்சா பார்ப்பானுங்க, பெரும்பாலும் கழட்டி தான் விடுவாங்க. இதுல என்னை மாதிரி ஸ்டூடண்ட்ஸ் ஏமாந்து போறதை விட கன்சல்டன்சிக்காரனுங்க தான் அதிகம் காஞ்சி போவானுங்க. இந்த விஷயமெல்லாம் எனக்கு லேட்டா தான் தெரிஞ்சது. ஆனா, இதுல் எனக்கு என்ன ஒரு குழப்பம்னா, ஏன் இந்த கன்சல்டன்சிக்காரன் தேவையில்லாம இன்டர்வ்யூ தேதிலாம் சொல்லி நமக்கு ஹோப் கொடுத்து கடுப்பேத்தறான்னு நிறைய நாள் புரியலை. அதுல என்ன விஷயம்னா இந்த மாதிரி இந்த மாதிரி இந்த இந்த கம்பெனியில எல்லாம் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்னு அவன் போய் எப்படி சொல்லுவான், ஒரு கன்சல்டன்சிக்காரன் அவ்வளவு transparentஆ இருந்தா ஒரு candidate எப்படி அவனோடயே இருப்பான்னு, அவனுக்கு ஹோப் கொடுத்து கொடுத்து, இன்னும் 10 நாள்ள எப்படியும் வேலைக்கு சேர்ந்திடலாம்னு நம்பிக்கை சொல்லி, வேற கன்சல்டன்சி பக்கம் போகாம பார்த்துக்க தான் இந்த ஏற்பாடு. மூனு மாசத்துக்கு மேல ஆகியும் ஒரு நல்ல கம்பெனியையும் அவனால புடிக்க முடியலை. நல்ல கம்பெனி அனுப்பினா தான் அவனுக்கும் லாபம் அதிகம் கிடைக்கும். ஆனா எதுவும் இல்லாததுக்கு என்னை கடைசியா இந்த iscope technnology ல கொண்டு வந்து விட்டான்.

வேலை கிடைச்சா போதும்னு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த முறையும் ஏமாந்துற கூடாதுன்னு உஷாராவே இருந்தேன். அதனாலே எவ்ளோ பணம்னாலும் முதல் மாசம் சம்பளம் வாங்கனதுக்கு அப்புறம் தான் கொடுப்பேன்னு சொல்லிட்டேன். அவனும் சரின்னு சொன்னதால மேற்கொண்டு பேசினோம். கமிட்மண்ட் தொகை ‘டூ பாய்ண்ட் ஃபைவ் லேக்ஸ்’ என்று அறிவித்தான். இது வரை சொன்ன கமிட்மெண்ட் தொகையிலேயே இது ரொம்ப சின்ன தொகையா இருக்கும் போதே நான் சந்தேகப்பட்டு இருந்திருக்கனும், ஆனா அவன் அதை ஒரு சின்ன கம்பெனின்னு தெளிவா சொல்லிட்டதால இன்டர்வ்யூக்கு ஒத்துகிட்டேன்.

தெரிஞ்சவங்க கிட்டலாம் இந்த கம்பெனி எப்படின்னு விசாரிக்க சொன்னேன், விசாரிச்சா யாருக்குமே இந்த கம்பெனியை பத்தி தெரிஞ்சிருக்கலை. சென்னையில இது மாதிரி நிறைய சின்ன கம்பெனிங்க இருக்கும், சின்ன கம்பெனின்னு பார்க்காம் போய் சேர்ந்துக்கோன்னு சொன்னாங்க, அவங்கல்லாம், நான் சேர போறது, பணம் கொடுத்துனு தெரிஞ்சா போய் சேர்ந்துக்கோனு சொல்வாங்களான்னு தெரியலை. அப்புறம் கடைசியா இன்டர்வ்யூக்கு போனேன். நெல்சன் மாணிக்கம் ரோட்ல தான் அந்த கம்பெனி இருந்துச்சு. என்னோட சேர்ந்து 4 பேர் இன்டர்வ்யூக்கு வந்திருந்தாங்க. நான் எப்படி சந்தேகமாவும், தயக்கமாவும், வேலை கிடைக்க போகுதுன்னு அடி  மனசுல ஒரு சந்தோஷத்தோட வாந்திருந்தேனோ அவங்களும் அதே மாதிரி வந்திருந்தாங்க. அதுலயே அவங்களும் backdoor மூலமா தான் வந்திருக்காங்கன்னு புரிஞ்சது. எங்க 5 பேரையும் ஒரு குட்டி ரூமுக்குள்ள விட்டு ஒரு written examination வெச்சாங்க. அந்த exam-ஐ எதுக்கு வெச்சாங்கன்னு கூட தெரியலை. அடுத்தவன் பேப்பரை எட்டி பார்க்கலாம் தேவை இல்லாத மாதிரி, திரும்பி பார்த்தால்லே எல்லாமே தெரியற அளவிற்கு நாங்கல்லாம் அவ்வளவு பக்கத்துல உட்கார்ந்துட்டு இருந்தோம். என் கூட வந்தவனுங்க என்னை விட மக்கு சாம்பிராணிங்களா இருந்தானுங்க, ரொம்ப ஸிம்பிளான ப்ராப்ளத்தை கூட என்னை கேட்டு எழுதி போய் கொடுத்தானுங்க.

கம்பனியுடைய இன்டீரியர்ஸ்லாம் நல்லா இருந்ததுனாலயும், employeesலாம் கணிசமா இருந்ததுனாலயும் என் மனசுல இருந்த தயக்கம்லாம்ம்  காலி ஆய்டுச்சு. Written exam முடிச்ச ரெண்டாவது நிமிசத்துலேயே HR Roundக்கு கூப்டானுங்க. நாங்க எழுதி கொடுத்த பேப்பரை திருத்துனாங்களா, நாங்க செலக்ட் ஆகிட்டோமா இல்லையான்னு எதுவுமே சொல்லாம HR Roundக்கு கூப்பிட்ட முதல் கம்பெனி இது தான். என் பேரை தான் முதல்ல சொல்லி கூப்பிட்டாங்க, கூப்பிட்டு ஒரு கான்ஃப்ரன்ஸ் ரூம்ல உட்கார வைச்சாங்க. கொஞ்ச நேரத்துல ஒரு சின்ன பையன் மாதிரி ஒருத்தன் உள்ள நுழைஞ்சு எனக்கு எதிர்ல உட்கார்ந்தான், என்ன  தான் பார்த்தாலும் என்னை விட 2 வயசு தான் பெரியவனா இருப்பான். நான் மேலயும் கீழயும் பார்க்கறதை பார்த்துட்டு, அவனாவே HR லீவு, அதனால நான் தான் இன்டர்வ்யூ எடுக்க போறேன்னு சொல்லி இளிச்சான். அவனாலேயே அவனை ஒரு knowledged person-அ காட்டிக்கவே முடியலை. வந்து உட்கார்ந்து tell me about yourself னு சொன்னான். கடகடன்னு சொல்லி முடிச்சேன். அப்புறம் ஒரு நிமிஷம் வரைக்கும் என்ன கேக்கறதுன்னு தெரியாம ரெஸ்யுமையே உத்து உத்து பார்த்துகிட்டு இருந்தான். அப்புறம் கடைசியா program போடுவீங்களான்னு கேட்டன், போடுவேன்னு சொன்னான். Odd number series generate பண்ண சொல்லி ஒரு ப்ரொக்ராம் எழுத சொன்னான். கரெக்டா எழுதிட்டேன். அப்புறம் matrix multiplication போட சொன்னான். அதையே போட்டு அவன் கையில கொடுத்தேன். ஆனா, நான் போட்டதுல என்னமோ அவனுக்கு ஒரு சந்தேகம் வந்துடுச்சு போல… Program logicஅ follow பண்ணி, follow பண்ணி ஒவ்வொரு output ஆ எழுதி சரி பார்த்துட்டு இருந்தான். அப்புறம் ஒரு கட்டத்துல, அவன் அவனோட cabin போய் அவன் notes-அ refer பண்ணி, அதை இன்னொருத்தன் கிட்ட கேட்டு, கடைசியா வந்து ஒரு சின்ன semicolon mistake மட்டும் தான் தப்புனு சொல்லி, என்னை போய் reception ல உட்கார சொன்னான்.

என்னை மாதிரியே மத்தவங்களையும் கூப்பிட்டு, அதே ப்ரொக்ராமை போட சொல்லியிருக்கான். என்ன டா ஒரு HR லீவு போட்டு போய்ட்டா, அவருக்கு alternate கூடவா இல்லாம கம்பெனி நடத்துறாங்கன்னு நினைச்சிகிட்டேன். ஒரு 2 நிமிஷம் கூட இல்லை, எங்க எல்லாரையும் ஒருத்தர் ஒருத்தரா கூப்பிட்டு appointment order அ கொடுத்து, ஒரு தேதி சொல்லி எல்லாத்தையும் வர்ற சொன்னாங்க. எப்படியோ வேலை கிடைச்சது டா சாமின்னு, சந்தோஷமா வெளியே வந்தேன். வீட்டுக்கு எல்லாம் போன் பண்ணி இந்த மாதிரி வேலை கிடைச்சதுன்னு சொன்னேன், அப்படியே கன்சல்டன்சிக்கும் போன் பண்ணி, இண்டர்வ்யூ முடிஞ்சதுன்னு சொன்னேன். அவன் தடாலடியா எப்ப பணம் பண்ணுவிங்கன்னு கேட்டுட்டான், நான் தான் முதல் மாசம் சம்பளம் வந்ததுக்கு அப்புறம் தான் கட்டுவென்னு உறுதியா சொல்லியிருந்தேனேன்னு அவனுக்கு ஒரு முறை ஞாபக படுத்த வேண்டியதாய் போயிடுச்சு, அப்ப ஒ,கே சொன்ன பக்கி, அன்னைக்கே ராத்திரியே மறுபடியும் போன் பண்ணி, இல்லை சார், பணத்தை உடனடியா கட்ட சொல்லீ கம்பெனியில கேட்கறாங்க, இல்லைன்னா உங்க position இன்னொரு ஆளை appoint பண்ணிடுவேன்னு சொல்றாங்கன்னு சொல்லி தலையில குண்டை தூக்கி போட்டான்.

நானும், எங்க வீட்டில உள்ளவங்களும் எவ்வளவோ பேசி பார்த்தோம், அவன் எதுக்கும் மசியலை, பணம் உடனடியா வேணும்னு கராறா நின்னான். முந்தி ஏமாந்த மாதிரி, ஏதும் நடந்துடுமோன்னு ரொம்ப பயந்தேன். எங்க அப்பா, முடிவை என் கிட்ட விட்டுட்டாரு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. அன்னைக்கு இன்டர்வ்யூவே ஒரு தினுசா நடந்ததுனால, நிறைய சந்தேகம் வந்தாலும், அது ஒரு புது கம்பெனிங்கறதால அப்படி இருக்கும், போக போக சரியாகிடும்னு நினைக்கறதா, இல்லை இந்த லட்சனத்துல இன்டர்வ்யூ வைக்கிற கம்பெனிக்கெல்லாம் கண்டிப்பா போய் தான் ஆகணுமான்னு ரொம்ப confuse ஆனேன். கடைசியா, அந்த சாமிகிட்டயே சீட்டு எழுதி போட்டு கேட்டேன். சீட்டுல ’கொடுன்னு’ன்னு வந்துச்சு. அவன்கிட்ட 2 நாள் டைம் கேட்டு, பணத்தை கொடுக்கிறேன்னு சொல்லி ஒத்துகிட்டேன்.

இரண்டாவது நாள், நானும் என் அப்பாவும் அவன் கேட்ட டூ பாய்ண்ட் ஃபைவ் லேக்ஸ், அதாவது இரண்டரை இலட்சம் பணத்தை அவசர அவசரமா பொரட்டி அவனை பார்க்க எடுத்துட்டு போனோம். இரண்டரை லட்சட்ம் பணத்தை முழுசா கொடுக்க வேண்டாம், பேரம் பேசி பார்க்கலாம்னு பேச்சு இருந்தாலும், எதுக்கும் இருக்கட்டும்னு முழு பணத்தையும் எடுத்துட்டு போனோம். அங்க போனா அவன் வராம அவன் நண்பன்னு சொல்லி யாரையோ அனுப்பியிருந்தான். அவன் கிட்டயே பணத்தை கொடுத்து விட சொல்லி சொன்னான். எங்களுக்கு என்ன பண்றதுன்னு வேற தெரியலை. இந்த பணத்தை கொடுக்குறதுக்காக வேண்டி, என் அப்பா வேற ஊர்ல இருந்து வந்து இருந்தார். கொடுத்தா உன் கிட்ட தான் கொடுப்பேன்னு சொல்றது, அந்த இடத்துல தேவையில்லாத ஒண்ணா இருந்துச்சு, அதனால அவன் சொன்ன ஆள் கிட்ட்யே பணத்தை கொடுக்கிறதா சொல்லி, தயவுசெய்து ரேட்டை மட்டும் குறைச்சுக்கோங்களேன், இரண்டரை லட்சம்லாம் ரொம்ப அதிகம்னு பேசி பார்த்தோம். அதுக்கு அவன், நான் எப்போங்க இரண்டரை லட்சம் கேட்டேன், வெறும் இரண்டு இலட்சத்தி ஐயாயிரம் தானே கேட்டேன்னு அவனும் ஷாக்காகி, எங்களையும் ஷாக்காக்கினான். என்ன டா விஷயம்னு விசாரிச்சா, அவன் சொன்ன டூ பாய்ண்ட் ஃபைவ் லேக்ஸ்ங்கறது, அவங்க ஊர்ல ரெண்டு லட்சத்தி அம்பதாயிரம் கிடையாதாம். வெறும், ரெண்டு லட்சத்தி ஐயாயிரம் தானாம். என்ன எழவு டா இதுன்னு, எங்க அப்பா அவனை அங்கேயே காறி துப்பினாரு. அப்புறம் அவன் சொன்ன இரண்டு இலட்சத்தி ஐயாயிரத்தில இருந்தே பேரம் பேசி, ஒன்றரை இலட்சமாக்கினோம்.

அப்பாடி, 55,000 த்தை மிச்சம் படுத்திட்டோம்னு, அன்னைக்குலாம் நிம்மதியா தூங்கினோம். எப்ப அந்த கம்பெனிக்காரன் ஓடி போனானோ, அன்னைக்கு இருந்து, 1,50,000 மும் போச்சேன்னு தூக்கம் கெட்டு கிடக்கிறோம்…
    

                                                (தொடரும்…)

No comments:

Post a Comment