Saturday 30 November 2013

நவீன சரஸ்வதி சபதம்







இந்த படத்தை பற்றியெல்லாம், ஒரு பதிவு எழுதுவதையே கேவலமாக நினைக்கிறேன். இரண்டாம் உலகம், ராஜா ராணி போன்ற அரைவேக்காட்டு தனமான படங்களை க்ளாஸிக் என நினைப்போருக்கு, இந்த படம் பிடிக்கலாம்

இந்திய தேசம் முழுவதும் தேடியதில் நாலே நாலு மொடா குடிகாரர்கள், சிவனுக்கு கிடைக்கிறார்கள். அவர்களிடம் திருவிளையாடல் செய்து, அவர்களின் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க செய்வது தான், நவீன சரஸ்வதி சபதம். காமெடி படம் என்ற பேனரை தாங்கி வந்த இந்த படம், திரையரங்கில் ஒருவரை கூட சிரிக்க வைக்காதது கேவலத்திலும் கேவலம். கதை, திரைக்கதை, இசை, பிண்ணனி இசை, நடிப்பு என்று எங்கு புகுந்தாலும் நொட்டை சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது, என்னை கேட்டால் 2013-ல் வெளி வந்த படங்களில் விமர்சனம் எழுத கூட தகுதியில்லாத படம் இதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.

படத்தை தவிர்த்து வேறு சில விஷயங்களை பேசலாம் என நினைக்கிறேன். குடிப்பழக்கத்தை திருத்துகிறேன் என்ற பேர்வழியில் ஆளாளுக்கு எடுக்கும் டாக்குமென்ட்ரி படங்கள், சீரியஸ் படங்கள், காமெடி படங்கள், குறும்படங்கள் என எல்லாமும் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்து கொண்டிருக்கிறன. இப்படி தொடர்ந்து தோல்விகளையே தழுவி கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்தை எதிர்க்கும் தகுதியான திரைப்படங்கள் கூட கேலிக்கூத்தாக்கப் படலாம் அல்லது மொண்ணையாக்க படலாம். இவர்களின் அடிப்படை நோக்கம் வணிகம் தான் என்றாலும், ஆர்வக்கோளாறு காரணமாக தகுதிக்கு மீறி மெஸெஜ் எல்லாம் சொல்கிறார்கள்.

கொஞ்ச வருடங்கள் முன்பு, ஏதோ ஒரு நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை மக்கள் விட்டொழிப்பதற்காக, அந்நாட்டு அரசு சார்பாக ஒரு பயங்கரமான விளம்பர பலகை வைக்கப்பட்டது, அதில் ஓர் தூண்டில் முள், புகை பிடிப்பவரின் வாயை மாட்டி இழுப்பது போல் பார்த்தாலே அருவருப்பும், அதிர்ச்சியும் உண்டாகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து பெருமளவு மக்கள் தங்களது சிகரெட் பழக்கத்தை விட்டொழித்தனர் என்று, அதன் அருகாமை நாடுகளும் கூட அதனை பின்பற்றினர். இது எப்போவோ படித்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. சமீபத்தில் வெளி வரும் குடிக்கெதிரான படங்களை எல்லாம் நான் எவ்வள்வு நாட்கள் நினைவில் வைத்திருப்பேன் என எனக்கே தெரியவில்லை.

மதுபான கடை படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டதே ஒழிய வெகுஜன மக்களின் கவனிப்பை பெறவில்லை, அங்கேயே படம் தோற்றுவிட்டது. இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தின் கதையம்சமும், நகைச்சுவையும் பேசப்பட்டளவு கூட அதன் குடிக்கெதிரான சங்கதிகள் பேசப்படவில்லை. திரையரங்குகளில் திரையடப்பட்டும் கேன்சர் தொடர்பான காட்சிகள் எல்லாம் எப்போதோ கேலிக்குரிய ஒன்றாக மாறி போய் விட்டது. புகையிலை பழக்கத்தால் வரும் பாதிப்புகளை நேரடியாக மக்களிடம் எடுத்து சொல்லி, அதிர்ச்சிக்குள்ளாக்கலாம் என்பது தான் அவர்களின் திட்டம் என்றாலும், அதில் காட்டப்படும் நோயாளிகளோடு மக்களால் ஒன்ற முடியவில்லை. பெயருக்கு என ஒரு வீடியோவை, மத்திய அரசு தயாரித்து வெளியிட்டால், அது இப்படி தான் இருக்கும்

குடி மட்டுமே நம் தேசத்தின் பிரதான பிரச்சனை போலவும், குடிப்பழக்கம் மக்களை விட்டு ஒழிந்தால் தேசமே சொர்க்க பூமி ஆகிவிடும் என்பது போல் இங்கு ஒரு போலி பிம்பம் ஒழுக்கச்சீலர்களாலும், அரசியல் கட்சிகளாலும் ஏற்படுத்தப்படுகிறது. கல்விமுறை, சாயப்பட்டறைகள், மலினமான அரசியல் கொள்கைகள், மணல் கொள்ளை, விலைவாசி உயர்வு, விவசாயம் ஊக்குவிப்பு இன்மை, வேலையில்லா திண்டாட்டம், தப்பும் தவறுமான சிஸ்டங்களுடன் செயல்புரியும் அரசு அலுவலகங்கள், அடிப்படை ஆரோக்யம் குறித்த அக்கறையின்மை என எல்லா பக்கமும் நோய் வாய்ப்பட்டிருக்கும் சமூகம், குடிப்பழக்கத்தில் மட்டுமே நோய் வாய்ப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்ட ஒழுக்கச்சீலர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்த தகுதியும் இல்லை. குடிப்பழக்கத்தை திருத்துவதை விட இங்கு பற்றி எறியும் பிரச்சனை எத்தனையோ இருக்கின்றது.

சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் 100 வயது வரை கூட மக்கள் ஆண் பெண் வித்தியாசமின்றி குடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். வாழ்க்கையிலும் முன்னேறி கொண்டு தான் இருக்கிறார்கள். அங்கு தரமான மதுவும், புகையிலையும் கிடைக்கும் வகையிலாவது அந்நாட்டு அரசு அவர்களுக்கு வழி வகுத்திருக்கிறது. இங்கு அதற்கான கட்டமைப்புகளும் இல்லை, எதிர்த்து கேட்க யாருக்கும் துப்பும் இல்லை.

சொல்ல மறந்து விட்டேனே, படம் ஆரம்பிப்பதற்கு முன், தமிழக அரசின் சாதனைகளை விவரித்து 15 நிமிடம் வீடியோ ஒன்று ஓடியதுஅந்த கொடுமையையும் பொறுமையாக உட்கார்ந்து பார்த்தேன்.

No comments:

Post a Comment