Friday 19 April 2013

ஐபில் பார்க்காதே !





வீட்டில் கதவு தாழ்ப்பாள் உடைந்து விட்டது, ஆசாரியை 4 வாரங்களாக கூப்பிட்டு கொண்டிருக்கிறேன்... எந்நேரமும் கடையில் சும்மா தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறான், ஆனால் வந்து என்னவென்று பார்க்க மாட்டேன் என்கிறான். பால் விலை 15 ரூபாய் என்று போட்டிருக்கிறது, 16 ரூபாய்க்கு விற்கிறார்கள், ஏன் என்று கேள்வி கேட்க முடியவில்லை. பஸ் ஸ்டேன்டிற்குள் 10 ரூபாய் ரீசார்ஜ் கார்டை 12 ரூபாய்க்கு விற்கிறார்கள். கண்டக்டரிடம் 14 ரூபாய் டிக்கெட்டிற்கு 20 ரூபாயை நீட்டினால், என்னை அறிவு கெட்டவன் என பலர் முன்னிலையில் திட்டிவிட்டு, வெறும் 5 ரூபாயை மீதம் சில்லறையாக தருகிறான். மளிகை கடையில் 5 ரூபாய் சில்லறை இல்லை என சொல்லி, ஒரு Munch chocolateஐ கூடையில் தினித்து அனுப்புகின்றனர். ஒழுங்கான திரைப்படத்தையோ, மெகா சீரியலையோ, ரியாலிட்டி ஷோவையோ கொடுக்க வக்கில்லாத கலைஞர்கள், தமிழர்கள் மக்கு சாம்பிரானிகள், இவர்களுக்கு இப்படியான படைப்பு தான் உகந்தது என சமாதானம் சொல்கிறார்கள். தமிழர்களும் அதையே தான் விழுந்தடித்து பார்க்கிறார்கள். மருத்துவமனைகளும், கல்வி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு விளம்பரம் செய்கின்றனர். மீடியா ஆட்கள் கிட்டதட்ட ரௌடிகளையே மிஞ்சி விடுவார்கள் போல் இருக்கிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்களை பற்றிய ஒரு அவதூறான செய்தி ஒன்று எங்கள் பத்திரிக்கைக்கு கிடைத்திருக்கிறது, அதை வெளியிட வேண்டாமென்றால், உடனடியாக நான் சொல்லும் இடத்திற்கு 5000 ரூபாயை எடுத்து வாருங்கள் என்கிறான்.

ஏரியா கவுன்சிலரில் இருந்து, பிரதமர் வரை ஊழல்வாதிகள் என்று தெரிகிறது, ஆனால் யாராலும் யாரையும் உள்ளே தள்ள முடியவில்லை. அதாவது பரவாயில்லை, ஊழல்வாதி என்று தெரிந்த பின்பும் மக்கள் அவர்களுக்கே மறுபடியும் வாக்களிக்கின்றார்கள், அது எந்த அடிப்படையில் என்றே யாருக்கும் பிடிபட மாட்டேன் என்கிறது. வர வர யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பமே ஆளை அரை பைத்தியம் ஆக்குகிறது. ஒருவன் எல்லாத்தையும் சுரண்டிய ஆளும் கட்சிக்காரன், இன்னொருவன் சுரண்ட தயராக காத்து கொண்டிருக்கும் எதிர்கட்சிக்காரன், இன்னொருவன் விலை போக தயாராக காத்து கொண்டிருக்கும் அல்லக்கை, இன்னொருவன் ஜாதி பேரை சொல்லி உண்டியல் குலுக்கும் ஆசாமி, இன்னொருவன் ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்கப்பட்டவர்களாக ஆக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து கொண்டிருப்பவன், இன்னொருவன் ரெண்டு கொலை செய்தவன், இன்னொருவன் ஆர்வக்கோளாறில் அரசியலில் குதித்தவன், இன்னொருவன் நாமும் அரசியல்வாதி ஆகி சொத்து சுகம் சேர்க்க மாட்டோமா என்று பேராசையில் வேட்பாளர் ஆனவன். இவர்கள் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்று 49 O ஃபாரத்தை கேட்டால், இம்சை பண்ணாம ஏதோ ஒரு பட்டனை அமுக்கிட்டு போயேன் யா என அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர்.

கிராமத்தில் பேன்சி கடையே இல்லையே, நாம் ஆரம்பிக்கலாம் என ஆரம்பித்தால், நம்மை பார்த்து பின்னாலயே 4 பேர் பேன்சி ஆரம்பிக்கின்றனர். மாவு மில்லே இல்லையே நாம் ஆரம்பிக்கலாம் என ஆரம்பித்தால் அடுத்த வாரத்திலே 6 மாவு மில் உதயமாகி விடுகிறது. நன்றாக சம்பாதித்தால் பொறாமையில் வெந்து சூன்யம் வைக்கும் அளவிற்கு போகின்றார்கள், சம்பாதிக்காமல் சும்மா இருந்தால் மதிக்கவே மாட்டேன் என்கின்றார்கள், ஒரளவு சம்பாதித்து எல்லார் காலையும் நக்கி கொடுத்து கொண்டிருந்தால் தான் அவன் நல்லவன். முக்கியமாக கொடுத்த கடனை திருப்பி கேட்டு விட கூடாது.

வெறும் 5 படத்தில் நடித்த ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் தெருவில் நடப்பதற்கு இல்லை, சுற்றி கூட்டம் கூடி விடுகிறது. ஆதித்யா சேனல் தொகுப்பாளர்களும், சன் ம்யூசிக் சேனல் தொகுப்பாளர்களும் தங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நேயர்களுக்கு டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க என்று சொல்லி சொல்லியே சலிக்கின்றனர்.

12 வயதில் சிகரெட் அடிக்கின்றார்கள், 15 வயதில் பீர் அடிக்கிறார்கள், 16 வயதில் ஹான்ஸ் போடுகிறார்கள், 20 வயதில் கஞ்சா இழுக்கிறார்கள், ஒரு கூட்டமாக சேர்ந்து தனியாக போகும் பெண்களை வன்புணர்ச்சி செய்கிறார்கள். 2 பேராய் இருந்தால் வீதியில் போய் வந்து கொண்டிருக்கும் பாதசாரிகளை கெட்ட வார்த்தை பேசி விசனப்பட வைக்கிறார்கள். உங்கம்மால ஓக்க என பலர் முன்னிலையில் திட்டி விட்டதால் பொறுக்க மாட்டாமால் சண்டைக்கு சென்றால், தடுத்து விடுவதற்கு ஒரு கூட்டமே தயராக இருக்கிறது. மீறி சண்டைக்கு சென்று ஒரு கட்டையை எடுத்து அவன் மண்டையை பிளந்தால் போலீஸ் நமக்கு எதிராக கேஸ் போட்டு நம்மிடம் காசு பார்க்கிறது, ஒருவேளை சண்டை இழுத்ததில் நமக்கு ஏதும் அடி பலமாக பட்டு விட்டால் நகைப்பதற்கு என்று ஒரு பட்டாளமே தயராக இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு 5 வருஷம் சுரண்டவதற்கே போத மாட்டேன் என்கிறது, இதில் எங்கிருந்து மக்களுக்கு வளர்ச்சி பணிகள் செய்வது, மிஞ்சி போனால் தேர்தல் நேரத்தில் சலுகைகள் எதிபார்க்கலாம். சரி இராணுவ ஆட்சி தான் தேவை போல என்று வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால், இராணுவ ஆட்சிகள் கிலியை கிளப்புகிறது. கவுன்சிலர் ஆக வேண்டுமென்றால் நல்லவனாக இருக்க அவசியம் இல்லை, பண்பாளனாக இருக்க அவசியமில்லை போட்டு கொடுக்க தெரிந்திருக்க வேண்டும், எதிராளியை விலை பேச தெரிந்திருக்க வேண்டும், அச்சுறுத்த தெரிந்திருக்க வேண்டும், பேசி மழுப்ப தெரிந்திருக்க வேண்டும், நிறைய பேரை ஏமாற்ற தெரிந்திருக்க வேண்டும், மாற்றி மாற்றி பேச தெரிந்திருக்க வேண்டும், இதெல்லாம் மீறி நல்லவன் போல் நடிக்க தெரிந்திருந்தால் அது கூடுதல் தகுதி.

ஏதாவது வேலை இருந்தால் போட்டு கொடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடி வேலைக்கு சேர்கிறார்கள், எங்கெல்லாம் ஏமாற்ற முடியும் என்று நுணுக்கமாக ஆராய்ச்சி செய்கின்றார்கள், கூட்டம் கூடுகின்றார்கள், சங்கம் ஆரம்பித்து கொள்கிறார்கள், பேசிய சம்பளம் போதாது என்கிறார்கள், சம்பளத்தை உயர்த்துவதை தவிர வேறு வழி ஏது என்னும் அளவிற்கு நிறுவனத்திற்கு நெருக்கடி தருகின்றார்கள், கஷ்டமான வேலைகளை எல்லாம் செய்ய முடியாது வேண்டுமானால் கான்ட்ராக்ட்டுக்கு விட்டு கொள்ளுங்கள் என்று முரண்டு பிடிக்கிறார்கள், கம்பெனி நஷ்டத்தில் இயங்கினாலும் கருத்தில் கொள்ள மாட்டேன் என்கிறார்கள், கடைசியில் கம்பெனியை மூடிவிட்டால் சோத்துக்கு சிங்கி அடிக்கிறார்கள்,

மருந்தகத்தில் 20 ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஒரு கீத்து மாங்காயை 5 ரூபாய்க்கு விற்கின்றார்கள், ஒரு முழம் பூவை 20 ரூபாய்க்கு விற்கின்றார்கள், கேட்கின்ற மதுவை டாஸ்மாக்கில் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், திருட்டு விசிடியை ஒழிக்க முடியாத அளவிற்கு குடும்பங்கள் திருட்டு விசிடியை நம்பி தொழில் செய்கின்றார்கள். பஸ் ஸ்டேன்டில் சிகரெட் ஊதுபவர்கள் சுற்றி இருப்பவர்களை பற்றி கவலை கொள்வதில்லை. குறைந்தபட்சம் பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பாவது சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு வருகிறார்களே என்று சந்தோஷம் கொள்ள வேண்டியிருக்கிறது. பொருளை வாங்குபவனும் சாகிறான், பொருளை விற்பவனும் சாகிறான் ஆனால் தரகர்கள் வாழ்கிறார்கள். நேரடி கொள்முதல் பற்றி பேச்சு வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் ஆவன் செய்கின்றார்கள். உள்ளூரில் இருக்கும் மக்களுக்கு பொருட்களை விற்க முன் வர மாட்டேன் என்கிறார்கள், எங்கோ இருப்பவனுக்கு பொருளை விற்க தான் குறியாக இருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் ஆளாளுக்கு ஒவ்வொர் பயிர் பயிரடலாம், நமக்குள் பிரித்து கொள்ளலாம் என்ற வரைமுறையை ஒரு ஆராய்ச்சிக்கு கூட நடத்த முடியாது, எல்லோருமே பணப்பயிரையே நடுவார்கள், தரகனை கூப்பிடுவார்கள், அவனும் போட்டி காரணமாக கம்மி விலைக்கு வாங்கி செல்வான். எந்த வழிமுறையை பின்பற்றினால் பஞ்சம் போகும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற யுக்தியை யாரும் யோசிக்கமாட்டேன் என்கிறார்கள், யோசனை கூறுபவனின் யோசனையை குறை சொல்வதோடு கடமை முடிந்தது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

வேறு வழியில்லாமல் ரஜினிகாந்தை கொண்டாட வேண்டியதாய் இருக்கிறது. கலைஞருக்கு ஓட்டு போட வேண்டியதாய் இருக்கிறது. தினத்தந்தியில் வரும் கற்பழிப்பு செய்திகளை படிக்க வேண்டியதாய் இருக்கிறது, நோக்கியா போன் வாங்க வேண்டியதாய் இருக்கிறது, ஏர்டெல் ரீ சார்ஜ் கார்டு வாங்க வேண்டியதாய் இருக்கிறது, 45 ரூபாய் கொடுத்து அரிசி வாங்க வேண்டியதாய் இருக்கிறது, வாரம் ஒரு முறை ஏறும் பெட்ரோல் விலையை வேடிக்கை பார்க்க வேண்டியதாய் இருக்கிறது, சிங்கப்பூரை அண்ணாந்து பார்க்க வேண்டியதாய் இருக்கிறது, போலீஸ்க்காரனை கண்டால் நடுங்க வேண்டியதாய் இருக்கிறது, உயர் அதிகாரிகளை கண்டால் சலாம் போட வேண்டியதாய் இருக்கிறது, கௌரவ கொலைகள் செய்யும் கூட்டம் யார் என தெரிந்தும் பொத்தி கொண்டிருக்க வேண்டியதாய் இருக்கிறது...

இப்படி பல விஷயத்தில் மூடி கொண்டிருக்கும் என்னிடம் வந்து, இலங்கையில் தமிழர்களை கொல்கிறார்கள் அதனால் ஐபில் பார்க்காதே என்கிறார்கள்...




    

Monday 8 April 2013

ஹேப்பியான கதை



ஒரு மத்திம வயதுக்காரர் முன்னே போகும் டேங்க்கர் லாரியினை முந்தி செல்ல எத்தனித்து கொண்டிருக்க, எதிரே மிக அதிகமான வேகத்தில் போதையில் வண்டி ஓட்டி வந்தவனே அனீஷ். அனீஷின் பின்னாடி உட்கார்ந்திருந்த மருது, பார்த்து சொன்ன பின்பு தான், அனீஷ் வேகம் குறைக்கவே ஆரம்பித்தான். என்ன குறைத்தும் வேலைக்காகவில்லை. அனீஷும் எதிரே வந்தவரும் எதிர் எதிரே மோதி கொண்டனர். நல்ல வேளையாக இருவரும், லாரிக்கு வெளிப்புறமாக விழுந்தனர். இல்லையென்றால் ஒரு தலையாவது சூரத்தேங்காய் ஆகியிருக்கும்.

எதிர் வந்தவர் லாரி சக்கரத்தில் மாட்டாதது குறித்து, இருவரும் விழுந்து எழும் போது வருத்தம் கொண்டனர். அதிலும் அனீஷின் கவலை அதீதமாக இருந்தது. இருவரும் வேண்டுமென்று மோதிக்கொள்ளவில்லை, மோதியது நன்றாக மோதியிருக்கலாம் என்று மோதியதன் பின்பு ஏக்கம் கொண்டனர். இருவரில் யார் வாய் வார்த்தையை ஆரம்பிப்பது என்பது குழப்பம் கொண்டனர், அனீஷிடம் இருந்து வந்த சாராய வாடை, எதிர் வந்தவரை திமிராய் பேச எத்தனித்தது. திமிராக பேசினாலும் கூட பெரிதாக ஒன்றுமே சொல்லவேயில்லை. திமிராக தொடங்கி, இப்படி குடித்து விட்டு வண்டி ஓட்டுவது நியாயமா என்ற ரீதியில், திட்டும் படலத்தை திசை திருப்பி கொண்டார்.

அனீஷின் வண்டி நல்ல அடிவாங்கியதாலும், எதிர் வந்தவரின் முகம் சொங்கி போல் இருப்பதாலும், அவரின் வாயும் நீளமாக இருப்பதாலும் அனீஷிற்கு கோபம் வந்தாயிற்று, அதன் தொடர் செயலாக மருதுவுக்கும் கோபம் வந்தாயிற்று. எதிர் வந்தவர் ரொம்பவும் சாதாரணமாக TVS 50ல் வந்ததால் அனீஷிற்கும், மருதுவிற்கும் அவரின் அந்தஸ்த்தை அளக்க ரொம்ப நேரம் எடுக்கவில்லை. அனீஷ் அடிக்கும் முன், எதிராளி கையை முறுக்கி பிடித்து வைத்து அடிப்பது தான் வழக்கம், ஆனால் போதையின் தடுமாற்றமோ என்னவோ எதி வந்தவரின் கையை சிறை பிடிக்காமலே, அறைய ஆரம்பித்தான். மருது அடிவாங்குபவனின் எதிர்வினையை ஆராய்ந்து பார்த்து, ஒன்றும் பலசாலி இல்லை என நிரூபணம் ஆன பின்பு அவனும் அடிக்க ஆரம்பித்தான். அனீஷ் அவரை அறைவதற்காக கையை விசிறி விசிறி அடிப்பது மருதுவிற்கு சற்று இடைஞ்சலாக இருந்தது. அப்படி அடிக்காதே என்று சொல்லி பார்த்தான், அனீஷ் கேட்கின்ற நிலைமையில் இல்லை என தெரிந்தது. ஒருவாறாக சமாளித்து முதுகு புறம் போய் அடிக்க ஆரம்பித்தான்.

மருதுவும் போதை என்றாலும் கூட கீழே விழுந்து எழுந்ததில் போதை எல்லாம் காணாமல் போயிருந்தது. ஆனால் அனீஷிற்கு தலையை ஏதோ கவ்வி பிடித்தாற் போல் தான் போதை இருந்தது. டிவிஸ் வண்டிக்காரர் அடி வாங்குவதை தடுக்கும் பொருட்டு, கை வைத்து தடுப்பது அனீஷிற்கு இடைஞ்சலாக இருந்தது. மருதுவை கையை பிடித்து கொள்ள சொல்லி, வயிற்றிலே குத்தினான். அடிக்கடி கீழே குனிந்து ஏதாவது கிடைக்கிறதா என்று தேடி பார்த்தான், ஒன்றும் கிடைக்காத கோபத்தில் கன்னத்திலே பளீர் பளீர் என்று இழுத்தான்.

அவரால் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை, கொஞ்ச நேரத்திலே கதற ஆரம்பித்து விட்டார், அது கெஞ்சலாக மாறியது கூட தெரியாத அளவிற்கு அனீஷ் அடிப்பதிலே குறியாக இருந்தான். கன்னத்தில் விழும் அறை கூட ஓரளவு தாங்கி கொள்ளும் வகையில் தான் இருந்தது, நெஞ்சிலும் வயிற்றிலும் வ்ழும் குத்துக்கள் தான் பொருக்க மாட்டா வலியை கொடுத்தது, ஒவ்வொரு குத்திற்கும் மூச்சு நின்று நின்று வாங்கியது. ஒவ்வொரு அடியிற்கும் கொடுக்கும் இடைவெளி, மூச்சு இழுத்து கொள்ள போதாமல் இருந்தது.

யாராவது வர மாட்டார்களா என்று சாலையை சாலையை பார்த்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட மூர்ச்சையாகி கொஞ்ச நேரத்திலே கீழே விழும் நிலையில் இருந்த போது தான், தன்னருகில் ஒரு வண்டி வந்து நின்று கொண்டிருந்ததை கவனித்தார் அவர். அனீஷையும் மருதுவையும் எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேட்டு கொண்டிருந்தார், புதிதாய் வந்தவர். கொஞ்சம் உத்து பார்த்ததில் அது ஊர் பிரிசிடென்ட் என்று தெரிந்தது. என்ன விஷயம் என்று கேட்டு விட்டு, காசு பிடுங்கி கொண்டு அனுப்பி விடுங்கள் என்று சொல்லி கிளம்பி விட்டார்.

அடிப்பது வெளியூர் பொறுக்கி பயல்கள் என்று தெரிந்தும், அடிவாங்குவது உள்ளூர்வாசி என்று தெரிந்தும் ஊர் பிரிசிடென்ட் கிளம்பி விட்டது ஏதேதோ எண்ண அலைகளை எழுப்பிய வண்ணம் இருந்தது அவருக்கு, கிறுத்துவ மதத்திற்கு மாறியது முதல், ஊராரால் எவ்வளவோ சங்கடங்களை சந்தித்து இருந்தாலும், இதுவே அதிக வேதனை தரும் ஒன்றாய் இருந்தது அவருக்கு.... மனதளவில் இயேசுவை அழைப்பதை தவிர அவருக்கு வழி ஏதும் இருக்கவில்லை.

சட்டை பையிலும், ட்ரவுசர் பையிலும் கை விட்டு பார்த்தனர், வண்டி முன்னம் பையிலும் கை விட்டு துளாவி பார்த்தனர். ஒரு ஹான்ஸ் பாக்கெட்டை தவிர ஒன்றும் சிக்கவில்லை... அந்த கடுப்பிலே, அனீஷ் சற்று தூரம் நடந்து போய் ஒரு மரக்கிளையை ஒடித்து வந்து அவரை பின்பக்கமாய் திருப்பி பிடிக்க சொல்லி சுளீர் சுளீர் என்று அடிக்க ஆரம்பித்தான். அவரால் இந்த முறை சுத்தமாக தாக்குபிடிக்க முடியவில்லை. காட்டு கத்தல் கத்த ஆரம்பித்தார். சற்று தூரத்தில் இருந்த டீக்கடையில் இருந்து ரெண்டு ஆட்கள் எட்டி பார்த்தார்களே தவிர, அருகில் வரவில்லை. கையை வைத்து தடுத்து பிடிக்க பார்த்தார். கைக்கு தாறுமாறாக அடி விழுந்தது. என்னை விட்ருங்க என்ற வார்த்தையை மட்டும் திரும்ப திரும்ப உச்சரித்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், அது தன்னையும் அறியாமல் அவர் வாயில் இருந்து தன்னிச்சையாக வந்து கொண்டிருந்தது.

சற்று முன்பு சென்ற பிரிசிடென்ட்டே திரும்ப வந்தார். இம்முறை வண்டியை நிறுத்தி விட்டு, பெல்ட்டை கழட்டி, ரெண்டு பயல்களையும் 4 சுழட்டு சுழட்டி விட்டு, காசை வாங்கி கொண்டு அனுப்பி விடும்படி சொல்லியும் கேட்காததற்கு, காட்டு அடி அடிக்க ஆரம்பித்தார். அனீஷ், காசு இல்லாத்தால் தான் மேற்கொண்டு அடித்தோம் என்ற பதிலை சொல்லி பார்த்தான். அது பிரிசிடென்ட்டை இன்னும் கோபப்படுத்தியது, காசு இல்லையென்றால் அடிப்பீர்களா என்று காலாலே இருவரையும் எத்தி கீழே விழ வைத்தார். ஒரு கட்டத்தில் அனீஷ் பிரிசிடென்ட்டை அடிக்க வரவே, பிரிசிடென்ட் சுதாரித்து கொண்டு, பெல்ட்டை கொண்டு விளாச ஆரம்பித்தார். அனீஷும், மருதுவும் அடி வாங்குவது ஒரு புறம் ஆறுதலாக இருந்தாலும், பிரிசிடன்ட் தமக்காக கோபப்படுவது அவருக்கு பெருமையாக இருந்தது. அதற்க்காகவே அவரை தடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்தார்.

போலீஸை போன் போட்டு வரவைத்தார். எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அனீஷையும், மருதுவையும் எந்த ஊர் என்று விசாரித்தனர், வெளியூர் என்று தெரிந்ததும் போலீஸ்க்காரர் லத்தி எடுத்து பொளந்து கட்டினார். உள்ளூருக்கு வந்து உள்ளூர்வாசிகளையே அடிப்பியா என்று பிரிசிடென்ட்டும் சேர்ந்து ஒரு பக்கமாய் நின்று எத்த ஆரம்பித்தார். அனீஷும் மருதுவும் கொஞ்ச நேரம் கூட அடி தாங்க வில்லை, கொஞ்ச நேரத்திலே காட்டு கூச்சல் போட்டனர். போலீஸ் ஸ்டேசன் அலறியது இல்லாமல், அந்த தெரு முழுக்கவும் கூச்சல் கேட்டது. அவர்கள் வாலிப பயல்களாக இருந்தாலும், அவர்களது அலறல்கள் குழந்தை அலறுவது போல் இருந்தது. கொஞ்ச நேரத்திலே டிவிஸ்க்காரருக்கு மனசு பொறுக்கவில்லை. அவர்களை விட்டு விட சொல்லி, பிரிசிடென்ட் காலையும், போலீஸார் காலையும் பிடித்து கேட்டு கொண்டார் அந்த டிவிஸ்க்காரர்.

பிற்பாடு போகும் போது அனீஷும், மருதுவும் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டனர். நான் உங்களுக்காக கர்த்தரிடம் வேண்டி கொள்கிறேன், போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்தார் அவர்... பிரிசிடென்ட்டும், போலீஸும் அவரை ஆச்சர்யமாக பார்த்தனர். இருவரது நெற்றிகளிலும் சிலுவை போட்டு, முத்தமிட்டு அனுப்பி வைத்தார். ஊரே சுற்றி நின்று அவரை விநோதமாக பார்த்தது.

அவர் தான் முன்பு சண்முகமாக இருந்து அந்தோணியாக மாறியவர். அன்று இரவு மனைவியிடம் போய் வேறு ஊர் எல்லாம் போக தேவையில்லை, இனி இங்கே இருந்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டு காயங்களுக்கு மருந்து போட்டு கொண்டார்.       

Wednesday 3 April 2013

ஆன்மீகமா ஐயையோ - 2



2005 காலகட்டத்தில், எல்லோரும் போகிறார்களே, அப்படி என்ன தான் அங்கு இருக்கிறது, என்று ஓர் ஆர்வக்கோளாறில் நான் எட்டி பார்த்தது தான் “ஈஷா யோக மையம்”.

பிராணயாமம் என்கிற அற்புதமான மூச்சு பயிற்சியையும், சூன்ய தியானம் என்கிற அற்புதமான தியானத்தையும் வகுப்பில் எனக்கு கற்பித்தார்கள். இந்த சூன்ய தியானத்தை பற்றி நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த சூன்ய தியானத்தை எங்களுக்கு சொல்லி கொடுக்க கிட்டதிட்ட ஒரு வார வகுப்பு, அதாவது 10 மணி நேரம் எங்களை மனதளவில் எங்களை பக்குவப்படுத்தப்பட்ட பிறகே எங்களுக்கு அது கற்பிக்க பட்டது. இந்த இடத்தில் என் பள்ளி முதல்வர் எனக்கு பதினைந்தே நிமிடத்தில், வெறும் 50 ரூபாய் காசுக்காக போதித்த தியானத்தை நினைவு கொள்ளவும்...

ஆக, ஈஷா யோக மையத்தில் கற்று கொண்ட அந்த யோக பயிற்சிகளும், தியானத்தையும் கற்று கொண்டது, மனதளவில் இன்று வரை திருப்தி தரும் ஒன்றாக இருக்கிறது. அதற்காக நான் செலவளித்த பணம் வெறும் 500 ரூபாய் என்பது, மிக சொற்ப பணமாகவே எங்கள் அனைவருக்கும் தோன்றியது. இந்த யோக பயிற்சிகள் அளவில் எந்த விமர்சனமும் யாரும் முன் வைக்க முடியாத அளவிற்கு, மிக சிறப்பான ஒரு யோக பயிற்சியினை ஊரெங்கும் சொற்ப பணத்திற்கே சொல்லி கொடுத்து வந்தனர். தத்துவ அடிப்படையில் அவர்கள் அனைத்து மதத்தினவரையும் தழுவவது போல் காட்டி கொண்டனர். ஆனால் பிரசாதம் என்று எள்ளு உருண்டையினை விநியோகிப்பார்கள், திருநீறு பூசி கொள்தல் பற்றிய மகத்தான பயன்களை பற்றி பாடம் போதிப்பார்கள். ஈஷா யோகா ஆரம்ப கட்டத்தில், அதாவது நான் அங்கு 8 வருடத்திற்கு முன்பு தொடர்பில் இருந்த போதெல்லாம், இந்துத்துவ வழிப்பாட்டு முறையினை போட்டு விளாசு விளாசு என்று விளாசுவார்கள். நீங்கள் கடவுளிடம் போனால், அதை கொடு இதை கொடு என லிஸ்ட்டு போட்டு கொண்டிருப்பதற்கான இடம் கோவில் அல்ல, கோவில் என்பது நம் சக்தி நிலையினை சமப்படுத்தி வருவதற்கான ஓர் தலம், நீங்கள் அங்கு சென்று சற்று நேரம் உட்கார்ந்து வந்தாலே, உங்களில் ஓர் மாற்றம் வந்து விடும். அவ்வாறாக தான் கோவில்களே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்று விளக்கம் எல்லாம் சொல்லி நம்மை வாய் பிளக்க வைப்பார்கள். கடவுளை நாம் எவ்வாறாக உணர்ந்து வைத்திருக்கிறோமோ, அதை தகர்த்து எறிவார்கள். மொட்டை அடிப்பது, அலகு குத்துவது, கையில் கயிறு கட்டுவது என்று எல்லா நம்பிக்கைகளையும் கட்டம் கட்டி அடிப்பார்கள்.  

சத்து மாவு மற்றும் சுக்கு காபி விற்பனை செய்வார்கள், வெளியே எங்கும் அது போன்ற ஒரு தரத்தில் கொடுக்கவே முடியாது, வாங்க கூடிய விலையில் இருந்ததால், அப்போதெல்லாம் அடிக்கடி சுக்கு காபி, சத்து மாவு கஞ்சி சாப்பிட்டு கொண்டிருந்தேன். ஆக, ஈஷா யோக வகுப்பு முடித்ததும் நம்முள் ஒரு புது வாசலை திறந்தது போல் இருக்கும்.

ஆனால், யோகாவை கற்று தேர்ந்து வெளி வருவதோடு, முடிந்து விடாது நமக்கும் ஈஷா யோக மையத்திற்கும் உள்ள பந்தம். அதற்கு இன்னும் பல முகங்கள் இருக்கிறது.

அது சமூக சேவை, மேல்நிலை யோக வகுப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு.

முதலில், ஒரு யோக பயிற்சி மையத்திற்கு சமூக சேவை செய்யும் வேலை எதற்கு, இந்த கேள்விக்கு மனிதாபிமானம் பற்றிய சொற்பொழிவுகள் தான் சொல்ல படுகின்றனவே தவிர, நியாயமான காரணம் என்று எதுவும் அவர்களால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் யோக வகுப்பு நடத்துவதில் பெரும்பான்மை லாபம் சேர்ந்தால், அவர்களாக சமூக சேவை செய்து கொள்ளலாம், ஆனால் யோக வகுப்பினை கற்று கொள்ள வருபவனிடம் அவன் மனம் தொடும் பல சொற்பொழிவுகளை ஆற்றி, அவனிடம் நன்கொடை கேட்பது என்ன மாதிரியான அணுகுமுறை என்பது எனக்கு புரிபடவில்லை. மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு ஊர் முழுவதும் வசூல் செய்து, இளைஞர் கூட்டம் அவர்கள் பெயர் போட்டு பேனர் அடித்து பண்டிகை நடத்துவதோடு இதை எளிதில் பொருத்தி பார்க்க முடிகிறது, என்ன... இவர்கள் நமக்கு சிறப்பான யோகா பயிற்சிகளை நமக்கு கற்று கொடுத்து நம்மை நன்றிக்கடன் பட்டவர்கள் ஆக்கி விடுகிறார்கள். அதுவுமில்லாமல், ஏதோ ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் அல்லது கல்வி நிறுவனம் தொடங்க வேண்டும் என்று 500 பேர் இருக்கும் கூட்டத்தில் நன்கொடை கேட்டு சொற்பொழிவு ஆற்றுகிறார்கள் என்று வைத்து கொள்வோம், அப்போது அவர்களின் சொற்பொழிவிற்கு மதிப்பளித்து உங்கள் சகாக்கள் எல்லாம் 500, 1000 என பையில் இருந்து எடுத்து கொடுக்கிறார்கள், கொடுத்து முடித்து நம்மிடத்து வந்து, “நீங்க எவ்ளோ சார் கொடுக்கறீங்க?” என்று கேட்பார்கள், அப்போது நம்மிடம் இருந்து எப்படியான எதிர்வினை வரும்.... பாஸ், நானும் 500 ரூபாய் கொடுக்கலாம்னு தான் இருக்கேன் என்று தான் சொல்லியாக வேண்டும், அப்படியில்லாமல், இல்லை பாஸ், இதெலல்லாம் ஈடுபாடு இல்லை என்று நாம் சொன்னால், நம்மை கேவலமாக எடை போட்டு, அவர்களின் அறிவுரை படலத்தினை தொடங்கி விடுவார்கள், பாஸ் நல்ல காரியத்துக்கு தான கொடுக்குறோம், எவ்வளவோ விஷயத்துக்கு பணம் செலவு பண்றோம்,..... என என்னன்னமோ பேசி நமக்கு காம்ப்ளக்ஸ் வர வைத்து விடுவார்கள். அவர்களை எல்லாம் தவிர்த்து வந்தோமா, போனோமா என்று இருக்க தான் நமக்கு தெரியாதே,.. எங்கு சென்றாலும் நாம் நண்பர்கள் பிடிப்பதிலே தான் நாம் குறியாக இருக்கிறோம், நண்பர்கள் மத்தியில் ஓரங்கட்ட பட்ட விட கூடாது என்பதற்காகவே கர்ண பிரபுவாக உருவெடுத்து விடுவோம். இந்த இடத்தில் வேதாத்திரி மகரிஷி பாராட்டுதலக்குரிய ஓர் யோக பயிற்சி நிறுவனமாக பார்க்கலாம்.

மேல்நிலை யோக வகுப்புகள் பற்றியும் எந்த விமர்சனமோ, கருத்து வேறுபாடோ கிடையாது. ஆனால் ஆதங்கம் ஒன்று உண்டு, அதாவது ஈஷாவின் மொத்த யோக வகுப்புகளையும் முடித்து வெளியே வந்தால் ஒருவன் இரண்டு மணி நேரங்கள், தின வாழ்வில் யோகா செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் மதியம் ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் 15 நிமிடம் செய்தல் வேண்டும். இதை தவிர்த்து ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடம் கண் மூடி அமர்தல் வேண்டும். இதெல்லாம் செய்து கொண்டிருந்தால், ஒருவனுக்கு வாழும் வாழ்க்கையில் எண்ணம் லயிக்குமா, இல்லை சாமியாராக போய் விடுவதில் எண்ணம் லயிக்குமா? நல்ல வேளையாக, எல்லா வகுப்புகளையும் முடித்து வரும் மக்கள் எதை செய்வது என்று தெரியாமல், எதையும் செய்யாமல் விட்டு, முன்பு இருந்த எடை அளவிற்கே எடையை ஏற்றி கொள்கின்றனர். ஆனால், முதல் கட்ட யோகாவை மட்டும், கற்று கொண்டவர்கள் சிலர், எந்த தடையும் இன்றி, தன் பாட்டிற்கு தங்கு தடையின்றி, தன் யோகாவை செய்து வருகிறனர். எல்லாம் முடித்து சிலரோ, யோகா பண்ணுவதற்கே நேரம் கூடி வர மாட்டேங்குது என்று, முழு நேர தன்னார்வ தொண்டாளராக ஆசிரமத்தில் வந்து புகுந்து விடுகின்றனர். குடும்பமாவது, குட்டியாவது !

அடுத்து தன்னார்வ தொண்டு... இதை பற்றி சொல்ல வண்டி வண்டியாக இருக்கிறது. அடுத்த பாகத்தில் விரிவாக சொல்கிறேன். இருந்தாலும் இப்போதைக்கு இரண்டு வரிகள். சில தீவிரவாதிகள் தன் உயிரையும் கொடுத்து, அவர்கள் இயக்கத்திற்கான வேலையினை செய்து முடிப்பர். எப்படி அவர்களால் அந்த அளவிற்கு இயக்கத்தோடு ஒன்ற முடிகிறது என்று நமக்கு சந்தேகங்கள் இருக்கலாம், அதெல்லாம் ஈஷா யோகா தன்னார்வ தொண்டர்களை பார்த்தாலே, அவர்களை பற்றியும் ஒரு அனுமானத்திற்கு வந்து விடலாம்.... 

                                          (தொடரும்....)








கேடி பில்லா கில்லாடி ரங்கா – ஓர் ஜாலி காவியம்



இந்த படத்தை  நேற்று பார்த்தே ஆக வேண்டும் என்று அடித்து பிடித்து கொண்டு போய் பார்த்தேன்.  காரணம் ‘பசங்க’ படத்தின் இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரினா’ என்னும் மொக்கை படைப்பிற்கு, அடுத்த படைப்பு இது...  சந்தேகமே இல்லை, 10 நாட்கள் தமிழர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி விட்டு. 11-வது நாள் இந்த படத்தை சன் டி.வி யில் போட்டால் கூட பார்க்க  ஆள் இருக்காது. காலத்தால் மறக்கடிக்கப்படும். 

படத்தின் ஆரம்பத்தில் ஒரு  பாட்டு  வர வேண்டும், அதற்கு  சிச்சுவேஷன் மேக்கப் செய்கிறேன் என்று ஆக சில மொக்கைகளாக போட்டு தள்ளி கொண்டிருந்தார்கள்... நண்பர்கள் எல்லாம் சேர்ந்து குடிக்க நிப்பாட்ட முக்குகிறார்களாம். இதை இயக்குனரே திரையின் பின் சொல்லியிருந்திருக்கலாம். ஆனால் நம் பொறுமையின் அளவுகோலை வேவு பார்த்து கொண்டிருந்தனர். அப்போதே கிளம்பி விடலாம் என எழுந்து விட்டேன். அப்போது தான் பின்னாடி ஸீட்டில் இருப்பவர் சொன்னார், லேட்டா வர்றவங்க படத்தை புரிஞ்சுக்கணும்ங்கறதுக்காக இப்பிடி தான் கொஞ்ச நேரம் மொக்கையா போகும், கண்டுக்காதீங்க என்றார். தியேட்டருக்கு ஒரு ஆளை இது போல், தயாரிப்பு நிறுவனமே அனுப்பியிருக்க கூடும் என்று படத்தை மேற்கொண்டு பார்க்க ஆரம்பித்தேன்.

ரயில்வே ஸ்டேஷனிலேயே கதியாக கிடக்கும் நண்பர்கள், ஜெராக்ஸ் கடை காதல், கராத்தே காதலி, அரசியல்வாதிகளுக்கு சால்வை போடும் ஹீரோக்கள் என ஏதேதோ வெரைட்டி காட்டுகிறார்கள், ஆனாலும் கதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து சுட்டு கொண்டு வந்தது அப்பட்டமாக தெரிகிறது. ஊர் சுற்றி கொண்டும், அப்பாவை திட்டி கொண்டும், வேலையில்லாமல் காதலில் திரியும் ஹீரோக்கள் எப்படி காதலிலும் ஜெயித்து, வாழ்க்கையிலும் ஜெயித்து ‘செட்டில்’ ஆகிறார்கள் என்பது தான் கதை. இந்த கதையை அநேகம் பேர்கள் திருடி விட்டதால், தொல்பொருள் ஆய்வாளர்கள் யாரை குற்றம் சொல்வது என்று தெரியாமல் தவிப்பதாய் ஒரு கேள்வி.

ஆனால், சும்மா சொல்ல கூடாது, கதையிலும் திரைக்கதையிலும் தான் நொண்டி அடித்தார்களே தவிர சில காமெடிகளுக்கு வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்கள். ஆனால் ஒரு நல்ல காமெடிக்காக ஐந்து மொக்கை காமெடிகளை பல்லை கடித்து கொண்டு நாம் திரையரங்கில் பொறுமை காப்பது தான் வரலாற்று சோகம் !

எடிட்டிங் தான் ஆக பிரமாதம், கதை கொஞ்ச தூரம் போகிறது, அப்புறம் “நடந்தது என்னன்னா?” என்று யாரேனும் ஒருவர் ப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்து விடுகிறார். இப்படியே ஒரு 4-5 ப்ளாஷ்பேக் பார்த்ததாய் நியாபகம். நாம் எழுதும் போது, திடீரென்று அடைப்புகுறியிட்டு ஒரு விஷயத்தை சொல்லி படிப்பவர்களை கடுப்பேத்துவோம் இல்லையா... அந்த வேலையை சீரும் சிறப்புமாய் செய்தனர்.

யுவன் சங்கர் ராஜா புகழின் உச்சியில் இருப்பதாலோ என்னவோ, நிறைய வேலை இருப்பதால் அவருடைய அஸிஸ்டன்ட்டுகளை விட்டு “இவனுங்களை வெச்சு தொழில் கத்துக்கோங்க டா” என்று அஸிஸ்டன்ட்டுகளை இசையமைக்க சொல்லி, தன் பெயர் போட்டு கொள்கிறார் போலும்... தியேட்டரிலும் பாட்டு எப்போ டா வரும், எப்போ தம்மடிக்க போகலாம் என்று வெந்நீரில் கால் வைத்தாற் போல் காத்து கிடந்தனர். ஒரு சிலர், கதவு பக்கத்திலே தயாராய் நின்று கொண்டிருந்ததை கூட காண முடிந்தது.

கோடி கோடியாய் கொட்டி ஹீரோ ஹீரோயின் கால்ஷீட் வாங்குகின்றனர். ஆனால் கதை திரைக்கதை வசனத்துக்கு மட்டும் இயக்குனர்கள் எங்கேனும் சல்லீசாக ஆட்களை பிடித்து கொள்கிறனர். இல்லையென்றால் எதற்கு செலவு என்று தாங்களே மொத்த ஸ்க்ரிப்ட்டையும் எழுதி கொள்கிறனர்....இதெல்லாம் விளங்குவதற்கா?

படத்தை ஒரு கட்டத்தில் ஸீரியஸாக காட்ட வேண்டும் என்று அநியாயமாக ஒரு கதாபாத்திரத்தை போட்டு தள்ளுகின்றார்கள். அடங்கோ... பாண்டிராஜ், பாலாஜி சக்திவேல்கிட்ட வேலை பார்த்தாரோ என்று நாம் ஐயம் எழுப்பும் தருணத்தில், கதையில் ட்விஸ்ட்டு வைக்கிறேன் என்ற பேர்வழியில் சிவகார்த்திகேயனின் அப்பா இறந்ததற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். அதை கேட்டு மொத்த திரையரங்கும் ஒப்பாரி வைத்து, அழுது, கதறி கண்ணீர் சிந்தினர். இதையெல்லாம் எதிர்பார்த்தே, திரையரங்க குழுவினர் சோடா, கர்ச்சீப், தண்ணீர் பாட்டில் சகிதமாக திரையரங்குகளில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். அந்த இடத்தில் பாண்டிராஜ், பாலாஜி சக்திவேலையே ஓரம் கட்டிவிடுகிறார். வாழ்த்துக்கள் பாண்டிராஜ் !

இப்போதைய சூழ்நிலையில் அரசியல் களத்தில் எவ்வாறான நடைமுறை பிரச்சனைகள் இருக்கிறது என காமெடியாக தெரிந்து கொண்டு வரலாம், அதை தவிர படத்தில் சொல்வதற்கென வேறு எதுவும் இல்லை.

ஒரு கோடு வரைந்து கொள்ளுங்கள், இப்போது அந்த கோட்டை அளவில் சிறியதாக்க வேண்டுமானால், அதை விட ரெண்டு செ.மீ நீளமான கோட்டை அதன் அருகில் வரைந்து விட்டால் போதும்... முந்தைய கோடு சிறியதாகி விடும். இந்த அழகிலே தான் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் போட்டி போட்டு கொண்டு காவியம் படைக்கின்றனர்.

“சார்... ஒருத்தன் 5 நிமிஷம் லேட்டா வரலாம், 10 நிமிஷம் லேட்டா வரலாம்.... ரெண்டரை மணி நேரமா லேட்டா வருவான்... ஏன் சார் படத்துல மொக்கைங்க முடிவில்லாம போய்ட்டுருக்கு...” என்று இந்த கேள்வியை நான் கிளம்பும் போது தடுத்து நிறுத்தினாரே ஒருவர், அவரிடம் கேட்கலாம் என்று இருந்தேன், ஆனால், அவர் இடைவேளையின் போதே கிளம்பி போய் விட்டாராம்...

மனிதர்கள் எப்படியெல்லாம் தன்னலத்தோடு இருக்கிறார்கள் என்று  பார்த்து கொள்ளுங்கள்....